Saturday, February 19, 2011

அதருக்கம்

இத்தனை
அலட்சியத்தை  
நீ என்மீது 
காட்டியபோதும் 
அவமானத்தின் சகதியை 
என் மீது 
அள்ளி அள்ளிக் கொட்டியபோதும் 
மன்னிக்க மன்னிக்க 
துரோக விஷத்தில் 
என்னை 
தோய்த்தபோதும் 
ஏன் மீண்டும் மீண்டும் 
உன்னையே 
காதலித்துக் கொண்டிருக்கிறேன் 
என்று 
கண்ணீரால் கரைந்த 
மற்றுமொரு  பின்னிரவில் 
யோசித்தேன் 
முடிவே அற்று நீண்ட 
பாலை  இரவு முழுதும் 
மெய்நிகர்க் காட்டில் 
திசை தப்பியவன் போல  திரிந்தேன் 
நான் ஏன் இப்படி 
என்னை வதைத்துக் கொள்கிறேன் 
என்று 
எதோ ஒரு கணினி 
சொல்லிவிடக் கூடுமென ...

விடிகாலைப் புலரியில் 
போதி வெளிச்சம் 
ஒன்று கிடைத்தது 
கொல்லவரும் புலியை நேசிப்பவரும் 
கொத்தவரும் 
கொடு நாகங்களை 
குழந்தைகள் போல பாவிப்பவரும் 
இவ்வுலகில் உண்டென 
அங்கு அறிந்தேன்  
புழுக்களை விரும்புபவரைக் 
கூட 
அவ்வுலகில்  நான் சந்தித்தேன்  
முன்பும் நான் 
அவர்கள் போன்றோரைக் 
கேள்விப்பட்டதுண்டு 
ஆனால் 
ஒருபோதும் 
அவர்களைப் புரிந்துகொள்ள 
முடிந்ததில்லை 
ஆனால் தோழி 
அடுத்த முறை சந்திக்க 
நேரிடும்போது 
பாம்புகளைக் காதலிப்பவர்களை 
புழுக்களைக் கொஞ்சுபவர்களை 
எல்லாம் என்னால் 
புரிந்து கொள்ளமுடியும் 
என்றே தோன்றுகிறது  

அவர்கள் தான் சொன்னார்கள் 
எனக்கு 
மனிதன் 
ஒருபோதும் தருக்கத்தால் 
ஆனவன் அல்ல 
மாறாய் 
அவன் 
காதலினால் ஆனவன் என்று...

3 comments:

  1. வார்த்தைகள் விளையாடியிருக்கிறது நண்னரே உங்களிடம்.. அருமை..

    http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_19.html

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails