Monday, August 15, 2011

உடல் தத்துவம் 18


ஆனால் எல்லா அநீதியும் காலப் போக்கில் பழகிவிடுகிறது எனவே தோன்றுகிறது .நான் மறுநாளே செல்வியைத் தேடித் தனியாகப் போனேன்.செல்வி என்னைக் கண்டு ஆச்சர்யப் படவில்லை ''வா''என்றாள்.''நீ வருவேன்னு நினச்சேன்''
அன்று கொஞ்சம் சந்தோசமாக இருந்தது போல் இருந்தது காரணம் கேட்டதற்கு ''ஆங்.எனக்கு கல்யாணம் நிச்சயமாயிருக்கு. வந்த சோலியப் பார்த்துட்டு போவியா''என்று புடவையை அவிழ்க்க ஆரம்பித்தாள்
''ச்சை ...இதை கழட்டறதுக்கும் சுத்தறதுக்குமே பாதி வாழ்நாள் போகுது.சுத்தி சுத்தி வச்சிருக்கு எல்லாத்தியும் புண்ணு மாதிரி''
நான் ''செல்வி நான் உன்ன இங்கிருந்து காப்பாத்தறேன் ''என்றேன் 
அவள் கவனிக்காமல் உள்பாவாடையின் வெள்ளை முடிச்சை இழுத்துக் கொண்டிருந்தாள் '
நான் மறுபடியும் ''செல்வி உன்ன நான்...''

அவள் ''அரை  மணிதான் அடுத்த ஆளு வந்துடுவான் சீக்கிரம் வா''

நான் அவளது வெற்றுடம்பை மௌனமாய்ப் பார்த்துக் கொண்டிருக்க ' கண்களை உற்றுப் பார்த்து 'உனக்கு என் மேல ரொம்ப பாசம் பொத்து வழியுதுன்னா நாளைக்கு வரப்ப ஒரு பாட்டில் நம்ம ஊரு நாரத்தை ஊறுகாய் வாங்கிட்டுவா ..இங்கே எல்லாம் கடுகு எண்ணெயில பண்றாய்ங்க ஆக்கங்கெட்டவங்க..வாயில வச்சால குமட்டுது .பான்சோத்.அவன் சாமானும் சுத்தமில்லை ஊறுகாயும் சுத்தமில்ல''

நான்எரிச்சலடைந்து ''நான் சொன்னதைக் கேட்டியா''
அவள் ''பொத்திட்டு சோலியப் பாரு..என்ன .. ''என்றாள் 
எனக்கு அவள் கோபம் புரியவில்லை என்று சொன்னேன் 
அவள் சட்டென்று ஆங்காரமாய்த் திரும்பி ''உன்னால சரியாய் பிடிச்சு ஒழுகாம சோலி பார்க்கத் தெரில நீ என்ன இங்கிருந்து கொண்டுபோகப் போறியா ?வெட்டிப் போட்டுடுவாங்க புரிதா?''

நான் ''என்னால முடியும் செல்வி...நீ நினைக்கிற மாதிரி பால்ப் பையனில்ல நான்''
அவள்''ஹ..உன் கண்ணுலையே தெரியுது நீ ஒரு பால்ப் பையன்னு ..இல்லாட்டா வந்த இரண்டாவது நாள் இப்படி ஒரு கேள்வி கேட்கமாட்டே''

நான் அந்தக் பதிலால் மிக ஆழமாகச் சீண்டப் பட்டேன் ஏனோ ஊரில் ராமேஸ்வரி அத்தை நினைவு வந்தது அவளது கேலிப் பார்வை ..அவள் மட்டுமல்ல அதுவரை நான் சந்தித்த பெண்கள் எல்லார் கண்களிலுமே அந்தப் பார்வையைச் சந்தித்திருக்கிறேன்.உனக்கு உலகம் தெரியாது என்பது போன்ற இரக்கப் பார்வை ..
நான் எழுந்து மிகுந்த கோபத்துடன் அவளைக் கீழே தள்ளி அவள் மேல் பாய்ந்தேன் .முரட்டுத் தனமாய் அவள் கால்களை அகட்டி ''தேவிடியா தேவிடியா''என்று கத்திய படியே அவளுக்குள் புக முயன்றேன் அவள் சிரித்து ''ஏய் முட்டாள்..எங்க வைக்கிற உன் சாமான?'என்று கத்தினாள் 

என்னால் அதிக நேரம் இயங்க முடியவில்லை மூச்சிரைக்க பின்வாங்கி விழுந்தவனை அவள் ''சொன்னேன்ல""என்பது போல் பார்த்தாள் 
எழுந்து அவசரமாக உடுத்த ஆரம்பித்தவனை எழுந்து முழன்கையைப் பிடித்துக் கொண்டு''கோபமா''என்றாள். நான் உதற சட்டென்று முகத்தைப் படித்துத் திருப்பி அவள் தொடையின் உட்பாகத்தைக் காண்பித்தாள். கரும்சிகப்பில் நீளமாய் ஒரு தீற்றல். அதே போல் எதிர்த் தொடையிலும் இருந்தது ''இங்கே பார்''என்று உள்ளன்காலைக் காண்பித்தாள்.மற்றொரு தீற்றல் உற்றுப் பார்க்க பார்க்க அவள் உடம்பில் தீற்றல்கள் தோன்றி வந்துகொண்டே இருந்தன ''சூடு போடாத இடம் முகத்திலயும் சாமானிலயும்தான் ..பிசினெஸ் போயிடுமே..தப்பிச்சுப் போக முயற்சி பண்ண ஒவ்வொரு தடவையும் மூணுநாள் ஒட்டு துணி இல்லாம சாப்பாடு தண்ணி இல்லாம ரூம்ல அடைச்சு வச்சிருந்தாங்க..அப்புறம் ஒருவாரம் தூங்கவே விடாம தொடை முழுக்க ரத்தத்தால நனையறவரை கஸ்டமரை அனுப்பி வச்சுகிட்டே இருந்தாங்க ..புரிதா''என்றாள்.

நான் நிமிர்ந்து அவளைப் பார்த்தேன்.அவள் உடல் முழுக்க நடுங்கிக் கொண்டே இருந்தது நான் எழுந்து அவளை அணைத்துக்கொள்ள முயல ''விடுறா பன்னி''என்றாள். .கதவை யாரோ தடதடவென்று தட்டி ''ஜல்தி .நயா  கஸ்டமர் ஆகயி'''என்றார்கள். 

அதன்பிறகு நான் அவளைச் சந்திக்க முயலவில்லை 
ஆனால் அவள் சொன்னது நினைவில் தைத்து உறுத்திக் கொண்டே இருந்தது.யோசித்துப் பார்க்க என்னைச் சந்தித்த எல்லாப் பெண்களுமே இந்த செய்தியை ஏதோ ஒருவிதத்தில் என்னிடம் சொல்லிக் கொண்டே இருந்திருக்கிறார்கள் என்று தோன்றியது மேகி அத்தையிலிருந்து லீலா தாமஸ் வரை எல்லாருமே..அவர்கள் எல்லோருமே என்னை நேசித்தார்கள் ஆனால் ஒரு சிறுவனை நேசிப்பது போலதான் அது.பதிலாக வாழ்நாள் முழுவதும் நான் அவர்களுக்கு என் ஆண்மையை நிரூபிக்க முயன்றுகொண்டே இருந்தேன்.

ஏறக்குறைய பதினைந்து வருடங்களுக்குப் பிறகு நான் மீண்டுமொரு தடவை கொல்கத்தாவுக்குப் போக நேர்ந்தது.திடீரென்று வேலை இல்லாத ஒருநாள் மாலை சொனாகச்சிற்குப் போய் செல்வியைத் தேடினால் என்னவென்று தோன்றியது.போய்ப் பார்த்தேன்.சோனாகச்சி முன்பைவிட சத்தமாக முன்பைவிட வெளிச்சமாக முன்பைவிட கூட்டமாக முன்பைவிட அழுக்காய் இருந்தது முன்பைவிட வயது குறைந்த பெண்கள் பொருந்தவே பொருந்தாத முகப் பூச்சுடன் சிகப்பாக்கிக் காண்பிக்கப் பட்டப் பிஞ்சு உதடுகளுடன் உயர்த்திக் காண்பிக்கப் பட்ட மார்புகளுடன் ''ஆசோ ஆசோ ஏய் அமிதாப் ஏய் சாருக் ஏய்ய் கமல்ஹாசன் ''என்று கையை இழுத்துக்  கொண்டிருந்தார்கள்

திண்டுக்கல்செல்வியை யாருக்கும் தெரியவில்லை ஒவ்வொரு கட்டிடமாக ஏறி ஏறி இறங்கினேன்.''செத்துப் போயிருக்கும் சார்''என்றான் ஒரு ஆள் அலட்சியமாக.''பதினஞ்சு வருஷம்னு சொல்றீங்க.''

கடைசியில் ஒரு மலையாளப் பெண் தான் சொன்னாள்'நாகர்கோயில் என்றதும் அவளுக்கு என் மேல் கொஞ்சம் பாசம் வந்திருக்கவேண்டும்.அல்லது நான் நிறையப் பணம் கொடுப்பதாகச் சொன்னது.யோசித்து 'நிறைய இங்க்லீஷ் பரயுமோ அ சேச்சி?அச்சன் டாக்டர்னு பறையும் அல்லே ?''

அவள் என்னை அந்தக் கட்டிடத்தின் பின்பக்கம் அழைத்துப் போனாள்.பாதையெங்கும் சாக்கடைகள் பொங்கி வழிந்துகொண்டிருக்க அவற்றைத் தாண்டித் தாண்டிப் போனோம்.''யாரானு அது உங்களுக்கு?ரிலேடிவோ?''
கட்டிடங்களுக்குப் பின்னால் வரிசையாக குடிசைவீடுகள் இருந்தன ..வாசலில் கிடந்த கயிற்றுக் கட்டில்களில் நிறைய கிழவிகள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.சிலர் புகைத்துக் கொண்டிருக்க நிறைய அரவாணிகளையும் அங்கு பார்த்தேன்.அவர்கள் என்னை வெறுப்புடன் பார்த்தார்கள்.கொசுக்கள் ஒரு மேகம் போல எங்களைப் பின்தொடர்ந்துவந்தன.நான் அவற்றை அறைந்து கொண்டே அவளைப் பின்தொடர்ந்து போனேன்.மலையாளப் பெண் மூக்கைச் சுளித்துக் கொண்டே வந்தாள்.அவள் வாழும் நரகத்தைவிட கொடிய நரகம் ஒன்று இருக்கமுடியும் என நான் அதுவரை எண்ணியிருக்கவில்லை

கடைசியாய் அவளொரு குடிசையின் முன்பு நிற்பதற்குள் நான் சலித்திருந்தேன்..திரும்பிவிடலாம் என்று சொல்ல வாய் எடுக்கும் முன்பு அவள் நின்று ''போய் நோக்கு .இதானோ நீங்க தேடி வந்த ஆளுன்னு''

நான் தயக்கமாய் அவளைத் திரும்பிப் பார்க்க ''போய்நோக்கு..போ...சேச்சி அசுகத்திலானு''என்றாள்.நான் குடிசையை மூடியிருந்த சாக்குத் திரையை விலக்கி உள்ளே பார்த்தேன்.சட்டென்று ஒரு அழுகிய நாற்றம் என்னை வந்து அடைந்தது.நெடுநாளாய் மூத்திரமும் மலமும் சீழும் கலந்த நாற்றம் அது.மூக்கை கர்சீப்பால் மூடிக் கொண்டு உள்ளே பார்த்தேன்.மிகச் சிறிய அந்தக் குடிசையில் ஓரத்தில் ஒற்றை மஞ்சள் விளக்கினடியில் ஒரு கயிற்றுக் கட்டிலில் அவள் படுத்திருந்தாள்.உடம்பில் இருந்த தசைஎல்லாவற்றையும் உருக்கி யாரோ உரித்து எடுத்துவிட்டார்போல குழிவிழுந்த கண்களுடன் தலைமுடி எல்லாம் உதிர்ந்து சருமம் முழுவதும் பச்சையாய் பூசணம் போல பூத்து ஒரு குழந்தையைப் போல ஒடுங்கி யாரோ ஒருவர்.....நிச்சயம் அவள் இல்லை என்றே முதலில் நினைத்தேன்.இது யாரோ ஒரு சாகக் கிடக்கும் சீக்குக் கிழவி .

எனக்கு சட்டென்று அந்த மலையாளப் பெண் மேல் கோபம வந்தது.இவள் ஏன் இங்கு என்னைக் கூட்டிவந்தாள்?என்று எரிச்சலுடன் திரும்பும்போது தான் கட்டிலில் கிடந்த உருவம் அசைந்து ''கோன்?"'என்றது
நான் அப்படியே ஆணி அடித்தாற்போல் உறைந்தேன்.அந்தக் குரல் ?அப்படி இருக்குமா?இருக்கக் கூடுமா?
நான் திரும்பி ஒரே ஒரு நிமிடம்தான் அவள் கண்களைப் பார்த்தேன் அந்தக் கணத்தை என்னால் வாழ்வில் மறக்கவே முடியாது.அடிவயிற்றில் யாரோ திடீரென்று குத்தினார் போல வலியுடன் என் போதத்தில் ஒரு துளை விழுந்த தருணம் .அது அவள்தான்.எல்லாம் அழிந்து போயிருந்தாலும் சட் சட்டென்று கனன்றுபற்றிக் கொள்ளும் அதே அதே கண்கள்தான்.
''யாரு?""என்று மறுபடியும் அவள் கேட்க நான் சட்டென்று அந்தக் கண்கள் என்னைக் கண்டு பற்றிக் கொள்ளும் முன்பு பதறி விலகி வெளியே மூச்சிரைக்க ஓடிவந்தேன்.
வெளியில் நின்றிருந்த அந்தப் பெண் பான் பராக்கை வாயிலிருந்து துப்பிவிட்டு ''கண்டோ?இதானோ அது?"'என
நான் அவசரமாய் ''இதில்லை இதில்லை ''என்றேன் ,கைகள் நடுங்க குரல் நடுங்க கண்ணீர் வழிய ''இதில்லை இதில்லை''என்றேன் மறுபடியும் ''போவோம் போவோம்''
அந்தப் பெண் என்னை நெருங்கி ஒருகணம் உற்றுப் பார்த்தாள். ஒரு இகழ்ச்சியான சிரிப்பு மெல்ல அவள் உதடுகளில் படர்ந்தது.மீண்டுமொரு தடவை கீழே துப்பிவிட்டு ''செ...ரி....''என்றாள்.

12 comments:

  1. பின்றீங்க போகன்.

    ReplyDelete
  2. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இப்படியெல்லாம் கூட எழுத முடியுமா? பிரமாதம். நாலைந்து நாளாகும் மனம் நிலைக்கு வர.

    ReplyDelete
  3. அட்டகாசம்! என்ன சொல்றதுன்னு தெரியலை...

    ReplyDelete
  4. @boghan ".....என்னைச் சந்தித்த எல்லாப் பெண்களுமே இந்த செய்தியை ஏதோ ஒருவிதத்தில் என்னிடம் சொல்லிக் கொண்டே இருந்திருக்கிறார்கள் என்று தோன்றியது..."
    ".....பதிலாக வாழ்நாள் முழுவதும் நான் அவர்களுக்கு என் ஆண்மையை நிரூபிக்க முயன்றுகொண்டே இருந்தேன்" - AMAZING :)

    ReplyDelete
  5. பெண்மையின் பேராண்மையெனும் நதியில் முக்குளித்து எழுந்த எழுத்துக்கள்!

    ReplyDelete
  6. மனசு கண்ணீராய் கரைகிறது. பெண்மையை விஞ்சும் ஆண்மை, உண்மையிலேயே இல்லையா?
    தோள்கள் தேடிக் களைத்து, இறுதியில் இரக்கம் பூசிய கண்களுடன் ஆணை நேசித்தாக வேண்டியதாய் .....விதி . ம்ஹ் !!
    தவறான தேடல் தானோ ? நான் எப்போதுமே உணர்ந்தது, பெண்ணின் வலிமைக்கு இணையில்லை என்பது. அது ஒரு வகையில் தனித்திருப்பதுமேயாம். Thanks Bogan, for reconfirming the fact.

    ReplyDelete
  7. சாந்தினி .ஒருதடவை ஒரு பெண்ணிடம் உனக்குப் பிடித்த ஆண்மை யார் என்று கேட்டதற்கு அவள் காந்தி என்று சொன்னாள்.எனக்குப் புரியவில்லை விளக்கச் சொன்னதற்கு ''My man should be always in control ...of himself...and of his
    situations...''என்பது போன்ற ஒரு நீண்ட விளக்கம் கொடுத்தாள்.பெரும்பாலான ஆண்கள் உள்ளூர கோழைகள் அவர்களது ஆண்மைஎல்லாம் ஒரு உறுப்பிலே பலவீனமாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது ..அதன் இருப்பைக் கேள்வி கேட்கும் மிகச் சிறிய சைகைக்குக் கூட பெரிதாகப் பதறுவார்கள்

    ReplyDelete
  8. :) ஆண்மை குறித்து பேசுவதானால், எனக்கு காந்தியை பற்றி கருத்து சொல்ல முடியவில்லை.
    ஆனால் ஆண்மை குறித்து, பொதுவாகவே ஒரு விதமான இலட்சிய கருத்தாக்கம் உண்டாக்கப்பட்டுவிட்டது போலும். பெண்ணிடம் ஒரு மிகச் சிறந்த ஆண் இப்படித்தான் இருப்பான் என போதிக்கப் பட்டுவிட்டதும் ஒரு காரணமாய் இருக்கலாம். ஆண் மனம் எப்படி இயங்குகிறது என்பது சரியாய் போதிக்கப்படவில்லை. அதனாலேயே ஒரு இலட்சிய புருஷனை நோக்கின பயணம் எல்லா பெண்களின் வாழ்விலும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பல்வேறு தேடல்களின் முடிவில், அது ஒரு பொய்யான கருத்தாக்கமாய் ஏமாற்றம் என்ற உணர்வை, தேடிக் களைத்த உணர்வை வழங்கி விடுகிறது.
    அதன் பிறகுதான் விடுதலை நோக்கிய தேடல் துவங்குகிறது. இந்த களைப்பினை தவிர்க்க, ....மனிதர்களின் இயல்பு என்னவென்று சரியான காலகட்டத்தில் சரியான பாடங்கள் வழங்கப் படவேண்டும். ஆண் அவனுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் ஆணாய் இருப்பதில், தவறு இருப்பதாய் கருத தேவையில்லை என்பதும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடமே. ஒரு இலட்சிய புருஷனை மட்டுமே நேசிக்க முடியும் என்பது, என் குழந்தை குறையில்லாது இருந்தால் மட்டுமே நேசிப்பேன் எனச் சொல்லும் தாய்மைக்கு ஒப்பானது. அதைப் போலவே ஆணும் ஒரு இலட்சிய பெண்ணை தேடி அலைய வேண்டுவதில்லை. ஆண் பெண் என்று பேதம் பார்க்காமல் - மனிதர்கள் - என்ற பார்வையில் அவரவரை அவரவர் போக்கில் வாழ அனுமதித்திருந்தால் மனிதம் தனது வக்கிர குணங்களை குறைத்துக் கொண்டிருக்கும். எல்லோரும் எல்லோரையும் ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் உருவாயிருக்கும். தடைகள் உருவான கணங்களில் எல்லாம், உணர்வுகள் மென்மேலும் பலத்துடன் தன் அசுர குணத்தை வளர்த்துக் கொண்டுவிட்டன. அதில் காம குரோதங்கள் முதலிடம் பெற்றுவிட்டன. நிலைமை இப்படியிருக்க ஆணை மட்டும் குறை சொல்வதில் என்ன பயன்?
    ------

    ReplyDelete
  9. 'கேள்வியும் நானே பதிலும் நானே'வா Santhini? துருவும் சிந்தனை. இலட்சிய ஆணை (அல்லது பெண்ணை) தேடும் பயணத்தில் வாழ்வைக் கழிப்பதென்று என்று பாராமல், இலட்சிய வாழ்வை நோக்கிய பயணத்தில் ஆணைக் (பெண்ணை) கழிப்பதென்று பார்க்க வேண்டுமோ? இலட்சிய வாழ்வு என்பதும் மிகை.

    ஒவ்வொருவருக்கும் முடிவெடுக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. நாமெடுக்கும் முடிவுகளே, செயல்படுத்திய அல்லது செயல்படுத்தத் தவறிய/தயங்கிய முடிவுகளே நம் வாழ்வின் போக்கு என்பது தானே உண்மை?

    இந்தக் கதையிலும், அந்தப் பெண் எடுத்த முடிவு அவளுடையது தான். கடைசி வரிகளில் ஆணின் கோபம் இயற்கையானதே - இயலாமையினால் வந்ததல்ல - என்று தோன்றுகிறது. முட்டாள்களுக்கு உலகில் இடமுண்டு, ஆனால் பரிதாபம் கிடையாது என்று நினைக்கிறேன். நாம் முட்டாள் என்று உணரும் நாளில் இயலாமையும் சேரும் பொழுது பரிதாபத்தில் கரைகிறோம். இதில் ஆண்மையாவது, பெண்மையாவது?

    ReplyDelete
  10. @ அப்பாதுரை,

    :) :) இலட்சிய வாழ்வு - மிகை. மிகச்சரி . சிலசமயம் வாழ்வில் இலட்சியம் தேவையில்லை என்பதை புரிந்து கொள்ள எடுக்கிற முயற்சிகளும், நேரங்களும்...வாழ்வை இலட்சியம் நோக்கிய பயணமாக மாற்றி விடுகிறது. ஓரிரு நிமிடங்களில் முடிந்து விடுகிற புரிதலாக இருந்திருந்தால், இலட்சியம் என்ற வார்த்தையை நாம் சுலபமாக தவிர்த்திருக்கலாம். என்ன செய்வது??

    ஆண்மையாவது, பெண்மையாவது ! That's right. நான் அந்த முடிவுக்குத்தான் சிலகாலம் முன்பு வந்து சேர்ந்தேன். ஆணும் பெண்ணும் இருக்கிறார்கள். ஆனால், ஆண்மை பெண்மை என்றெல்லாம் அவர்களை இனம் பிரிப்பது சரியில்லை.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails