Tuesday, November 1, 2011

ஜெயமோகனின் இலக்கியப் பார்வை ?



இவை ஜெயமோகன் என்ற எழுத்தாளரின் மீது ஒரு அரைகுறை இலக்கியவாதி வைக்கும் விமர்சனங்கள் வேறிடத்தில் விவாதிக்கப் பட்டதின் சுருங்கிய வடிவம்.தீர்ப்பல்ல.அவதானம்.அவ்வளவே.


ஜெமோ இயல்பிலேயே ஒரு லட்சியவாத எழுத்தாளர்.(விக்கிரமாத்யன் ஏறக்குறைய இதேபோல்  ஒரு கருத்தை ஒரு பேட்டியில் சொன்னார்]இலக்கியம் சமூகம் பண்பாடு அரசியல் எல்லாவற்றிலும் ஒரு லட்சியவாத நோக்கு அவரிடம் இருக்கிறது.அவரது இந்த  லட்சியவாதம் மரபு சார்ந்தது.தனிமனிதனின் வீழ்ச்சி அலது மரபின் வீழ்ச்சி மற்றும் எழுச்சி இதுதான் அவரது பெரும்பாலான படைப்புகளின் ஆதார சுருதி.எல்லா படைப்புகளிலும் அவருக்கு ஒரு அறம் இருக்கவேண்டும்.இதனால் சொல்லப் படும் நீதி என்று இறுதியில் சொல்லப் படும் பாட்டிக் கதைகளில் 'சொல்லப்படும் நீதியை' சாமர்த்தியமாக மறைத்துக் கொள்வதே கலை என இவர் நம்புகிறார் .கிருத்திகாவின் வாசவேச்வரம் பற்றிய விவாதத்தில் ''வெறும் காமம் குரோதம் உலோபமாய் உலகம் இருக்கிறது.அதற்கு மேல் என்ன சொல்லு'' என்று அவரே சொல்வது குறிப்பிடத் தக்கது.யதார்த்தவாத சித்தரிப்பு மட்டுமல்ல கலை என்று அவர் நினைக்கிறார்.அதாவது மார்க்சிய இலக்கியவாதிகளைப் போலவே கலையை ஒரு இலக்கை நோக்கிச் 'செலுத்த' 'நினைக்கிறார்.திசை வேறு என்பது மட்டும்தான் வித்தியாசம்.அவர் அடிக்கடி சொல்லும் உள்ளொளி தரிசனம் என்பது அடிப்படையில் அவரது அற தரிசனமே அன்றி வேறல்ல.டால்ஸ்டாயை அவர் விதந்தோதுவதும் காந்தியை மீள்கண்டுபிடிப்பு  செய்ததும் இந்த வழியிலேயே.இதற்கு எதிர்ப் பார்வை கொண்ட படைப்புகளை (லோலிடா ,சதத் மண்டோ ,ஹென்றி மில்லர் )இவர் கடுமையாக நிராகரிப்பதும் இந்தக் காரணத்தால்தான்.


இந்த அற தரிசனத்தை உக்கிரமாக (அவர் அடிக்கடி பயன்படுத்தும் தேய்வழக்குகள்)காட்டுவதற்காக அவர் நாடகீய தருணங்களை வலிந்து உருவாக்குகிறார்.பழங்கதைகளில் சொல்லப் படுவது போலவே கதை தொடக்கம் நடு முடிவு என்று பழைய வரைபட உத்தி அவருடையது.முடிவு பெரும்பாலும் உக்கிரமாக இருக்கும் இந்த முடிவை நோக்கியே செல்வதே ஒட்டுமொத்த கதையும் வடிவமைக்கப் பட்டிருக்கும்.முடிவில் கவித்துவமாய் அவரது அற தரிசனம் ஒளித்து வைக்கப் பட்டிருக்கும் .இது சொல்லிப் புளித்துப் போன ஒரு பாணி.வணிக எழுத்தாளர்களைத்  தவிர இன்று இதைச் செய்யும் ஒரே இலக்கிய எழுத்தாளர் இவரே.


மிகுந்த உட்சிடுக்குகள் உடையதே கலை என்ற பார்வை இவருடையது.எளிய கதைகளை இவர் எழுதுவதில்லை குழந்தைகளுக்காக பனிமனிதனில் கூட தத்துவ விவாதம் செய்தால் என்ன சொல்வது?இவரால் எளிய கதைகளை எழுதவே முடியாது.அசோகமித்திரனின் மீதான இவரது ஈர்ப்புக்கு இதுவே ஒரு காரணமாக இருக்கக் கூடும் (எப்படி நம்மால் முடியாததை இவர் செய்கிறார்?)

நவீன இலக்கியத்துடன் யுத்திகளுடன் இவருக்கு இருக்கும் வெறுப்பு தெளிவாகவே இவர் ஆக்கங்களில் வெளிப்படுகிறது இவருடைய இலக்கிய சமூக அரசியல் பண்பாட்டுப் பொன்னுலகம் என்றோ மடிந்து போன இறந்த காலத்தில் இருக்கிறது.அவர் எப்போதும் நேற்றை திருப்பிப் பார்த்துக் கொண்டே இருக்கிறார்.அதை மீண்டும் மீண்டும் பார்த்து ஏங்கி இன்றைக்கு கொண்டுவர முயலுகிறார்.விளைவாக இன்றைய தலைமுறையுடன் அவரால் உரையாட முடிவதே இல்லை.அவர்களில் பழமைவாதப் புத்தி உடையவர்களைத் தவிர மற்றவர்கள் அவரை வாசிக்காது புறக்கணிக்கிறார்கள் அவர்களுடன் உரையாடும் ஒரு ஆக்கத்தை அவர் இனிதான் எழுதவேண்டும் எழுதமுடியுமா என்பது சந்தேகமே )))))



இன்றைய உலகின் மனச் சிதறல் ஆன்மாவை சரியாக வெளிக் கொண்டுவருவது transgressive எழுத்து என்று சொல்லப்படும் வகை எழுத்துதான் மரபோடு முற்றிலுமாக தன்னை துண்டித்துக் கொண்ட மன நிலையிலிருந்து வரும் எழுத்து அது.ஜெமோ இயல்பிலேயே ஒரு செவ்வியல் கலைக் காரர் .முற்றிலும் இதற்கு எதிரான மன அமைப்பு கொண்டவர்.மரபின் மீது காதல் கொண்டவர்


மீறல் இலக்கியம் அல்லது எதிர்ப்பு இலக்கியத்தை உங்கள் ரசனைப்படி நீட்ஷேவிலிருந்தோ மார்கஸ் டி சாத்தில் இருந்தோ ஆரம்பிக்கலாம் நான் ஜான் க்ளிலேண்டில் (fanny hill)இருந்து ஆரம்பிப்பேன்.அதை வடிவம், பேசுபொருள் ஆகியவற்றை வைத்து மேலும் பகுத்துக் கொள்ளலாம்.வடிவத்தை வைத்து ஒட்டு இலக்கியம் ,செய்தி இலக்கியம் (truman captoe}போன்ற பல புதிய வடிவ உத்திகள்.இவை எல்லாவற்றையும் ஜெமோ வெறும் பரிசோதனை முயற்சிகள் என்று ஒதுக்குகிறார் என்பதைக் கவனிக்க .இந்த வகை எழுத்துகளின் எல்லைகள் ரொம்ப நெகிழ்வானவை.ஜெமோவின் உன்னதத்தை கச்சிதத்தை நாடும் காவிய மனதுக்கு இது உவப்பாக இல்லை.சினிமாவிலும் மணி கவுல் போன்ற இயக்குனர்களை கூட இந்த அளவுகோலின்படியே நிராகரிக்கிறார் என்பதைக் கவனிக்கவும்.

மீறல் இலக்கியம் என்பது கட்டற்ற பாலியல் மட்டுமில்லை.வன்முறையின் அழகியல்,விளிம்பு அரசியல்,அந்நியமாதல் ,போதை மருந்துகளின் உளச் சிக்கல்கள்,மனநோய்க் கூறுகள் பற்றிய சித்திரங்கள்,குற்ற உளவியல் போன்ற நவயுகத்தின் பிரச்சினைகள் அனைத்தையும் பேசுகிறவை.ஜெமோவின் அறத்திற்கு எதிரான 'எதிர் அறம்'பேசுகிறவை.நசிவு இலக்கியம் என்று உங்கள் நிலைப்பாட்டில் இருந்து அவற்றை நீங்கள் கண்டிக்கலாம்.ஆனால் உலக இலக்கிய அரங்கில் இது போன்ற எழுத்துகள் மென்மேலும் பெருகி வருகின்றன என்பதையும் அவையும் இலக்கியமே என்று பேசப் படுவதையும் நீங்கள் காணலாம்.இவை அதன் காலகட்டத்தைப் பிரதிபலிக்கின்றன என்பதோடு மட்டுமில்லாமல் எல்லா காலங்களுக்குமான விழுமியங்களைப் பேசுவதே இலக்கியம் என்ற கருத்தையும்கேள்விக்குள்ளாக்குகின்றன.இன்று இப்போது என்று அல்டஸ் ஹக்ஸ்லி சொல்வதைப் போல் எல்லாவற்றையும் ஏன் மரபிலிருந்து தொடங்கவேண்டும் என்ற பார்வையை முன்வைப்பவை இவை.
 ஹென்றி மில்லர் ,நார்மன் மெய்லர் ,ஜாக் கேராக் (the dharma bums)ஜான் லே கேரி,கதி ஆக்கர்,எரிக்க யுங் ,வில்லியம் பர்ரோஸ்,சில்வியா பிளாத் போன்றவர்களின் செலவாணி ரகசியம் இதுதான்.இவர்களைப் பிரதி செய்து தமிழில் எழுதும் முட்டை பாகைகள் வெற்றி பெரும் ரகசியமும் இதுவே .இந்த செலவானிகள் முற்றிலும் உருவாக்கப் படுகிறவை என்பது பாதி உண்மைதான்.நவயுவர்களின் சிதறல் மனங்களின் ஏதோ ஒரு நரம்பை இவை தொடுகின்றன.அறம் பேசும் செவ்வியல் படைப்புகளைவிட அவர்களுக்கு இது நெருக்கமாக இருக்கிறது .இது ஒரு அலை.இந்த அலையை ஜெமோ திருப்ப  முயல்கிறார்.அவர்களால் சனாதனவாதி என்று வசை பாடப் படுகிறார்.ஆனால் இந்த அலையை திருப்ப முற்றிலும் மரபு சார்ந்த ஒரு பார்வையில் இருந்து கொண்டு முடியாது.இதை அந்தரங்கத்தில்  ஜெமோ உணர்ந்திருக்கிறார் என்றே நினைக்கிறேன் ஏழாம் உலகம்.அனல் காற்று,உலோகம் போன்ற படைப்புகளில் அவர் தனது செவ்வியல் பார்வையை கொஞ்சம் உடைக்க முயன்றார் .ஆனால் அது முழுதாக நிகழவில்லை என்பதே எனது கருத்து.அவரைப் பொறுத்தவரை கழற்றி மாட்டிக் கொள்ள மரபு கண்ணாடி போன்றதல்ல.கண் போன்றது.அந்தப் பார்வையை அவரால் முழுக்க பின்வலித்துக் கொள்ளவே முடியாது.இதை அவர் அறிவியல் கதைகளில் காணலாம்.அந்தக் கதைகளிலும் அவர் கடந்த காலத்தை நோக்கி மரபை நோக்கியே பயணிக்கிறார் என்பது கவனிக்கத் தக்கது 

சற்று கவித்துவமாக சொல்லப் போனால் அவரால்அவரை நோக்கி சிரித்தபடி வரும் ஒரு குழந்தையை அதன் மொத்தப் பரம்பரையையும் நினைத்துக் கொள்ளாமல் பார்க்கமுடியாது )))



இதில்தான் அவர் பலம் பலவீனம் இரண்டுமே அடங்கியிருகிறது என்று நினைக்கிறேன் .அவர் எல்லாவற்றையும் மரபின் தொடர்ச்சியாகவே பார்க்கிறார்.கிரிதரனும் குருசும் ஊமைச் செந்நாய் வெள்ளையனும் தனி ஆட்கள் அல்ல அவர்கள் அவர்கள் வகையின் பிரதிநிதிகள் கூட என்று அவர் நினைக்கிறார் .புனைவில் மட்டுமல்ல நேர் வாழ்விலும் அவரின் இந்த வகைப் படுத்தும் மனம் கூர்மையாக செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது .ஆகவே தான் இயல்பாகவே அவர் புனைவோடு நின்றுவிடாமல் இலக்கிய விமர்சனத்துக்குள்ளும் நுழைகிறார்.அவருக்கு யார் யார் எங்கு எதன் தொடர்ச்சியாக நிற்கிறார் என்று வகுத்துக் கொள்வது முக்கியம்.அதுவே அவரது வாழ்க்கைப் பார்வை.அதனாலேயே அவர் சாதியத்தை எதிர்த்தாலும் அவை பண்பாட்டுக் குறியீடுகள் என்று சொல்லவும் செய்கிறார்.எழுத்தில் அவற்றைப் பயன்படுத்தத் தயங்குவதில்லை.அவை ஒரு மனிதன் எதன் கண்ணியாக இருக்கிறான் என்பதற்கான சமிக்கைகளை அவருக்கு அளிக்கின்றன.அவரைப் பொறுத்த வரை போகனும் அநீயும் ஜடாயுவும் அ மார்க்சும் அஜயன் பாலாவும் தனி மனிதர்கள் அல்ல அவர்கள் பின்னால் ஒரு பெரிய சங்கிலி இருக்கிறது அ நீயின் பின்னால் அவரது ஹிந்துத்துவ சங்கிலி மார்க்சின் பின்னால் அவரது இந்திய எதிர்ப்பு சங்கிலி ,இவ்வாறு எல்லாவற்றையும் தொகுதிப் படுத்திப் புரிந்துகொள்வது அடிப்படையில் ஒரு மார்க்சிய கண்ணோட்டமே.மார்க்சியத்தை எதிர்த்தாலும் அவர்களது கருவிகளைத்தான் கூர்மையாக அவர்கள் மீதே ஜெமோ பயன்படுத்துகிறார்.ஒரு மனிதனின் உடற்குறைகள் அல்லது நோய்கள் அவன் எழுத்தைப் பாதிக்கின்றன என்று அவர் சொல்லத் துணிவதும் இந்த வகைப் படுத்தும் மனப் பான்மையிலேயே.அது தவறாகப் புரிந்துகொள்ளப் பட்டு வசை பாடப் படுவது இயல்பானதே.கான்ட் டிற்கு கடுமையான அஜீரணம் இருந்ததால்தான் அவர் அப்படியொரு நம்பிக்கையற்ற உலகைப் படைத்தார் என்று சொன்ன விமர்சனங்களைப் படித்திருக்கிறேன் 

இந்த தொகுதியாய் எல்லாவற்றையும் பார்க்கும் பார்வை பெரும்பாலும் சரியாகவே இருக்கும்.புதுமைப் பித்தன் கதைகளைப் படிக்கும் போது அவற்றில் ஒரு பொறுமையின்மை எனக்குத் தெரியும்.ஜெமோ அது அவருக்கிருந்த காச நோய்க்கே உரிய பதற்றம் என்று சரியாகவே கணிக்கிறார்.ஆனால் இது பிழையாகும் தருணங்களும் உண்டு.மரபிலிருந்து சூழலிலிருந்து தன்னை முற்றிலும் துண்டித்துக் கொள்வோர் உண்டு.மரபின் சங்கிலியாய் நிற்பவரே அதிலிருந்து விலகி நிற்கும் தருணங்கள் உண்டு.அஜயன் பாலாவை கிறித்துவர் என்று பிழைபடப் புரிந்துகொண்டதை இந்தப் பார்வையின் தவறுகளாகவே கருதுகிறேன் 

படைப்புலகிலும் இவ்விதம் தன்னை மரபிலிருந்து துண்டித்துக் கொண்டு நிற்பவர் உண்டு.அவர்கள் புதிய மரபின் தொடக்கமாக அமையக் கூடும் ஜான் ஆபிராமை அவர் உள்ளீடற்றவர் என்று மறுத்தது அவர் மரபற்றவர் என்று அவர் கருதியதாலேயே என்பதாகவே நான் கருதுகிறேன் 

இன்றைய  உலகம் மேலும் மேலும் மரபிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு தனிமனித வாதத்தை நோக்கி நகர்கிறது நான் எதனின் தொடர்ச்சியும் அல்ல என்பதே அதன் கூவல்.அது சாத்தியமா என்பது வேறு விஷயம் .அந்தக் குரலில் பேசும் கலைகளையே  அது  தனது வெளிப்பாடாக கருதுகிறது.தன்னைத் தொகுதிப்படுத்தும் எந்த முயற்சியையும் அது வன்மையாக எதிர்க்கிறது .ஜெமோ போன்றவர்கள் நியாயமாக அவர்களின் பண்பாட்டுத் தொடர்ச்சியை சுட்டிக் காட்டும்போது கூட வன்மையாக மறுக்கிறது .இதன் எதிர்விளைவாக பழமைவாதமும் மரபுக் குரல்களும் கூட உரத்த குரலில் பேச ஆரம்பிக்கின்றன.இந்த இரு அலைகளின் ஒரு அலையின் முகப்பில் உச்சியில் ஜெமோ நிற்கிறார் என்று நினைக்கிறேன் ஆனால் இது ஒரு எழுத்தாளனுக்கு ஒரு அபாயகரமான இடம் என்றே எனக்குத் தோன்றுகிறது சில நேரங்களில் அது அவனை அவன் விரும்பாத இடங்களில் அவன் சுயத்தை மீறிக் கொண்டு எறிந்து விடலாம் 

நாம் தனியல்ல .அது ஒரு நீண்ட பிரவாகத்தின் ஒரு சிறு துளி அதன் தொடர்ச்சி ,கண்ணி மட்டுமே என்று நம்புவது ஒரு போக்கு..ஆகவே இயல்பாகவே அது தனது இறந்த காலத்தை நோக்கி தொன்மங்களை நோக்கிப் போகிறது .இதை இன்னும் விளக்கப் போனால் பௌத்தம் இந்து ஞான மரபு செமிடிக் ஜே கிருஷ்ண மூர்த்தி என்று தத்துவ விசாரத்துக்குள் புக நேர்ந்துவிடும் .சென் பௌத்தம் சூன்யவாதம் போன்றவை எல்லா மரபுகளையும் நிராகரிக்கிறது என்பதையும் நாம் நேற்றின் தொடர்ச்சி அல்ல .ஒவ்வொரு கணமும் அதிலேயே பிறந்தது .அதைத் தாங்கிப் பிடிக்க மரபின் சங்கிலி தேவை இல்லை என்று வலியுறுத்துகிறது என்பதையும் நினைவு கொள்க.அங்கு ஏன் நிகழ்கிறது என்பது இல்லை .நிகழ்கிறது.அவ்வளவுதான்.நவயுக மனதிற்கும் அறிவியலுக்கும் இந்த கருத்து உவப்பாக இருப்பது புரிந்துகொள்ளத் தக்கதே.பீட்னிக் தலைமுறை இலக்கியத்தில் பௌத்தத்தின் செல்வாக்கு அதிகம் உண்டு என்பதை சற்று வாசித்தாலே காணலாம். அது தற்செயலானதில்லை.அங்கு அறம் என்பதோ மானுடத்தின் குரல் என்பதோ எல்லாம் இல்லவே இல்லை.அவை வாழ்வின் மீது நாம் சுமத்தும் நமது கற்பிதங்கள் மட்டுமே .


வாழ்வின் அடிப்படையில் ஒரு அறம் இருக்கிறது என்ற நம்பிக்கைவாதம் அவருடையது .அந்த அறம் மரபிலிருந்தே வருகிறது அங்கிருந்தே அதைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று அவர் நம்புவதுதான் பிரச்சினை,டாகின்சின் கடவுள் பிரமை புத்தகத்தில் இதை அவர் விரிவாக மறுத்துள்ளார்.குறிப்பாக the good book and the changing moral zeitgeist அத்தியாயத்தை வாசிக்கவும் அதிலிருந்து ஒரு வரி..there seems to be a steadily shifting standard of what is morally acceptable..it has shifted in all of us.and the shift has nothing to do with religion..if anything it happens in spite of religion not because of it....இங்கு மதம் என்று அவர் சொல்கிற இடங்களில் நீங்கள் மரபு என்பதை பிரதி செய்து கொண்டால் அவ்வளவு பொருத்தமற்றதாக இருக்காது 

 எல்லா காலங்களுக்குமான விழுமியங்கள் என்று ஒன்றும் இல்லை எல்லா மனிதர்களுக்குமான விழுமியங்கள் என்றும் ஒன்றுமில்லை.ஆனால் அவ்வாறு  நீடித்திருக்கும் அறம் என்று ஒன்ரிருப்பதான தொனியில்தான் எல்லா மதங்களும் மதநூல்களும் இசங்களும் பேச ஆரம்பிக்கின்றன அது பெரும்பாலும் கடும் வன்முறையில் முடிவடைகிறது அது லட்சியவாதம் மட்டுமே.என்று நம்பும் தரப்பு இருக்கிறது மெல்ல அந்த தரப்பு பெருகி வருகிறது  "அந்த நாளைக் கைப்பற்று'என்பதுதான் அதன் வாழ்வின் சூட்சுமம் .நீடித்திருக்கும் அறங்கள் என்ற கருத்தாக்கமே அதற்கு புரியாது 

எழுதப் பட்ட காலத்தில் மரபுக்கு எதிராக செல்வதாக கண்டிக்கப் பட்ட பல இன்று க்லாசிக்குகளாக மாறிவிட்டன.டாஸ்டவஸ்கி ,டி எச் லாரன்ஸ்,ஜேம்ஸ் ஜாய்ஸ் உதாரணங்கள் .இந்த புத்தகங்கள் கடுமையாக எதிர்க்கவும் ஏன் தடை செய்யப் படவும் பட்டன.லேடி சட்டர்லியின் காதலர்கள் புத்தகத்தை பலவருடங்கள் பதிக்கவே விடவில்லை.நீண்ட வாழக்குகள் அதற்கு எதிராக நடை பெற்றன .அப்போது செய்யப் பட்ட மரபுவாதிகளின் வாதங்களுக்கும் இப்போது அதன் சார்பாக செய்யப்படும் வாதங்களுக்கும் அதிக வேறுபாடு இல்லை. 

நம் அறங்கள் எவ்வளவு வேகமாக மாறுகின்றன என்பதற்கு இவை சாட்சி.இன்றைய மீறல் எழுத்துகளும் அவ்விதம் நாளை ஆகலாம் .அறிவியலிலும் இலக்கியத்திலும் சமூக தளத்திலும் மரபை எதிர்த்தே இன்றைக்கு நாம் அனுபவிக்கும் நிறைய நல்ல விசயங்கள் கொண்டுவரப் பட்டிருக்கின்றன .நாடக மரபின் தொடர்ச்சியை உதறும்வரை நல்ல சினிமா வரவில்லை.தளையை உதறிதான் புதுக் கவிதை வர முடிந்தது.மரபுக் கவிஞர்கள் அதை கடுமையாக எதிர்த்தார்கள் சிறுகதை என்ற மரபே கிடையாது நாவல் என்றால் என்னவென்றே தெரியாது..மரப் பசுவிலும் மோகமுள்ளிலும் 'அற தரிசனம்'கிடையாது.இதனாலேயே அவை முழுமையடையா நாவல்கள் என்று ஜெமோ சொல்கிறார் என்பது கவனிக்கத் தக்கது இதே போல்தான் கிருத்திகா வண்ண தாசன் வண்ண நிலவன் போன்றோரையும் அணுகுகிறார்.ஆமா மனிதன் காமம் குரோதாதி தான் அதற்கு மேல் சொல்லு?என்று அவர் சொல்கையில் அவர் ஒரு முடிவை தீர்ப்பை இதனால் சொல்லப் படும் நீதி என்று எழுத்தாளரிடம் ஒரு தரிசனத்தை அவர் எதிர்பார்க்கிறார்.இந்த நீதி சொல்லல் பல நேரங்களில் அபாயகரமாக முடிந்துவிடக் கூடும்.அறங்கள் வேகமாக மாறிக் கொண்டிருக்கும் காலங்களில் அந்தக் கால கட்டத்தை பதிவு செய்து தீர்ப்பை வாசிப்பவனின் மன நிலைக்கும் அவன் வசிக்கும் காலகட்டத்திற்கும் விட்டுவிடுவதே சரியாக இருக்கும். 

3 comments:

  1. ||.நவயுவர்களின் சிதறல் மனங்களின் ஏதோ ஒரு நரம்பை இவை தொடுகின்றன.அறம் பேசும் செவ்வியல் படைப்புகளைவிட அவர்களுக்கு இது நெருக்கமாக இருக்கிறது|| nice

    ReplyDelete
  2. //ஒரு அரைகுறை இலக்கியவாதி வைக்கும் விமர்சனங்கள் வேறிடத்தில் விவாதிக்கப் பட்டதின் சுருங்கிய வடிவம்.தீர்ப்பல்ல.அவதானம்.//

    இதில், //ஒரு அரைகுறை இலக்கியவாதி// என்பது தேவை இல்லாதது. அதில் உள்ள தொனிக்கு (அச்சம்) அவசியம் என்ன?

    //இலக்கியவாதி வைக்கும் விமர்சனங்கள்// இதில் 'இலக்கியவாதி' என்பதில் வாசகரும் அடங்குகிறார் என்று நம்புகிறேன். ஏனென்றால், விமர்சனம் எழுத ஒருவர் இலக்கியகர்த்தாவாக இருந்தாக வேண்டிய தேவை இல்லை அல்லவா?

    //தீர்ப்பல்ல; அவதானம்// இது மிகச் சரி. தீர்ப்புக் கூறுகிறவர்களைக் காட்டிலும் அறியாமைக் குருடுகள் வேறு யார்?

    ­உலக இலக்கியங்கள் எதிலும் காணாத ||இடமுலை கையால் திருகி|| என்னும் அந்தக் குறியீட்டை உதறி, இற்றை உள்ளூர்க் கம்யூனிஸ்ட்டுகள் கற்பிக்கிற 'பொங்கி எழுதல்' வழி மதுரையை எரித்ததன்றி, மற்றெல்லாம் ஜெயமோகனின் உழைப்பென்றே மதிக்கத் தக்க ''கொற்றவை"யா, அல்லது "ஸ்ஜீரோ டிகிரி"யா ('முட்டைப் பாகை'), எது காலத்தின் எழுத்து? எது காலத்தில் நிற்கும்?

    தீர்ப்பு வேண்டாம். அவதானம். (தீர்ப்பு செங்குத்தானது; அவதானம் பரவலானது - vertical; lateral)

    ReplyDelete
  3. பலமுறை படித்தால் தான் முழுதும் கிரகிக்கமுடியும் என்று நினைக்கிறேன். எழுத்திலும் அளவிலும் சிந்தனையும் உழைப்பும் தெரிகிறது.

    ஒழுக்கச் சிக்கல்கள் பற்றியது மீறல் இலக்கியம் என்கிறீர்களா? அல்லது ஜெமோ பார்வையில் அவை மீறல் இலக்கியம் என்கிறீர்களா?

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails