Friday, October 17, 2014

காதல் நிற ஓவியங்கள்

காதல் நிற ஓவியங்கள் - சிறுகதை
போகன் சங்கர், ஓவியங்கள்: ஸ்யாம்
''I feel lousy'' என்றான் அவன்.
மஞ்சுளா, ஆபீஸ் முடிந்து மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்கிக்கொண்டு பஸ் ஏறக் காத்திருக்கையில், ஒரு கடை வாசலில் தலையைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கும் நபர் யார் எனப் பார்த்தாள்... அட, ஹரி.
''ஹரி, ஏன் இங்க உட்கார்ந்திருக்கீங்க? உடம்பு சரியில்லையா?''
அவன் நிமிர்ந்து பார்த்து, ''மஞ்சு மேடம்'' என்றான் பலவீனமாக.
ஆட்டோக்காரரைக் கூப்பிடுவதற்குள் ஹரி ஏறத்தாழ மயங்கியிருக்க, ''கொஞ்சம் ஹெல்ப் பண்ணுப்பா'' என்றாள் ஆட்டோக்காரரைப் பார்த்து மஞ்சுளா.
''என்னம்மா குடிச்சிருக்காரா?'' என்றார்.
''சேச்சே...''
யாரோ ஹரியின் சூட்கேஸ் மற்றும் சாமான்களை எடுத்துத் தந்தார்கள். நீளமாகச் சுருட்டிவைத்திருந்த கான்வாஸ்களை ஏற்ற ஆட்டோக்காரர் சிரமப்பட்டார்.
''எங்கம்மா போணும்?''
தெரிந்த டாக்டரிடம் போனாள்.
''வைரல் ஃபீவர். உங்க பக்கத்து வீட்டுல வாடகைக்கு இருக்கிற பையன்தானே? சாப்பாட்டில கவனமா இருக்கணும். இது மூணு நாளைக்கு!'' என்றார் மாத்திரைகள் தந்து.

100 ரூபாய் வாங்கிக்கொண்டு ஊசியும் போட்டார். வீடு வரும்போது இரவு 9 மணி. அதற்குள் ஹரி லேசாகத் தெளிந்திருக்க, ''நானே இறங்கிக்கிறேன்'' என்றவனை, ''சும்மா இரு சார்...'' என்று ஆட்டோக்காரர் ஏறக்குறைய தூக்கிச்சென்று வீட்டுக்குள் போட்டார்.
அதற்குள் ராஜகோபால் வீட்டுக்குள் இருந்து ஓடிவந்து, ''என்னடி... என்ன ஆச்சு?'' என்றார்.
''ஒண்ணும் இல்லை... ஹரிக்கு உடம்பு சரியில்லாம ரோட்டில மயங்கிக்கிடந்தார். டாக்டர்கிட்டே காமிச்சுட்டு வர்றேன். ஆட்டோ... எவ்வளவுப்பா?''
''கொடேன் ஒரு நூறு.''
ராஜகோபால், ''நூறு ரூபாயா?'' என்று பார்த்தார்.
மஞ்சுளா... ''ப்ச்... குடுங்க'' என்றாள்.
சுரேஷ், மொபைலில் கேம் விளையாடிக் கொண்டிருந்தவன் அவளைக் கண்டதும் அதை சரேல் என மறைத்து, ''ஹாய் மம்மி'' என்றான். அதைக்கூடக் கவனிக்காமல் நேராக அடுக்களைக்குப் போனாள்.
ராஜகோபால் பின்னாலேயே வந்து ''என்னன்னு சொல்லேன்டி.''
''காய்ச்சல், 105 டிகிரி இருக்கு. எங்கேயோ திருநெல்வேலி பக்கம் பழங்கோயில்ல படம் எழுதப் போயிருக்கார். சாப்பாடும் தண்ணியும் செட் ஆகலை போல!''
''சரி இப்ப என்ன சமையல் பண்ணப் போறே... ரொம்பப் பசிக்குது. இது என்ன?''
''கஞ்சி, அவருக்கு!''
''குடு... நான் எடுத்துட்டுப் போறேன்.''
''வேணாம். மாத்திரை குடுக்கணும்.எனக்குத்தான் தெரியும்'' என்று அவரைக் கடந்துபோனாள்.
றுநாள் காலை. ராஜகோபால் அவன் வீட்டுக்குப் போய் பேருக்கு ஒரு தடவை பார்த்தார். அறை முழுவதும் புத்தகங்களும் கான்வாஸ்களும் நிரம்பி இருக்க, கட்டிலுக்கு அடியில் இரண்டு ஷீவாஸ் ரீகல்  புட்டிகள் இருந்தன. கான்வாஸ்களில் மிக அழகான பெண்கள், மிருக நிர்வாணமாக நின்றிருந்தார்கள். அறையில் லேசான சிகரெட் மணம். 'இந்தக் காய்ச்சல்லகூட சிகரெட் குடிக்கிறானே... முட்டாள்’ என நினைத்தார். அவர் போகையில், வாய் பிளந்து விட்டத்தை வெறித்துக்கொண்டிருந்தான்.
''மிஸ்டர் ஹரி, உடம்பு எப்படி இருக்கு?'' என்றதற்கு விரோதமாகப் பார்த்தான்.
மறுநாளும் அவனுக்கு வீட்டில் இருந்து கஞ்சி, பால் எல்லாம் போயின.
''இன்னைக்குமா?'' என்றான் ராஜகோபால்.
''அசட்டுத்தனமாப் பேசாதீங்க. போறப்போ அவர் அப்பா உங்ககிட்டேயும்தானே சொன்னார்...''
''அதுக்காக நீ பார்க்கிற மாதிரி அவன் சம்சாரம்கூடப் பார்த்துக்க மாட்டா. தவிரவும், அவன் சரியில்லை.''
மஞ்சுளா அவரை விழித்துப் பார்த்து, ''என்ன சரியில்ல?'' என்றாள்.
''வந்து... குடிக்கிறான்போல இருக்கு. இந்தக் காய்ச்சல்லகூட சிகரெட் பிடிக்கிறான். ரூம் முழுக்க பொம்பளைங்க படத்தை அசிங்கமா வரைஞ்சுவெச்சிருக்கான்.''
''ச்சும்மா உளறாதீங்க... அது ஆர்ட்.''
''என்ன பெரிய ஆர்ட். சினிமாவா எடுத்தா அது போர்னோ; வரைஞ்சா ஆர்ட்டா? எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையாவே இரு. திடீர்னு கையைப் பிடிச்சு இழுத்துருவான்.''
''போதும். வாயை மூடுங்க'' என்றாள் மஞ்சுளா.

ரண்டாம் நாள் ஹரி கொஞ்சம் எழுந்து அமர்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருக்க, ''இப்பவும் புத்தகம் படிக்கணுமா?'' என்றாள் மஞ்சுளா.
அவன் மூடிவைத்துவிட்டு, ''வாங்க மேடம்'' என்றான். கையில் இருந்த பாத்திரத்தைப் பார்த்துவிட்டு, ''ஐயோ... ரொம்பச் சிரமம் உங்களுக்கு.''
''என்ன சிரமம்... வெறும் ரசம் சாதம்.'' என்றவள், ''எங்க போயிருந்தீங்க பத்து நாளா? அப்ப உங்களுக்கு ரெண்டு லெட்டர் வந்தது.''
''தேங்க்ஸ். நெல்லை பக்கம் பிரம்மதேசம்னு ஒரு ஊர்ல, சோழர்கள் கட்டின பழைய கோயில் இருக்கு. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய சிற்பங்கள். வரையப் போயிருந்தேன்.''
''எப்பவும் கோயிலைத்தான் வரைவீங்களா?'' என்றாள். லேசாக வியர்த்தது. கான்வாஸ்களில் இருந்த பெண்கள் படங்கள் நினைவுக்கு வந்தன.
''இல்லீங்க. சில சமயம் இயற்கைக் காட்சி, அழகான முகங்கள்... வரையிறது உண்டு.''
''சாப்பிடுங்க... உங்களுக்குப் பிடிச்ச ஓவியர் யார்?''
''ருகேண்டாஸ். கேள்விப்பட்டிருக்கீங்களா?''
''இல்லை. எனக்கு ரெம்ப்ராண்ட்தான் பிடிக்கும்'' என்றாள்.
அவன் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, ''மை காட்!'' என்றான்.
''ஓவியர் மதி, எனக்குப் பெரியப்பா'' என்று மஞ்சுளா புன்னகைத்தாள்.
அவன் மறுபடியும், ''மை காட்!'' என்றான். ''எனக்குத் தெரியவே தெரியாது மேடம். என்ன ஒரு மேதை அவர்!'' என்றான். இப்போது அவன் பார்வையே மாறிவிட்டது.
''நான் சந்திக்க விரும்பிய ஆளுமைகளில் அவரும் ஒருவர்'' என்றவன் தயங்கி, ''நீங்க வரைவீங்களா?'' என்றான்.
''இல்லை... எங்கே அதுக்கெல்லாம்விட மாட்டாங்க. பெரியப்பாவையே கொஞ்சம் தள்ளித்தான் வெச்சிருந்தாங்க... ரசிக்கிறதோடு சரி.''
''அதுக்கே ஞானம் வேணுங்க. உங்க பெரியப்பான்னா... சொந்தப் பெரியப்பாவா?' என்று நம்ப முடியாததுபோல கேட்டவன், ''உங்க பெரியப்பா உங்களை வரைஞ்சிருக்காரா?' என்று கேட்டான்.
''இல்லை. ஏன்?'
''உங்க முகத்தை அவர் படங்களில் பார்த்த நினைவு'' என்றான்.
அவள் பேசவில்லை. பெரியப்பா, மஞ்சுளாவின் அம்மாவை வரைந்திருக்கிறார். 'உன் அம்மாவோடது அபூர்வமான முகம்’ எனச் சொல்லியிருக்கிறார். அவர் பெரும்பாலும் தமிழ்ப் பெண்களை வரைந்தது இல்லை. அவருக்கு இங்கேவிட வங்காளத்தில்தான் பெரிய வரவேற்பு. குறிப்பாக, சக்தியின் பத்து வடிவங்களான தசமகா வித்யாக்களை மையமாக வைத்து, அவர் வரைந்த வரிசை பெரிய புகழையும் எதிர்ப்பையும் பெற்றது. எதிர்ப்பின் காரணம், அவை ஆபாசமாக இருக்கின்றன என ஒரு குழுவுக்குத் தோன்றிவிட்டதுதான். 'பத்து வித்யாக்களில் கமலா என்ற தாமரைக் கடவுளுக்கு மட்டும், உன் அம்மாவை மாடலாக நினைத்துக்கொண்டேன்’ என அவளிடம் பெரியப்பா சொல்லியிருக்கிறார்.
''நீங்க எப்பவும் நிலக் காட்சிகள், உடல்கள்தான் வரைவீங்களா? நவீன வடிவங்களில் உங்களுக்கு ஆர்வம் இல்லையா?'' என்று ஹரியிடம் கேட்டாள் மஞ்சுளா.
அவன் சற்று கோபமுற்று, ''அவையெல்லாம் நீர்க்குமிழிகள்; காலாவஸ்தை அல்லது பாசிங் ஷோ'' என்றான்.
''பாசிங் ஷோ என்ற ஒரு சிகரெட் இருந்தது. பெரியப்பா அதைத்தான் பிடிப்பார். அவரது இடது கையில் இன்னொரு தூரிகைபோல அது எப்போதும் புகையும். அந்தப் புகை வாசம், எப்போதும் அவரது அறையில், உடைகளில், ஓவியங்களில் இருந்தது. அவருடைய ஓவியங்களில் தெரிந்த புகைமூட்டம் அவரது சிகரெட்டில் இருந்து வந்ததுதான்'' என்றவள், '' 'குழந்தை இது ஒரு பாணி; அபநீந்திரநாத் தாகூர் பாணி’ என வங்காளத்தில் சிலர் சொல்வார்கள்’ எனக் கேலியாகச் சொல்லியது உண்டு. ஆனால், எவ்வளவு புகை மூடி எழுதினாலும், அப்பா கண்டுபிடித்துவிடுவார். அம்மாவை அடிக்கவே செய்தார். 'உன்னை யாருடி மாடிக்குப் போகச் சொன்னா? அங்கே போகக் கூடாதுனு சொன்னேன் இல்லையா?’ என்பார் பல்லைக் கடித்துக்கொண்டே. அவள் 'நான் போகவே இல்லை’ எனச் சாதித்தாள். 'பிறகு எப்படி உன் முகம் அவர் படங்களில் வருது? நான் என்ன முட்டாள்னு நினைச்சுட்டீங்களா ரெண்டு பேரும்?’ எனக் கத்தினார். 'இன்னைக்கே நான் அவரை வேற எங்கயாவது போகச் சொல்றேன். இது குடும்பம் நடத்துற இடம்’ எனக் குதித்தார். ஆனால், அது அவ்வளவு எளிதான காரியமாக இருக்கவில்லை. வீடு முழுக்க பெரியப்பாவின் பெயரில் இருந்தது. அவர் மீதான அப்பாவின் வெறுப்புக்கு அதுவும் ஒரு காரணம். அந்தக் கோபத்தை எல்லாம் அவர் அம்மா மீது காட்டினார். அவள் வீட்டில் இருந்து பணம் வாங்கி வரச் சொன்னார். அதைவைத்து வேறு எங்கேயாவது போய்விடலாம் என்பது அவர் எண்ணம்.
இதைக் கேள்விப்பட்டபோது பெரியப்பா ஒருகணம் முகம் சுருங்கி, 'ஓர் ஓவியன் கண்களால் அல்ல... மனதால் பார்க்கிறான். உண்மையில் உன் அப்பன் அஞ்சுவது என்னிடம் அல்ல; உன் அம்மாவிடம். வங்காளத்தில், கீழே கிடக்கும் சிவனை, சக்தி மிதித்துக்கொண்டு நிற்பதுபோல ஒரு படம் உண்டு. பார்த்திருக்கிறாயா?’ என்றார். இதுமாதிரியான சந்தர்ப்பங்களில் அம்மா ஒரு நாள், 'உன் அப்பா மிகச் சிறிய மனிதர். உன் பெரியப்பா எவ்வளவு பெரிய மனிதரோ, அவ்வளவு சிறிய மனிதர் இவர். அவர் பெரிதாக பெரிதாக, உன் அப்பா சிறிதாகிக்கொண்டே இருக்கிறார்’ என்றாள்'' 
கணத்துக்குக் கணம் மாறிக்கொண்டேயிருந்த மஞ்சுளா முகத்தை உற்றுப் பார்த்துவிட்டு, ''நான் ஒருநாள் உங்களை வரையலாமா? உங்களுடையது அபூர்வமான முகம்'' என்று அவள் கண்களைப் பார்த்தான் ஹரி.
மஞ்சுளா அந்தக் கேள்வியால் தாக்கப்பட்டு மிகவும் நாணி, ''நான் வர்றேன்'' என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டாள்.
அன்றைக்கு ராத்திரி மஞ்சுளாவுக்கு அபத்தமாக ஒரு கனவு வந்தது. ரெம்ப்ராண்டின் போர்வீரன் மாதிரி சிவப்பு ஆடையில் யாரோ குதிரையில் அவளைத் தூக்கிப்போவதுபோல். பிறகு  அவன், குதிரை, அவள்... என யாருமே ஆடை அணிந்திருக்கவில்லை. நெஞ்சு படபடக்க எழுந்து அமர்ந்துகொண்டாள். உடல் முழுக்க சுரந்து ஒரு வியர்வைக் குளமாக மாறிவிட்டது. பாத்ரூம் போய்வந்த பிறகும், இரவு வெகுநேரம் தூங்காமல் அப்படியே அமர்ந்திருந்தாள். என்ன ஒரு கனவு!
பக்கத்தில் ராஜகோபால், அவர் கன்னத்தில் கோழை எச்சில் வடிய குறட்டைவிட்டுத் தூங்கிக்கொண்டிருந்தார்.
''மஞ்சுளா மேடம், சினிமாவுக்கு வர்றீங்களா. துல்கர் சல்மான் படம்'' என்றாள் சுசீலா. மஞ்சுளாவோடு அலுவலகத்தில் ஆபீஸில் வேலைபார்ப்பவள்.
மஞ்சுளாவுக்கு, துல்கர் சல்மான் யார் எனத் தெரியவில்லை. இருந்தாலும், ''எனக்கு அவனைப் பிடிக்காது'' என்றாள் பொதுவாக.
''சல்மான் பிடிக்காதா?'' என்று கேட்டுவிட்டுச் சிரித்த லலிதா, ''மாமிக்கு வயசு ஆச்சு இல்லியோ...'' என்றாள் கிண்டலாக.
''என்னடி வயசாச்சு..? 35 ஒரு வயசா? (கொஞ்சம் வயதை மறந்துவிட்டாள்.. 39) ''இன்னொண்ணு தெரியுமா... எனக்கு இந்தியே பிடிக்காது'' என்றாள் மஞ்சுளா.
''ஐயோ மாமி, இது இந்தி இல்லை... மலையாளம்'' என்று கேலியாக வாய்விட்டுச் சிரித்தாள் சுசீலா.
மஞ்சுளாவுக்குத் திக்கென்றது. அவமானமாக உணர்ந்தாள். அவளிடம் மஞ்சுளா ஏதோ சொல்ல முயன்றபோது, ''சுசீலா மேடம்... உங்களை ஏ.ஓ கூப்பிடுறார்'' என்றார் அலுவலக உதவியாளர். சுசீலா உள்ளே போய் அரை மணி நேரம் கழித்து, முகம் எல்லாம் மந்தகாசமாக வெளிவந்தாள்.
''என்னடி சிரிச்சுட்டே வர்ற. அந்தாள் என்ன சொன்னார்?''
''ஒண்ணும் இல்லே. இயர் எண்டு ஸ்டேட்மென்ட் பத்தி கேட்டுட்டு இருந்தார்'' என்றாள் சுசீலா.
'வருடம் முடிவதற்கு இன்னும் ஆறு மாதங்கள் இருக்கிறதே. தவிரவும் இதற்கு இவ்வளவு நேரமா? புதிதாக வந்திருக்கிற அதிகாரி நாகர்கோவில்காரர் என்பது நினைவுக்கு வந்தது. ஆனால், மலையாளிபோல. நடந்துகொள்கிறார்.அதனால்தான் இந்தப் பெண்களும், திடீரென மலையாளப் படங்கள் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால், நாகர்கோவில் தமிழ்நாட்டில்தானே இருக்கிறது?’ என நினைத்துக்கொண்டாள் மஞ்சுளா.
பிறகு, இரு சிநேகிதிகளும் ரகசியமாக ஏதோ பேசிச் சிரித்துக்கொள்ள மகா எரிச்சலாக வந்தது. 'வேலையைப் பாருங்கடி மேனா மினுக்கிங்களா’ எனக் கத்த விரும்பினாள். பிற்பகல் இருவரும் கொஞ்ச நஞ்ச வேலைசெய்யும் பாசாங்குகளையும் விட்டுவிட்டு, வாராந்தரிகளைப் படித்துக் கொண்டிருந்தார்கள். ஆபீஸில் ஏறக்குறைய எல்லோருமே இப்படித்தான் என்றாலும், இவர்கள் கொஞ்சம் ஓவர்.
''மேடம், இதைப் பாருங்க. என்னம்மா படம் போட்டிருக்கான்'' என்றாள் லலிதா.
மஞ்சுளா அதைப் பார்க்காமலே ''இதெல்லாம் என்ன படம்?!'' என்றாள் கேலியாக.
ஆபீஸ் விட்டுக் கிளம்பி வெளியே வந்ததும், வழிநெடுக சுசீலா அவளது பாய் ஃப்ரெண்டு பற்றி, அளந்துகொண்டே வந்தாள். ''He is totally mad மேடம். சரியான அசடு'' என்றாள். 'அசடைக் காதலிக்கிறவள் முட்டாள்’ எனச் சொல்ல விரும்பினாள் மஞ்சுளா. ஆனால், ''நான் கிளாசிக்குகளை மட்டும்தான் பார்ப்பது சுசீலா. எல்லாவற்றையும் பார்ப்பது இல்லை; சாப்பிடுவது இல்லை; படிப்பது இல்லை'' என்றாள்.
''அதான் சொன்னேனே... உங்களுக்கு வயதாகிவிட்டது'' -சொல்லிவிட்டு சத்தமாகச் சிரித்தாள் சுசீலா.
மஞ்சுளா மிகக் கோபமுற்று ''கிளாசிக்குகளைப் பார்ப்பது ரசனையோட ஆழத்தின் அடையாளம். வயதாகிவிட்டதின் அடையாளம் இல்லை.''
ஆனால், சுசீலா சொன்னதுபோல மஞ்சுளா நிர்மலிடம் சொல்லியிருக்கிறாள். பெரியப்பாவைத் தேடிவந்த எத்தனையோ மனிதர்களில் ஒருவன் நிர்மல்; வங்காளி. அவன் ஒருநாள் படி இறங்கும்போது கல்லூரியில் இருந்து வந்த மஞ்சுளாவிடம் ஒரு புத்தகத்தைக் கொடுத்து, ''இதைப் படித்துப் பார்'' என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்.
அது வங்காளத்தில் மைத்ரேயி தேவி என்பவர் எழுதிய நாவலின் மொழிபெயர்ப்பு. எதிர்பார்த்ததுபோல அது ஒரு காதல் கதை. 'கொல்லப்படுவது இல்லை’ என்பது அதன் தலைப்பு. உலகப் புகழ்பெற்ற ஓர் இந்தியத் தத்துவவாதியைப் பார்க்க வருகிற வெளிநாட்டு சீடன் ஒருவன், அவரது பதின்வயது மகளிடம் காதல்கொள்கிறான்; பூஜிக்க ஆரம்பிக்கிறான்.
'அது ஓர் உண்மைக் கதை. இந்தக் கதையில் வருகிற நபர்கள் உயிரோடு இருக்கிறார்கள்’ என நிர்மல் பின்னாளில் சொன்னான். மஞ்சுளாவுக்கு அந்தக் கதை அபாரமான மனக் கிளர்ச்சியைத் தந்தது.
''இதை ஏன் என்னிடம் கொடுத்தீர்கள்? இந்தக் காதல் துக்ககரமாக முடிந்துவிடுகிறதே. இதில் பெண்ணின் தந்தையார் காதலுக்கு ஒப்புக்கொள்வது இல்லையே...'' என்று அவனிடம் கேட்டாள்.
அவன் தளர்ந்துபோய் ''ஆமாம்'' என்றான்.
''உன் தந்தையும் இதற்கு ஒப்புக்கொள்ளப்போவது இல்லை. எந்தப் பெண்ணின் தந்தைதான் என்னைப் போன்ற பரதேசிகளை ஏற்றுக்கொள்வார்?''
''இவையெல்லாம் தெரிந்தும் என்ன காரணத்தால், பரதேசிகள் பெண்களுடன் காதலில் விழுகிறார்கள்?'
''பரதேசிகளுடன் பெண்கள் ஏன் காதலில் விழுகிறார்களோ, அதே காரணத்தால்தான்.''
மஞ்சுளா, அவனை ஆழமாகப் பார்த்து, ''நீங்கள் காதலைச் சொல்லும் முறை இதுதானா?'' என்றாள்.
அவன் சிரித்துக்கொண்டே, ''வேறு எப்படிச் சொல்லவேண்டும்?'' என்று கேட்டான்.
''ஆங்கிலப் படங்களில் சொல்வதுபோல நேரிடையாக அல்லது இந்திப் படங்களைப்போல சற்றே நாடகத்தனமாக, சஞ்சய் தத்தின் புதிய படத்தைப் பார்த்தீர்களா?''
''நான் வங்காளி. வங்காளப் படங்களில் சொல்வது போலத்தான் சொல்வேன்.''
''அதுவும் பழைய வங்காளப் படங்கள்.''
''ஆம்... ஆனால் அவை கிளாசிக்குகள்.''
''அவற்றை வயதானவர்கள்தான் பார்ப்பார்கள்.''
அவன் மறுத்து, ''இல்லை... ஆழமானவர்கள், ரசனை உடையவர்கள் கிளாசிக்குகளைத்தான் பார்ப்பார்கள். அவைதாம் படங்கள். மற்றவை எல்லாம், காலாவஸ்தை அல்லது பாசிங் ஷோ.''
மஞ்சுளா சட்டென உறைந்து நின்றாள். நிர்மலை ஹரிக்குத் தெரியுமா? பிறகு எப்படி அதே வார்த்தைகளைப் பயன்படுத்தினான். நிர்மல், பின்னாளில் பெரிய எழுத்தாளர் ஆனான். ஒருவேளை ஹரி அவனது எழுத்துக்களைப் படித்திருப்பானா? அல்லது இவர்களைப் போன்றவர்கள் ஒரே மாதிரிதான் பேசுவார்களா?
''மாமி ஏன் நின்னுட்டீங்க? நடக்க முடியலியா?' என்றாள் சுசீலா.
''டோன்ட் கால் மீ மாமி.''
சுசீலா சிரித்துக்கொண்டே ''மாமி ராக்ஸ்'' என்றவள், ''மாமி நீங்க கொஞ்சம் தொப்பையைக் குறைக்கணும். மூச்சு வாங்குது உங்களுக்கு. ஜிம்முக்குப் போங்க.''
''ஜிம்... எவ்வளவு காசு ஆகும் சுசீலா?''
''அதிகம் ஆகாது மாமி. மாசம் சுமார் 2,000 ரூபாய் வரும்.''
2,000 ரூபாயா? ராஜகோபாலுக்கு மார்பு அடைத்துவிடும். மஞ்சுளா பக்கவாட்டுக் கடைக் கண்ணாடிகளில் ஒருமுறை, தன் வயிற்றை கடைக்கண்ணால் பார்த்தாள். 'ஐயோ... இறங்கிய இந்த வயிறையா ஹரி வரைகிறேன்’ எனச் சொன்னான்? ச்சே... முகத்தைத்தானே வரைகிறேன் எனச் சொன்னான். அதற்கு எதற்கு ஜிம்முக்குப் போக வேண்டும்? எனக்கு என் அம்மாவைப்போல தாமரைக் கடவுள் முகம் என்றல்லவா சொன்னான்? ச்சே... அவன் எங்கே அப்படிச் சொன்னான். பெரியப்பா, அம்மாவின் முகத்தை அல்லவா அப்படிச் சொன்னார்? இல்லை நிர்மலா? அவளுக்குக் குழம்பியது.
நிர்மல் சொன்னதுபோலவேதான் அப்பா நடந்துகொண்டார். தன்னைப்போல ஒரு நபரைத் தேடிப்பிடித்துக் கொண்டுவந்தார்.ராஜகோபாலைப் பார்த்ததுமே அம்மா சொல்லிவிட்டாள்... 'இந்தாள் உங்கப்பாவின் நகல்.’
'சும்மா இரு. நீ என்ன நினைத்துக்கொண்டு, இப்படியெல்லாம் பேசுகிறாய் என எனக்குத் தெரியும்’ - அப்பா கத்தினார். ஆனால், இவற்றையெல்லாம் தடுக்கக்கூடிய பெரியப்பாவும் அப்போது இல்லை. சுந்தரவனக் காடுகளுக்குப் படம் எழுதுகிறேன் எனப் போனவர், பாம்பு தீண்டி இறந்துவிட்டார். அப்பா போகவே இல்லை. அம்மாதான் ரொம்ப அழுதாள். 'தேவி, இறுதியில் தண்டித்துவிட்டாள்’ என ஒருநாள் அம்மாவிடம் சொன்னார். 'கலை என்கிற பெயரில் இவர் பண்ணின சேட்டைகளை, அசிங்கங்களை எத்தனை நாள்தான் அவளும் பொறுத்துக்கொண்டிருப்பாள்?’ இறுதியில் அப்பாவே வென்றார். படம் வரையத் தெரியாத, ரசிக்கத் தெரியாத, அவற்றைப் பார்க்கவே விரும்பாத அப்பா!
இந்தச் சம்பவம் மஞ்சுளாவிடம் மிகப் பெரிய அச்சத்தை உருவாக்கிவிட்டது. நிர்மல் திரும்ப வந்து அவனுடன் அழைத்தபோது, அவள் போகவில்லை.
''நான் எதை நம்பி உன்னுடன் வருவது?
நீ எங்கேயாவது போய் பாம்பு கடித்து அநாதையாக இறந்துகிடந்தால், பிறகு என் கதி என்ன?'' என்று அவனிடம் கேட்டாள்.
''வங்காளத்தின் அந்தப் பகுதிகளில் பாம்பு தீண்டி இறப்பது சகஜம்தான். இன்றும் அங்கே பாம்புக் கடியால் இறப்பவர்கள் அதிகம்.பெரியப்பா சற்று அஜாக்கிரதையாக இருந்துவிட்டார்'' என்றான் நிர்மல்.
''அந்த அஜாக்கிரதை என் வாழ்வில் நிகழ வேண்டாம். நீ படம் எழுதுவது, ஊர் ஊராகச் சுற்றுவது எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்தால், நாம் கல்யாணம் பண்ணிக் கொள்ளலாம்.''
அவன் ஆச்சர்யம் அடைந்து அவளையே பார்த்தவண்ணம் சற்றுநேரம் நின்றிருந்தான்.பிறகு ஒரு பெருமூச்சுடன், ''சட்டென ஏன் உன்னைச் சக்தியற்றவளாக மாற்றிக்கொண் டாய்? நான் உன்னை உன் அம்மாவின் மகள் என நினைத்திருந்தேன். ஆனால் இப்போது... நிச்சயமாக நீ உன் அப்பாவின் மகள்தான்'' என்றான்.
அவள் ஒன்றும் சொல்லவில்லை. உதடுகள் துடிக்கப் பேசாது நின்றிருந்தாள். பிறகு, அவன் அவளைச் சந்திக்க வரவேயில்லை.
ஒரு கார் சர்ரென்று அவர்கள் அருகில் வந்து நின்றது. அந்த அரை மலையாளி அதிகாரிதான். அவர் உள்ளிருந்து தலையை நீட்டி, ''மிஸ் சுசீலா, உங்க ஏரியா பக்கம்தான் போறேன்... வர்றீங்களா?'' என்றார்.
அவள் காத்திருந்தவள்போல் ஏறிக்கொண்டு ''மேடம் நீங்க...''
அவர் அப்போதுதான் அவளைக் கவனிப்பதுபோல, ''ஓ மஞ்சுளாவா? நீங்களும் வாங்களேன்...'' என்றார்.
''நோ சார். எனக்குக் கொஞ்சம் பர்ச்சேஸ் இருக்கு'' என்றாள் கடுப்புடன்.
கார் விலகிப் போனபோது ஏனோ கண்கள் துளிர்த்தன. தன்னை உலுக்கிக்கொண்டாள்... ச்சே. நிர்மல் சொன்னது நினைவுக்கு வந்தது 'ஏன் சட்டென உன்னை சக்தியற்றவளாக மாற்றிக்கொண்டுவிட்டாய்?’
நடைபாதைக் கடைகளில் தேவை இல்லாத பொருட்களாகத் தேடிப் பிடித்து வாங்கினாள்.காய்கறிகள், பழங்கள், ஹரிக்கு ஜூஸ் போட்டுக்கொடுக்கலாம். புத்தகக் கடை ஜன்னலில் 'Outline of art’ என்ற ஒரு புத்தகத்தைப் பார்த்தாள். 1,300 ரூபாய். யோசித்து நீளமாக முழுகோதுமை ரஸ்க் பாக்கெட் வாங்கினாள். ஹரிக்கு இன்னமும் உடல் சரியாகவில்லைதானே? இன்னொரு முறை கடைக் கண்ணாடியில் வயிற்றை இழுத்துப் பார்த்துக்கொண்டாள். ராஜகோபால் சத்தம் போட்டாலும் பரவாயில்லை என, ஒரு மாதம் ஜிம் போய்ப் பார்த்துவிட வேண்டும். அவள் வீட்டுக்குப் போவதற்குள் ராஜகோபால் வந்திருந்தார்.
''மஞ்சு, சப்பாத்திக்கு மாவு போட்டு வெச்சிருக்கேன். கல்லுலே இட்டு எடுத்துடு.''
''இருங்க... முதல்ல ஹரிக்கு ஏதாவது குடுத்திட்டு வர்றேன்'' என்றவளை ராஜகோபால் விநோதமாகப் பார்த்து, ''அவனைப் பார்த்துக்க ஆள் வந்தாச்சு'' என்றார்.
''யார்... அவர் அப்பாவா?''
''இல்ல... அவன் ஃப்ரெண்டாம். இங்கே எங்கேயோ பக்கத்திலே இருக்கா. அவளுக்கு இவனே பரவாயில்லை. மத்தியானமே வந்துட்டா. ரெண்டு பேரும் அரைகுறையா டிரெஸ் பண்ணிட்டு, ஏதோ களிமண் சிலை பண்றேன்னு கொட்டம் அடிச்சிட்டு இருக்குதுங்க. 'இனி மாமியைச் சிரமப்பட வேண்டாம்னு சொல்லுங்க’னு ஹரி சொன்னான்'' என்றார் ராஜகோபால்.
மஞ்சுளா உறைந்துபோய் கொஞ்ச நேரம் அறை நடுவிலேயே சிலைபோல நின்றிருந்தாள். பிறகு கைப்பையை வீசிவிட்டு சோபாவில் தொப்பென அமர்ந்தாள்.
பிறகு, ''எனக்கு ஒரே தலைவலி. சப்பாத்தி எல்லாம் போட முடியாது'' என்று அலறினாள்!


(ஆனந்தவிகடன் தீபாவளி ஸ்பெஷல் 1 இதழில் வெளிவந்த சிறுகதை )

Friday, April 18, 2014

பாரன்ஹீட் 451-இரண்டு

அவர்களிடம் இந்த இயந்திரம் இருந்தது.உண்மையில் இரண்டு இயந்திரங்கள்.ஒன்று உள்ளுக்குள்  தூர்ந்துபோன பழைய கிணற்றுக்குள் தேங்கிக் கிடக்கும் பாசி படிந்த நீரையும் காலத்தையும் தேடி இறங்கும் நாகம் போல உடலுக்குள் இறங்கியது.அது அங்கே  மிதக்கும் அத்தனை பாசியையும்   அங்கிருக்கும் இருட்டையும்  காலகாலமாக அங்கே சேர்ந்து கிடக்கும்  நச்சையும் விழுங்கியதா? இயந்திரம்  சத்தமே போடாமல்  மௌனமாய் எல்லாவற்றையும்  விழுங்கியது.அதற்கொரு கண் இருந்தது .அதை இயக்கிக் கொண்டிருந்தவன், விசேடமாகத் தயாரிக்கப் பட்ட லென்சுடன்  கூடிய தலைக் கவசத்தை  அணிந்துகொள்வதன் மூலமாகத்  தான் யாரைத் தோண்டிக் கொண்டிருக்கிறானோ அவர்களது ஆன்மாவின் ஆழம் வரைப் பார்க்கமுடிந்தது.அந்தக் கண் என்ன பார்த்தது?அவன் சொல்லவில்லை.அந்தக் லென்ஸ் மூலமாக அவன் பார்த்தான்.ஆனால் பார்க்கவில்லை.மொத்த விவகாரமும் ஒருவர் தன்வீட்டின் பின்புறம் ஒரு அகழி  தோண்டுவதைப் போலத்தான் இருந்தது. படுக்கையில் கிடக்கும் பெண்மணி அந்த முயற்சியில் எதிர்ப்பட்ட மார்பிள் படுகை  போலத்தான் இருந்தாள் .நாகமே  இன்னும் போ.இன்னும் இன்னும் துளைத்து அங்கிருக்கும் வெறுமையையும் முடிந்தால் உறிஞ்சி வெளியேற்று.

இயக்குகிறவன் ஒரு சிகரட்டைப் பிடித்தவாறே அங்கேயே நின்றிருந்தான்.

மற்ற இயந்திரமும் இப்போது வேலை செய்துகொண்டிருந்தன்தது.அதை இயக்குகிறவனும்  முந்தியவனைப் போலவே கறைபடியாத ஒரு பழுப்பு அங்கியில் முற்றிலும் மனிதச் சாயல் இல்லாமல்தான் இருந்தான். அந்த இயந்திரம் உடலிலிருந்து கெட்ட  ரத்தம் முழுவதையும் வெளியேற்றி புதிய தூய ரத்தத்தால் நிரப்பிக் கொண்டிருந்தது.

''இரண்டையுமே செய்யவேண்டும் வயிற்றை  மட்டும் சுத்தப் படுத்தினால் போதாது.இல்லை எனில் உடம்பில் தேங்கியிருக்கும் நச்சு ரத்தம் மூளையை சுத்தியலால் அடிப்பது போல அடித்து அடித்து ஒரு மாமிசக் கூழ் போல ஆக்கிவிடும்''

மண்டேக்''போதும்!''என்றான்.

அவன் ''சும்மா சொன்னேன்''

''உங்கள் வேலை முடிந்துவிட்டதா?''

அவர்கள் இயந்திரங்களை நிறுத்தி மூடி வைத்தார்கள்.அவனுடைய கோபம் அவர்களைத் தொடக் கூட இல்லை.தங்களது சிகரெட் புகை சூழ கண்கள் மீது சுழல அசையாது நின்றிருந்தார்கள்.

''ஐம்பது டாலர்கள் ''என்றார்கள் 

''முதலில் அவள் நன்றாக இருக்கிறாளா என்பதைச் சொல்லுங்கள்''

''நன்றாகிவிடுவார்.நாங்கள் அவர் உடலிலிருந்து கெட்ட விஷயங்களை எல்லாம் எடுத்துவிட்டு புதிய விசயங்களை வைத்திருக்கிறோம்.எல்லாம் சரியாகிவிடும்''


''நீங்கள் இரண்டு பேருமே எம் டி படித்தவர் இல்லை.அவசரசிகிச்சைப் பிரிவிலிருந்து ஒரு எம் டி மருத்துவரை  அழைத்து வந்திருக்கக் கூடாதா?""

''தேவை இல்லை.நாங்கள் இதுபோல நிறைய கேஸ்களை கடந்த இரண்டு வருடங்களாக பார்க்கிறோம்.இவை இதற்காகவே  தயாரிக்கப் பட்ட இயந்திரங்கள்.,அதன் சிறப்பு லென்ஸ் மூலமாக மிக எளிதாக இதைக் கையாள முடியும்..இதற்கு இந்த இயந்திரத்தைக் கையாளும் இரண்டு மனிதர்கள் போதும்.அரைமணி நேரத்தில் எல்லாவற்றையும் சுத்தம் செய்துவிட முடியும் ''என்றான் அவன்.பிறகு ''நாங்கள் போக வேண்டியிருக்கிறது .புதிதாய் ஒரு அழைப்பு ஹெட்போன்கள் மூலம் வந்திருக்கிறது.இன்னொரு நபர் எங்கோ தனது தூக்க மாத்திரைப் புட்டியின் மூடியைத் தொலைத்திருக்கிறார்.தேவை எனில் கூப்பிடுங்கள் .தூக்கத்திலிருந்து எழுப்பும் மருந்து அவருக்குக் கொடுத்திருக்கிறது.பசியோடு எழுந்திருப்பார்.பார்க்கலாம்''

பிறகு அவர்கள் தங்களது சிகரெட் புகையோடு விஷப் பாம்புக் கண்களோடு தங்களது இயந்திரங்களோடு குழாய்களோடு பாட்டில்களில் தளும்பும் துக்க திரவங்களோடு  வெளியே போனார்கள் 


மாண்டேக் அவள் அருகில் அமர்ந்தான்.புறங்கையால் அவளது மூச்சை உணர முயற்சித்தான்.

''மில்டரெட் !''என்றழைத்தான் 
பிறகு நாம் நிறைய பேர் இருக்கிறோம் என்று  நினைத்தான்.மிக நிறைய பேர்.ஒருவரை ஒருவர் அறியாமல்.கோடிக் கணக்கில்.அந்நியர்களாய்.நாம் முற்றிலும் அறியாத அன்னியர்கள் திடீரென்று உங்கள்  வாழ்வுக்குள் வருகிறார்கள்.உங்கள் இதயத்தை வெட்டி எடுக்கிறார்கள் .உங்கள் ரத்தத்தை உறிஞ்சுகிறார்கள் கடவுளே!யார் இந்த மனிதர்கள் ?நான் இதுவரை இவர்களைப் பார்த்ததே இல்லை 

அரைமணிநேரம் போனது.

இந்தப் பெண்மணியின் உடலில் இப்போது புது ரத்தம் ஓடுகிறது.அது அவளுக்குப் புதிய விசயங்களைச் செய்திருக்கிறது.அவள் கன்னங்கள் மிகச் சிகப்பாகவும் உதடுகள் மிருதுவாகவும் புதிதாகவும் இப்போது மாறிவிட்டன.வேறொருவரின் ரத்தம்.இதேபோல வேறு ஒருவரின் தசைகளையும் மூளையையும் இவ்வாறு பொருத்த முடிந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும் !அவளுடைய மனத்தையும் கூடக் கழற்றிச் சுத்தம் செய்து தூசு தட்டி துளைகளை அடைத்து  புத்தம் புதிதாய் மறுநாள் காலை  கொண்டுவர முடிந்தால்.....

முடிந்தால்...

அவன் எழுந்து திரைகளை இழுத்துவிட்டு ஜன்னலைத் திறந்து இரவுக் காற்றை அறைக்குள் அனுமதித்தான்.நேரம் அதிகாலை இரண்டு மணி.இதோ அவனும் க்ளாரிசும்  வெள்ளி நிலவின் கீழ் நடந்து வந்து ஒருமணிநேரம் ஆகியிருக்குமா என்ன?அதற்குள் அவனது அந்த வண்ண உலகம் உருகி விழுந்து மீண்டும் தனது சாம்பல் நிறத்துக்குத் திரும்பிவிட்டது.

க்ளாரிசின் வீட்டிலிருந்து சிரிப்புச் சத்தம்  மிதந்து வந்தது.மிகத் தளர்வான இயல்பான சிரிப்புச் சத்தங்கள்.உற்சாகமான பேச்சொலிகள்..கொஞ்சம் கூட அவற்றில் செயற்கை இல்லை .சுற்றிலும் இருளால் பொதியப்  பட்ட வீடுகள் நடுவே தான்மட்டும் தனியாக அந்த நள்ளிரவிலும் ஒளிரும் அந்த வீட்டிலிருந்து  அவர்களது  பேச்சுக் குரல்கள் சிரிப்புகள்   காற்றில் ஒரு வசியவலையை நெய்து பிரித்து மீண்டும்  நெய்து கொண்டிருந்தன 

மாண்டேக் சட்டென்று வெளியே வந்து புல் தரையைக் கடந்து அவர்கள் வீட்டின் முன்னால் போய்  நின்றான்.கொஞ்சம் கூட யோசிக்கவில்லை.கொஞ்சநேரம் அப்படியே நிழலில் நின்றுகொண்டிருந்தான்.கதவைத் தட்டி உள்ளே போகலாமா என்று கூட யோசித்தான்.''நான் உள்ளே வருகிறேன்.வந்து எதுவும் செய்யாமல் பேசாமல் நீங்கள் பேசுவதை மட்டும் சும்மா கேட்டுக் கொண்டிருக்கிறேன்.நீங்கள் என்ன சொல்லிக் கொண்டிருந்தீர்கள்?''என்று சொல்லலாமா என்று...

ஆனால் மாண்டேக் உள்ளே செல்லவில்லை.அவன் முகத்தின் மீது  ஒரு பனிப்பாளம்  போன்று படர்ந்த  பாவனையுடன் உள்ளே அந்த மனிதர்(அவளது மாமா?) பேசுவதை மட்டும் உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்தான்.


அந்த மனிதர் சொல்லிக்  கொண்டிருந்தார் 

''இது உண்மையில் பயன்படுத்து -தூர எறி  உலகம்.யார் மேலாவது நம் நமது மூக்கைச் சிந்துகிறோம்.பிறகு துடைத்துத் தூர எறிந்துவிடுகிறோம்.ஒவ்வொருவரும் இவ்விதமே அடுத்தவரைச் செய்கிறோம்.இதில் எனது விளையாட்டு அணி என்று எதைச் சொல்வது ?அவர்களுக்குப் பெயர்களே இல்லாதபோது ?இருக்கட்டும் .இப்போது அரங்கத்துக்குள் இறங்கிக் கொண்டிருக்கிறவர்கள்  என்ன நிறச சட்டை அணிந்துகொண்டிருக்கிறார்கள் ?""


மாண்டேக் வீட்டுக்குத் திரும்பினான்.ஜன்னலை அடைக்கவில்லை,மில்ட்ரெட் நன்றாக இருக்கிறாளா என்று பார்த்தான்.அவளைச் சுற்றி கவனமாகப் போர்த்திவிட்டு பிறகு நிலவொளி தனது கன்னங்களில் படியக்  கண்மூடிக் கிடந்தான்.


ஒரே ஒரு மழைத் துளி .க்ளாரிஸ்.
இன்னொன்று மழைத்துளி -மில்டெரெட் .இன்னொன்று இன்று இட்ட தீ.தூக்க மாத்திரைகள்.தூர எறியும் திசுக் காகிதங்கள் .மாமா.கிளாரிஸ்  மில்ட்ரெட் மாமா சிரிப்பு 
மழை.புயல்.இடிமுழக்கம் .கொடும் மழை.வெடித்துச் சிதறும் எரிமலை.எல்லாம் சேர்ந்து பெரிய இரைச்சலுடன் காலையை  நோக்கிச் செல்லும் ஒரு பிரவாகம்.

''இனி முடியாது''என்று சொல்லிக் கொண்டே  அவன் ஒரு தூக்க மாத்திரையை  நாக்கில் கரைத்துக் கொண்டான் 




காலை.மணி ஒன்பது.மில்ட்ரெடின்  படுக்கை காலியாக இருந்தது.

அவன் சட்டென்று இதயம் துடிக்க எழுந்து கீழே ஓடி அடுக்களைக் கதவருகே நின்றான்.
டோஸ்டரின்  வாயிலிருந்து வெளியே வந்ததை இயந்திரச் சிலந்திக் கைகள் வாங்கி வெண்ணை தடவிக் கொண்டிருக்க அவள்  அதையே பார்த்துக் கொண்டிருந்தாள்.அவள் காதுகளில் வழக்கமான ஹெட்போன்கள் காலத்தைக் கரைத்துக் கொண்டிருந்தன 

''நீ நலமாக இருக்கிறாயா''என்று அவன் கேட்டான்.


அவள் நிமிர்ந்துபார்த்து அவன் உதடுகளை வாசித்து ஆம் என்று தலை அசைத்தாள்.பிறகு டோஸ்டரை இன்னொரு டோஸ்டுக்காக  அமைத்து வைத்தாள்.

அவன் உட்கார்ந்தான்.அவள் ''ஏனென்றே தெரியவில்லை.ரொம்ப பசிக்கிறது ''


அவன் ''நேற்று இரவு ...''என்று ஆரம்பித்தான் 


''நேற்றிரவு தூக்கமே இல்லை.கடவுளே ரொம்ப பசிக்கிறது இன்று ''என்றாள்  

அவன் மறுபடியும் ''நேற்றிரவு...''என்று ஆரம்பித்தான் 

''நேற்றிரவு என்ன??''

''உனக்கு ஒன்றும் நினைவில்லையா?""

''என்ன?எனக்கு ஒன்றும் நினைவில்லை,நேற்று இங்கு பார்ட்டி எதுவும் நடத்தினோமா? கடுமையான ஹாங் ஓவர்   போல உணர்கிறேன்.கொடும் பசி வேறு.நேற்று இரவு இங்கு யார் எல்லாம் வந்தார்கள்''

அவன் ''சிலர்''என்றான் 

''அப்போ அதுதான். பார்ட்டி!வயிறு வலிக்கிறது .பார்ட்டியில் நான் ரொம்ப ஒன்றும் முட்டாள்த் தனமாக நடந்துகொள்ளவில்லையே ?"


அவன் அமைதியாக ''இல்லை''என்றான் 

டோஸ்டர் இன்னொரு டோஸ ட்டை அவனிடம் வெண்ணெய்   தடவி தள்ளியது.அவன் அதை நன்றியுடன் பெற்றுக் கொண்டான்.

''உனது முகம் கூட சரியில்லை ''என்றாள்  அவள்.




மாலையில் மழை பெய்தது.மொத்த உலகமும் சாம்பலாக மாறியது.அவன் கூடத்தின் நடுவில் நின்றுகொண்டு தனது உடலின் மீது  அந்த ஆரஞ்சு நிற நெருப்புப் பல்லியின் சின்னத்தை அணிந்துகொண்டான் .பிறகு குளிர்சாதனக் கருவியின்  காற்றுத் துளையைப் பார்த்தவண்ணமே கொஞ்சநேரம் நின்றுகொண்டிருந்தான்.மில்ட்ரெட் தனது டிவி சுவர்  அறையில் வாசித்துக்  கொண்டிருந்த ஸ்க்ரிப்டில் இருந்து ஒருகணம் விடுபட்டு ''ஒரு மனிதன் சிந்திக்கிறான்!''என்றாள்  


அவன் ''ஆம்.உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்.மில்ட்ரெட் ,நீ நேற்றிரவு எல்லா தூக்க மாத்திரைகளையும் சாப்பிட்டுவிட்டாய் ''என்றான் 

அவள்ஒருகணம் தயங்கி  ''ச்ச்சே.இருக்காது''என்றாள்  பிறகு ''நான் ஏ னப்படி செய்யவேண்டும்?''


''ஒருவேளை நீ முதல் இரண்டு தூக்க மாத்திரைகளை எடுத்ததும் அதை மறந்து இன்னும் இரண்டு தூக்க மாத்திரைகளை எடுத்திருக்கலாம்.அப்புறம் அதையும் மறந்து இன்னும் இரண்டு.அப்புறம் இன்னும் இரண்டு.இப்படியே முப்பது மாத்திரைகளையும்..'

அவள் மறுபடியும் ''நான் ஏனப்படி  செய்யவேண்டும்??"'என்றாள் பிறகு ''நான் அப்படி செய்யவில்லை.செய்யவே மாட்டேன் ஒருபோதும்  ''என்றாள்.

அவன் ''நீ  சொன்னால் சரிதான்''என்றான்.பிறகு ''இன்று என்ன புதிதாக ?""

''இது இன்னும் பத்து நிமிடத்தில் நமது டிவி சுவரில்  வரபோகிற ஒரு நாடகம்.என் பக்க  ஸ்க்ரிப்ட் காலையில்தான் வந்தது .இது ஒரு புதுமையான இன்டராக்டிவ் நாடகம் ,இதில் ஒரு காரக்டர் நான்.இல்லத்தரசி ஹெலன்.எனது வசனங்கள் மட்டும் இதில் முன்கூட்டியே தயாரிக்கப் படாமல் இருக்கும்.நாடகம்  நிகழும்போது அதல் வரும் மற்ற காரக்டர்   நீ என்ன நினைக்கிறாய்  ஹெலன்?என்று என்னைப் பார்த்துக் கேட்பார்.நான் சூழலுக்குத் தகுந்தாற்போல யோசித்து எதையாவது சொல்லவேண்டும்.ஜாலியாக இல்லை?""



அவன் ''நிச்சயமாக''என்றான் ''எது பற்றிய நாடகம் இது??''
''அதான் சொன்னேனே.இது மூன்று மனிதர்கள் பற்றியது பாப்.ரூத்.ஹெலன்.நான்தான் ஹெலன்''

'ரொம்ப ஜாலியான நாடகம் மாண்டேக்.நாம் நமது நான்காவது சுவரையும் ஒரு டிவி சுவராக மாற்றிவிட்டால் இன்னும் ஜாலியாக இருக்கும்.வெறும் இரண்டாயிரம் டாலர்கள் தானே ?எப்போது நம்மால்முடியும் மாண்டேக்??""

''அது எனது வருடச் சம்பளத்தில் மூன்றில் ஒருபங்கு''

''வெறும் இரண்டாயிரம் டாலர்கள்''என்றால் அவள்.''நீ என்னைப் பற்றியும் கொஞ்சம் யோசிக்கவேண்டும் மாண்டேக்.நான்காவது டிவி சுவர் மட்டும் கிடைத்துவிட்டால் நமது அறையும்  பெரிய பணக்கார்கள் அறை  போல ஆகிவவிடும் இல்லையா?வேண்டுமெனில் நாம் சில விசயங்களை தியாகம் செய்துவிடலாம் ''


''சில விசயங்களை தியாகம் செய்துதான் நாம் இந்த மூன்றாவது டிவி சுவரையே வாங்கினோம் நினைவில்லையா மில்ட்ரெட் ?இரண்டு மாதங்கள்தான் ஆயிற்று ''

அவள் அவனையே உற்றப் பார்த்துவிட்டு 'அப்படியா?நல்லது மாண்டேக்.குட்பை''

''குட்பை''என்றவன் திரும்பி ''உனது நாடகம் சந்தோசமாக முடிகிறதா ?"என்று கேட்டான் 

''நான் அதுவரை இன்னும்  படிக்கவில்லை''


அவன் குனிந்து அவளது ஸ்க்ரிப்டின் கடைசிப் பகுதியைப் படித்துவிட்டுத் திரும்ப  அவள் கையிலேயே  கொடுத்துவிட்டு வெளியே மழைக்குள் நடந்தான்.


மழை  குறைந்து கொண்டிருக்க க்ளாரிஸ்  பாதையின்  நடுவில் நின்றுகொண்டு வானோக்கி தன்  முகத்தை உயர்த்திக் கொண்டிருந்தாள் அவள் முகத்திலிருந்து சில மழைத்துளிகள் சிதறின அவள் அவனைக் கண்டுகொண்டு புன்னகைத்தாள். 

''ஹல்லோ??

''அவன் ஹலோ''என்றான்''இப்போது புதிதாய் என்ன பண்ணிக் கொண்டிருக்கிறாய் க்ளரிஸ்?""

இன்னும் பைத்தியமாய்த்தான்  இருக்கிறேன்.மாண்டேக்.மழை நன்றாக இருக்கிறது எனக்கு மழையில் நடக்கப் பிடிக்கும்''


''எனக்குப் பிடிக்காது''

''ஒருதடவை செய்துபார்த்தால் உங்களுக்கும்  பிடிக்கலாம்''

''செய்ததே இல்லை''என்றான் அவன். 
அவள் தனது உதடுகளை சப்பிக் கொண்டு ''மழை ருசியாகக் கூட இருக்கிறது''

''நீ என்ன செய்கிறாய்?இப்படி எல்லாவற்றையும் ஒருமுறை செய்துபார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர?'

''சிலவற்றை  இரண்டாவது முறையும் செய்து  பார்ப்பதுண்டு ''என்றாள்  அவள்.தனது கைகளைப் பார்த்துக் கொண்டே.

''உன் கைகளில் என்ன வைத்திருக்கிறாய் க்லாரிஸ்?""

''டான்டலியன் மலர்கள்!.இந்தப் பருவத்தின் கடைசி மலர்கள்.கிடைக்கும் என்று நான் நினைக்கவே இல்லை.டான்டலியன் மலர்களை நாடியின் கீழ் தேய்க்கும் வழக்கத்தைப் பற்றி நீங்கள் கேள்விப் பட்டிருக்கிறீர்களா மாண்டேக்?""அவள் சிரித்தவண்ணம் அந்த மலர்களை தனது நாடிக்குக் கீழ்த்  தேய்த்தாள். ''இதன் நிறம் நம் மேல் பற்றிக் கொண்டால் நாம் காதலில் இருக்கிறோம்  என்று அர்த்தம் .நான் காதலில் இருக்கிறேனா மாண்டேக்?"'

அவனால் அவளை விட்டுக் கண்களை எடுக்கவே முடியவில்லை.

''அங்கே மஞ்சளாக இருக்கிறது ''

'ரொம்ப நல்லது,இப்போது நீங்கள் முயற்சி  செய்யுங்கள்''


அவன் தயங்கி ''எனக்கு அது வேலை செய்யாது''

ஆனா ல் அவன் வேண்டாம் என்று சொல்லும்முன்பு அவள் அந்த மலர்களை அவன் நாடிக்குக் கீழ்த் தேய்த்தாள்  ''அசையதிருங்கள் மாண்டேக் ''

பிறகு குனிந்து பார்த்தாள் அவள் புருவங்கள் இடுங்கின.

அவன் ''என்ன?"" என்றான் 

''ப்ச்.நீங்கள் யாருடனும் காதலில் இல்லை''

''இல்லை!நான்  காதலில் இருக்கிறேன்!""

'ஆனால்  இது காட்ட மாட்டேன் என்கிறதே ''

''இல்லை.நான்  ரொம்பக் காதலில் இருக்கிறேன்''என்றான் அவன்.பிறகு  ரொம்பக் காதலில் இருப்பதுபோன்ற ஒரு முகத்தைக்  கொண்டுவர முயன்றான் .ஆனால் அப்படியொரு முகமே அவனிடம் இல்லை.


அவள் ''தயவு செய்து அப்படிப் பார்க்காதீர்கள் ''

அவன் ''அது இந்த மலர்களின் தவறுதான்.நீ  முதலில் அவற்றை உன்மீது பயன்படுத்தினாய்.அதனால்தான் அவை என்னிடம் பற்ற மாட்டேன் என்கின்றன''

அவள் அவனது கையைத் தொட்டு ''அப்படியாகத்தான் இருக்கவேண்டும்.விடுங்கள் நான் உங்களை கவலைப் படுத்திவிட்டேன் போலிருக்கிறது மன்னியுங்கள்''


''அதெல்லாம் ஒன்றுமில்லை ''என்றான் அவன் ''நான் நன்றாகத்தான் இருக்கிறேன்''

''நல்லது நான் போகவேண்டும் .உங்களைக் கோபப் படுத்தவில்லை என்று நம்புகிறேன் ''

''கோபமில்லை.கொஞ்சம் தடுமாறிவிட்டேன் உண்மைதான்''

''நான் சென்று எனது மனநல மருத்துவரைப் பார்க்கவேண்டும் அவர்கள் என்னைப் பார்க்கவேண்டும் என்று  வற்புறுத்துகிறார்கள்..நான் எப்போதும் அவரிடம் என்ன சொல்வதென்று தீர்மானித்து விட்டே செல்வேன்.எப்போதும்  அவர் நான் ஒரு வழக்கமான வெங்காயம்தான் என்று சொல்வார்.பிறகு அவர் அந்த வெங்காயத்தின் அடுக்குகளை உரிக்க விட்டுவிட்டு வந்துவிடுவேன்''


''உனக்கு ஒரு மனநல மருத்துவர் தேவைப்படுகிறார் எ ன்றே நானும்  நினைக்கிறேன்''

''உண்மையாகவா?"'

அவன் தயங்கி  ''இல்லை''என்றான் 

''அவருக்கு நான்ஏ ன் காடுகளில் தனியாக அலைகிறேன் பறவைகளைத்  துரத்திக் கொண்டு பட்டாம்பூச்சிகளைத் சேர்த்துக் கொண்டு அலைகிறேன் என்று தெரியவேண்டும்.எனது பட்டாம்பூச்சிகள் சேகரிப்பை ஒருநாள் உங்களிடம் காட்டுகிறேன்''

''நல்லது''
''அவர்களுக்கு நான் நாள் முழுவதும் என்ன செய்கிறேன் என்று தெரியவேண்டும்.நான் சொல்வேன்.சிலநேரம் நான்  சும்மா அமர்ந்து எதையாவது யோசனை பண்ணிக் கொண்டிருப்பேன் என்று.ஆனால் என்ன சிந்திக்கிறேன் என்று சொல்லமாட்டேன்.சிலநேரங்களில் இதுபோல மழையில் முகத்தைக் காட்டிக் கொண்டு நிற்பேன் என்றும்  சொல்வேன்.மழைக்கு வைனின் ருசி உண்டு.தெரியுமா?"'

அவன் ''தெரியாது''என்றான் 

''நீங்கள் என்னை மன்னித்துவிட்டீர்கள் தானே??''

அவன் ''ஆமாம் ''என்றான் ''ஏனென்று தெரியவில்லை. நீ ஒரு வினோதமான பெண்.பலநேரங்களில் எரிச்சலும் படுத்துகிறாய் எனினும் உன்னை மன்னிப்பது எளிதாக இருக்கிறது.உன் வயதென்ன சொன்னாய்?பதினேழு?""

''அடுத்த மாதம்''

''வினோதம் எனது மனைவியின்  வயது முப்பது.ஆனால் நீதான் மிக முதிர்ந்த பெண் போல எனக்கு சிலநேரங்களில்  தோன்றுகிறாய்  ''

''நீங்களும் ஒரு வினோதமான மனிதர்தான்.மாண்டேக்.சமயங்களில் நீங்கள் ஒரு தீத்துறை  வீரர் என்பதையே மறந்துவிடுகிறேன்.ஓ  ..மறுபடி உங்களை எரிச்சல் படுத்திவிட்டேனா ?""

''பரவாயில்லை''

.''இதில் நீங்கள் எப்படி வந்து சேர்ந்தீர்கள்?உங்களது இந்த  வேலை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?நீங்கள் நிச்சயமாக   மற்றவர்களைப் போல அல்ல.எனக்கு அவர்களில் சிலரைத் தெரியும்.அவர்கள் உங்கள் முகத்தைப் பார்த்தே பேச மாட்டார்கள்.ஆனால் நீங்கள் நான் பேசுவதைக் கேட்டீர்கள்.நிலவைப்  பற்றி ஏ தோ சொன்னபோது நீங்கள் நிலவைப் பார்த்தீர்கள்.மற்றவர்கள் அப்படிச் செய்ய மாட்டார்கள்.நீங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது பாதியிலேயே விட்டுவிட்டுப் போய்விடுவார்கள்.அல்லது உங்களை மிரட்ட ஆரம்பிப்பார்கள் .ஆம்  வினோதம்.நீங்கள் இந்த  தீத்துறை வேலையில்  இருப்பது  .இது உங்களுக்குப் பொருந்தாதது போல எனக்குத்  தோன்றுகிறது''


மாண்டேக் தனது உடல் இரண்டாகப் பிளப்பது போல உணர்ந்தான்.ஒருபக்கம் வெப்பமாக  மறுபக்கம் குளிராக .ஒருபக்கம் மிருதுவாக மறுபக்கம் கடினமாக ஒருபக்கம் நடுங்கிக் கொண்டு ஒருபக்கம் நடுங்காமல் ...இரண்டு உடல்கள்.இரண்டு உடல்களும்  ஒன்றை ஒன்று உரசிக் கொண்டு...  


''உன்னுடைய அப்பாய்ண்ட்மெண்டுக்கு  நேரமாகிவிட்டது க்ள
ரிஸ்''

அவள்  எதுவும் பேசாமல் அவனை அந்த மழையில் விட்டுவிட்டு ஓடி மறைந்தாள் .

அவள் போய்  நெடுநேரம் ஆனபின்பே மாண்டேக்  அந்த இடத்தைவிட்டு அசைந்தான் 


பிறகு மெதுவாக மிக மெதுவாக தலையை உயர்த்தி  சில கணங்களுக்கு மட்டும்  ........வாய் திறந்து மழையை ருசித்தான் 

Thursday, April 17, 2014

பாரன்ஹீட் 451 -ஒன்று

எரிப்பது ஒரு இன்பமான விஷயம். 
பொருட்கள் தீயினால் தின்னப்படுவதை ஓரங்கள் கருகி கொஞ்சம் கொஞ்சமாய் வேறு பொருளாய் மாறுவதைப் பார்ப்பது இன்னும் இன்பமான விஷயம் 

கைகளில் நெளியும் மலைப்பாம்பு போன்ற அந்த  உலோகக் குழாயின் முனையை இறுகப் பற்றிய கைகளுடன்  சரித்திரத்தின் இடிபாடுகளை அழிக்கும் போது அவன் ஒரு இசை நடத்துனன் போலத் தோன்றினான் .451 என்று எண் இட்ட  தலைக்கவசத்துடன் அவன் குழாயின் விசையை அழுத்தினான்.கெரசின்  பீறிட்டு  பாய்ந்தது..பிறகு நெருப்பு..வீடு குபீரென்று அந்தி வானத்தைச் செக்கராக்கிவிட்டு கொழுந்து விட்டெரிந்தது .அவனைச் சுற்றிலும் எரிப்பூச்சிகள் படபடத்து பறந்தன.புறாவின் இறகுகளைப் போன்று படபடக்கும் செட்டைகளுடன்  முற்றத்தில் குவியலாகக் கிடந்த புத்தகங்கள் புகைச் சுருளை காற்றில் பரவவிட்டுக் கொண்டு மரித்தன. 

தீயை நெருங்கும்போது எல்லார் முகங்களிலும் தோன்றும் இளிப்பு போன்ற தசைஇழுப்பு மாண்டேக்கின் முகத்தில் எப்போதும் இருந்தது .தீயணைப்பு நிலையத்துக்குத் திரும்பியபிறக்கும் பணி  முடிந்த பிறகும் இருட்டிலும் அந்த இளிப்பு மறைவதில்லை என்று அவன் அறிவான் .ஒரு போதும்.

அவன் தனது கருவண்டு போன்று பளபளத்த தலைக் கவசத்தைத் துடைத்த பிறகு அவனது தீயெரிக்காத சட்டைக்குப் பக்கத்தில் தொங்க விட்டான் .நன்றாக குளித்தான்.பிறகு விசிலடித்தவாறே  நிலையத்தின் முதல் தளத்தில் நடந்து அங்கிருந்த துளைக்குள் விழுந்தான்.தரையைத் தொடும் முன்பு கடைசிக் கணத்தில் நடுவிலிருந்த சுழலும் இரும்புக் கழியைப் பிடித்து தன்னை நிலைநிறுத்திக் கொண்டு மெதுவாக இறங்கினான். 

தீநிலையத்தை  விட்டு அவன் நள்ளிரவில் நிலத்தடி ரயில் நிலையத்தை அடைந்து  காற்றால் உந்தப்படும் ரயில் ஒன்றில் ஏறினான். அது ஒரு நீண்ட உஷ்ணப் பெருமூச்சுடன் அவனை புறநகர்ப்பகுதியில் தள்ளிவிட்டு புறப்பட்டது. 

நிலையத்திலிருந்து விசில் அடித்தவாறே  நகரும் படிக்கட்டுகள் மூலம் ஏறி காற்று அசையாது உறைந்து நின்ற வீதிக்கு வந்தான். மெதுவாக தெருவின் திருப்பத்தை நோக்கி நடந்தான். அதை அடையும் முன்பு சட்டென்று நடையை நிதானப் படுத்தினான். யாரோ அவனை அழைத்தாற்  போல... 


காரணம் கடந்த சில நாட்களாக இந்த இரவு நடையில் சில வினோதமான உணர்வுகளுக்கு அவன் ஆளாகி இருந்தான். .அந்த குறிப்பிட்ட முனையில் திரும்பும் முன்பு அங்கு யாரோ நின்று இருந்தார் போல ஒரு உணர்வு...யாரோ அவனுக்காக அமைதியாகக்  காத்திருந்தார் போல...அவன் வருவதற்கு சில வினாடிகள் முன்புதான் மனதை மாற்றிக் கொண்டு நிழலாக மாறி அவனை ஊடுருவிப் போக விட்டது போல....ஒருவேளை அவனது மூக்கு அந்த நபரின் மெலிய மணமூட்டியின்  வாசனையை கண்டு கொண்டிருக்கலாம். அல்லாத அவனது புறங்கை சருமம் காற்றில் ஒரு உஷ்ணக் கூடுதலைக் கண்டு கொண்டிருக்கலாம். ஆனால் ஒவ்வொரு தடவையும் அவனால் யாரையும் அங்கு கண்டுபிடிக்க முடியவில்லை. ஒருநாள்  இரவு மட்டும் சட்டென்று ஒரு வேகமான அசைவு போல புல்வெளியின் குறுக்கே ஓடுவதைக் கண்டு கொண்டானா அவன் ?


ஆனால் இன்று அவன் நிச்சயமாகவே உணர்ந்தான் .அங்கே  யாரோ இருக்கிறார்கள்.ஒரு  கிசுகிசுப்பு .அவன் சட்டென்று தன் நடையின் வேகத்தைக் குறைத்து மெதுவாக அந்தத் திருப்பத்தில் திரும்பினான் .

நிலா அலம்பிய இலையுதிர்க்காலத்து சருகுகள் புரண்டுகொண்டிருக்கும் அந்த நடைபாதையில் ஏறக்குறைய மிதப்பது போலதான்  அவள் நடந்துவந்துகொண்டிருந்தாள்.சருகுகளைப் புரட்டும் காற்று அவளையும் புரட்டி பறக்க வைப்பது  போல இருந்தது.அவள் தனது கால்களைச் சுற்றிச்  சுழலும்  சருகுகளைக் கவனிப்பது போல தலைகுனிந்து நடந்து வந்துகொண்டிருந்தாள்.மெலிந்த பால்வெள்ளை முகம் கொண்ட அவளிடம்  எப்போதும் ஒரு வியப்பு இருந்தது. கருத்த கண்களில் எப்போதும் ஒரு தவிப்பு.பசி ,உலகில் எதையும் தவறவிட்டுவிடக் கூடாது என்பது போல ஒரு ஆர்வம்..கிசு கிசுக்கும் வெள்ளை உடைகளை அவள் அணிந்திருந்தாள்.காற்றில் அவளது மெலிய கரங்கள் அசையும் ஒலியைக் கூட அவனால் கேட்க முடிந்தது.வழிநடையில் அவன் நிற்பதை மிகக் கடைசிக் கணத்தில்தான் கண்டுகொண்டாள்  அவள்.

அவர்கள் தலைமேல் நின்றிருந்த மரம் சருகுகளை ஒரு சிறிய மழை போல ஓசையுடன் அவர்கள் மீது  உதிர்த்தது .அவள்  ஒருநிமிடம் திரும்பிப் போய்விடப் போவது போலத் தயங்கி நின்றாள் .பிறகு அங்கேயே நின்று அவன் எதுவோ பெரிய  விஷயம் ஒன்றைச் சொல்லிவிட்டது போல அவளது கருத்த கண்களால் அவனைப் பார்த்தபடியே நின்றாள் .ஆனால் அவன் வெறுமனே  ''ஹலோ''என்றுதான் சொன்னான்.பிறகு அவளது கண்கள் அவனது தோள்பட்டையிலிருந்த நெருப்புப் பல்லி  சின்னத்தால் கவரப் பட்டிருப்பதைக் கண்டு ,

''ஆமாம்"'என்றான்''நீ என்னுடைய பக்கத்து வீட்டுக்குப் புதிதாய் வந்திருக்கிறாய் .இல்லையா?''

''ஆமாம் .நீங்கள்தான் அந்த தீயணைப்புத் துறையைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் 
அவள் குரல் தேய்வாக ஒலித்தது. 
''எவ்வளவு வினோதமாகச் சொல்கிறாய் அதை நீ !''என்றான் அவன்.
''எளிது.நான் கண்ணை மூடிக் கொண்டு அதைக் கண்டுபிடித்திருப்பேன் ''என்றால் அவள்.

''எப்படி ?இந்த கெரசின் வாசனை மூலமாகவா?என் மனைவி எப்போதும் சொல்வதுண்டு.எவ்வளவு கழுவினாலும் அது போவதில்லை.ஆனால் என்னைப் பொருத்தவரை அது ஒரு நறுமணம்தான்''என்றான் அவன் 

''உண்மையாகவா?""
''உண்மையாகத்தான்.ஏன் ?"'

அவள் பதில் சொல்லாது திரும்பி ''நான் உங்களுடன் நடக்கலாமா?என் பெயர் க்ளாரிஸ்  மக்லீலன் ''

''க்ளாரிஸ் .என் பெயர் கய் மண்டேக்.போகலாம்.க்ளாரிஸ் இந்த நேரத்தில் ஏனிப்படி தனியாக அலைந்துகொண்டிருக்கிறாய்?உன் வயதென்ன ?''

அவர்கள் அந்த மெல்லிய குளிர்காற்று வீசும் வெள்ளிச் சாலையில் நடந்தார்கள்.காற்றில் புதிய ஸ்ட்ரா பெர்ரிக்கள்  மற்றும் எப்ரிகாட்டுகளின் மணம்  வீசிற்று.இந்தப் பருவத்தில் அது ஒரு அபூர்வமான நிகழ்வு என்று  அவன் உணர்ந்தான். 

சாலையில் அவர்களைத் தவிர வேறு யாருமே இல்லை.அவள் முகம் நிலவொளியில் உறைபனி போலப் பொலிந்தது 

''ம்ம்.என்னுடைய வயது பதினேழு.பித்துப் பிடித்த பதினேழு.பித்தும் இந்த வயதும் எப்போதும் சேர்ந்தே வருகிறது என்று என் மாமா சொல்வார். நடப்பதற்கு நல்லதொரு நேரம்  இல்லையா?.எனக்கு உலகைக் காண நுகர பிடிக்கும்.பல நேரங்களில் இரவு முழுவதும் விழித்திருந்து நடப்பதுண்டு.சூர்ய உதயத்தைக் காண''

அவர்கள் மௌனமாக  நடந்தார்கள்.பிறகு அவள் திடீரென்று ''பாருங்கள்.எனக்கு உங்கள் மீது பயமே இல்லை''

அவன் வியப்படைந்து ''என்னைப் பார்த்து ஏன்  பயப்படவேண்டும்?''

''நிறைய பேர் பயப்படுகிறார்கள் .பயர்மேன்களைக் கண்டு.ஆனால் நீங்களும் ஒரு மனிதர்தான்''

அவன் அவளுடைய  வயலட் ஆம்பர் போன்ற கண்களில் தன்  உருவை அதன் அத்தனை விவரங்களுடனும் மிகச் சிறியதாகக் கண்டான்.அவள் முகம் ஒரு பால் ஸ்படிகம் போல வெண்மையாக  ஒளிர்ந்தது.அலறும் மின்சார வெளிச்சம்  அல்ல.ஒரு மெழுகுவர்த்தியின் மென்மையான வெளிச்சம்.அவனுடைய  சிறிய வயதில் மிக அரிதாக மின்சாரம் போன ஒரு பொழுதில் அவனது அம்மா ஒரு மெ ழுகுவர்த்தியைத் தேடிப்  பிடித்து ஏற்றியதும் அதுவரை அவர்களைச் சுற்றிக் கடுமையாக இறுகிக் கிடந்த வெளி தனது  கூர்முனைகளை  இழந்து சட்டென்று ஆதூரமாய்  அவர்களைப் பொதிந்துகொண்டது .மின்சாரம் வராமலே போய்விட்டால்தான் என்ன என்று அவர்கள் அன்று நினைத்தார்கள் 

''நீங்கள் தப்பாக நினைத்துக் கொள்ளவில்லை என்றால் நீங்கள் எவ்வளவு காலமாக இந்த பயர்மேன் வேலையைச் செய்கிறீர்கள் ?''

''இருபது வயதிலிருந்து .பத்து வருடங்களாக''

''இந்த வேளையில் நீங்கள் எரிக்கிற புத்தகம் எதையாவது நீங்கள் படித்ததுண்டா ?""
அவன் சிரித்தான்''அது குற்றம் அல்லவா?"'
''ஆமாம் ''என்றாள் அவள்
''உண்மையில் இது நல்லதொரு வேலை..திங்கட்கிழமைகளில் ஷேக்ஸ்பியர். புதன்கிழமைகளில் விட்மேன். வெள்ளிக் கிழமைகளில் பால்க்னர் .எல்லோரையும் எரித்துச் சாம்பலாக்கு.பிறகு அந்தச் சாம்பலையும்  எரித்துச்  சாம்பலாக்கு.இதுதான் எங்கள் முழக்கம்''


''இது உண்மையா ?பயர்மேன்கள் முன்பொரு காலத்தில் நெருப்பை அணைக்க முயன்றார்கள், இப்போது போல அதை உருவாக்க முயல்வதில்லை என்பது ?"'

''இல்லை.வீடுகள் எப்போதுமே தீ எதிர்ப்புச் சக்தியுடன்தான் இருந்தன ''

''அப்படியா ?நான் வேறு மாதிரிக் கேள்விப்பட்டேன்.வீடுகள் கவனக் குறைவினாலோ விபத்தாகவோ வேறு  எதனாலோ தீப்பற்றிக் கொள்ளும்போது பயர்மேன்கள் அதை அணைக்க முயல்வார்கள் என்று... ''

அவன் சிரித்தான் 

'ஏன்  சிரிக்கிறீர்கள்??
''தெரியவில்லை ''என்று சொல்லிவிட்டு அவன் மீண்டும் சிரித்தான் 
அவள் ''பாருங்கள்.நகைச்சுவையாக நான் எதுவும் சொல்லாதபோது நீங்கள் சிரிக்கிறீர்கள்.ஒருகணம்கூடநீங்கள்  நான் சொன்னதைப் பற்றி யோசிக்கவே இல்லை ''

அவன் நடப்பதை  நிறுத்திவிட்டு ''நீ ஒரு வினோதமான பெண்.மேலும் உனக்கு மரியாதையே கிடையாது ''

''நான் உங்களை அவமானப்படுத்தவேண்டும் என்று  அதைச் சொல்லவில்லை.எனக்கு மனிதர்களைக அவதானிப்பது  பிடிக்கும் என்று நினைக்கிறேன்.அவ்வளவுதான்''

அவன் தனது ஹெல்மெட்டில் இருந்த 451 என்ற எண்ணைக்  காட்டி ''இது உனக்கு எதையும் சொல்லவில்லையா''

அவள் ''ஆம்''என்று கிசுகிசுப்பாய்ச் சொன்னாள் .பிறகு சற்று வேகமாக நடக்கத் துவங்கினாள். 
''நீங்கள் நெடுஞ்சாலைகளில் வேகமாகப் பறக்கும்  ஜெட் கார்களைக் கவனித்திருக்கிறீர்களா ?"
''நீ பேச்சை மாற்றுகிறாய்!''

''எனக்குத் தோன்றுகிறது அவற்றை ஒட்டுகிறவர்களுக்கு  புல்  எது பூ எது என்று நிஜமாகவே எதுவும் தெரியாது .அந்த வேகத்தில் புல்  ஒரு பச்சை அசைவு .ரோஜாப்பூ தோட்டம் ஒரு பிங்க் அசைவு .வீடுகள் ஒரு வெள்ளை அசைவு .அவ்வளவுதான்.உண்மையில் அவர்கள் எதையுமே பார்க்கவில்லை.தெரியுமா ?எனது மாமா ஒருதடவை நெடுஞ்சாலையில் மெதுவாக காரில்  போனதிற்காக இரண்டுநாட்கள் சிறையில் இருந்தார்.வேடிக்கையாக இல்லை ?வருத்தமாயும்?"'

''நீ நிறைய யோசிக்கிறாய் ''என்றான் மாண்டேக் சற்றே அசவுகர்யமாக 

''நான் இந்த சுவர்த் தொலைக்  காட்சிகளைப் பார்ப்பதே இல்லை.ரேஸ்களுக்கோ கேளிக்கைப் பூங்காக்களுக்கோ போவதில்லை.ஆகவே இந்த மாதிரி கிறுக்குத் தனமாக யோசிப்பதற்கு நிறைய நேரம் கிடைக்கிறது.இன்னொன்று  தெரியுமா ?இப்போது நகருக்கு வெளியே இருக்கும் இருநூறடி விளம்பரப் பலகைகள் முன்பு இருபதடிதான் இருந்தன.கார்கள் வேகம் கூட கூட அவர்கள் அதைப் பெரிதாக்கினார்கள்'

''இது எனக்குத் தெரியாது!''என்றான் அவன். 


''உங்களுக்குத் தெரியாத இன்னொன்றும் எனக்கும் தெரியும்.காலைகளில் புற்களின் மீது  பனித் துளிகள் இருக்கின்றன! ''


இதை அவன் அறிந்திருந்தானா  இல்லையா என்பதை அவனால் சட்டென்று நினைவுகூர முடியவில்லை.அது  அவனை எரிச்சல் மூட்டியது.


''மேலும் நீங்கள் சற்று உற்றுக் கவனித்தால் ... ''என்று மேலே காண்பித்தாள்.''நிலாவில் ஒரு பாட்டி இருக்கிறாள்''

அவன் அவ்வாறு நிலாவைப் பார்த்து வெகுகாலம் ஆயிற்று 

மீதி தூரத்தை அவர்கள் மௌனமாகவே கடந்தார்கள் அவள் தனது சிந்தனைகளில் ஆழ்ந்திருக்க அவன் அவள் மீது  குற்றச்சாட்டும் பார்வைகளை வீசியபடியே வந்தான். .அவர்கள் அவளது வீட்டை அடைந்தபோது அவள் வீட்டில் இருந்த எல்லா விளக்குகளும்  மிகப் பிரகாசமாய் எரிந்துகொண்டிருந்தன  


''என்ன நடக்குது இங்கே?''என்றான் அவன்.நள்ளிரவில் இவ்வளவு விளக்குகள் ஜொலிக்கும் வீடுகளை அவன் பார்த்ததே இல்லை. 


''ஒன்றுமில்லை அம்மாவும் மாமாவும் விழித்திருந்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.ஒரு அரிதான விசயம்தான்.ஒரு பாதசாரி போல.உங்களுக்குத் தெரியுமா?மாமா  ஒரு தடவை ரோட்டில்  நடந்து போனதற்காக வெறுமனே ஒரு பாதசாரியாய் இருந்ததற்காய்  கைது செய்யப்பட்டிருக்கிறார்!''என்றாள்.பிறகு ''நாங்கள் விநோதமானவர்கள் மாண்டேக்''


அவன் சற்று விழிப்படைந்து ''என்ன சொல்லுகிறாய் க்ளாரிஸ் ?''

அவள் அதைக் கண்டு சிரித்து ''நல்  இரவு மாண்டேக்''என்றவாறு நடக்கத் தொடங்கினாள். பிறகு எதையோ நினைத்துக் கொண்டவள் போலத் திரும்பிவந்து அவன் கண்களை உற்றுப் பார்த்து ''நீங்கள் சந்தோசமாக  இருக்கிறீர்களா மாண்டேக்?"'

அவன் ''என்ன?....''என்று கத்தினான் 
ஆனால் அதற்குள் அவள்நிலவொளிக்குள் புகுந்து  ஓடிவிட்டாள். வீட்டின் முன் கதவு மெதுவாக சாத்தப் பட்டது 



2


''சந்தோஷமாக இருப்பது!''என்று அவன் உரக்கச் சொல்லிக் கொண்டான்''என்ன முட்டாள்த்தனம்''

பிறகு சிரிப்பதை நிறுத்திவிட்டு அவன் வீட்டுக்  கதவுத் துளையில் தனது கைகளை வைத்தான்.அது அவனை உணர்ந்துகொண்டு திறந்தது. 

''ஆமாம் நான் சந்தோசமாகத்தான் இருக்கிறேன்.அவள் என்ன நினைக்கிறாள் ?நான் அவ்விதம் இல்லை என்றா??என்று அவன் அந்த மௌனமான  அறைகளைக் கேட்டான்.கொஞ்சநேரம் வெண்டிலேட்டரைப்  பார்த்தவண்ணமே அப்படியே நின்றிருந்தான்.பிறகு அதன் இரும்புக் கிராதிக்குப்பின்னால் இருக்கும் ஒன்றை சட்டென்று நினைவு கூர்ந்து  கண்களை விலக்கிக்  கொண்டான். அது அவனை அங்கிருந்து குனிந்து கூர்ந்து பார்ப்பது போலத் தோன்றியது. 

என்ன ஒரு வினோதமான இரவு! .வினோதமான சந்திப்பு !இப்படியொருவரை அவன் சந்தித்தே இல்லை.ஒரு வருடம் முன்னால்  ஒரு பூங்காவில் மாலையில் சந்தித்த ஒரு கிழவரைத் தவிர.


மாண்டேக்  தலையை உலுக்கிக் கொண்டான்.அவளது முகம் அவனது நினைவில் மிகத் தெளிவாய் இருந்தது.அவளுக்கு மிகச் சிறிய  முகம்.நள்ளிரவில் திடீரென்று நீங்கள் விழித்துக்கொள்ளும்போது அறையில் விழித்திருக்கும்  சிறிய கடிகாரத்தின் ஒளிரும் முகம் போல.அப்போது மிகச் சரியாக என்ன மணித்துளி அடுத்த மணித்துளி என்ன என்று உறுதியாக அறிந்த காலை நோக்கி விடாது ஓடும் ஒரு கடிகார  முகம். 

மாண்டேக் ''என்ன?''என்று தன்னையே கேட்டுக் கொண்டான்.தனது இன்னொரு தான்.தனக்குள் அவ்வப்போது கட்டுப்பாடு இல்லாமல் பிதற்றத் தொடங்கிவிடும் இன்னொரு தான். 

அவன் மீண்டும் அவள் முகத்தை நினைத்துக் கொண்டான்.ஒரு கண்ணாடியை போலவும்தான் அவள் முகம்.நம்பமுடியாதபடி.நம்மை நமக்கே காட்டும் எத்தனை பேரை எனக்குத் தெரியும்?அவன் அறிந்த பெரும்பாலான மனிதர்கள் .......ஒரு தீப்பந்தம் போலதான்.அவிந்து போகிறவரை  எரிவார்கள்.அவ்வளவுதான்.இவள்போல நம் ஆழத்தை நம்  ஒளியை நமது சலனங்களை நமக்கேத் திருப்பி காணத் தருகிற முகங்கள் மிக அரிதானவை.



எவ்வவளவு உயிர்த்துடிப்பான பெண் அவள்!அவள் ஒரு பொம்மலாட்டத்தை மிக ஆர்வமாக ரசிப்பவர் போன்றவள்.பொம்மையை இயக்குகிறவரின் ஒவ்வொரு அசைவையும் கண் துடிப்பையும் துடிப்புடன் எதிர்பார்த்துக் காத்திருப்பவள்.அது போலவே  வாழ்வையும்  எதிர் நோக்குகிறாள்..உண்மையில் அவர்கள் இருவரும் சேர்ந்து எவ்வளவு நேரம் நடந்திருப்பார்கள்?மூன்று நிமிடங்கள்?ஐந்து?ஆனால் இப்போது அது எவ்வளவு நீண்ட காலமாகத் தோன்றுகிறது இப்போது !இந்த நேரத்துக்குள் அவள் அவனது மன மேடையில் எவ்வளவு பெரிய ஆளுமையாக மாறிவிட்டாள்  !அவளது மெலிய உடல் எவ்வளவு நீளமான நிழலை விட்டுச் சென்றுவிட்டது ! 


இப்போது நினைக்கையில் அவள் அந்த இரவில் தனியாக எனக்காகவே காத்துக் கொண்டிருந்தாள் என்று தோன்றுகிறது .அவ்வளவு தாமதமாகி விட்டபின்பும்.... 


அவன் தனது படுக்கையறைக் கதவைத் திறந்தான். 

சட்டென்று அவனுக்கு அது  ஒரு கல்லறைக்குள் வந்துவிட்டதுபோலத் தோன்றியது .மிகக்குளிர்ச்சியான பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட ஒரு கல்லறை.வெளியே  கிடக்கும்  ஒரு வெள்ளி உலகைப் பற்றிய ஒரு குறிப்பு கூட அங்கே இல்லை.எல்லா ஜன்னல்களும் மிக அழுத்தமாக அடைக்கப் பட்டு  வெளியே இருக்கும் பெரிய நகரத்தின் ஒரு சிறிய சத்தம் கூட வராத முற்றிலும் இருட்டான ஒரு கல்லறை உலகம். 

ஆனாலும் அது காலியாக இல்லை 

கொசுக்களை உண்ணும் ஒரு எலெக்ட்ரானிக் குளவி  அதன் மெல்லிய இயந்திர இரைச்சலுடன் அதன் பிங்க் நிறக் கூட்டில் உறங்கிக் கொண்டிருந்தது.அதன் தேய்ந்த இசையை இப்போது அவனால் கேட்கமுடிந்தது. 

அவன் தனது  புன்னகை ஒரு பெரிய மெழுகுவர்த்தி உருகி தன்மீதே கவிழ்ந்து விழுந்து மடிவதைப் போல   மறைவதை உணர்ந்தான்.இருட்டு.இருட்டு.....அவன் சந்தோசமாக இல்லை.அவன் சந்தோசமாக இல்லை.அவன் இதைத் தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.இதுதான் உண்மை.அவன் தனது சந்தோசத்தை மகிழ்ச்சியை ஒரு முகமூடி போல அணிந்திருந்தான்.அந்தப் பெண் அந்த முகமூடியுடன் ஓடிவிட்டாள். இனி கதவைத் தட்டி அதைத் திருப்பித் தா  என்று அவளிடம் கேட்கமுடியாது 


மாண்டேக் விளக்கைப் போடாமலே அந்த அறை   எப்படி இருக்கும் என்று யோசித்தான் .அவன் மனைவி படுக்கையில் மூடிக் கொள்ளாமல் ஒரு கல்லறையில் படுக்கவைக்கப் பட்ட குளிர்ந்த உடல் போல கூரையை வெறித்தபடி படுத்திருப்பாள்.அவளது கண்களை எப்போதும் கூரையிலிருந்துவரும் இரண்டு இரும்புச் சலாகைகள் பிணைத்திருப்பது போல.அவள் காதுகளில் இரண்டு இயர்போன்கள் கடல்சிப்பிகள் போல இறுக்க  அடைத்தபடி .அந்த சிப்பிகள் மூலமாக ஒவ்வொரு இரவும் பேச்சும் பாட்டும் இசையும் கடல் அலைகள் போல அவளது ஒருபோதும் தூங்காத மனதின் கரையின்  மீது வந்து வந்து போயின.இரண்டு வருடங்கள்.ஒவ்வொரு இரவும் அந்த  அலைகள்தான் அவளைத் தனக்குள் இழுத்துக் கொண்டு காலையை நோக்கிக் கொண்டுபோய்ச் சேர்த்தன...இந்த இரண்டு வருடங்களில்  ஒரு இரவை கூட அவள் அந்த அலைகள் இல்லாமல்  கடந்ததில்லை. .

அவனால் மூச்சு விட முடியவில்லை.மிக இருட்டாக இருந்தது அது.இருந்தாலும் அவன் ஜன்னல்களைத் திறந்து நிலவொளியை உள்ளே அனுமதிக்கத் துணியவில்லை. இருட்டிலேயே நடந்து கட்டிலை நோக்கிப்  போனான். தரையில் கிடக்கும் அந்தப் பொருளின் மீது தடுக்கிக் கொண்டான்.ஆனால் முன்பே தான் தடுக்கப போகிறோம் என்பதை அதன்  முந்திய கணத்தில் உணர்ந்து விட்டான்..அது ஏறக்குறைய அன்றிரவு நடைபாதையில் அவனுக்காக ஒருவர் காத்திருக்கிறார் என்பது போல அவனுக்குத்  தோன்றிய ஒரு உணர்வு.கால் அந்தப் பொருளின் மீது ஒரு சிறிய உலோகச் சத்தத்துடன் மோதியது. அந்தப் பொருள் இருட்டுக்குள்  உருண்டு போனது. 

அவன் விறைப்பாக நின்றுகொண்டு படுக்கையில் இருப்பவரது அசைவுகளை உன்னிப்பாகக்  கவனித்தான்.அவரிடமிருந்து வெளிவந்த மூச்சுக்காற்று மிக மெலிதாக இருந்தது. ஒரு சிறிய இலையை இலையை ரோமத்தை மட்டுமே அசைக்கக் கூடியதாக.... 


இருப்பினும் அவன் வெளி உலகின் ஒளியை உள்ளே கொண்டுவர விரும்பவில்லை,கையிலிருந்த லைட்டரை உயிர்ப்பித்தான்.அந்த ஒளியில் இரண்டு நீலக் கற்கள் அவனை நோக்கி ஏறிட்டுப் பார்த்தன.இரண்டு சிறிய நீலக் கற்கள் .ஒரு சிறிய  குட்டையில் தேங்கி நிற்கும்  நீரின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் இரண்டு நீல நிலவுக் கற்கள்.அவற்றின் மீது வாழ்க்கை மிக  மெலிதாக  ஒரு அலைபோல அவற்றைத் தொடாமல் ஓடிக் கொண்டிருந்தது.  


''மில்ட்ரெட்!""




அவளது  முகம் பனியால் மூடப்பட்ட ஒரு தீவு போல இருந்தது.அந்தத் தீவின் மீது மழை  பெய்யலாம்.முகில்கள் வேகமாக ஓடும் நிழல்களுடன் கடக்கலாம்.ஆனால் தீவு மழையையோ, மேகங்களின் நிழல்களையோ உணராதிருந்தது  அங்கு அவளது இயர்  போன்களின் இசை  மட்டுமே இருந்தது .முழுக்கக் கண்ணாடியாக  உறைந்துவிட்ட  கண்கள்.


மூச்சு உள்ளேயும் வெளியேயும் மிக பலவீனமாக போய்  வந்து கொண்டிருந்தது.அது போவது பற்றியும் வருவது பற்றியும் அறியாது கவலைகொள்ளாது  அவள் இருந்தாள்  

அவன் காலால் உதைத்துத் தள்ளிய பொருள் இப்போது அவனது கட்டிலுக்குக் கீழ் கிடந்தது .இன்று காலையில் முப்பது தூக்க மாத்திரைகள் இருந்த ஒரு ஸ்படிகக் குடுவை....இப்போது காலியாக. 


அங்கே அவன் நின்றுகொண்டிருந்தபோது அவன் தலைக்கு மேலே வானம் கிறீச்சிட்டது. ஒரு பெரிய சத்தம் -இரண்டு ராட்சதக் கரங்கள் மிகப் பெரிய கறுப்புத் துணியை அதன் பொருத்தல்களில் இருந்து கிழிப்பது போல மாண்டேக் இரண்டு துண்டாக வெட்டப்பட்டான்.அவனது நெஞ்சை இரண்டு துண்டாக அந்த சத்தம் வெட்டிப் பிளந்தது.போர் விமானங்கள் -ஒன்று...இரண்டு....மூன்று.....ஆறு....பனிரெண்டு ....எல்லாம் சேர்ந்து அவனுக்காக அலறின.அவன் தனது வாயைத் திறந்து அந்தச் சத்தம் அவனது பற்களின் ஊடே  வர அனுமதித்தான்.அதில் வீடு நடுங்கியது.கையிலிருந்த லைட்டர் அணைந்தது.நீலக் கற்கள் மறைந்தன.அவனது கை தொலைபேசியை நோக்கிப் பாய்ந்தது. 


ஜெட்விமானங்கள் போய்விட்டன.அவனது உதடுகள் ரிசீவரில் ஒரு பயங்கரமான ரகசியத்தைச் சொல்லவது போலப் பேசின. ''அவசர சிகிச்சைப் பிரிவு.மிக அவசரம்''


 வானத்தின் நட்சத்திரங்களை அந்த ஜெட்விமானங்கள் தூள் தூளாக்கிவிட்டன  என்று அவன் நினைத்தான்.

LinkWithin

Related Posts with Thumbnails