Tuesday, August 30, 2011

ஈசலோடாயினும்...

1.ஒரு மழைநாளிரவில் 
பிறந்த
ஈசல் ஒன்று
சற்றே எம்பிப் பறந்தது
வானில் ..

பக்கத்தில் பறந்துகொண்டிருந்த
பறவையைப் பார்த்து
நானும் ஒரு பறவையென்று
பெருமிதம் கொண்டது

கொண்ட வினாடியே
ஆயுள் தீர்ந்து
விழுந்திறந்தது


2.விழுந்த ஈசல் 
இறக்கும் முன்பு நினைத்தது
ஒரு நாள் வாழ்க்கைக்கு
எதற்கிந்த சிறகு?


3.பறக்காத பொழுதும் 
பறவை
பறவையாகவே இருக்க
வாழ்நாள் முழுக்கப்
பறந்த போதும்
ஏனோ
ஈசல்
ஈசலாகவே இருக்கிறது

Sunday, August 28, 2011

ஒரு கடிதம்


அண்ணாச்சி,

                          நீங்கள் எழுதும் தொடரில் ஒரு பகுதிக்கும் அடுத்த பகுதிக்கும் இடையில் எவ்வளவு நாட்கள் இருக்கும். ஏன் இவ்வளவு தாமதம்? அரிவை அரண்ல அக்டோபர் மாசத்தோட அகத்தியர் நிக்கிறாரு. அமெரிக்க ரிஷி போன வருஷம் ஜூலை மாசத்தோட நிக்கிறாரு. அவருக்கு முன்னாடி  அடுத்த பகுதில வருவானான்னு தெரியாமலே  ரச்புத்தின் நிக்கிறாரு. ஒரு  கண்ணிக்கும் அடுத்த கண்ணிக்கும் இடையில் நீண்ட இடைவெளி, போலவே உடல் தத்துவமும். கமெண்ட் ரெம்ப கம்மியா வருதேன்னு யோசிக்கறீங்களா இல்ல நாம எழுதி யாரு படிக்கப்போறான்னு நினைப்பா? சொல்லுங்க ஒவ்வொரு பதிவுக்கும் கமெண்ட் போட்டு நிரப்பிடுறேன்.
நாங்க எவ்வளவு நாள்தான் காத்திருக்கிறது.
நீங்களே ஒரு ஞாயம் சொல்லுங்க..

நட்புடன்,
ராஜகோபால்.




அன்புள்ள ராஜகோபால் 
                             இந்தக் கேள்வி என்னிடம் அடிக்கடி கேட்கப் படுவதால் ஒட்டுமொத்தமாக எல்லோருக்கும் சேர்த்தே பதில் சொல்லிவிடுகிறேன்.
 நான் துண்டு துண்டாக எழுதுகிறேன் தொடர்களை அப்படியே விட்டுவிட்டுப் போய்விடுகிறேன் என்பது முக்கியமாக சொல்லப் படுகிறது இதற்கு சரியான காரணம் ஒரு மிருகம் இரைக்காக காத்திருப்பதைப் போலதான் நான் ஒரு படைப்புக் கணத்திற்காக காத்திருக்கிறேன்.இரை கண் முன்னால் வரும்போது மிருகம் பசித்திருப்பதும் முக்கியம்.எல்லா சமயங்களிலும் இது இசைந்து போவதில்லை.உணர்வெழுச்சி இல்லாமல் எதையுமே நான் எழுத விரும்புவதில்லை.முடிவதில்லை.ஒரு விஷயத்துடன் ஒன்றாமல் எதையும் உங்களால் படிக்க முடியுமா?படைப்பும் அது போலவேதான் எனக்கு.என்னைத் தூண்டாத எதையும் என்னால் எழுத முடியாது.அதற்கான தொழில் நுட்பம் என்னிடம் இல்லை.௦ஆனால் கவிதைகளை என்னால் அப்படி ''செய்ய'' முடியும் .குளத்தின் மீது வீசும் ஒரு கல் தத்தித் தத்திச் செல்வது போல ஒரு வார்த்தையை மனதில் எறிந்துவிட்டு அது எழுப்புகிற அலைகளைப் பார்த்துக் கொண்டே இருப்பேன்.அவற்றில் சில நல்ல கவிதைகளாக ஆவதும் உண்டு.கவிதைகள் பெரும்பாலும் எனது மறை மனதிலிருந்து வருகின்றன.அதன் மீது எனக்கு பெரிய கட்டுப்பாடு எதுவும் இல்லை.கட்டுப்படுத்த விரும்புவதுமில்லை.பலசமயங்களில் அது சிறுநீர் கழிப்பதைப் போன்றதுதான்.அதை நீங்கள் செய்தே ஆகவேண்டும்.வேறு வழியில்லை.ஒப்பிட நான் நிறைய கவிதைகள் எழுதுகிறேன் எனக் கவனித்திருப்பீர்கள்.தளத்தில் எழுதுவதை விட கூகிள பஸ்சில் நிறைய எழுதுகிறேன்.அது ஏறக்குறைய a quick fuck in the closet மாதிரிதான் .அதற்கு நிறைய சக்தியும் முன்னேற்பாடும் தேவைப் படுவதில்லை.ஒருவேளை இந்த மாதிரி நொறுக்குத் தீனி நிறைய சாப்பிடுவது தான் நீண்ட விருந்துக்கான பசியை மட்டுப படுத்துகிறதோ என்னவோ?

ஆனால் கதைகளும் கட்டுரைகளும் அப்படியல்ல.அவற்றின் மீது என் முழுக் கட்டுப்பாட்டையும் முழு ஈடுபாட்டையும் விரும்புகிறேன்.நான் நுணுக்கி நுணுக்கிச் செய்ய விரும்புகிற வேலை அது.ஏறக்குறைய ஒரு ராணியை அலங்கரிப்பது போன்ற வேலை..அதை கவிதைகள் போல் இடது கையால் எழுத விரும்புவதில்லை.அவை நேரடியாக படிப்பவர் குரல்வளையை நோக்கிப் பாயவேண்டும் .குறி தப்புதல்களை இவற்றில் நான் விரும்பவில்லை ஆகவே அதற்கான உணர்வெழுச்சி வரும்வரை காத்திருக்கவே விரும்புகிறேன்.

ஆனால் இவ்விதம் எழுதுவது எனது உடல் நிலையைப் பாதிக்கிறது என்று சொன்னால் உங்களுக்கு விநோதமாகப் படலாம்.ஆனால் உண்மை அதுதான்.கண்ணி உடல் தத்துவத்தின் உணர்ச்சிகரமான பகுதிகளை எழுதி முடித்த பிறகு நான் சமநிலைக்கு வர நிறைய காலம் பிடித்தது .இரண்டு தடவை ஐ சி யூவில் போய் இருக்க நேர்ந்தது/மேடம் போவரியில் கதா நாயகி ஆர்சனிக் தின்பதை எழுதும்போது ப்ளாபர்ட்டுக்கு விஷம் சாப்பிட்ட அறிகுறிகள் ஏற்பட்டன என்று சொல்வார்கள்.நான் நம்புகிறேன்.ஆகவே இவற்றை தொடர்ச்சியாக அதே தீவிரத்துடன் எழுதுவது என் உடல் நிலையையும் பொறுத்தது.


அரிவை அரன் தளம் எனது ஆன்மீகத் தத்துவ ஈடுபாடுகளுக்கு என்றே தனியாக ஆரம்பிக்கப் பட்டது.அது முற்றிலும் வேறு ஒரு மனநிலை.என்னால் அதில் இயங்கும்போது எழுத்துப் பிழையில் இயங்க முடியாது.இங்கு இயங்கும்போது அங்கு.ஜெயமோகனிடம் ஒரு தடவை கேட்டது போல இலக்கியத்தையும் தத்துவத்தையும் என்னால் ஒன்றாய் இணைக்க இன்னும் முடியவில்லை 

வாழ்க்கை ஒரு வேட்டை நாயைப் போல என்னை ஆன்மீகத்தை நோக்கித் துரத்திக் கொண்டே இருக்கிறது.ஆனால் நானோ அதனிடம் புனித பிரான்சிஸ் அசிசி போல ''வருகிறேன் கடவுளே வருகிறேன் ..ஆனால் உடனடியாக அல்ல..இத்தனை சீக்கிரமாக அல்ல'என்று சால்ஜாப்புகள் சொல்லிக் கொண்டு இலக்கியம் இசை கவிதை சினிமா என்று இடைச சந்துகளில் திரிகிறேன்.வேட்டை நாய் முயலை நெருங்கிவிட்டது.ஆகவே வெகு சீக்கிரமே அங்கும் எழுதுவேன் 


Thursday, August 25, 2011

ஒரு பறவைக் கணம்

அதிகாலை .
ப்ளூ ..........யிட்ட்ட்ட்...
என்று
பளிங்குத் தரையில் 

தண்ணீர் சிந்தியது
போலொரு குஞ்சு சத்தம் கேட்டுவிழித்தேன்
கருக்கலிருட்டில் ,
அரை ஒளியில்
ஒரு சிறிய குருவி
ஜன்னல்கம்பியில் ஆடியபடி
கழுத்தை மாற்றி மாற்றி
என்னையே பார்த்துக் கொண்டிருந்தது
அது பயந்து விலகிவிடாமல்
இருக்கும் பொருட்டு
நான் மூச்சடக்கிக் கிடந்தேன்

பறவை பறந்து போனபின்னும்... 
வெகுநேரம் 
நான் பறத்தலால் நிரம்பிஇருந்தேன் 

Monday, August 15, 2011

உடல் தத்துவம் 18


ஆனால் எல்லா அநீதியும் காலப் போக்கில் பழகிவிடுகிறது எனவே தோன்றுகிறது .நான் மறுநாளே செல்வியைத் தேடித் தனியாகப் போனேன்.செல்வி என்னைக் கண்டு ஆச்சர்யப் படவில்லை ''வா''என்றாள்.''நீ வருவேன்னு நினச்சேன்''
அன்று கொஞ்சம் சந்தோசமாக இருந்தது போல் இருந்தது காரணம் கேட்டதற்கு ''ஆங்.எனக்கு கல்யாணம் நிச்சயமாயிருக்கு. வந்த சோலியப் பார்த்துட்டு போவியா''என்று புடவையை அவிழ்க்க ஆரம்பித்தாள்
''ச்சை ...இதை கழட்டறதுக்கும் சுத்தறதுக்குமே பாதி வாழ்நாள் போகுது.சுத்தி சுத்தி வச்சிருக்கு எல்லாத்தியும் புண்ணு மாதிரி''
நான் ''செல்வி நான் உன்ன இங்கிருந்து காப்பாத்தறேன் ''என்றேன் 
அவள் கவனிக்காமல் உள்பாவாடையின் வெள்ளை முடிச்சை இழுத்துக் கொண்டிருந்தாள் '
நான் மறுபடியும் ''செல்வி உன்ன நான்...''

அவள் ''அரை  மணிதான் அடுத்த ஆளு வந்துடுவான் சீக்கிரம் வா''

நான் அவளது வெற்றுடம்பை மௌனமாய்ப் பார்த்துக் கொண்டிருக்க ' கண்களை உற்றுப் பார்த்து 'உனக்கு என் மேல ரொம்ப பாசம் பொத்து வழியுதுன்னா நாளைக்கு வரப்ப ஒரு பாட்டில் நம்ம ஊரு நாரத்தை ஊறுகாய் வாங்கிட்டுவா ..இங்கே எல்லாம் கடுகு எண்ணெயில பண்றாய்ங்க ஆக்கங்கெட்டவங்க..வாயில வச்சால குமட்டுது .பான்சோத்.அவன் சாமானும் சுத்தமில்லை ஊறுகாயும் சுத்தமில்ல''

நான்எரிச்சலடைந்து ''நான் சொன்னதைக் கேட்டியா''
அவள் ''பொத்திட்டு சோலியப் பாரு..என்ன .. ''என்றாள் 
எனக்கு அவள் கோபம் புரியவில்லை என்று சொன்னேன் 
அவள் சட்டென்று ஆங்காரமாய்த் திரும்பி ''உன்னால சரியாய் பிடிச்சு ஒழுகாம சோலி பார்க்கத் தெரில நீ என்ன இங்கிருந்து கொண்டுபோகப் போறியா ?வெட்டிப் போட்டுடுவாங்க புரிதா?''

நான் ''என்னால முடியும் செல்வி...நீ நினைக்கிற மாதிரி பால்ப் பையனில்ல நான்''
அவள்''ஹ..உன் கண்ணுலையே தெரியுது நீ ஒரு பால்ப் பையன்னு ..இல்லாட்டா வந்த இரண்டாவது நாள் இப்படி ஒரு கேள்வி கேட்கமாட்டே''

நான் அந்தக் பதிலால் மிக ஆழமாகச் சீண்டப் பட்டேன் ஏனோ ஊரில் ராமேஸ்வரி அத்தை நினைவு வந்தது அவளது கேலிப் பார்வை ..அவள் மட்டுமல்ல அதுவரை நான் சந்தித்த பெண்கள் எல்லார் கண்களிலுமே அந்தப் பார்வையைச் சந்தித்திருக்கிறேன்.உனக்கு உலகம் தெரியாது என்பது போன்ற இரக்கப் பார்வை ..
நான் எழுந்து மிகுந்த கோபத்துடன் அவளைக் கீழே தள்ளி அவள் மேல் பாய்ந்தேன் .முரட்டுத் தனமாய் அவள் கால்களை அகட்டி ''தேவிடியா தேவிடியா''என்று கத்திய படியே அவளுக்குள் புக முயன்றேன் அவள் சிரித்து ''ஏய் முட்டாள்..எங்க வைக்கிற உன் சாமான?'என்று கத்தினாள் 

என்னால் அதிக நேரம் இயங்க முடியவில்லை மூச்சிரைக்க பின்வாங்கி விழுந்தவனை அவள் ''சொன்னேன்ல""என்பது போல் பார்த்தாள் 
எழுந்து அவசரமாக உடுத்த ஆரம்பித்தவனை எழுந்து முழன்கையைப் பிடித்துக் கொண்டு''கோபமா''என்றாள். நான் உதற சட்டென்று முகத்தைப் படித்துத் திருப்பி அவள் தொடையின் உட்பாகத்தைக் காண்பித்தாள். கரும்சிகப்பில் நீளமாய் ஒரு தீற்றல். அதே போல் எதிர்த் தொடையிலும் இருந்தது ''இங்கே பார்''என்று உள்ளன்காலைக் காண்பித்தாள்.மற்றொரு தீற்றல் உற்றுப் பார்க்க பார்க்க அவள் உடம்பில் தீற்றல்கள் தோன்றி வந்துகொண்டே இருந்தன ''சூடு போடாத இடம் முகத்திலயும் சாமானிலயும்தான் ..பிசினெஸ் போயிடுமே..தப்பிச்சுப் போக முயற்சி பண்ண ஒவ்வொரு தடவையும் மூணுநாள் ஒட்டு துணி இல்லாம சாப்பாடு தண்ணி இல்லாம ரூம்ல அடைச்சு வச்சிருந்தாங்க..அப்புறம் ஒருவாரம் தூங்கவே விடாம தொடை முழுக்க ரத்தத்தால நனையறவரை கஸ்டமரை அனுப்பி வச்சுகிட்டே இருந்தாங்க ..புரிதா''என்றாள்.

நான் நிமிர்ந்து அவளைப் பார்த்தேன்.அவள் உடல் முழுக்க நடுங்கிக் கொண்டே இருந்தது நான் எழுந்து அவளை அணைத்துக்கொள்ள முயல ''விடுறா பன்னி''என்றாள். .கதவை யாரோ தடதடவென்று தட்டி ''ஜல்தி .நயா  கஸ்டமர் ஆகயி'''என்றார்கள். 

அதன்பிறகு நான் அவளைச் சந்திக்க முயலவில்லை 
ஆனால் அவள் சொன்னது நினைவில் தைத்து உறுத்திக் கொண்டே இருந்தது.யோசித்துப் பார்க்க என்னைச் சந்தித்த எல்லாப் பெண்களுமே இந்த செய்தியை ஏதோ ஒருவிதத்தில் என்னிடம் சொல்லிக் கொண்டே இருந்திருக்கிறார்கள் என்று தோன்றியது மேகி அத்தையிலிருந்து லீலா தாமஸ் வரை எல்லாருமே..அவர்கள் எல்லோருமே என்னை நேசித்தார்கள் ஆனால் ஒரு சிறுவனை நேசிப்பது போலதான் அது.பதிலாக வாழ்நாள் முழுவதும் நான் அவர்களுக்கு என் ஆண்மையை நிரூபிக்க முயன்றுகொண்டே இருந்தேன்.

ஏறக்குறைய பதினைந்து வருடங்களுக்குப் பிறகு நான் மீண்டுமொரு தடவை கொல்கத்தாவுக்குப் போக நேர்ந்தது.திடீரென்று வேலை இல்லாத ஒருநாள் மாலை சொனாகச்சிற்குப் போய் செல்வியைத் தேடினால் என்னவென்று தோன்றியது.போய்ப் பார்த்தேன்.சோனாகச்சி முன்பைவிட சத்தமாக முன்பைவிட வெளிச்சமாக முன்பைவிட கூட்டமாக முன்பைவிட அழுக்காய் இருந்தது முன்பைவிட வயது குறைந்த பெண்கள் பொருந்தவே பொருந்தாத முகப் பூச்சுடன் சிகப்பாக்கிக் காண்பிக்கப் பட்டப் பிஞ்சு உதடுகளுடன் உயர்த்திக் காண்பிக்கப் பட்ட மார்புகளுடன் ''ஆசோ ஆசோ ஏய் அமிதாப் ஏய் சாருக் ஏய்ய் கமல்ஹாசன் ''என்று கையை இழுத்துக்  கொண்டிருந்தார்கள்

திண்டுக்கல்செல்வியை யாருக்கும் தெரியவில்லை ஒவ்வொரு கட்டிடமாக ஏறி ஏறி இறங்கினேன்.''செத்துப் போயிருக்கும் சார்''என்றான் ஒரு ஆள் அலட்சியமாக.''பதினஞ்சு வருஷம்னு சொல்றீங்க.''

கடைசியில் ஒரு மலையாளப் பெண் தான் சொன்னாள்'நாகர்கோயில் என்றதும் அவளுக்கு என் மேல் கொஞ்சம் பாசம் வந்திருக்கவேண்டும்.அல்லது நான் நிறையப் பணம் கொடுப்பதாகச் சொன்னது.யோசித்து 'நிறைய இங்க்லீஷ் பரயுமோ அ சேச்சி?அச்சன் டாக்டர்னு பறையும் அல்லே ?''

அவள் என்னை அந்தக் கட்டிடத்தின் பின்பக்கம் அழைத்துப் போனாள்.பாதையெங்கும் சாக்கடைகள் பொங்கி வழிந்துகொண்டிருக்க அவற்றைத் தாண்டித் தாண்டிப் போனோம்.''யாரானு அது உங்களுக்கு?ரிலேடிவோ?''
கட்டிடங்களுக்குப் பின்னால் வரிசையாக குடிசைவீடுகள் இருந்தன ..வாசலில் கிடந்த கயிற்றுக் கட்டில்களில் நிறைய கிழவிகள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.சிலர் புகைத்துக் கொண்டிருக்க நிறைய அரவாணிகளையும் அங்கு பார்த்தேன்.அவர்கள் என்னை வெறுப்புடன் பார்த்தார்கள்.கொசுக்கள் ஒரு மேகம் போல எங்களைப் பின்தொடர்ந்துவந்தன.நான் அவற்றை அறைந்து கொண்டே அவளைப் பின்தொடர்ந்து போனேன்.மலையாளப் பெண் மூக்கைச் சுளித்துக் கொண்டே வந்தாள்.அவள் வாழும் நரகத்தைவிட கொடிய நரகம் ஒன்று இருக்கமுடியும் என நான் அதுவரை எண்ணியிருக்கவில்லை

கடைசியாய் அவளொரு குடிசையின் முன்பு நிற்பதற்குள் நான் சலித்திருந்தேன்..திரும்பிவிடலாம் என்று சொல்ல வாய் எடுக்கும் முன்பு அவள் நின்று ''போய் நோக்கு .இதானோ நீங்க தேடி வந்த ஆளுன்னு''

நான் தயக்கமாய் அவளைத் திரும்பிப் பார்க்க ''போய்நோக்கு..போ...சேச்சி அசுகத்திலானு''என்றாள்.நான் குடிசையை மூடியிருந்த சாக்குத் திரையை விலக்கி உள்ளே பார்த்தேன்.சட்டென்று ஒரு அழுகிய நாற்றம் என்னை வந்து அடைந்தது.நெடுநாளாய் மூத்திரமும் மலமும் சீழும் கலந்த நாற்றம் அது.மூக்கை கர்சீப்பால் மூடிக் கொண்டு உள்ளே பார்த்தேன்.மிகச் சிறிய அந்தக் குடிசையில் ஓரத்தில் ஒற்றை மஞ்சள் விளக்கினடியில் ஒரு கயிற்றுக் கட்டிலில் அவள் படுத்திருந்தாள்.உடம்பில் இருந்த தசைஎல்லாவற்றையும் உருக்கி யாரோ உரித்து எடுத்துவிட்டார்போல குழிவிழுந்த கண்களுடன் தலைமுடி எல்லாம் உதிர்ந்து சருமம் முழுவதும் பச்சையாய் பூசணம் போல பூத்து ஒரு குழந்தையைப் போல ஒடுங்கி யாரோ ஒருவர்.....நிச்சயம் அவள் இல்லை என்றே முதலில் நினைத்தேன்.இது யாரோ ஒரு சாகக் கிடக்கும் சீக்குக் கிழவி .

எனக்கு சட்டென்று அந்த மலையாளப் பெண் மேல் கோபம வந்தது.இவள் ஏன் இங்கு என்னைக் கூட்டிவந்தாள்?என்று எரிச்சலுடன் திரும்பும்போது தான் கட்டிலில் கிடந்த உருவம் அசைந்து ''கோன்?"'என்றது
நான் அப்படியே ஆணி அடித்தாற்போல் உறைந்தேன்.அந்தக் குரல் ?அப்படி இருக்குமா?இருக்கக் கூடுமா?
நான் திரும்பி ஒரே ஒரு நிமிடம்தான் அவள் கண்களைப் பார்த்தேன் அந்தக் கணத்தை என்னால் வாழ்வில் மறக்கவே முடியாது.அடிவயிற்றில் யாரோ திடீரென்று குத்தினார் போல வலியுடன் என் போதத்தில் ஒரு துளை விழுந்த தருணம் .அது அவள்தான்.எல்லாம் அழிந்து போயிருந்தாலும் சட் சட்டென்று கனன்றுபற்றிக் கொள்ளும் அதே அதே கண்கள்தான்.
''யாரு?""என்று மறுபடியும் அவள் கேட்க நான் சட்டென்று அந்தக் கண்கள் என்னைக் கண்டு பற்றிக் கொள்ளும் முன்பு பதறி விலகி வெளியே மூச்சிரைக்க ஓடிவந்தேன்.
வெளியில் நின்றிருந்த அந்தப் பெண் பான் பராக்கை வாயிலிருந்து துப்பிவிட்டு ''கண்டோ?இதானோ அது?"'என
நான் அவசரமாய் ''இதில்லை இதில்லை ''என்றேன் ,கைகள் நடுங்க குரல் நடுங்க கண்ணீர் வழிய ''இதில்லை இதில்லை''என்றேன் மறுபடியும் ''போவோம் போவோம்''
அந்தப் பெண் என்னை நெருங்கி ஒருகணம் உற்றுப் பார்த்தாள். ஒரு இகழ்ச்சியான சிரிப்பு மெல்ல அவள் உதடுகளில் படர்ந்தது.மீண்டுமொரு தடவை கீழே துப்பிவிட்டு ''செ...ரி....''என்றாள்.

Saturday, August 13, 2011

கோடு


எல்லா உறவுகளிலும்
இதற்கு மேல் வராதே
என்ற அறிவிப்பில்
நான் முட்டி நிற்கிறேன்
பல நேரங்களில்
புழக் கடையோடு
நிறுத்தப் படுகிறேன் .
சில நேரங்களில்
வாசற்படி வரை
செல்வதுண்டு.
மிகச் சில சமயங்களில்
கூடம் வரை
அனுமதித்து
குடிக்க ஏதாவது தருவதுண்டு .
ஆனால் எவர் வீட்டு
அடுக்களையிலும்
நான் அனுமதிக்கப் பட்டதில்லை .
படுக்கை அறையை
சிந்திக்கவே விடுவதில்லை .

மிக எளிதாக
ஒரு தேய்ந்த சொல்லில்
கடினமாகும் பார்வையில்
சட்டென்று இறுகும் புன்னகையில்
அவசரமாகத் துண்டிக்கப் படும்
தொலைபேசியழைப்பில்
எனக்கு செய்தி உணர்த்தப்பட்டுவிடும்
சட்டென்று சாத்தப் பட்டுவிடும்
இக் கதவுகளைப்
புரிந்துகொள்ள இயலாமல்
யுகங்களாய்
நீட்டிய கையில்
துடிக்கும் இருதயத்தோடு
அங்கேயே நின்றுகொண்டிருப்பதுண்டு

ஆனால் எல்லோரும்
தங்கள் எல்லைகளை விட்டு
படி இறங்கி வெளியேறுகையில்
தவறாது என்னைத் தேடுகிறார்கள் ....

அவர்கள் என்னிடம்
எதிர்பார்ப்பது
நட்பை அல்ல,
ஒரு நாய்க்குட்டியின் விசுவாசத்தை
என்று அறிந்துகொள்ள
நான் நிறைய
அழவேண்டியிருந்தது

Friday, August 12, 2011

பிடி

அன்றைய
கடைசி வாடிக்கையாளன் இயங்க
காலகட்டி படுத்திருந்தாள் சிறுமி
அப்போதுதான்
உயரத் தொடங்கியிருந்த
மார் மேடுகளைக்
குதறிக் கொண்டிருந்தான் அவன்

வந்தவனின் வியர்வை நாற்றம்
படுக்கையின் முடை நாற்றம்
வெயில் காணாத் தீட்டுத் துணிகள்
அறையில் புழுங்கும் நாற்றம் ...

நாற்ற ஜீவன்களை
உயரத்து ஜன்னலின்
கம்பிகளை விலக்கி
மெல்ல
எட்டிப் பார்க்கிறது நிலா

கிராமத்தில்
கூரை வழியே கசியும்
பழைய நிலவா இது
என்று வியக்கிறாள் சிறுமி


அந்த அறையில்
ஒரு ஜன்னலும்
அதற்கு வெளியே
ஒரு நிலவும்
இல்லாவிடில்
அவள் என்றோ இறந்திருக்கக் கூடும்

Tuesday, August 2, 2011

கண்ணி 8

ஒருநாள் மாலை சாமியைத் தேடிப் போன போது அவர் வழக்கமான இடத்தில் இல்லை.சோழ தேசத்து தாசி ''சாமியோட குடும்பம் வந்திருக்கு கோயிலுக்குள்ள போய்ப் பாரு''என்றாள்.

கோயில் முழுக்கத் தேடி அவரை குளத்துக்கு எதிரே இருந்த நந்தவனத்தில் இருந்த மண்டபத்தில் கண்டு பிடித்தேன்.அந்த இடத்துக்கு அதிகம் பேர் வர மாட்டார்கள்.தெரியாது.சுப்பிரமணியர் சந்நிதியைச் சுற்றிக் கொண்டு வரவேண்டும்.குளத்தில் பூணூலை இழுத்து இழுத்துக் குளித்துக் கொண்டிருந்த அய்யர் ''அங்கெல்லாம் போகக் கூடாது''என்றார்.பிறகு உற்றுப் பார்த்து ''பேப்பர் காரர் மவனா போ போ இந்த வயசுப் பிள்ளைங்க நோர்னாட்டியம் தாங்கலை.,இங்கேயே எல்லா சங்கதியையும் முடிச்சுடுதுங்க..சனியனுங்க..அதான் சொன்னேன் நீ போ'''

சாமி மண்டபத்தில் சப்பணமிட்டு அமர்ந்து கொண்டு எதுவோ தட்டிலிருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.பக்கத்தில் இரண்டு பெண்கள் உட்கார்ந்திருந்தனர்.இளவயது பெண் தூக்குச் சட்டியில் இருந்து பரிமாறிக் கொண்டிருந்தாள்.சத்தம் கேட்டு ஏறிட்டு பார்த்து சாமி ''அட வந்துட்டியா..பருப்புச் சோறு தின்னறியாடே.கூட வடம் அதிரசம் சக்கரப் பொங்கல் கூட உண்டு''
நான் தயங்கி நின்றேன்.முதிய பெண் என்னைப் பார்க்காமல் ''நீங்க சாப்பிடுங்க முதல்ல""என்றாள் சற்று கடுப்புடன்.சிறிய பெண்ணின் முகம் கண்கள் யாவும் சிறுத்து சமீபத்தில் அழுதது போல சிவந்திருந்தது.

நான் நிலையை உணர்ந்து ''இல்லை சாமி நான் பூசை பார்த்திட்டு வரேன்'\..நீங்க சாப்பிடுங்க'என்று விலகினேன்

அப்படியே அங்கிருந்து காசி லிங்கத்துக்கு அருகே வந்து அமர்ந்திருந்தேன்.குழந்தைகள் சுற்றுப் பிரகாரத்தில் சத்தமிட்டுக் கொண்டே ஓடுவதை ''ஏய்ய்மெதுவா மெதுவா'' என்று அவர்களின் அம்மாக்கள் சேலை சரசரக்க துரத்திக் கொண்டு நடப்பதை, பரீட்சைக்குப் படிக்கும் மாணவர்களை,நெற்றியில் திருநீறும் முழுக்கைச் சட்டையும் புதிய வாட்சுமாய் இருந்த புதுமாப்பிளைகளோடு நெருங்கி அமர்ந்து ரகசியம் பேசும் புதுத்தாலிப் பெண்களை, கழுத்து வலிக்க சிற்பங்களை வியக்கும் சுற்றுலாப் பயணிகளை எல்லோரையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தேன்.ஆறுமுகன் சந்நிதியில் ஒருவர் உரத்த குரலில் திருப்புகழ் பாடிக் கொண்டிருந்தார்.

சண்முகத்தோடு அந்தப் பகுதிக்கு அடிக்கடி வருவேன்.பெரும்பாலும் வெளியூரிலிருந்து வரும் புதிய நண்பர்களோடு ஒரு வழிகாட்டி போல..அவர்கள் எல்லா சிற்பங்களையும் வாய்பிளந்து பார்த்துக் கொண்டே வருவார்கள்.ரதி மன்மதன் சிற்பம் பார்த்து அரண்டு போவார்கள்.யாரும் பார்க்காத போது ரதியின் விறைத்து நிற்கும் கல்முலைகளைத் தடவிப் பார்த்து ''இப்படில்லாம் நெசத்துக்குமே பொம்பிளங்களுக்கு நிக்குமா மக்கா''என்று வியப்பார்கள்.சண்முகம் ''அவளுக்கு நின்னாலும் உனக்கு நிக்காதே என்ன செய்வே நீ?..ஒலைல போற ஓணான மாதிரி சாமான வச்சுட்டு..நீ ஏறி வரதுக்குள்ள அவ ஊறிப போய்டுவாளே''என்று சிரிப்பான்.அவர்களுக்கு ஒரு க்ளைமாக்ஸ் காட்சி போல ரகசியமாக அந்த சிலையைக் கடைசியாய் காண்பிப்போம்.பாவாடையைத் தூக்கிக் காண்பித்துக் கொண்டு ஒரு பெண்ணின் சிலை.லஜ்ஜா தேவி சிலை என்று சாமி ஒருதடவை சொன்னார்.லஜ்ஜை என்றால் வெட்கம் அல்லவா..இப்படி வெட்கமே இல்லாத சிலையை ஏன் கோயிலுக்குள் வைத்திருக்கிறார்கள் என்று கேட்டேன்.''நீ மதுரைக்குப் போய்ப் பாரு மேற்குக் கோபுரத்தில இதைவிட வெட்கம்போன சிலை எல்லாம் இருக்கு ''என்றார்.


எனக்கு பருப்புச் சோறு என்றால் ரொம்பப் பிடிக்கும்.அம்மா நன்றாக செய்வாள்.பருப்புச் சோறு,உழுந்தங்களி.சினை இட்லி,தேங்காய்த் திரட்டு, காரத் தட்டை இதெல்லாம் அவளதுகைக்கு நன்றாக வரும்.சிறுவனாக இருந்த போது ஒவ்வொரு சனிக் கிழமையும் கூடத்தில் தனி அடுப்புவைத்து செய்துதருவாள்.ஏதோ ஒரு கட்டத்தில் சிவ தீட்சை எல்லாம் வாங்கிக் கொண்டு தீட்டு துப்புரவு என்று சிடுசிடுப்பவளாக மாறி விலகிப் போனாள்.எனக்கு திடீரென்று அவற்றை எல்லாம் சாப்பிடவேண்டும் போல இருந்தது.பருப்புச் சோறு பரிமாறும் சாமியாரின் மனைவி நினைவு வந்தது.பெரிய மார்பும் பெரிய இடுப்பும் எப்போதும் கோபத்தாலோ வேறு காரணத்தாலோ சிவந்திருக்கும் முகமும்..கோனார் வீட்டில் கட்டியிருக்கும் வெளிநாட்டுப் பசுவை நினைவுபடுத்தும் உருவம்.சாமி ஏன் இவளை விட்டுவிட்டு வந்தார்?கொஞ்சம் பைத்தியம்தான் இந்த ஆள் என்று நினைத்துக் கொண்டேன்.

ஒலிப்பெருக்கியிலிருந்து மெலிய நாகஸ்வர ஓசை தவழ்ந்து வந்துகொண்டிருக்க ஒரு சிறு பெண் கிழிசல் பாவாடையுடன் இடுப்பில் இறுக்கிய தூக்குச் சட்டியுடன் ரகசியமாய் வந்து ''அண்ணே முறுக்கு ரவா லட்டு வேணுமான்னே வீட்டில அம்மா செஞ்சுது''நான் வாங்கிக் கொண்டிருக்கையிலேயே கோயில் வாட்ச் மேன் கையில் கம்பைத் தரையில் தட்டிக் கொண்டே ''ஏய் இங்க விக்க்கக் கூடாதுன்னு சொன்னேன்லா ''என வர சிறு முலைகள் துள்ள ஓடிப போனாள்.

சற்று நேரத்தில் சாமி அந்தப் பெண்கள் தொடர வந்தார்.என்னைப் பார்த்ததும் நின்று ''சரி நீங்க போங்க'

அவர்கள் நின்று அவரையே பார்த்துக் கொண்டிருக்க அந்த சிறு பெண்ணின் உதடு துடித்தது.சாமி கண்களை விலக்கிக்கொண்டு ''லெட்சுமி இவளைக் கூட்டிப் போ '''என்றார்.
லட்சுமி என்று நான் சொல்லிப் பார்த்துக் கொண்டேன்.சரியான பெயர்தான்.

அவர்கள் மிகுந்த தயக்கத்துடன் திரும்பித் திரும்பிப் பார்த்தவாறே போனார்கள்.
சாமி ''ஸ்ஸ்ஸ் என்றபடியே அமர்ந்தார்.முகம் வாட்டமுற்றிருந்தது

சற்றுநேரம் இருவருமே எதுவும் பேசிக் கொள்ளவில்லை.பின்னர் அவராகவே ''அவளுக்குக் கல்யாணம் வச்சிருக்கு''என்றார்.
இன்னும் கொஞ்சம் மௌனம். பிறகு ''புழுவா இருக்கறவரை கூட்டிலே இருக்கலாம்.ஒருதடவை பறந்து பார்த்து வானம் எதுன்னு தெரிஞ்சுட்டா பிற்பாடு எப்படி இருக்கறது?''என்றார்..விளக்குவார் என்று எதிர்பார்த்தேன்.சட்டென்று ''இன்னிக்கு ராத்திரி ஒரு இடத்துக்குப் போவோமாடே''என்றார்.

அன்றிரவுதான் என்னை அம்மநாதர் கோயிலுக்கு அழைத்துப் போனார்.அது தாமிரபரணிக் கரையில் இருந்த ஒரு பாழடைந்த கோயில்.அம்பாசமுத்திரம் போகும் வழியில் இருந்தது.ராஜராஜ சோழன் காலத்துக் கோயில்.அந்த ஊரில்  உள்ள மற்ற கோயில்கள் எல்லாம் நன்றாக இருக்க இந்தக் கோயில் மட்டுமே அப்படி இருந்தது.அங்கு நிறைய பாம்புகள் இருப்பதாக உலவிய வதந்தியும் சிலர் அதைப் பாம்புக் கோயில் என்று அழைத்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்.அங்கு முன்பு பூசை செய்த பூசாரி ஒருவர் ஏனோ அந்தக் கோயில் முழுவதுமே பாம்ம்புகளை படம் படமாக வரைந்துவைத்திருந்தார்.பகலிலேயே யாரும் போகஅஞ்சும் இடம்.அங்கு ஐந்து தலை நாகம் ஒன்று உண்டு என்று புரளி உண்டு.சாமியிடம் கேட்டதற்கு ''இல்லை இரண்டு தலைதான்""என்றார்.

ஒரு நீண்ட எவரடி பித்தளை டார்ச்சுடன் பாலத்து நிறுத்தத்தில் இறங்கிய எங்களை கண்டக்டர் சந்தேகமாக உற்றுப் பார்த்தான்.

அன்று முழுநிலவு என்பதைப் பிறகே உணர்ந்தேன்.ஆறு ஒரு வெள்ளி நூல் போல் ஓடிக கொண்டிருந்தது.தூரத்தில் எங்கோ கிளிகள் கெக்கலி இட்டுக் கொண்டிருப்பது கேட்டது.வெகுதொலைவில் ராமர் கோயிலில் இருந்து அர்த்த சாம பூஜைக்கான மணி ஒலி ஒரு முறை கேட்டு தேய்ந்தது.காலடியில் ஆற்று மணல் சப்தமிட நாங்கள் ஆற்றுக்குள் இறங்கினோம்.காற்று முழுவதும் மருக் கொழுந்து வாசனை பலமாக இருந்தது.லேசாகத் தூறல் போட்டது.ஆனால் மேக மூட்டம் இல்லை.ஆற்றின் அந்தக் கரையில் இருந்து வினோத ஒலிகள ஆற்று நீரால் மழுப்பப் பட்டு மிதந்து வந்தன.

சாமி கரையில் ஒரு இடததில் என்ன உட்காரச் சொன்னார்..பிறகு தனது துணிகள் எல்லாவற்றையும் கழற்றிவைத்துவிட்டு நிர்வாணமாக ஆற்றினுள் இறங்கினார்.அவர் எவ்வளவு வெண்மையாக இருந்தார் என அப்போதுதான் பார்த்தேன்.நான் குளிரில் வெடவெடவென்று நடுங்கிக் கொண்டிருந்தேன்.ஆனால் அவருக்கு குளிர்வதாகவே தெரியவில்லை.நிதானமாய் குடைந்து குடைந்து நீராடிக் கொண்டிருந்தார்.நான் அவரது இறுகிய உடம்பையே வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.இழைப்புளியால் வெட்டினார் போன்று கூரிய கோணங்களுடன் முறுகிய உடல்.அவர் சத்தமே இல்லாது ஒரு சிறு பறவை போல் குளிப்பதை எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருந்தேனோ தெரியவில்லை.சற்றுநேரம் கழிந்தபிறகே என்னருகில் வேறொரு ஆள் இருப்பதை உணர்ந்து சட்டென்று பதறி திரும்பினேன்.

ஒரு பெண்.

காவி சேலையில் என்னையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்,சத்தமே இல்லாமல் அவர் எப்படி அங்கு வந்தார் என்று ஒருகணம் வியந்தேன்.அவருக்கு முப்பதுக்கும் ஐம்பதுக்கும் நடுவில் எந்த வயதும் இருக்கலாம்.தலை முடி முழுவதும் சடை சடையாய் தோளில் முறுகிக் கிடந்தது.ஆனால் முகத்தில் எந்த சுருக்கமும் இல்லை.அவருக்கு பூனைக் கண்கள் என்று முதலில் நான் நினைத்தேன்.அல்லது நிலவொளியில் அந்தக் கண்கள் அவ்விதம் மினுங்குகின்றவ்ன எனத் தெரியவில்லை.நதிப் பச்சையின் வாசத்தையும் தாண்டி அவரிடமிருந்து ஏதோ ஒரு வாசனை எழும்பி வந்தது.அவர் ஒரே சமயத்தில் என்னைப் பார்ப்பது போலவும் எனக்குப் பின்னால் இருக்கிற வேறு யாரையோ பார்ப்பது போலவும் இருக்க நான் குழப்பமடைந்து பின்வாங்கினேன்.அப்போது  சாமி ஆற்றிலிருந்து நீர்சொட்ட எழுந்துவந்தார்.பெண்மணி என்னிடமிருந்து தன் பார்வையை விலக்கிக் கொண்டு சாமியைப் பார்த்து சட்டென்று திரும்பினார்.சாதரணமான மனிதர்கள் கழுத்தைத் திருப்ப்பிப் பார்ப்பது போல இல்லை அது.ஏனோ ஒரு பாம்பு படத்தைத் திருப்பி பார்ப்பது போல அது இருந்தது.

நான் திடீரென்று மிகுந்த குளிராகவும் பயமாகவும் உணர்ந்தேன்.சாமி என்னைப் பார்த்துத் திரும்பி ''பயப்படாதே''என்றார் பிறகு அவள் அருகே நெருங்கி அவள் கைகளைப் பற்றிக் கொண்டார்.இருவரும் அப்படியே கொஞ்ச நேரம் நின்றிருந்தார்கள்.பிறகு அந்தப் பெண் கைகளை விலக்கிவிட்டு தன் ஆடைகளைக் களைய ஆரம்பித்தார்.சற்று நேரத்தில் எல்லா உடையையும் களைந்து சாமியின் கையில் கொடுத்து பிறந்த மேனியாக நதிக கரையில் நின்றார்.நான் மூச்சுவிட மறந்து அப்படியே ஒடுங்கி நின்றிருந்தேன்.அவர் மூககுத்தி அணிந்திருந்தாள்.ஏனோ அது அவர் ஆடையைக் கழற்றும்வரையில் என் கண்ணில் படவில்லை.கழுத்தில் ஒரு ஸ்படிகமலை .இரண்டும் நிலவொளியில் கூர்ந்து கூர்ந்து மின்னின.நிலவு ஏற ஏற அவர் கண்களின் பிரகாசம் கூடிக் கொண்டே இருந்தது.அவர் மார்புகள் நான் கோயிலில் பார்த்த ரதியின் முலைகளைப் போலவே திமிர்த்து இருந்தன.அவரது உடலே இயற்கையாய் வளர்ந்தது போல இல்லாமல் செய்யப் பட்டது போல் இருந்தது.அவரது சருமத்தின் நிறம் வெண்மையாக மட்டும் இருக்காவிட்டால் அவரை ஒரு சிலை என்றே சொல்லிவிடலாம்.மார்புகள் முடிந்து இறங்கும் இடத்தில் சிலைகளுக்கு இருப்பது போலவே சிறு குழி இருந்தது.மெல்லிய ரோம வகிடுகள் ஒரு பெரிய கருஞ்சுழி போல கிடந்த அவரது நாபியில் இறங்கித் தொலைந்தன.என்னால் அதற்கு மேல் பார்க்கவே முடியவில்லை.பார்த்தால் இறந்துவிடுவேன் என்பது போல உணர்ந்தேன்.அவர் நிதானமாய் என்னைக் கடந்து ஆற்றில் இறங்கினார்.இறங்கும்போது திரும்பி என்னைப் பார்த்துப் புன்னகைத்தார்.அதே பாம்புத் திரும்பல் ...பவளக் கோலிகள் போல சட்டென்று மினுங்கி மங்கும் கண்கள் ..

நதியில் மூழ்கி எழுந்ததும் ஒரு கணம் அவரது புன்னகை ஒரு தீச்சுவாலை போல பாம்பின் நாவு போல நீண்டு என்னைத் தீண்டி பின்வாங்கியது.




LinkWithin

Related Posts with Thumbnails