Wednesday, December 22, 2010

உடல் தத்துவம் 15

மருத்துவர் ஆழமாய் ஒரு பெருமூச்சுடன் டயரியை மூடிவிட்டு எழுந்தார்.''ஒரு மருத்துவர் இந்தச் சொல்லை ஒரு நோயாளியிடம் சொல்லக் கூடாது.ஆனாலும் இதை நான் சொல்கிறேன்''என்றவர் சற்று நேரம் மெளனமாக இருந்தார்.''You are a fucking bastard..you know?''

நான் மறுக்காமல் ''யெஸ்.ஐ நோ''என்றேன்.ஏறக்குறைய லீலா தாமசும் இது போன்றதொரு கருத்தை ஒரு தடவை  சொன்னாள்.நான் சற்று எரிச்சல் அடைந்தேன்.அவளைப்  போலவே இவரும் அத்தையின் மரணத்திற்கு என்னை ஒற்றைப் பொறுப்பாளியாக ஆக்கப்  பார்க்கிறார்.நான் பார்த்ததிலேயே மிக முட்டாள் மனநல மருத்துவர் இவர்தான் என்று நினைத்தேன்.ஆனால் யோசித்துப் பார்க்கையில் ஏறக் குறைய எல்லா மனநல மருத்துவர்களும் இவரைப் போன்றுதான் இருக்கிறார்கள்.இவர் கொஞ்சம் அதிகம் தத்தி அவ்வளவுதான்.மனித  மனம் எவ்விதம் இயங்குகிறது என்று இவர்கள் சில தேற்றங்களை வைத்திருக்கிறார்கள்.ரெடிமேடு ஆடைகள் போல் சில விதிகள்.நீங்கள் உங்களது பிரச்சினைகளுடன் அவர்களை அணுகும்போது அந்தச் சட்டைகளுக்குள் ஒன்றில்  உங்களைத் திணித்து வகைப் படுத்திவிட்டு மறந்து போவார்கள்.உங்களுக்கு அந்தச் சட்டைப் பொருந்துகிறதா இல்லையோ நீங்கள் அதை அணிந்து கொண்டே ஆகவேண்டும்.இல்லாவிடில் வெயிலுக்கும் மழைக்கும் குளிருக்கும் கோடைக்கும் எதிரே நிர்வாணமாக நிற்கவேண்டும்.உங்களுக்கு வேறு வாய்ப்பே கிடையாது.இவர்களைப் பொறுத்தவரை  மனமும்  உடல் போல  ஒரு இயந்திரமே.சற்று நுட்பமான இயந்திரம் அவ்வளவுதான்.ஆனால் இந்த -எந்த நூற்றாண்டிலும் எவராலும் கண்டுபிடுத்துவிட முடியாத நுட்பத்துடன் இயங்கும் நகரும் மனம் எனும் இந்த எந்திர யானை இவர்கள் காட்டுகிற ஸ்டூலில் பல நேரங்களில் உட்காருவதில்லை உட்காருவது போல் ஒரு தோற்றத்தை மட்டுமே அளித்துவிட்டு அவர்கள் அறியா ஆழங்களில் உழன்றுகொண்டிருக்கிறது என்பதை இந்த முமுக்ஷூக்கள் கொஞ்சம் கூட அறியவில்லை என்பதுதான் பரிதாபம்.

''So Magthaleen the harlot இல்லையா'''

நான் லேசாக சினமுற்று ''இல்லை மகதலின் கடவுளின் தோழி''என்றேன்...


சங்குவின் மரணத்தை எதிர்கொண்டது போல் அல்லாமல் அத்தையின் மரணத்தை நான் இயல்பான ஒன்று போல் ஏற்றுக்  கொண்டது எனக்கே ஆச்சர்யமாக இருந்தது.சங்குவின் மரணத்தில் இல்லாத ஒரு நியாயம் அத்தையின் மரணத்தில் இருந்தது போல் நான் ஆழ்மனதில் நினைத்தேனா என்ன..சங்குவின் மரணம் ஒரு அபத்தமான நிகழ்வு...அவன் அந்த வயதில் அப்படி ஒரு மரணம் அடைவதற்கு என்ன ஒரு தர்க்கம் யார் தர  முடியும்.....அவன் விஷயம் பிரபஞ்சத்தின் காரண காரியச் சக்கரத்தின் நடுவில் எறியப் பட்ட ஒரு கல்.ஆனால் அத்தையின் மரணம் அப்படி அல்ல.பாவத்தின் சம்பளம் அது என்பது போன்ற ஒரு தருக்கத்திற்கு என் மனம் வந்திருந்தது..ஆனால் அந்தத் தருக்கத்தை அளித்ததே அத்தைதான் என்பதை சவுகர்யமாய் மறந்திருந்தேன்.நம்மைவிடப் பெரிய சக்திகளால் அலைக்கழிக்கப் படும்போது நம் மனம் கிடைக்கிற எதையும் அது எத்தனை அபத்தமாய் இருந்தாலும் பிடித்துக் கொண்டு எப்படியாவது கரையேற முயற்சிக்கிறது.பலநேரங்களில் ஏதோ விளக்கமுடியாத கருணையின்  காரணமாகவோ அல்லது வெறும் தற்செயலாகவோ அந்தப் பெரும்சக்திகள் நம்மைவிட்டு விலகிவிடுவதை அந்தத் துரும்பின் வலிவுக்கு சான்றாக நம்பி ஏற்றுக் கொண்டுவிடுகிறோம்....'

சங்குவின் மரணத்தில் கிடைத்த  துரும்பு மேகி  அத்தை.அந்தத் துரும்பையும்  ஆழ்கடல் அலை பறித்துச் சென்ற பிறகு நான் கடவுள் எனும் இன்னொரு.சற்றே பெரிய துரும்பைப் பிடித்துக் கொண்டேன்.பளளி சென்ற நேரம் தவிர மற்ற நேரங்களில் எல்லாம் பிரார்த்தனைகள் செய்ய ஆரம்பித்தேன்.ஒவ்வொரு இரவும் நெடுநேரம் முழங்காலிட்டுப் பிரார்த்திப்பது செய்வது கண்ட சித்தப்பா கவலை  கொள்ள ஆரம்பித்தார்.''ஏலே உனக்கு வட்டு எதுவும் பிடிச்சுடுச்சா''என்று ஏச ஆரம்பித்தார்.ஆச்சியை வேறு ''பிள்ளைங்கள யார் யார் கூட  பழகவிடறதுன்னு ஒரு அறிவே இல்லை மூதிக்கு ''என்று திட்டுவார்.எனக்குப் பள்ளியில் அருகில் இருந்த சர்ச்சில் இருந்து ஒரு புதிய ஏற்பாடு கிடைத்தது.அதைக்  கொடுத்த ஊழியகாரரிடம் பழைய ஏற்பாடு கேட்டதற்கு புன்னகையுடன் தவிர்த்துவிட்டார்.அது நீ பெரிய ஆளான  பொறவு என்று சொல்லிவிட்டார்.நல்லவேளையாக அதை அவர் செய்யவில்லை ஏன் என்று பின்னால் அதைப் படிகையில்தான் புரிந்தது.அப்போது நான் ஒரு பெரிய பள்ளத்தாக்கின் விளிம்பில் மிகா பலவீனமான எப்போதும் சரிந்துவிடக் கூடிய ஒரு தளத்தில் நின்று கொண்டிருந்தேன்.பழைய ஏற்பாட்டின் பொறாமைக் கார பெருங் கோபக்  கடவுள் என்னை அச்சுறுத்தி  அந்தகாரத்தில் நிரந்தரமாகத் தள்ளி இருக்கக் கூடும்.புதிய ஏற்பாட்டுக் கடவுள் அப்படி அல்ல.அவர் தீன  தயாளன்.புற சாதியினரிடம் தயங்காது தண்ணீர் வாங்கிக் குடிப்பவர்..வேசையையும் கல்லெறியாமல் தோள் தொட்டு எழுப்பி இனி பாவம்  செய்யாதே போ என்பவர்.காட்டிக் கொடுக்கும் யூதாசுக்கும் கன்னம்  கொடுப்பவர்.தன்னை மரணத்தருவாயில் விலாவில் கூரிய ஈட்டியால் குத்துபவர்க்கும் சேர்த்துப் பிரார்த்திப்பவர்.கடைசியில் வரும் வெளிப்படுத்தல் அதிகாரத்தைத் தவிர மற்ற நிரூபணங்களை எல்லாம் நான் திருப்பித் திருப்பிப் படித்தேன்.வெளிப்படுத்தல் மட்டுமே என்னைக் குழப்பியது.அச்சமுருத்தியது அது பழைய ஏற்பாட்டில் இருக்கவேண்டிய ஒன்று நான் அடிக்கடி நினைத்திருக்கிறேன்.

எனக்கு புதிய ஏற்பாடைக் கொடுத்தவர் ஏறக்குறைய அத்தை வயதை ஒத்த ஒரு பெண்மணிதான்.ஏதோ ஒரு சபையின் முழுநேர ஊழியை என்று நினைவு.முரட்டுச் சேலையில் முழுக்கை ரவிக்கையுடன் அத்தையின் நேரெதிர் வடிவம்.ஏறக்குறைய தினமும் பளளி முடிகிற தருவாயில் வாசலில்  என்னைச் சந்திப்பாள் .''தம்பி நேற்று இறைவனுடன் பேசினீர்களா''என்று விசாரிப்பாள்.சில நேரங்களில் சில துண்டுப் பிரசுரங்களைக் கொண்டு வருவாள்.வண்ண வண்ணத் தாள்களில் பாவிகளை மனம் திரும்ப உரத்த குரலில் அழைப்பவை அவை.ஆனால் அவளிடம் அத்தையிடம் இருந்த ஒரு உயிரோட்டம் இல்லை.அவள் ஒரு விவிலிய இயந்திரம் என்று பின்னால் உணர்ந்தேன்.துட்டு போட்டால் பாட்டு பாடும் ஒரு ஜூக் பாக்ஸ் போலதான் அவள்.ஒவ்வொரு சந்தர்ப்பந்த்திற்கும் ஏற்றார் போல் சொல்வதற்கு அவளிடம் பொருத்தமான வசனங்கள் தயாரித்து அளிக்கப் பட்டிருந்தன.எதுவும் பொருத்தமாகத் தோன்றாவிடில் விசுவாசம் என்ற சொல்லைப் பிரயோகிக்கும்படி அவளிடம் சொல்லப் பட்டிருந்தது.இதேபோல் எல்லா மதங்களிலும் இசங்களிலும் இருக்கிறார்கள் என பின்னர் அறிந்தேன்.விசுவாசத்திற்குப் பதிலாக ஈமான் என்றோ பக்தி என்றோ மார்க்கம் என்றோ சித்தாந்தம் என்றோ தர்மம் என்றோ வேறு வேறு மொழிகளில் பேசினாலும் அவர்களிடம் அதிகவித்தியாசம் இல்லை என்று மெதுவாகப் புரிந்தது.


அவள் என்னை ஏதாவது சந்தேகம் இருக்கிறதா சந்தேகம் இருக்கிறதா என்று திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டே இருந்தாள்.ஏன் எனில் விசுவாசம் எப்படி கர்த்தருக்குப் பிரியமானதோ அதே போல் சந்தேகம் அவருக்கு வெறுப்பானது என்று அவள் சொன்னால்.அது சாத்தானின் தலைமை ஆயுதம் என்றும்  அவள் சொன்னாள்.நான் ரொம்பத் தயக்கத்திற்குப் பிறகு அத்தையின் கதையைச்  சொல்லிவிட்டு இரண்டே இரண்டு கேள்விகள் மட்டும் கேட்டேன்.ஒன்று எல்லாரும் உயிர்த்தெழுவது போல் அத்தையும் ஒருநாள் உயிர்த்தெழுவாள் அல்லவா...இரண்டு பாவம் செய்தாலும் மனம் திருந்திவிட்டதால் அத்தைக்கு மீட்பு உண்டு அல்லவா...

அவள் முகம் வெளுத்துவிட்டது .அத்தையை அவள் அறிந்திருக்கக் கூடும் என்று தெரிந்தது.ஆனால் அவளது தற்கொலைக்கான காரணம் அவள் அதுவரை அறிந்திருக்க வாய்ப்பில்லை.நடுங்கும் குரலில்''பிரார்த்தனையும் விசுவாசமும் ''என்று கூவினாள்.

நான் முன்னிலும் உக்கிரமாக அத்தையின் ஆன்மாவுக்காகப் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தேன்.சில கட்டங்களில் அது அளவு மீறி சித்தப்பாவிடம் அறை வாங்கினேன்.அவர் இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் அந்த ஊழியக்கரி என்றுதான் கண்டுபிடித்து ஒருநாள் அவளிடம் வலுத்த சண்டைக்குப் போனார்/அவள் சித்தப்பாவின் கவனத்தை ஈர்க்காமல் என்னை விடாது பிரார்த்தனை செய்யுமாறு சொன்னாள்.நான் அவள் சொன்னவிதமே செய்தேன்.

ஒரு அக்டோபர் மாதம் ..தீபாவளிக்கு சில நாட்களுக்கு முன்பு.வீட்டின் வெளியே உள்ள திண்டில் அமர்ந்து 'புனிதர்களின் கதைகள்' என்று நினைக்கிறேன் படித்துக் கொண்டிருந்தேன்.மதியத்திலிருந்தே இருட்டு மேற்கிலிருந்து வானில் திரண்டு வந்து கொண்டிருந்தது..ஆபிசிலிருந்து வந்த சித்தப்பா ''தென்காசில எல்லாம்  கடுமையான மழையாம்''என்று ஆச்சியிடம் சொன்னார்.வழக்கமாய்  அவர் செய்வது போல் வீட்டிலிருந்த பெரிய மர்பி ரேடியோவின் காதைத்  திருகி ஆறுமணி செய்திக்கு காபி குடித்துவிட்டுக் காத்திருந்தார்.சரோஜ் நாராயணசாமி வடக்கத்திய செய்திகளை எல்லாம் கரகரத்துவிட்டு தென் தமிழகத்தின் மேல் ஒரு வலுவான காற்றழுத்தத் தாழ்வுமண்டலம் உருவாகி உள்ளது என்று சொன்ன கணம் பெரிய மின்னல் ஒன்று ஒரு ப்ளாஷ்  அடித்தது.அதுவரை அமைதியாக சலனமே இல்லாது இறுக்கமாய் இருந்த காற்று நகர ஆரம்பித்து கீழே  கிடந்த குப்பைகளை  எல்லாம் கிழக்கு நோக்கி விரட்டிப் போனது.க்வார்ட்டர்சில் இருந்த அத்தனை வீடுகளிலும் சொல்லிவைத்தாற்போல் மஞ்சள் விளக்குகள் வரிசையாகப் பூத்தன..அத்தை வீடு மட்டும் இருட்டாய்க் கிடந்தது.அவள் இறந்த பிறகு யாருமே அங்கு குடி வரவில்லை.அவள் எப்போதும் சுத்தமாய் வைத்திருந்த  தாழ்வாரத்தில் எப்போதும் தூசியும் புழுதியும் ஆங்காரமாகச்  சுழன்றுகொண்டே இருந்தது.சில நேரங்களில் அங்கு இரவுகளில் அழுகைச் சத்தம் கேட்பதாக சுதாவின் அம்மா ஆச்சியிடம் ஒருநாள் சொன்னதைக் கேட்டேன்.

சற்றுநேரத்தில் பலத்த் சத்தத்துடன் பெரிய மழைத்துளிகள் விழ ஆரம்பித்தன.இன்னொரு ராட்சச மின்னல் மின்சாரத்தை அழைத்துக் கொண்டு போய்விட ஒரு தடித்த போர்வை போல் சூழ்ந்துவிட்ட இருளில் கிழிசல் போல் மின்னல்கள் வெட்டிக் கொண்டே இருக்க ஒரே ஒரு கணம் அத்தையின் வீட்டுத் திண்டில் அவள் வழக்கமாக  உட்காரும் இடத்தில் யாரோ உட்கார்ந்திருப்பதைப் பார்த்தேன்.அதற்குள் ஆச்சி வந்து ''ஏலே தலைச்சன் புள்ள மின்னல்ல உட்காரக் கூடாது ''என்று உள்ளே அழைத்துக் கொண்டு போனாள்..மழை சாதாரண மழை அல்ல என்று கொஞ்ச நேரத்திலேயே தெரிந்துவிட்டது.ஏற்கனவே அந்த வீடு ஓட்டுவீடு.நாவல் பழங்களும் அதற்காக விழுந்த கற்களும் ஏற்படுத்திய ஓட்டைகள் வழியே மழை வீட்டுக்கு உள்ளேயே வந்திறங்கியது.ஒழுகும் நீரைப் பிடிக்க வைத்த அண்டா குண்டாக்கள் எல்லாம் இசையுடன் நிரம்பி தரையில் வழிய ஆரம்பித்தன ஆச்சி சிம்னி வெளிச்சத்தில் கெரசின்  வாசனையுடன் தோசைகள் சுட்டுக் கொடுத்தாள்..மழை தொடாத உலர்வான இடத்தில் உயரமான முரட்டுத் துணியில் ஆன இரண்டு ஆர்மிக் கட்டில்களில் ஒன்றில் ஆச்சியும் மற்றதில் சித்தப்பாவும் நானும் படுத்துக் கொண்டோம்.ஆச்சி அதை கேம்ப் கட்டில் என்றுதான் சொல்வாள்.. கொஞ்சம் தொட்டில் மாதிரிதான் இருக்கும்.ஒரு ஆள் படுக்கவேண்டிய கட்டிலில் சித்தப்பாவுடன் நெருங்கிக் கிடப்பது அ சவுகர்யமாக இருந்தது.ஆனால் அவர் படுத்தவுடனே தூங்கிவிட்டார்.ஆச்சி மட்டும் பெரிதாக இடி வெடிக்கும் தருணங்களில் எல்லாம் அர்ச்சுனா அர்ச்சுனா என்று விளித்துக் கொண்டிருந்தாள்.எனக்கு உறக்கம் வரவில்லை.இதே போன்றதொரு மழை இரவில்தான் அத்தை ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த கடலை இரையாதே என்று சொல்லி கர்த்தர் அடக்கிய கதையைச் சொன்னாள்  என்ற நினைவு வந்தது.எப்படி இது என்று வியந்த சீஷரிடம்  விசுவாசத்தால் எதுவும் சாத்தியம் இதைவிட பெரிய அற்புதங்களை உங்களாலும் செய்யமுடியும் என்று அவர் அப்போது சொன்னதும் சொன்னாள் .நான் கண்களை மூடியவாறே பரமண்டலப்  பிதாவே என்று எண்ணீக்கை இறந்த தடவையாக சொல்ல ஆரம்பித்தேன்.கூரையை ஒரு ரவுடி போல் மழை தட்டும் ஓசையும் இடி இடிக்கும் ஓசையும் மாறி மாறி மாறிக் கேட்டுக் கொண்டே இருக்க ஆச்சிக்கு சீதனமாக வந்த பெரிய கடிகாரம் அரை மணிக்கொருதடவை கனத்த முதிய  குரலில் பேசுவதை பதினோரு மணி வரை எண்ணிக் கொண்டிருந்தேன்.எப்போது தூங்கினேன் தூங்கினேனா  தெரியாது .விழித்தபோது அடிவயிறு கனத்தது.மழை தனது ஆக்ரோஷத்தைக் குறைக்காமல் ஆனால் சீராகப் பெய்துகொண்டிருக்க எழுந்தேன்.விழித்துக் கொண்ட சித்தப்பா ''என்னலே''என்றார்.
''ஒன்னுக்கு'''
''இந்தா ''என்று மண்டைகனத்த ஐந்துசெல் எவரெடி பேட்டரியை எடுத்துக் கொடுத்தார்.அதை எடுத்துக் கொண்டு ஆச்சியைத் தாண்டி போனேன்.பின் கதவைத் திறந்ததுமே மழை ஆங்காரமாய் முகத்தில் அடிக்க பாத்ரூம் போக வழி இல்லாமல் வாசலில் நின்று கொண்டே சிறுநீர் கழித்துவிட்டுத் திரும்பும் போதே  கவனித்தேன்.எங்கள் க்வார்ட்டர்சின் பின்கதவு எப்போதோ சிதிலம் அடைந்திருந்தது.அடிக்கடி நாய் வந்துவிடுகிறது என்று சித்தப்பா முட்களால்  தடுத்து வைத்திருந்தார்.அதன் பின்னால் ஒரு மாமரம் உண்டு.அந்த மரத்தடியில் ஒரு பெரிய கோளப் பந்து போன்ற வெளிச்சத்தின் நடுவே உறை பனி போன்ற வெண்மையான உடையில் சோகமாக  என்னையே பார்த்தபடி ........அத்தை!


நான் வாய் திறந்து கூவுவதற்குள் சட்டென்று பின்னால் பலமாக இழுக்கப் பட்டேன்.சித்தப்பா .என்னை உள்ளே தள்ளிவிட்டு சட்டென்று கதவைச் சாத்தினார்.இதற்குள் ஆச்சி சத்தம் கேட்டு எழுந்து ''ஏல என்னா'''


சித்தப்பா சற்றே தயங்கி ''பின்னால மரத்தடில  யாரோ ஒரு பொம்பிள நிக்றாப்பில  தெரியுது''என்றார்.சற்று நேரம் பேசாது இருந்தார். ''செத்துப் போன அந்த பொம்பள மாதிரி இருக்கு எழவு''

ஆச்சி ''ஐயோ மகமாயி என்று எழுந்து உட்கார்ந்துவிட்டாள்.
சித்தப்பாவை அந்த காட்சி சற்று அசைத்துவிட்டிருப்பதைப் பார்த்தேன்.

'ஐயோ அவ வாதையாத் திரியறா போல் இருக்கே ''என்று ஆச்சி புலம்ப ஆரம்பிக்க நான் மெளனமாக இருந்தேன்.

ஆக சித்தப்பாவும் அத்தையைப் பார்த்திருக்கிறார்

ஆனால் அவளுக்கு சற்று பின்னால் ஆட்டுத் தலையுடன் தீ போல் கனன்ற ஓநாய் விழிகளுடன் வழியும் கோழையுடன் கையில் திருகிய வாலுடன் அவளையே வெறித்துக் கொண்டிருந்த அந்த எட்டு அடி ராட்சத உருவத்தை -சாத்தானை  அவர் பார்க்கவில்லை போல் தெரிந்தது..



.

9 comments:

  1. super flow ....
    very nice read ..
    keep rocking

    ReplyDelete
  2. //முமுக்ஷூக்கள் // :)
    நடையும் வார்த்தைகளும் பிரமாதம். ஆவலுடன் தொடர காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  3. நடுக்கத்துடன் காத்திருக்கிறேன்..

    ReplyDelete
  4. என் இளவயது ஞாபகங்களும் சிலிர்த்து எழுகிறது. தொடருங்கள், காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  5. நல்லாயிருக்கு. மேலும் படிக்க காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  6. //மனம் எவ்விதம் இயங்குகிறது என்று இவர்கள் சில தேற்றங்களை வைத்திருக்கிறார்கள்.ரெடிமேடு ஆடைகள் போல் சில விதிகள்..............இவர்களைப் பொறுத்தவரை மனமும் உடல் போல ஒரு இயந்திரமே.சற்று நுட்பமான இயந்திரம் அவ்வளவுதான்.//
    அருமை! மிகவும் ரசித்தேன்.

    அருமையாக எழுதி இருக்கிறீர்கள். பயத்துடன் தொடர்கிறேன்.

    ReplyDelete
  7. இப்போது ஒரு வடிவம் கிடைக்கிறது, உங்கள் எண்ணங்களுக்கு.

    வினைச்சொல்லுக்கும் பெயர்ச்சொல்லுக்கும் விளக்கமா? சிரித்து ரசித்தேன்.
    >>>யெஸ்.ஐ நோ

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails