Saturday, January 28, 2012

முடிவிலி

கோட்பாரற்றுக்
கிடக்கும் 
பழங் கோயிலின் 
இடிபாடுகளில் 
இள முலைகள் துள்ள 
தனித்துத் திரிந்த 
ஒரு சிறுபெண்ணை சந்தித்தேன் 
தனக்குப் பயமில்லை 
தான் தனித்தில்லை 
என்றாள் அவள் 
இங்கு பறவைகள் இருக்கின்றன 
என்றாள் 
நூற்றுக் கணக்கில் ..
பிறகு 
ஊழி வரும்வரை 
உறங்க முடியாத தெய்வங்கள்
ஆயிரக் கணக்கில் ..

காலத்தில் உறைந்த விழிகளை 
மூட முடியாமல் 
பார்த்துக் கொண்டே இருக்கின்றன 
எப்போதும் 
எல்லாவற்றையும் 
என்று சிரித்தாள் 
அது வீசப் பட்டது போல 
பெருகி 
வெளியெங்கும் நிறைந்தது 

அந்த சிரிப்பின் 
முடிவில் 
வைரம் போல் மின்னும் 
இரண்டு கூர்க் கொடும்பற்களை
நான் ஒரு கணம் பார்த்தேன் 

அஞ்சி 
ஓவென்று அலறினேன் 
அவள் 
வாய் மீது விரல் வைத்து 
அஞ்சாதே 
என்று புன்னகைத்த பொழுது 
யாரோ எய்தது போல 
இளவெயில் நிறத்தில் 
ஒரு பட்டாம்பூச்சி இறங்கி
அவள் உதடுகள் மேல் அமர்ந்தது .
நான் அது சிறகுகள் அசைய அசைய 
மது உண்பதைப் பார்த்தேன் 
அப்போது 
ஒரு புத்தனின் கண்கள் 
அவளிடம் இருந்தது 
அல்லது 
முலை கொடுக்கும் தாயின் கண்கள் 
ஆனால் 
ஒரு ஓவியத்தின் கண்கள் 
மாற்றப் பட்டாற்போல் 
சட்டென்று 
அவள் கண்கள் சாய்ந்து சோம்பிற்று
எனது வெறும் கைகளைக் கண்டு 
எனக்கென 
ஒரு பூ கூட பூக்கவில்லை அல்லவா 
உன் தோட்டத்தில் 
என்று வான் நோக்கிக் கூவினாள் அவள் 
அது கேட்டு 
கோபுரங்கள் நடுங்கின.
பிறகு 
புனல் போல் இளகும் கண்களுடன் 
புகை கலைவது போல 
மெலிய மழைக் கம்பிகள் 
ஊடே நுழைந்து நுழைந்து 
அவள் என்னை விட்டு 
விலகி கருவறைக்குள் போவதை 
நான் பார்த்துக் கொண்டே இருந்தேன் 
செய்வதற்று ..

ஒரே ஒரு பூ வில் 
இருந்தது 
அவள் சாஸ்வதம்.

Monday, January 16, 2012

புணர் நிமித்தம்


ஆடும் ரயில் பெட்டியின்
கழிவறையில்
சிறுநீர் கழிக்கும்
புழையை வெறித்துக் கொண்டிருந்தேன்
அது ஏன்
நிதம்ப வடிவில் இருக்கிறது
என்று கேட்டுக் கொண்டேன்
நீளக் குழாயின் மறுபுறம்
பூமி ஓடிக கொண்டே இருந்தது
இந்தக் கழிவறையில்
புணர்ச்சி நடந்திருக்குமா
என்று யோசித்தேன்
இருக்கலாம்
பூமியில் புணர்ச்சி நடை பெறாத இடம் எது ?
மயானத்தில் கூட நடந்து கொண்டே இருக்கிறது

புணர்ச்சி ஒரு நதி போல
பூமி மீது ஓடிக கொண்டே இருக்கிறது
மழைத் துளிகள் போல்
யோனி நிலம் மீது
விந்துத் துளிகள் வீழ்ந்து கொண்டே இருக்கின்றன
நல்ல நிலத்தில் வீழ்ந்த விதைகள் மட்டுமல்ல
முட்செடிகள் நடுவிலும்
சில முளைக்கின்றன
நெருக்குண்டு மடிகின்றன
ஆனால் விதைத்தல் பொருட்டல்ல புணர்ச்சி

''நான் கடவுளை
உறவு உச்சத்தின் கடைசி நொடியில் மட்டுமே
பார்க்கிறேன் ''
என்று உடன் பிரயாணித்த
வெள்ளைக் காரி சொன்னாள்
அவள் கடவுளின் விலாசத்தைத் தேடித்
திருவண்ணாமலைக்குப் போய்க் கொண்டிருந்தாள்
''சில சமயம்
ராம கிருஷ்ணரைப் போல
பச்சை வயல்களின்
மீது
வெள்ளைக் கொக்குகள் எழும்புவதைக்
காணும் போதும்
அது நிகழ்வதுண்டு ''என்று சொன்னாள்.
எனக்கு ராம கிருஷணர் மேல்
ஆர்வமில்லை
ஆனால்
அவளது நீர்த்த
டீ சர்ட்டின் மேலே
விறைக்கும் முலைகள்
அந்தக் கொக்குகளை நினைவுபடுத்துகின்றன
என்ற போது சிரித்தாள்
எனக்கு அவளைப் பிடித்திருந்தது
என்னைப் போலவே
கண் தெரியாத தம்பதிகளின்
கண்தெரியும் குழந்தை
அழுவதை
பதற்றத்துடன்
கண்ணீருடன் கவனித்தாள்
அப்போது அவள் கண்களில்
கடவுள் நம்பிக்கை இல்லை.
என்பதைக் கவனித்தேன்.
''புணர்ச்சி எனக்கு
இந்த இடத்தில் விலகு
என்று சொல்லும்
ஒரு அறிவிப்புப் பலகை
இரு தொழு நோயாளிகள்
புணர்ந்ததைப் பார்த்த கணத்திலிருந்து
எனக்கு இவ்விதம் தோன்றி வருகிறது
சீழ் பழுத்த யோனிகளிலும்
புழுத்த குறிகள்
கண நேரக் கடவுளைத் தேடித்
துழாவுகின்றன ''
என்று நான் அவளிடம் சொன்னேன்
''பூமியில் புணர்ச்சி நிகழாத மனம் எது?''
என்று அவள் கேட்டாள்.
அப்போது அவள் கண்கள்
மிக தூரத்திலிருந்தன.
நான் அவற்றை வரைய முயன்று தோற்றேன்
ஒப்பிட
எனக்கு
அவள் முலைகளை வரைவது
எளிதாக இருந்தது
தோய்த்த பால் பனீர் போலிருந்த
அந்த வெள்ளைக்காரச்சியின்
முலைகள்
உடைந்த கொப்புளம் போல சிவந்திருக்குமா 
இல்லை
நான் பார்த்த
சுதேசியக் கருப்பு நாவல் பழங்கள் போலிருக்குமா
என்று மட்டும் யூகிக்க முடியாமல்
ஒரு கேள்விக் குறியை இட்டு வைத்தேன்.
கருப்பே ருசி...எனினும்
அது எனது மூளையை
அந்துப்பூச்சி போல் துளைத்துக் கொண்டே இருந்தது
திருச்சியில்
அவள் இறங்கும் முன்பு
அந்தக் கேள்வியை கேட்டே விட்டேன் 
அவள் புன்னகையுடன்
போன மாதம் தான்
அவளுக்கு முற்றிய நிலை மார்புப் புற்று நோய்
கண்டறியப் பட்டதாகச் சொன்னாள்
அவள் ஏன் என்னிடம் அதைச் சொன்னாள்
என்பதை நான் அறியேன்
ஆனால்
இக்கவிதையில்
எந்த நீதியும் இல்லை
என்று மட்டும்
உங்களுக்கு சொல்லிக் கொள்கிறேன் 
போகும் முன்பு
கடைசியாக...
அவை வெடித்த கொப்புளங்கள் போல்தான் இருந்தன.




குறிப்பு-பண்புடன் இணைய இதழில் வந்தது 

LinkWithin

Related Posts with Thumbnails