Sunday, July 11, 2010

மகளே இறந்துவிடு

பிறந்த குழந்தை
கை அளவே இருந்தது .
குறைப் பிரசவம்.
பிழைக்குமா தெரியாது
பிழைத்தாலும்
பெரிய செலவாகுமாம்..
கிழிந்த துணி போல்
கூட்டுக்குள்
அசைவின்றி கிடந்தது.

எட்டிப் பார்த்த அவர்
சின்னக் கை அழுத்தல் கூட
இல்லாமல் போனார் .
எவ்வளவு செலவாகும்
என்று
வேண்டுமென்றே சத்தமாக
வராண்டாவில் பேசுகிறார்கள்.

கண்ணீர் பெருகி
படுக்கையை நனைத்தது
பால் பெருகி
நெஞ்சு வலித்தது.

மிருகங்களாய்க் கலந்து
பூஞ்சையாய்
ஒரு ஜீவனைப் பூத்து
அதன் முகம் கூடப்
பார்க்காது
ஓடுகிறார் அவர் .

மாமியார்
ஒரு
அழுகிய பொருளைப்
பார்க்கும் பாவனையுடன் சொன்னாள்
''எங்க பரம்பரையில்
யாருக்கும் இப்படி கிடையாது''

மேலே மின்விசிறி
என் வாழ்க்கை போல்
சுற்றுகிறது .
சுவர்களில் நீளும்
பல்லியின் நிழல்களை வெறிக்கிறேன்.

யாரும்
நம்பிக்கையாய்ப் பேசவில்லை.
பிழைத்தாலும்
மூளை வளர்ச்சி இருக்குமா
என்று சந்தேகம் அடைகிறார்கள்

கை ஊன்றி எழுந்து
கூண்டுக்குள் தூங்கும்
என் தலைச்சன் பிள்ளையைப்
பார்த்து
கண்ணீர் வழிய சொல்கிறேன்
''மகளே இறந்து விடு''

4 comments:

  1. \\கை ஊன்றி எழுந்து
    கூண்டுக்குள் தூங்கும்
    என் தலைச்சன் பிள்ளையைப்
    பார்த்து
    கண்ணீர் வழிய சொல்கிறேன்
    ''மகளே இறந்து விடு'' \\
    எத்தனை வலி இந்த வார்த்தைகளில்.

    ReplyDelete
  2. வலி நிறைந்த வரிகள்

    ReplyDelete
  3. வலி.. வலி.. வலி

    ReplyDelete
  4. pirasava valiyaivida , antha thai kooriya sol , enakku mika valiththathu. antha kuzhanthai saakak koodaathu!!!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails