Friday, October 22, 2010

கவிதையின் வழிகள்...

சில கவிதைகளை எழுதியவுடன் 
ஒரு மௌனம் சூழ்ந்து விடுகிறது
ரயிலில் நட்பை ஏற்றிவிட்டு
தனித்து நடக்கும் மனிதன் போல
காதலியின் திருமணத்துக்கு
வாழ்த்துச் சொல்லி
கீழ் இறங்குபவன் போல
மகளை மணம் கொடுத்துக்
கையசைத்து வழியனுப்புகையில்
சுரக்கும் விழிநீர் மறைக்கும் தகப்பன் போல் 
ஒரு சோகம் வந்து விடுகிறது


சில கவிதைகளை
மீள வாசிக்கையில்
எப்படி இவற்றை எழுதினோம்
எனத் திகைப்பு தோன்றுகிறது
வானிலிருந்து என் வழி
இறங்கிவந்த கவிதையோ
என்று கூட மயக்குகிறது..

சிலவற்றை
இன்னும் சில காலம்
கர்ப்பத்திலேயே 
உறை கலையாமல்
வைத்திருந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது

சில கவிதைகள்
சூல் கொள்ளாமலே
இருந்திருக்கலாம்

ஆனாலும்
என்னைப் பூர்த்தி செய்யும்
கவிதை ஒன்று
என்னுள்தான் எங்கோ
உறங்கிக் கிடக்கிறது
என் இருப்பின் சாரமெல்லாம்
இறுகிச் சொட்டும்
ஒரு கவிதை...
இங்குதான் எங்கோ...

அதைத் கண்டுகொள்வதே
இங்கு இலக்கு .
அதன் பிறகு
என்னிடம் சொல்வதற்கு
ஒன்றுமிருக்காது
அதற்கான தேவையும்...

1 comment:

  1. இது உங்களின் top 3.
    பல முறை படித்து ரசித்தேன்.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails