Sunday, September 12, 2010

அரவப் படம்

வேண்டுமென்றே
கொல்லவில்லை அதை
புதியவீடு கட்டும்பொருட்டு
பழைய கற்களைப் புரட்டுகையில்
சட்டென்று வெளிவந்து
சீறியது அது
அனிச்சையாய்
கையிலிருந்த தடியால்
அடித்துக் கொன்றேன்
கற்களின் கீழ்
மேலும் சில இருந்தன
அதன் குழந்தைகள் போலும்
தமிழ் சினிமா போல
வளர்ந்தெழுந்து
பழிவாங்க வரும் என்று சொன்னதால்
தீயூற்றி எல்லாம் அழித்தோம்
பின்
பாலூற்றிப் புதைத்தோம்
பின்பு
புதுமனை கட்டிப்
புகுநாள்  வரை
அதைப் பார்க்க்கவில்லை .
ஆனால் அன்றிரவே
ஜன்னல் கம்பிகளில்
முறுகிக் கொண்டிருந்த
அதைப் பார்த்தேன்
 அதிர்ந்து விளக்கேற்றியதும்
அது துணிகட்டும் கயிறாய்
மாறி மாயம் கட்டியது
அதன் பிறகு
ஒவ்வொரு கணமும்
வீட்டின்  ஒவ்வொரு மூலையிலும்
அதன் மூச்சொலி கேட்டேன்
இரவுகளில்
அது சுவர்களிலிருந்து
யாரும் அறியாமல் 
இறங்கி வந்து
என்னிடம் பேசிக் கொண்டே இருந்தது
எரிந்து போன
அதன் குழந்தைகளைப் பற்றி ...
அதன் வீட்டில் உறங்கும்
என் குழந்தைகள் பற்றி...
மெல்ல மெல்ல
அது பேசிப் பேசியே
என்னுள் புகுந்தது
கண் மூடி
தெய்வத்தை தியானித்தாலும்
அங்கும்
ஆயிரம் தலைகளுடன் வந்து
ஆயிரம் நாவுகளில் கதைத்தது
முதுகந்தண்டுக்கும்
மூளைக்கும்
நடுவே இங்குமங்கும்
அமைதியற்று
ஓடிக் கொண்டே இருந்தது
சில சமயம்
துக்கத்தில்
வெளுத்துக் கிடந்தது
மற்ற நேரம் ரவுத்திரத்தில்
சிவந்துபாய்ந்தது
எங்கு போனாலு
அது என் பின்னால் வந்தது
மருத்துவரிடம் பேசும் போது கூட
பக்கத்து நாற்காலியில்
சுருண்டு காத்திருந்தது
குளிகைகள் தந்த
உறக்கத்திலும் பாதியில் ஊடுருவி
பேச அழைத்தது
அலறி எழுந்த
என்னை  இடுப்போடு இறுக்கி அணைத்த
துணையின்
தசைச் சுருள்களில் இருந்தும்
படம்  எடுத்து வந்தது
நான் முழுதாய்க் கொல்ல மறந்த அரவம்...

2 comments:

  1. நகைச்சுவையும் இருக்கிறது
    நச்சும் இருக்கிறது..இந்த அரவத்தில்.
    ரசித்தேன்.

    ReplyDelete
  2. Yenakku Purinjatha Puriyalaya Theriyala....
    But Yetho Somthing Yenakku Romba Pidichiierukku...

    Ippothu Yen arugilum.......!!!!1

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails