Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Sunday, June 3, 2012

பொருக்கு

நீண்ட நாட்களுக்குப் பிறகு 
மாட்டுத் தாவணி பேருந்து நிறுத்தத்தில் 
பாசந்தி சாப்பிட்டுக் கொண்டிருந்த 
அவளைக் 
கண்டுகொண்டேன் 
கன்னத்தில் 
இறங்கியிருந்த 
மெலிய கோடுகளைத் தவிர 
வயது 
அவளைப் பெரிதாக 
மாற்றியிருக்கவில்லை 
மார் கூட 
இருபது வயதின் 
அதே கூரோடு
இருப்பதாக தோன்றிற்று 

இன்னமும் 
பாசந்தி தானா 
என்று சிரித்தேன் 
நானும் அவளும் 
சாப்பிட்ட 
அத்தனை பாசந்திகளையும் 
நினைவு கூர்ந்து ..

அவள் 
எனது புத்தகக் கனம்
இறக்கிய ஒற்றைத் தோளையும்
அழுக்குச் சட்டையையும் 
வரட்டுத் தாடியையும் 
செருப்புக்குள் பொருந்தாது 
துருத்தி நிற்கும் 
கால் நகங்களையும் 
கவனித்து 
இன்னமும் ஜோல்னாப் பைதானா 
என்று சிரிப்புடன் கேட்டாள்

வர்மப் புள்ளிகளில் 
உளிப்புள்ளி வைத்து 
திருகும் வித்தையை 
அவள் இன்னமும் 
பயிற்சி செய்கிறாள் 
என்று அறிந்து கொண்டேன்..

Saturday, June 2, 2012

கயம்

என்னால் உன்னைக் காதலிக்க முடியாது 
என்று நீ சொன்னாய் 
நீ அழகற்றவன் 
என்ற சொல் 
அதனுள் புதைந்திருக்கிறது 
திருப்பிய வேல் போல 
உன் கண்களில் 
மினுங்கும் கர்வத்தை நான் காண்கிறேன் 

நரம்புகளில் 
துருப் பிடிக்கும் ஓசை கேட்கிறது எனக்கு 
கண்களை மூடிக் கொள்கிறேன் 
காலம் பழுத்து நீள்கிறது 

குழித்துறை ஆற்றின் கரையில் 
சிவன் கோயில் துறையில் அமர்ந்து 
சுருங்கிய கண்களுடன் 
நடுங்கும் விரல்களால் 
நான் ஏதோ 
உற்றுப் பார்த்து எழுதிக் கொண்டிருக்கிறேன் 
எனது நரைமயிரை 
வெயில் பொன்னாக்கி வெள்ளியாக்கி 
மீண்டும் மயிராக்கி
விளையாடிக் கொண்டிருக்கிறது 


பூசை முடிந்து 
வெளுத்த பாதங்களுடன் 
நீ அருகே வந்து நிற்கிறாய் 
கசங்கிய இலை போல் இருக்கிறது அது 

கோபமா என்கிறாய் 
யுகங்கள் கடந்த கேள்வியைக் கேட்டு 
தவளை ஒன்று 
படியில் தயங்கி நிற்கிறது 
அதன் முதுகில் 
படர்ந்திருக்கும் பச்சைப் பாசியைச் 
சுரண்ட எனது விரல்கள் நம நமக்கின்றன  '

கோபமா என்கிறாய் மறுபடியும் 
தவளை பாசிக் கண்களில் மிதக்கும் ஆர்வத்தோடு காத்திருக்கிறது 

பின்பு பொறுமை இழந்து 
கண் அணைத்து
நதி நீரில் 
மெலிய ஒலியுடன் குதிக்கிறது 
ஒரு ஓவியம் அசங்கியது போல 
அதிர்ந்த அலைகள் 
ஒரு யோனி விரிவது போல 
ஒரு கணம் விரிந்து 
தவளையை விழுங்கி விட்டு 
மீண்டும் 
அமைதியாகின 


நான் எழுதிக் கொண்டிருக்கிறேன் 
அவள் நின்றுகொண்டிருக்கிறாள் 
நதி ஓடிக் கொண்டிருக்கிறது 
தவளை போய் விட்டது

Sunday, April 29, 2012

கால இயந்திரத்தில் ஜாலி ஜம்பர்

ரானா பிரதாப் சிங் 
கடிவாளத்தை இழுத்து 
சேத்தக்கை நிறுத்தினார் 
''மீண்டும் வழி தப்பிவிட்டது''
என்றார் அலுப்பாக.
''அடுத்த முறை ஒரு ஜி பி எஸ் வைத்துக் கொள்ள வேண்டும் ''

ஜாலி ஜம்பர் 
முதுகை உதறிக் கொண்டது 
வலது முன்னங்காலை தூக்கி முகர்ந்து பரிசோதித்தது 
''ஷிட் ''என்று சபித்தது 
''அதுவும் மனித ஷிட்''

அதற்குள் மேலே உட்கார்ந்து கொண்டே தூங்கிவிட்ட 
நெப்போலியனை 
உலுக்கி எழுப்பியது 
அலெக்சாண்டர் விழித்துக் கொண்டு 
''கருப்பழகி 
எங்கிருக்கிறோம்?"'
என்றான் 

அப்போது மழை பெய்ய ஆரம்பித்தது 
''இள மழை ''என்றான் 
பாக்சர் குனிந்து 
''இளம் புல்''எனும்போது 
செங்கிஸ்கான் 
தோல் காலணிகளால்
இடுப்பில் உதைத்து 
''இளம்பெண்''என்றான்

ஜிஞ்சர் சுதாரித்து 
''இப்போது கற்பழிக்கலாமா 
என்று தெரியவில்லையே?''
சார்ல்மேகன் குழம்பி 
''எல்லா காலங்களிலும் 
அரசர்கள் கற்பழிக்கலாம்''

''இது எந்தக் காலம்?""
என்று ப்ரு ப்ரு கேட்டது 
ராஜ ராஜன் 
பானையில் தண்ணீர் தூக்கி வந்த பெண்ணை நெருங்கிப பார்த்து 
''தேவை இல்லை 
இவள் பெண்ணே அல்ல
ஜீன்ஸ் அணிந்திருக்கிறாள்''என்றான் 

அவர்கள் குழம்பி நின்ற போது 
வானத்திலிருந்து ஒரு குரல் 
''பவுலே பவுலே 
ஏன் என்னைத் துரத்துகிறாய்?"'என்றது 
கிங் ஆர்தர் தலை உயர்த்திப் பார்த்து 
''இதப் பார்ரா ''என்றான் 
வானத்தில் புகை போல ஒரு பெரிய சிலுவை தோன்றியது 
''நாம் அந்தத் திசை போவோம் ''
என்று சொன்ன கஜினியை 
''நம்பாதே 
அது காபிர்களின் கடவுள் 
அந்த பக்கம் கடல்தான் இருக்கிறது 
தவிர''என்று கூர்ந்து பார்த்து 
''ஒரு அணு உலை வேறு இருப்பது போலத் தெரிகிறது''
மக்னோலியா தடுத்தது 


இவற்றை எல்லாம் 
மரத்தில் இருந்து கவனித்த இரு குருவிகளில் ஒன்று 
''விக்கிரமாத்தித்த ராஜா வும் பட்டியும்''என்றது 
மற்ற குருவி 
''பட்டி என்றால் நாய் அல்லவா?'
இது குதிரை போல் தெரிகிறதே?'' என 
''ஸ்க்ரிப்டில் இல்லாததை  எல்லாம் பேசுகிறாய்
இந்தக் காலக் குருவிகளுக்கு ஒழுக்கமே இல்லை''
என்று முதல் குருவி  கடிந்து கொண்டது 

கேட்டுக் கொண்டிருந்த சார்ல்மேகன் சோர்ந்து 
''குதிரையே நீ இதற்கு முன்பு 
கற்பழித்திருக்கிறாயா""என்று கேட்டான் 
அது திடுக்கிட்டு 
''இல்லை.
ஆனால் ஏன்?''என்று யோசித்தது 

நீண்ட மௌனத்துக்கு பின்பு 
லக்கி  லூக்
குதிரையிடம் ''மன்னிக்கவும் குதிரை மாறிவிட்டது''என்றான் 
ஜாலி சம்பரும் ''ஆம்.
ஆளும் மாறிவிட்டது என்றே தோன்றுகிறது 
காலமும் .
சாரி''
இருவரும் பிரிந்து நடந்தார்கள் 

லக்கி லூக் மவுத் ஆர்கனில் 
கீழ்கண்ட பாடலை இசைத்த படியே போனான் 


''தனிமையே எனது துணைவன் 
தனிமையே எனது இசை...''


ஜாலி ஜம்பர் 
எதிரே வந்த ஒரு பெண் குதிரையைப் பார்த்தது 

சார்ல் மேகனின் கேள்வி நினைவுக்கு வந்து 
''TO DO OR NOT TO DO?"'
என்று யோசித்தபடி அங்கேயே யுகாந்திரமாய் நின்றுகொண்டிருக்கிறது 

Wednesday, April 18, 2012

எலிப்பத்தாயம்

இன்றுடன் நம் தொடர்பு முறிந்தது
என்றாள் அவள் 
பேருந்து இரைச்சலில் 
சரியாகக் கேட்கவில்லை எனினும் 
விஷயம் அதுதான்.

பேருந்தில் இருந்து இறங்கித் 
தளர்வாய் நடக்கிறேன் 
என்னிடம் 
சில காகிதங்கள் உள்ளனவே
அவற்றில் 
அவள் மேல் சில கவிதைகள் உள்ளனவே 
என்பது நினைவுக்கு வருகிறது 

அவற்றை முதலில் தொலைக்கவேண்டும்
என்று எரிச்சலுடன் நினைத்துக் கொள்கிறேன் 

மின்சாரம் போன தெருவில் 
கும்பலாய் எல்லோரும் 
எதையோ தேடிக் கொண்டிருக்கிறார்கள் 
என்ன தேடுகிறீர்கள் 
என்றதற்கு 
சாவிகள் என்றார்கள்
சாவிகள்!
என்று முணுமுணுத்துக் கொள்கிறேன்

மனைவி 
கொண்டுவந்த சப்பாத்தி
மடிந்து உலர்ந்து இருக்கிறது 
இந்த சப்பாத்தியை 
புதைத்துவிடு 
எப்போதோ இறந்துவிட்டது 
என்று சீறுகிறேன் 

கை கழுவச் செல்கையில் 
நெடுநாள் இம்சித்த எலி ஒன்று 
மருந்தைத் தின்றுவிட்டு 
கிச்சனில் கிடப்பதைப் பார்க்கிறேன் 


அதை நேற்றிரவுதான் 
எனது படுக்கை அறையில் 
நேருக்கு நேராய் சந்தித்தேன் 
நான் படிக்கவே படிக்காத 
கருணானந்த சாகரம் 
புத்தகத்தை அது படித்துக் கொண்டிருந்தது 
இடையில்
ஒரு கணம் நிறுத்தி 
தனது எண்ணெய்த் துளிக் கண்களால் 
என்னைப் பார்த்தது 


அதைப் புதைக்கும் பணியுடன் 
வெளியே வருகிறேன் 
இன்னும் மின்சாரம் வரவில்லை 

கோயில் மணி ஓசையை விலக்கி நடக்கிறேன் 
எலித் தீட்டு.

கோயிலில்திரி தூண்டும் 
பெண்ணின் 
முகத்திலும் 
குதித்து ஏறுகிறது தீபம் 
யாரோ ஒரு வாலிபன் 
அவளிடம் 
ஓடிவந்து எதுவோ சொல்கிறான் 
அவள் மார்புகள் 
ஒரு பூ போல 
விரிவதை இங்கிருந்தே என்னால் பார்க்க முடிக்கிறது 
சட்டென்று 
பெருமூச்சுடன் விலகிக் கொள்கிறேன் 

அலைபேசியில் 
அந்த நேரத்திலும் அழைத்துக் 
கடன் வழங்குகிறாள் 
வங்கிப் பெண் 
அவள் குரல் இளமையாக இருக்கிறது 
இன்றிரவு என்னுடன் 
நீ உடையின்றி இருக்க முடிந்தால் 
உடனே கடனட்டை வாங்கத் தயார் 
என்று சொல்ல விரும்புகிறேன் 

ஆனால் சொல்ல முடியாது 
செப்பு போன்ற 
சிறிய குரல் உடைய 
ஒரு பெண்ணை ஒருதடவை 
நேரில் சந்தித்து பீதியடைந்துவிட்டேன் 
திருவாரூர்த் தேர் போல இருந்தாள்
அவளது பின்னம்பாகங்கள் 
நெடுநாள் என்கனவில் 
அசைந்து கொண்டே இருந்தன.

சிறுநீர் கழிக்க நிற்கிறேன் 
முன்புபோல் 
அது தொலைதூரம் செல்வதில்லை.
என்று கவனிக்கிறேன் 
எனது ஆண்குறி இறக்கிறதா என்ன?

பன்றிகள் உருமுகின்றன.
தொங்கும் முலைகளுடன் 
திரிந்த பன்றியை 
ஆண் பன்றிகள் விரட்டுகின்றன 

அதில் முதலில் ஓடும் பன்றி 
நிச்சயம் 
ஒரு ஆணாதிக்கப் பன்றிதான் 
என்பது அதன் குரலில் இருந்து தெரிகிறது 

பன்றிகள் புணர்வதை 
யாரும் இதுவரைப் 
பதிவு செய்ததே இல்லையே 
என்று கேட்டுக் கொள்கிறேன் 


மாடி ஜன்னலில் இருந்து 
ஒரு பெண் எட்டிப் பார்க்கிறாள் 
ஜன்னலுக்கு வெளியே 
அவள் முலை சரிந்து தொங்குகிறது 

எலியின் பிரேதத்தை 
கவனத்துடன் குப்பைத் தொட்டியில் இடுகிறேன் 

நடக்கிறேன் 
பின் கவனம் உற்றவவனாய் 
திரும்பிவந்து சொல்கிறேன்

'போய் வா நண்பனே''

Tuesday, April 17, 2012

இலக்கியம் பேசுதல்

சிக்கலான உடைகளிலிருந்து 
அவள் இன்னமும் 
தன்னை விடுவித்துக் கொண்டிருக்கிறாள் 
பழம் கடிகாரத்தில் 
பனிரெண்டு மணிக்கு 
முன்னிமிடத்தில் 
துடிக்கும் முள் போல 
என் குறி துடித்துக் கொண்டிருக்கிறது.
மேசை மீது 
பாதி குடித்த காபி 
ஆவி விட்டுக் கொண்டிருக்கிறது 
சிகரெட் புகைந்து கொண்டிருக்கிறது 
அவசரமாக நிறுத்தப் பட்ட 
சதுரங்க விளையாட்டு 
காத்திருக்கிறது 
விவாதிக்க விரும்பிக் கொண்டுவந்த புத்தகங்கள் 
பிரிக்கப் படாமலே கிடக்கின்றன 
அவள் கணவன் எப்போது வருவான் 
என்று மீண்டுமொரு தடவை
நான் பதற்றமாய்க் கேட்டுக் கொள்கிறேன் 

இவ்வளவு சீக்கிரம் 
இந்த முனைக்கு வருவோம் 
என எதிர்பார்க்கவில்லை 
பார்த்திருந்தால் 
நான் இன்னும் சற்று முன்னதாகவே 
பத்திரமான நேரத்துக்கு அங்கு போயிருப்பேன் 
அவளும் இன்னும் 
இலகுவான ஆடை ஒன்றை அணிந்திருக்கக் கூடும்

கந்தர்வன்

பேராற்றின் கரையில் 
நுண்மணல் மலர 
அமர்ந்திருந்தாள் அவள் 
இருள் 
ஒரு பெரும்பாம்பு போல 
பூமி மீது படரும் பொழுதில் 
வானிலிருந்து 
வீழ்ந்து கொண்டிருத்த 
அவன் அவளைக் கண்டான் 
மனிதர்களைப் போலவே இருந்தாலும் 
அவன் மனிதன் அல்லன். 
புராணங்களில் 
அவன் கந்தர்வனாகவும் 
விஞ்சையனாகவும் 
தேவனாகவும் 
இயக்கனாகவும் 
அறியப் படுகிறான் 
அங்கிருந்து நோக்க 
கரை மேல் ஏற்றி வைத்த அகல் போல 
அவளிருக்கக் கண்டு 
அவனருகில் வந்தான் 
சூறைக் காற்றில் ஒடுங்கி நடுங்கும் 
சிற்றகல் அவள் 
எனினும் 
முனைகளில் ஆடக முனை 
விட்டெறிந்த அந்த அகல் 
வெளிச்ச ஏணிபற்றி 
தான் வீழ்ந்த 
சொர்க்கத்திற்கு ஏற முடியும் 
என்று அவன் கண்டு கொண்டான் 
மெல்ல ஒரு இறகு போல 
இறங்கி அவளருகில் நின்றான் 
கைகூப்பி 
வான் முனை காண்பித்து 
அவளிடம் ஏதோ சொன்னான் 
ஒருவேளை 
நட்சத்திரங்களின் தோற்றம் பற்றி 
அவளிடம் சொல்லி இருக்கக் கூடும் 
அல்லது 
அவள் தனது கருவறையில் 
பொதிந்துவைத்திருக்கும் 
இன்னும் பிறக்காத பிரபஞ்சங்கள் பற்றி 
அவள் அதைக் கேட்டாளா 
தெரியவில்லை.
அதன்பிறகு 
இப்புவி மீது 
அவளைக் கண்டவரில்லை.

ஆனால் 
ஒன்று நிச்சயம் 
கணிணியில் 
வெறும் எண்களாய் 
அவளை 
நான் மாற்றிக் கொண்டிருந்த வேளையில்தான் 
இவையெல்லாம் நிகழ்ந்தது.

Monday, April 16, 2012

அமரன்

நடு இரவில் 
தூக்கப் பட்டு 
கண்ணாடிக் கூண்டுக்குள் அடைக்கப் பட்டேன் 
முகமூடிகள் மாட்டப் பட்டன 
எலும்புக் கரங்களில் 
நரம்புகளை நெருடி நெருடி 
ஊசிகள் ஏற்றப் பட்டன 
வினோத நிறங்கள் பொலியும் 
திரவங்கள் 
உடலை ஊடுருவின 
இருபத்தி நாலுமணி 
என்று கடிகாரத்தில் 
எல்லைகள் குறிக்கப் பட்டன 
நல்ல வேளையாக
நான் நிரந்தரமானவன் 
என்ற புகழ் பெற்ற 
கவிதையை எழுதிய 
கவி நான்தான் 
என்று 
சுற்றி நின்றிருந்த யாருக்கும் தெரியவில்லை 
என்ற ஆறுதலோடு 
இறந்து போனேன்

கொற்றவை

பேரணங்கின் ஆரம் சுழலுமிடம் 
என்ற துணிவோ 
உடல் என்பது வெறும் ஊன் 
என்ற தத்துவம் கொண்டவளோ 
தேநீரின் மீது மிதக்கும் பாலாடை போல 
பாசி மிதக்கும் 
அம்பலக் குளத்துறையில்

ஆயிரமாயிரம் பாதங்கள் அழுந்தித் தேய்ந்த 
கல் தரையில் நின்று 
அலட்சியமாய் 
ஆடை களைந்து கொண்டிருந்தாள் பெண் 
விரித்த சாளரத்தின் வழி 
புலர் பொழுதில் கிடைத்த முதல் காட்சி
காதலிக்காமல் 
கல்யாணம் செய்யாமல் 
காசு எறியாமல் 
காணக்கிடைத்த 
இலவசப் பெண் உடலைப் 
புறக்கணிக்க முடியாது 
நின்றேன் 
அடி வயிற்றுத் தசைகள் இறுக
ஒரு துப்பாக்கி உயர்த்தப் படுவது போல 
ஆண்குறி எழும்ப 


சீலை விலக்கி எறிந்து 
முலை மூடாடை கழற்றி 
முடிச்சிட்ட்ட பாவாடையைத் தளர்த்தி 
மேலேற்றி 
கரிய வாழை போல சரியும் 
கால்களை உயர்த்தி 
கீழாடை உதறும் போது 
கணுக்களில் தயங்கி நின்ற 
ஒற்றைக் கொலுசை மாத்திரம் கண்டேன் 

யாரோ பார்ப்பது போல உணர்ந்து 
சட்டென்று ஜன்னலை மூடினேன் 

துடிக்கும் இருதயத்தோடு 
திரும்பியபோது 
அறையில் இருந்த 
பழந் தெய்வத்தின் 
சினத்தின் செவ்வரி ஓடிய
சித்திரக் கண்கள் 
ஒரு கணம் 
அசைந்து மீண்டனவா?


எப்போதும் எச்சரிக்கையாய் இருங்கள் 
ஆடை மாற்றும் போது
பார்க்கும் கண்களைக் குறித்து..

பார்க்கும் கண்களைப் பார்க்கும் கண்கள் குறித்தும்..

Saturday, January 28, 2012

முடிவிலி

கோட்பாரற்றுக்
கிடக்கும் 
பழங் கோயிலின் 
இடிபாடுகளில் 
இள முலைகள் துள்ள 
தனித்துத் திரிந்த 
ஒரு சிறுபெண்ணை சந்தித்தேன் 
தனக்குப் பயமில்லை 
தான் தனித்தில்லை 
என்றாள் அவள் 
இங்கு பறவைகள் இருக்கின்றன 
என்றாள் 
நூற்றுக் கணக்கில் ..
பிறகு 
ஊழி வரும்வரை 
உறங்க முடியாத தெய்வங்கள்
ஆயிரக் கணக்கில் ..

காலத்தில் உறைந்த விழிகளை 
மூட முடியாமல் 
பார்த்துக் கொண்டே இருக்கின்றன 
எப்போதும் 
எல்லாவற்றையும் 
என்று சிரித்தாள் 
அது வீசப் பட்டது போல 
பெருகி 
வெளியெங்கும் நிறைந்தது 

அந்த சிரிப்பின் 
முடிவில் 
வைரம் போல் மின்னும் 
இரண்டு கூர்க் கொடும்பற்களை
நான் ஒரு கணம் பார்த்தேன் 

அஞ்சி 
ஓவென்று அலறினேன் 
அவள் 
வாய் மீது விரல் வைத்து 
அஞ்சாதே 
என்று புன்னகைத்த பொழுது 
யாரோ எய்தது போல 
இளவெயில் நிறத்தில் 
ஒரு பட்டாம்பூச்சி இறங்கி
அவள் உதடுகள் மேல் அமர்ந்தது .
நான் அது சிறகுகள் அசைய அசைய 
மது உண்பதைப் பார்த்தேன் 
அப்போது 
ஒரு புத்தனின் கண்கள் 
அவளிடம் இருந்தது 
அல்லது 
முலை கொடுக்கும் தாயின் கண்கள் 
ஆனால் 
ஒரு ஓவியத்தின் கண்கள் 
மாற்றப் பட்டாற்போல் 
சட்டென்று 
அவள் கண்கள் சாய்ந்து சோம்பிற்று
எனது வெறும் கைகளைக் கண்டு 
எனக்கென 
ஒரு பூ கூட பூக்கவில்லை அல்லவா 
உன் தோட்டத்தில் 
என்று வான் நோக்கிக் கூவினாள் அவள் 
அது கேட்டு 
கோபுரங்கள் நடுங்கின.
பிறகு 
புனல் போல் இளகும் கண்களுடன் 
புகை கலைவது போல 
மெலிய மழைக் கம்பிகள் 
ஊடே நுழைந்து நுழைந்து 
அவள் என்னை விட்டு 
விலகி கருவறைக்குள் போவதை 
நான் பார்த்துக் கொண்டே இருந்தேன் 
செய்வதற்று ..

ஒரே ஒரு பூ வில் 
இருந்தது 
அவள் சாஸ்வதம்.

Monday, January 16, 2012

புணர் நிமித்தம்


ஆடும் ரயில் பெட்டியின்
கழிவறையில்
சிறுநீர் கழிக்கும்
புழையை வெறித்துக் கொண்டிருந்தேன்
அது ஏன்
நிதம்ப வடிவில் இருக்கிறது
என்று கேட்டுக் கொண்டேன்
நீளக் குழாயின் மறுபுறம்
பூமி ஓடிக கொண்டே இருந்தது
இந்தக் கழிவறையில்
புணர்ச்சி நடந்திருக்குமா
என்று யோசித்தேன்
இருக்கலாம்
பூமியில் புணர்ச்சி நடை பெறாத இடம் எது ?
மயானத்தில் கூட நடந்து கொண்டே இருக்கிறது

புணர்ச்சி ஒரு நதி போல
பூமி மீது ஓடிக கொண்டே இருக்கிறது
மழைத் துளிகள் போல்
யோனி நிலம் மீது
விந்துத் துளிகள் வீழ்ந்து கொண்டே இருக்கின்றன
நல்ல நிலத்தில் வீழ்ந்த விதைகள் மட்டுமல்ல
முட்செடிகள் நடுவிலும்
சில முளைக்கின்றன
நெருக்குண்டு மடிகின்றன
ஆனால் விதைத்தல் பொருட்டல்ல புணர்ச்சி

''நான் கடவுளை
உறவு உச்சத்தின் கடைசி நொடியில் மட்டுமே
பார்க்கிறேன் ''
என்று உடன் பிரயாணித்த
வெள்ளைக் காரி சொன்னாள்
அவள் கடவுளின் விலாசத்தைத் தேடித்
திருவண்ணாமலைக்குப் போய்க் கொண்டிருந்தாள்
''சில சமயம்
ராம கிருஷ்ணரைப் போல
பச்சை வயல்களின்
மீது
வெள்ளைக் கொக்குகள் எழும்புவதைக்
காணும் போதும்
அது நிகழ்வதுண்டு ''என்று சொன்னாள்.
எனக்கு ராம கிருஷணர் மேல்
ஆர்வமில்லை
ஆனால்
அவளது நீர்த்த
டீ சர்ட்டின் மேலே
விறைக்கும் முலைகள்
அந்தக் கொக்குகளை நினைவுபடுத்துகின்றன
என்ற போது சிரித்தாள்
எனக்கு அவளைப் பிடித்திருந்தது
என்னைப் போலவே
கண் தெரியாத தம்பதிகளின்
கண்தெரியும் குழந்தை
அழுவதை
பதற்றத்துடன்
கண்ணீருடன் கவனித்தாள்
அப்போது அவள் கண்களில்
கடவுள் நம்பிக்கை இல்லை.
என்பதைக் கவனித்தேன்.
''புணர்ச்சி எனக்கு
இந்த இடத்தில் விலகு
என்று சொல்லும்
ஒரு அறிவிப்புப் பலகை
இரு தொழு நோயாளிகள்
புணர்ந்ததைப் பார்த்த கணத்திலிருந்து
எனக்கு இவ்விதம் தோன்றி வருகிறது
சீழ் பழுத்த யோனிகளிலும்
புழுத்த குறிகள்
கண நேரக் கடவுளைத் தேடித்
துழாவுகின்றன ''
என்று நான் அவளிடம் சொன்னேன்
''பூமியில் புணர்ச்சி நிகழாத மனம் எது?''
என்று அவள் கேட்டாள்.
அப்போது அவள் கண்கள்
மிக தூரத்திலிருந்தன.
நான் அவற்றை வரைய முயன்று தோற்றேன்
ஒப்பிட
எனக்கு
அவள் முலைகளை வரைவது
எளிதாக இருந்தது
தோய்த்த பால் பனீர் போலிருந்த
அந்த வெள்ளைக்காரச்சியின்
முலைகள்
உடைந்த கொப்புளம் போல சிவந்திருக்குமா 
இல்லை
நான் பார்த்த
சுதேசியக் கருப்பு நாவல் பழங்கள் போலிருக்குமா
என்று மட்டும் யூகிக்க முடியாமல்
ஒரு கேள்விக் குறியை இட்டு வைத்தேன்.
கருப்பே ருசி...எனினும்
அது எனது மூளையை
அந்துப்பூச்சி போல் துளைத்துக் கொண்டே இருந்தது
திருச்சியில்
அவள் இறங்கும் முன்பு
அந்தக் கேள்வியை கேட்டே விட்டேன் 
அவள் புன்னகையுடன்
போன மாதம் தான்
அவளுக்கு முற்றிய நிலை மார்புப் புற்று நோய்
கண்டறியப் பட்டதாகச் சொன்னாள்
அவள் ஏன் என்னிடம் அதைச் சொன்னாள்
என்பதை நான் அறியேன்
ஆனால்
இக்கவிதையில்
எந்த நீதியும் இல்லை
என்று மட்டும்
உங்களுக்கு சொல்லிக் கொள்கிறேன் 
போகும் முன்பு
கடைசியாக...
அவை வெடித்த கொப்புளங்கள் போல்தான் இருந்தன.




குறிப்பு-பண்புடன் இணைய இதழில் வந்தது 

LinkWithin

Related Posts with Thumbnails