Tuesday, November 15, 2011

ஓநாய் எழுதுகிறேன் ..

1.சக்கரவர்த்தி
துறவி
முட்டாள்
டாரட் ஜோசியத்தில்
எனக்கு வந்த கார்டுகள்


''இவைதாம் நீ .
எந்த வரிசையில்
அவர்கள் உனக்குள் நிற்கிறார்கள்
என்பதை மட்டும்
நீ தீர்மானித்துக் கொள்ளலாம் ''
என்றான் ஜோதிடன்

சிரித்துக் கொண்டேன்
சந்தேகமென்ன
நான்
முட்டாளாய் இருந்ததால்
துறவு போக வேண்டியிருந்த
சக்கரவர்த்தி ..


2.நான்
தன்னைத் தானே
சேர்த்துக் கொள்ள முயலும்
க்யூப் போல
அல்லது
தன்னைத் தானே
விடுவித்துக் கொள்ள
முயலும் புதிர் போல
அல்லது
தன்னைத் தானே
திறக்க முயலும் தாழ் போல...

க்யூப் .
புதிர்.
தாழ்.
ஆம் இவைதான் நான்.




3.அவர்களுக்குத்
தெரியாது என்பதால் 
என்னைப் புசிக்கவரும் 
ஓநாயுடைய பசியையும் 
சிலுவையில் 
அறைபவனின் 
மெய்வருத்தத்தையும் 
என்னைப் புதைக்க வந்தவன் 
கைதவறி 
காலில் வெட்டிக் கொண்டதையும் 
நானேதான் எழுத வேண்டி இருக்கிறது 

தனக்கு மட்டுமேயானவன் இல்லை 
கவி..


4.அடிபட்ட 
பின்னங்கால்களுடன் 
எங்கள் ஜன்னலை நோக்கி 
ஏறெடுத்து 
அழும் 
பழுப்பு நிற நாய்க் குட்டியிடம் 
நாங்கள் 
அதற்கு எந்த உதவியும் செய்யப் போவதில்லை 
என்பதை 
யாராவது சொல்லிவிடுவது நல்லது

5 comments:

  1. மூன்றாவது Exceptional!!! ஓநாய் எழுத்து நயமாக இருக்கிறது போகன்! :-))

    ReplyDelete
  2. அடிபட்ட நாய்க்குட்டி நிறைய சிந்திக்க வைக்கிறது. குளிக்கும் போதும் சுற்றிச் சுற்றி வருகிறது.

    ReplyDelete
  3. எல்லாமே நல்லா இருக்கு. முதலாவது பிரமாதம்!

    ReplyDelete
  4. 1) கண்டிப்பாய் முட்டாளாய் இருக்க முடியாது
    2) Good luck to unlock.
    3) இரக்கம் நிறைந்த கவி மனம்
    4) அந்த நாய்க்குட்டி உங்களை விடாது போலிருக்கிறது.
    --

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails