Tuesday, August 3, 2010

சொல்விஷம்


கவனமற்ற
ஒரு தருணத்தில்
தவறி விழுந்த
ஒற்றைச் சொல்லில்
தொடங்கியது  அது.
பாதியில் உறைந்த
புன்னகைகளுடன்
தனிமையின் வெறுமையில்
ஒரு விஷ ஸ்வரம் போல
திரும்ப திரும்ப
மீட்டப் பட்டது
ஆக்டோபஸின் விரல்கள் போல்
அச்சொல்லின் விரல்கள்
மூளையின்
இடுக்குகள் யாவும்
நுழைந்தன.
ஆகாசத் தாமரையாய்
மனக் குளமெங்கும் பரவின.
நீள இரவுகள் முழுதும்
எதிர்ச் சொற்கள்
நெய்யப் பட்டன.
எய்யாத சொற்கள்
நெஞ்சில் தேங்கி
இன்னும் அழுகின.

இனி உடைக்கவே முடியாது என்று
 நாம் பதற்றத்துடன் 
உணர்வதற்குள்ளேயே
நம்மிடையே
ஒரு ராட்சச வலிச் சுவரை
எழுப்பியிருந்தது
அந்தப்
பார்த்தீனியச் சொல்.

1 comment:

LinkWithin

Related Posts with Thumbnails