Tuesday, April 5, 2011

வானத்திலிருந்து ஒரு தூது

ஒரு குருவி..
தவிட்டு நிறத்தில் 
ஒரு குழந்தையின் 
சிறிய கை அளவே இருக்கும் 
ஒரு குருவி 
மேலிருந்து 
யாரோ எய்த 
அம்பு போல 
பா
     ய்
         ந் 
            து வந்து
அமர்ந்தது ஜன்னல் கம்பியில் 

மழை 
ஒரு கலவி போல் 
நிகழ்ந்து முடிந்து 
சொட்டிக் கொண்டிருந்தது 
மண்வாசனை 
ஒரு அலை போல எழுந்து 
பூமி மேல் பரவியது
காணாத இடங்களில் 
இருந்து கொண்டு
அணில்கள் கிரீச்சிட்டன 
நனைந்த காகங்கள் 
கரகரப் ப்ரியா பாட விழைந்தன 
திடீர் மழையில் திடுக்கிட்டது போல 
மரங்கள் உறைந்திருந்தன 
செம்பருத்திப்பூவிதழில் 
ஒரு முத்தம் போல 
மழைத் துளி கிடந்தது 


இப்போது 
        இன்னுமொரு குருவி வந்தது 
அப்புறம் 
           இன்னுமொரு குருவி 
                       இன்னுமொன்று என...

இப்போது என் வீடு முழுவதும் 
குருவிகள் குருவிகள் குருவிகள் .....
குருவிகள் 
தங்கள் 
இறகுகள் இறகுகள் இறகுகள்
 இறகுகளை 
அடித்துக் கொள்ளும் சப்தம்... 
அது ஒரு இசை போல் எழும்பி 
என்னை நோக்கி வந்தது..

நான் என் 
தற்கொலை முடிவைத் 
தள்ளிவைத்தேன் 

3 comments:

LinkWithin

Related Posts with Thumbnails