Wednesday, June 8, 2011

வார்த்தை வாதை வாழ்க்கை 4


கொஞ்ச நாட்கள் முன்பு ஜெயமோகன் பாலகுமாரனைப் பற்றி எழுதி இருந்தார்.. சுஜாதாவைப் பற்றியும் பாலகுமாரன் பற்றியும் அவர் தெரிவித்த கருத்துக்களுக்கு ஒரு பெரிய பின்னூட்ட எதிர்ப்பலை எழுந்து அவர் புறவாசலை மூடும்படி ஆகிவிட்டது.உண்மையில் சாரு ,எம் ஜி ஆர் ,சிவாஜி பிரச்சினைகளில் கூட இவ்விதம் நிகழவில்லை.தளத்தின் அளவுப் பிரச்சினை என்று அவர் சொன்னாலும் நித்தியானந்தா பிரச்சினையின் போது இதை விட அதிக பின்னூட்டங்கள் வந்த நினைவு. ஒருவேளை பின்னூட்டங்களின் தொனி அவருக்கு சலிப்பை ஏற்படுத்தி இருக்கக் கூடும்.விஷயம் சற்று உணர்ச்சி மீதுரவும் ஆகிவிட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம்.நானும் இது சம்பந்தமாக நடந்த சொற் சிலம்பத்தில் கலந்து கொண்டு பின்னூட்ட தேரை நிறுத்திய அபகீர்த்தி அடைந்தேன்.

இன்று நான் மனதுக்கு நெருக்கமாக உணரும் எழுத்தாளன் ஜெய மோகனே.அதுவே ஒரு காலத்தில் பால குமாரனாக இருந்தது.ஆனால் இன்றைய இலக்கிய உலகில் இதைச் சொல்வது 'நான் ஒரு தற்குறி'என்று சொல்வதற்கு சமம் என்பதை உணர்ந்திருக்கிறேன்.பாலகுமாரன் என்பது இன்று தீவிர இலக்கிய உலகில் சொல்லகூடாத கெட்ட வார்த்தை. யுவன் சந்திரசேகர் நாவல் ஒன்றை சாரு பாலகுமாரன் நாவல் என்று விமர்சித்தார்.அதாவது அச்சொல் ஒரு வசை.இலக்கிய வரலாறோ விமர்சனமோ எழுதுபவர்கள் எல்லாம் பாலகுமாரனைக் கவனமாகத் தவிர்த்து விடுவார்கள்.சுஜாதாவை போனால் போகிறது என்று 'நகரம்னு ஒரு சுமாரான சிறுகதை எழுதியிருக்கார்'என்பார்கள்.உண்மையில் ஜெயமோகன்தான் இவர்களைச் சற்றுப் பொருட்படுத்தி விமர்சனத்துக்கு எடுத்துக் கொண்டார் என ஒப்புக் கொள்ளவேண்டும்.

ஆனாலும் அவரது மேலோட்டமான அங்கீகாரத்தின் கீழ் அவர் வைத்த மதிப்பீடுகள் என்னை மன உளைச்சலில் தள்ளியது.ஏன் எனில் என் இளமையின் ஒரு கணிசமான பகுதியை ஆக்கிரமித்தது அவர் எழுத்துக்கள்.அவரது வாசகிகள் பலர் அவருக்கு அப்பா என்று விளித்து கடிதம் எழுதுவார்கள்.ஆண்கள் குருவே என்பார்கள்.[இப்போது ஜெயமோகனுக்கும் இது போன்ற கடிதங்கள் வரத் தொடங்கி இருக்கின்றன]நான் அந்த அளவு செண்டி இல்லை எனினும் இப்போதும் அவர் பெயர் என்னுள் ஒரு நெகிழ்வை ஏற்படுத்துவதைத் தவிர்க்க முடியவில்லை.இந்த வழிபாட்டு உணர்வு ஊடகங்களால் திட்டமிட்டு உருவாக்கப் படுவது என்று ஜெயமோகன் சொல்கிறார் இருக்கலாம்.எல்லா உணர்வுகளுமே உருவாக்கப் படுபவைதான்.



புருஷவதம் பாலகுமாரனின் சிறந்த நாவல்களில் ஒன்று .பழையனூர் நீலி பற்றிய கதை ஒன்று உண்டு.முன்பு எங்கள் ஊரில் கோயில் விழாக்களில் வில் அடித்துப் பாடுவார்கள்.இப்போது அந்த இடங்களில் எல்லாம் ரிக்கார்ட் டான்ஸ் ஆடுகிறார்கள்.கேட்டால் 'கலை நிகழ்ச்சி'என்கிறார்கள்.பழையனூர் நீலி கதைப் பாடலைக் கேட்டு பயந்து இரவுகளில் தூங்காமல் இருந்ததுண்டு.சில பெண்கள் கதை கேட்கும்போதே கண்ணீர் விடுவதையும் பல்லைக் கடிப்பதையும் பார்த்திருக்கிறேன்.பொதுவாகவே ஆண்களுக்கு அடிவயிற்றில் ஒரு சங்கடமான உணர்வைக் கொடுக்கும் கதை.'அம்மன்,அருந்ததி' போன்ற படங்கள் தமிழ்நாட்டில் பெரும் வெற்றி பெற்றதிற்கு உளவியல் காரணங்கள் உண்டு.ஏறக் குறைய எல்லா பெண்களுமே இங்கு ஆண்களால் வஞ்சிக்கப் பட்டுவிட்டதான ஒரு உணர்வில் இருக்கிறார்கள்.பல சமயங்களில் அந்த உணர்வு உண்மையானதே.அவர்களுக்கு நீலி கதை பிடித்திருந்ததில் வியப்பு இல்லை.தன்னை ஏமாற்றிக் கொன்ற கணவனை பல பிறவிகள் கடந்தும் காத்திருந்து பழி தீர்த்துக் கொண்ட கதை. பாலகுமாரன் இந்த கதைப் பாடலை விரித்து அற்புதமாக எழுதி இருக்கிறார்.வழக்கமான அவரது கிளிஷேக்கள் குறைவு.அந்தக் கால செட்டிக்களின் வாழ்வு,காசி வாழ்க்கை ,நிரஞ்சர்கள் என்ற கேடி சாதுக்களின் அட்டகாசங்கள் ,யாத்திரை செய்கிறவருக்கு அன்றிருந்த சிரமங்கள் எல்லாவற்றையும் விரிவாக எழுதி இருக்கிறார்.தீவிர இலக்கிய முகமூடிகளை கழற்றி விட்டுப் படிக்க நிறைவான உணர்வைத் தரும் கதை.சினிமாவாய் எடுத்தால் பிய்த்துக் கொண்டு ஓடும்.  ********************************************************************************** எனக்குப் பிடித்த அழகான ஹிந்திப் பட ஹீரோயின்கள் என்று ஒரு வரிசை போடலாம் என விரும்புகிறேன்.நான் சற்றே பழைய ஹிந்தி படப் பாடல்களின் ரசிகன்.ஹிந்திப் பட நாயகிகள்  கவர்ந்த அளவு பழைய தமிழ்ப் படங்களின் நாயகிகள் அவ்வளவாக என்னைக் கவரவில்லை.பத்மினி சரோஜா தேவி எல்லாம் அழகிகளாகவே எனக்குப் படவில்லை.பத்மினியிடம் கொஞ்சம் ஆண்மை அம்சம் தூக்கலாக இருப்பதாகக் காணலாம்.பானுமதி ஸ்டைல்.அழகல்ல.சரோஜா தேவி அந்தக் கால ஊர்வசி,அதாவது லூசுப் பெண்.அவர் காமடி நடிகையாக போய் இருக்க வேண்டியவர்.சபாஷ் மீனா போன்ற படங்களைப் பார்த்தால் புரியும்.எல்லாம் எம் ஜி ஆர் பார்த்த பார்வை.ஆனால் இன்றைக்கு வருகிற அத்தனை தமிழ்ப் படங்களிலும் நாயகிகள் ஏன் அரைக் கிராக்குகளாகவே லூசுப் பெண்களாகவே காண்பிக்கப் படுகிறார்கள் என யாராவது உளவியல் பகுப்பாய்வு செய்து சொன்னால்  நன்றாக இருக்கும்.ஆதென கீர்த்தன ஆரம்பத்திலே கருப்பு வெள்ளைப் படங்களில் வந்த சாவித்திரியை மட்டுமே நான் கொஞ்சம் அழகென்று ஒத்துக் கொள்வேன்.அதுவும் மிஸ்ஸியம்மா போன்ற படங்களில் மட்டும்.இல்லை இவர்கள் எல்லாம் அழகென்று தம் பிடிப்பவர்களுக்கு சைரா பானுவை அறிமுகப் படுத்துகிறேன்.சாய்ராவின் கண்கள் மிக அற்புதமானவை.சற்றே சோகத்தால் தலை கவிழ்ந்த தாமரை மொக்குகள் போன்ற கண்கள் ..இந்தப் பாடல்களைப் பாருங்கள்.
     

11 comments:

  1. வா.வா.வாவின் இந்த எபிசொட் நல்லா இருந்தது. சரோஜாதேவி கொஞ்சி கொஞ்சிப் பேசி மதி மயக்கினார். அவரால் ஏற்ப்பட்ட ஒரு புண்ணியம்.. அவர் பெயரில் கதைகள் எழுதி விடலைகளை திருப்திப்படுத்தியதுதான். "ராமு.. கோபால்..." என்று சிரிப்பு நிகழ்ச்சிகளில் ச.தேவி போல பேசி கைதட்டல் பெறுகிறார்கள். நீங்கள் சொன்னது சரிதான்.

    பாலகுமாரன் கம்ப்ளீட் ஆன்மிகம் பக்கம் திரும்பியதும் தான் ஜெ.மோ போன்றவர்கள் தூஷிக்கிரார்களோ?

    ReplyDelete
  2. இலக்கியம் முதலான இன்ன பிற தளங்களிலும், உணர்வுகளால் உருவாக்கப்படும் பீடங்கள் ஆரோக்கியமான போக்கைக் குறிப்பன அல்ல.எல்லாவற்றையும் கடந்து தேடலைத் தொடர்வதே படைப்பாளிக்குரிய குணம். வாழ்வில் மெய்மையைத் தேடும் எல்லோருக்குமே இது பொருந்தும். The moment you follow someone, you cease to follow truth!

    ReplyDelete
  3. பாலகுமாரன் என்றால் எனக்குப் பயம். 'இலக்கிய முகமூடிகளை கழற்றிப் படிக்க நிறைவான உணர்வைத் தரும்' என்று நீங்கள் சொல்வதால் புருஷவதம் புத்தகம் வாங்கிப் படிக்கப் போகிறேன். க.சண்முகசுந்தரம் புத்தகமும் படித்ததில்லை. படத்தைப் பார்த்தால் படிக்கத் தோன்றுகிறது - நீங்கள் படித்திருக்கிறீர்களா? தேறுமா?

    சுஜாதா பிரபலமான சுமார் எழுத்தாளர் என்று மெள்ள உணரத் தொடங்கியிருக்கிறோம். சுஜாதாவின் பலம் அவருடைய உழைப்பு, ஆழமில்லாவிட்டாலும் பரந்த அறிவு வீச்சு. இது என் கருத்து. சுஜாதாவைப் போல் பிற எழுத்தாளர்கள் உழைக்கவில்லை என்றும் நம்புகிறேன். அவருடைய வாசகர் வட்டத்தின் அபிமானம் அவருடைய உழைப்புக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரம்.

    நடிகைகளா.. பலே பலே! ஒரேயடியா இலக்கியம்னு போய்ட்டீங்களோனு நெனச்சு பயந்துட்டேன். வரிசையை எதிர்பார்க்கிறோம்.

    அட, என்ன இப்படி சொல்லிட்டீங்க? சரோஜாதேவி had grace. மேகப் போடாமல் நடித்திருக்கலாம் - மேகப் போட்டதால் அவருடைய இயற்கையான அழகு வெளிப்படவேயில்லை என்று நினைக்கிறேன். சரோஜாதேவியின் நளினம் is yet unmatched என்று நினைக்கிறேன். மிஸ்ஸியம்மா சாவித்ரி அக்ரி. இன்னும் ஏதோ ஒரு படத்தில் கூட அவர் அழகாக இருப்பார். சட்டென்று நினைவுக்கு வர மறுக்கிறது. சிவாஜிக்கு பெண் வேஷம் போட்டால் பத்மினி போல இருப்பார் என்று பள்ளி நாட்களில் சொல்லி உதை வாங்கியிருக்கிறேன். தென்னக நடிகைகளில் ஜெயந்தி, ஜெயபாரதி, ஜெயப்ரதா, ஜெயலலிதா (இத்தனை ஜெ?), சந்திரகலா, தேவிகா.. இவர்கள் பிடிக்கும் என்றாலும் அவர்களின் தொப்பையும் தொந்தியும் பல நேரம் அறுவறுப்பூட்டும்.

    இனிமையான பாடல்கள் - கேட்டு நாளானது. நன்றி. இப்பொழுதெல்லாம் அதிரடி நகைச்சுவை ஆங்கில சப்டைடில் போடுவதை நிறுத்தி விட்டார்களா என்ன? ஆள் தேவைப்பட்டால் நான் இருக்கிறேன். go go go my childhood ...

    ReplyDelete
  4. சுஜாதாவைப் போல் பல எழுத்தாளர்கள் உழைக்கவில்லை என்று எண்ணி.. பிற என்று எழுதிவிட்டேன். தவறு.

    ReplyDelete
  5. பாலகுமாரன் கதைகளை விரும்பி படிப்பேன். மனித மனங்களின் உணர்வுகளை மிகவும் நுட்பமாக எழுதும் திறமை படைத்தவர்கள் ஒரு சிலரே. அந்த வகையில் எனக்கு பாலகுமாரன் எழுத்துகள் மிகவும் பிடிக்கும். அவருடைய மெர்குரி பூக்கள் விருதை வென்று சர்ச்சைக்கும் உள்ளாகிய கதை. கதையின் கரு கத்தி மேல் நடப்பது போன்று. மிகவும் இலாவகமாக கையாண்டு இருந்தார். அவருடைய நிழல் யுத்தம் நான் என்றும் ரசித்து படிக்கும் நாவல். நீங்கள் எழுதி இருப்பது போல் ஜெயமோகன் அவர்கள் எழுத்திலும் அதே ஈர்ப்பு இருக்கிறது. இவரை நான் அறிந்ததே எம். ஏ. சுசிலா அவர்களின் தளத்தின் மூலம்தான். படித்த இரண்டு சிறு கதைகளே அவர் எழுத்துக்களை இன்னும் நிறைய படிக்க வேண்டும் என்ற பலமான எண்ணத்தை ஏற்படுத்தி விட்டது.

    உங்களுக்கு பிடித்த ஹிந்தி திரைப்பட ஹீரோயின்கள் வரிசையை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது. சைரா பானு துரு துருவென்று அழகு. எனக்கும் மிகவும் பிடிக்கும். அடுத்தது யார்!

    ReplyDelete
  6. மனிதனின் வசதிக்காக ஏற்படுத்திக்கொண்ட சமுதாய விதிகளைப் போன்றதே இலக்கண இலக்கிய விதிகளும், வகைப்பாடுகளும். ஏதோ ஒரு விதத்தில் மனித உணர்வுகளை பாதிக்கும் எவ்விதமான எழுத்தும், மனிதனுக்கு ஏதோ ஒரு வகையில் உதவுகிறது. அதை இலக்கியம் என்றோ அல்லது இலக்கியம் இல்லை என்றோ வகைப்படுத்த வேண்டிய அவசியமில்லை. எந்த வகையான இலக்கியம் என்று வேண்டுமானால் வகைப்படுத்தலாம். ஜெ. மோ வுக்கு எல்லாவற்றையும் வகைப்படுத்தியே ஆக வேண்டுமென்ற ஒரு அவசிய உந்துதல் இருப்பதாக தோன்றுகிறது, ஒரு லைப்ரேரியனைப் போல. :)
    Thanks for sharing your views.

    ReplyDelete
  7. நான் கடவுள் வகைப் படுத்தவேண்டியது அவசியமே.ஆனால் ஜெமோ இந்த வியாதியால் அதிகமாக பீடிக்கப் பட்டிருக்கிறார் எனத் தோன்றுகிறது.தத்துவமோ இலக்கியமோ அனைத்திற்கும் ஒரு சட்டகம் ஏற்படுத்தி எல்லாரையும் ஏதோ ஒரு இடத்தில் பொருத்தி வைத்தால்தான் அவரது கூர்மையான தர்க்க அறிவு சற்றே ஆசுவாசம் கொள்கிறது .சிலர் இந்த சட்டகத்துக்குள் நிற்பார்கள்.சிலர் நிற்க மாட்டார்கள் என்பதை அவர் நம்ப மறுக்கிறார்.நன்றி ...ஏறக குறைய நான் சொல்ல நினைத்ததை தெளிவாகச் சொன்னதற்கு...

    ReplyDelete
  8. விமர்சனம் செய்தால் வகைப்படுத்துதல் ஆகுமா?

    ReplyDelete
  9. இல்லை ...நான் அவரைத் தொடர்ந்து படித்து வருவதால் இந்தக் கருத்தைச் சொன்னேன்.அவருக்கு மிகப் படித்த விளையாட்டு இது.இந்த அட்டவணைப் படுத்தும் மனப்பாங்கு ஆதாரத்தில் ஒரு விமர்சகன் உடையது.ஒரு படைப்பாளி அதுவும் தனது சமகால படைப்பாளியைப் பற்றி உணர்வுச் சார்பில்லாத விமர்சன நேர்மையுடன் இருப்பது அத்துணை எளிதல்ல..என்றே நான் கருதுகிறேன்.

    ReplyDelete
  10. those who can't play, referee என்பது போலத்தானா?

    ReplyDelete
  11. வேற யாரும் விமர்சகர்கள் இருக்காங்களா ? அதீதமாய் படிக்கும் வாசகரும் கூட .காரணகாரியத்தோடதானே சொல்றார் ? 

    உங்ககிட்ட கூட ஒரு லிஸ்ட் இருக்குமே ? இருந்துதான் தீரும் . 

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails