Monday, October 18, 2010

அப்பாலிருந்து ஒரு அழைப்பு

கடைசியாய்
அவள் எழுதிய கடிதத்தில்
தற்கொலை பற்றி
எதுவும் குறிப்பிடவில்லை
அவள் உயிர் உறைந்த
கிணற்றின்
சுவரில் அமர்ந்து
ஏன் ஏன்  என்று
திரும்பத் திரும்பக்
கேட்டுக் கொண்டிருந்தேன்
பாசி நீரில்
தெள்ளுப் பூச்சிகள்
துள்ளும் ஓசை தவிர
எல்லா சத்தங்களும்
களைத்து நின்றிருந்தன
மறுநாளும்
அவளுக்காய்
நான் எழுதிவைத்திருந்த
கவிதைகளோடு போனேன்
ஆனால்
தவளைகள் கூட 
அவற்றைக் கேட்க மறுத்தன
மெல்ல அவள் முகம்
என் நினைவிலிருந்து தொலைவதை
நான் பதற்றத்துடன் உணர்ந்தேன்
என் கனவுகளுக்கு
முகம் கொடுத்த முகம் ....
என் முதல் முத்தம்
பூத்த முகம்..
கண் பிரிந்து உருக
கசந்து அழுதேன்

அழுகை நின்றதும்
அவளை உணர்ந்தேன்
முல்லை மொக்கு
உடையும் வாசனையாய்
பூமியின் ஆழத்திலிருந்து
வெடித்த விசும்பலாய்
அலை மோதிப் புரண்ட
கொலுசு மணியாய்
மீன்கள் மோதி உடைத்த
கண்ணாடி வளையல்களாய்
அவள் மெல்ல உயர்ந்து  வந்தாள்
அசையும் நீர்விளிம்பில்
மிதக்கும் கூந்தல்
அசைக்கும்  அவள் முகம்
தெளிந்து வருவதைப் பார்த்தேன்
அவள் புன்னகைத்து
''அழாதே
இங்கு எல்லாமே
அமைதியாகவும்
குளிர்ச்சியாகவும் இருக்கிறது''எனறாள்
பிறகு கண் சிமிட்டி
'' நீயும் வா''எனறாள் ஆதூரமாய்..
என் தயக்கம் கண்டு  
மீண்டுமொருமுறை கைநீட்டி 
''வா''எனறாள்

அனேகமாக
இந்த வரியை
நீங்கள் படிக்கும்போது
நான் போயிருக்கக் கூடும்..

3 comments:

  1. ஜில்லென்று ஓர்
    அழைப்பா?
    அமானுஷ்யம்

    ReplyDelete
  2. போகன் உங்களுக்கு முன்னால் நான் போயிட்டேன்.. அவள் அழைத்தது அப்படி... ;-) சூப்பர்.. நீங்கள் ஒரு புக் போடலாம்.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails