Friday, December 30, 2011

கன்னித் திரை

அவிழ்க்க 
அவிழ்க்க 
அவிழா புதிராய் 
அவள் 
இறுகிக் கொண்டே இருந்தாள்

கடைசி முடிச்சு 
என்று நான் 
முட்டியதும் 
கடைசி யல்ல 
என்றறிந்தபோது அயர்ந்து போனேன் 

காய்களை நகர்த்துகிறவன்
நானல்ல 
என்று எந்தக் கணம் உணர்ந்தேன்?
என்று தெரியவில்லை.

ஆனால் 
உணரும்போது 
முற்றிலுமாக 
நான் 
சிக்கிக் கொண்டிருந்தேன்.

கால் பாவ 
இடம் தராத புதை மணல்...
வழி திரும்பா 
அடர் வனம்..
கபால மாலை 
அணிந்த கொற்றவை..


மழை நாள் மதியத்தில் 
உறவு முடிந்ததும் 
ஆடை அணிந்து கொண்டிருந்தவளை 
அச்சத்துடன் பார்த்தேன் 
யார் இவள்?


அவள் 
என் பதற்றத்தைக் 
கண்ணாடியில் கவனித்துப் 
புன்னகைத்தாள் 

வெறும் கன்னித்திரை என நினைத்தாயோ 
என்னை ?
என்பது போல...

Monday, December 26, 2011

உள்ளின் உள்

மரமேறி விளையாட்டில் 
உச்சிப் பொந்தில்
ஒளிந்திருந்த 
ஆந்தைக் குஞ்சைப் பிடித்துவிட்டோம் 
சத்தம் மட்டும் கேட்டு 
வெளியே வந்த 
வெளிச்சக் குருடு ஆந்தை 
தடுமாறித் தவித்தது 
பயத்தில் கிரீச்சிட்டது.
ஆந்தை 
என்று கத்தினோம் 
எல்லோரும்அருவருப்பாய் 


சேகர் அதைக் கொன்றுவிடலாம் 
என்றான் 
அலெக்ஸ் அதை ஆமோதித்தான் 
ஆந்தை சாத்தானின் பறவை 
என்ற போது அவன் உடல் நடுங்கியது 
கருப்பசாமி 
ஆந்தையை சுட்டுத் திங்கலாமா 
என்று சந்தேகம் எழுப்பினான் 
அம்பிக்கு அது பிடிக்கவில்லை 
உவ்வே என்று எருக்களித்தான் 

கூட ஏறிவந்த 
தனலக்ஷ்மி மட்டும் '
''ச்சே பாவம் குழந்தை"'என்ற படி 
பாவாடையில் பொதிந்து 
ஆதூரமாய்'
மீண்டும் கூட்டுக்குள்ளேயே
வைத்தாள் 



எப்போதுமே 
அவள் அம்மாவாகவே இருந்தாள்
என்று சொன்னால்
ஆணியச் சிந்தனை 
என்பீர்களானால்
சொல்லவில்லை.

Thursday, December 8, 2011

ஆணின் கண்கள் ..

பில்லியனில் இருபக்கமும் 
கால் விரித்து 
ஆரோகணிக்கும் யுவதிகள் 
இன்னமும் எலாஸ்டிக் நாடா 
இடுப்பை அழுத்த 
உள்பாவாடை அணிபவர்கள் 
குத்த வைத்து 
முழங்கால் பளிச்சிட 
பத்து தேய்க்கும் வேலைக் காரிகள் 
ஜன்னலைத் திறந்து 
வைத்துக் கொண்டே உடை மாற்றுபவர்கள் 
உதட்டின் மீது வளரும் 
மெல்லிய பூனை மயிருக்கு 
க்ரீம் தடவுகிரவர்கள் 
ரோமப் பசுவெளி தெரிய 
பஸ் கம்பியை பிடித்துக் கொண்டே 
பிரயாணிக்கும் 
அரைச் சோளி தேவதைகள் 
அலுவல் கூட்டங்களில் 
கால் மீது கால் போட்டு அமர்பவர்கள் 
உள்ளுடை வரை தெரிய 
இறுக்கமாய்
சுரிதார் அணிபவர்கள் 
கால்பந்து மைதானத்தில் 
உப்பு வியர்வை வீச்சத்துடன் 
கடந்து போகிறவர்கள் 
உதடுகளை அடிக்கடி 
நாவால் வருடிக் கொள்கிறவர்கள் 
மார்புச் செயின் எடுத்துக் 
கடித்துக் கொள்கிறவர்கள் 
ரோட்டோரக் கடையில் 
நின்று 
டீ குடிப்பவர்கள் 
ஞாயிற்றுக் கிழமைகளில் 
பேரம் பேசி 
மாமிசம் வாங்குகிறவர்கள் 
துண்டு போர்த்திய 
இரவுடையுடன் 
விலாசம் சொல்கிறவர்கள் 
அது நனைய நனைய 
தண்ணீர் பிடிக்கிறவர்கள் 
மருந்துக் கடையில் 
நாப்கின் வாங்குகிறவர்கள் 
பெரிய தொங்கட்டான் 
அசைய அசையப் பேசுகிறவர்கள் 
ஹோட்டல் வாஷ்பேசினில்
குனிந்து முகம் கழுவுகிறவர்கள் 
கார்ப்பரேசன் கழிவறை வெளியே 
கொலுசுக் கால்களை தேய்த்துக் கழுவுகிறவர்கள் 
துணிக் கடையில் 
உள்ளாடை செக்சனில் நிற்பவர்கள் 
பூப்புனித நீராட்டுவிழாவில் 
புன்சிரிப்புடன் பன்னீர் தெளிப்பவர்கள் 
முதல் இரவுக்கு 
பெண்ணைத் தயார்ப் படுத்துகிறவர்கள் 
குல்பியை உறிஞ்சிச் சாப்பிடுகிறவர்கள் 
டிபன் பாக்ஸில் 
மல்லிகைப் பூ கொண்டு வருகிறவர்கள் 
ரேடியோவுடன் சேர்ந்து பாடுகிறவர்கள் 
கடற்கரைகளில் 
குதிரை மீது சவாரி ஏறுகிறவர்கள் 
நாய்களுடன் 
காலை நடை வருகிறவர்கள் 
பால்கனியில் நின்றுகொண்டு 
தலை கோதுகிறவர்கள் 
கடக்கும் போது 
ஓரக்கண்ணால் பார்க்கிறவர்கள் 
பேசிக் கொண்டிருக்கும்போதே 
ஜாக்கட்டைத் தளர்த்திக் கொள்கிறவர்கள் ..
நெடுநேரம் அலைபேசியில் 
கொஞ்சிக் கொஞ்சிப் பேசுகிறவர்கள் 
குழந்தைகளை உதட்டில் 
முத்தமிடுகிறவர்கள்....


முதிர் யுவனின் 
கனவுகளில் நிறையும் பெண்கள்..





Sunday, November 27, 2011

விலக்கப் பட்ட கனி


மதுக் கோப்பையில் 
மிதக்கிறது 
ஒரு நிணத் துண்டு. 
ஐந்தாங் கிளாஸ் தமிழ்  டீச்சரின் 
பருத்திப் புடவைக்குள் 
விறைத்து நிற்கும் 
இடது முலைப் பொட்டு
விவிலிய வகுப்பெடுத்த 
இளம் துறவியின் 
கீழுதடு 
நண்பனின் அம்மா 
பாத்திரம் கழுவுகையில் 
அசையும் இடுப்புச் சதை 
புடவை மாற்றுகையில் எல்லாம் 
விரியும் 
ராமேஸ்வரி அத்தையின் 
பூனை மயிர் பூத்த தொப்புள்.. 
தடுக்கப் பட்ட பழம் 
நிச்சயமாய் மறப்பதே இல்லை 
அனுமதிக்கப் பட்ட யோனிகளில் கூட 
அதன் சுவடு நகக் குறி போல பதிந்திருக்கிறது 
தொழும் கைகளின் நடுவே கூட 
இருக்கிறது ஆறாவது விரலாய்..
எல்லா விளையாட்டுகளின் 
நடுவிலும் ஓடுகிறது 
இன்னொரு இழையாய் 

இலுப்பூர் பேருந்து நிலையத்தில் 
நேற்று மாலை 
எனக்குத் தடுக்கப் பட்ட கீழுதடைப் பார்த்துப் 
பேசிக் கொண்டிருந்தேன் 
கர்த்தருக்கு ஸ்தோத்திரங்கள் சொல்லி 
விடைபெற்றவுடன் 
பதற்றத்துடன் தேடிக் கண்டடைந்தேன் 
மதுக் கோப்பையில் எப்போதும் 
எனக்காகக் 
கிடக்கும் நிணத் துண்டை ..

Thursday, November 24, 2011

கலைடாஸ்கோப் -1





1.அறுத்துப் பார்த்த 
கணவனின் பிணத்துடன் 
தனியாக நின்றிருந்தாள் அவள் 
ஆம்புலன்சுக்கு காசு இல்லாமல் 
அழுதுகொண்டிருந்தாள்
வளருகில் 
அவள் குழந்தை 
யாரோ வாங்கித் தந்த 
சிகப்பு மிட்டாயைச் சப்பிக் கொண்டிருந்தது 

எல்லா துக்கங்களையும் 
மறக்கடிக்கும் 
சிகப்பு மிட்டாய் ஒன்று 
எனக்கும் தா கடவுளே ..




2.மணல் நதியில்
நீந்தித் திளைக்கிறது மீன்

ஒன்று
அது மீனல்ல
அல்லது
அது நீந்துவது மணல் அல்ல.

ஆனால்
என் கனவில்
ஒன்றல்லது மற்றது
என்பதே கிடையாதே ...


3.பல நேரங்களில்
இல்லாத கதவுகளை
திறக்க முயலும்
குடிகாரனின் முயற்சி போல
ஆகிவிடுகிறது


சிலருடனான உரையாடல் .....


4.நுரை பொங்க
பழுத்த ரொட்டியில்
தடவப் படும்
என் பச்சை ரத்தம்..
உண்டு வளர்த்துக் கொள்
உன் உயிர்த் தசையை ...

5.நீங்கள் 
இறங்கும் போதிருந்த 
அதே ஆறுதான் இது 
ஆனால் 
நீங்கள்... 
இறங்கும் போதிருந்த 
அதே ஆள்தானா?











Sunday, November 20, 2011

பிளாஸ்டிக் புன்னகைகள்

1.அவளது 
சாக்கரின் புன்னகை
மிதக்கும் 
பிளாஸ்டிக் கண்களைத் தாண்டி 
எப்படி 
அவளை நேசிப்பது 
என்பதுதான் 
எனக்கு 
இப்போதிருக்கும் ஒரே பிரச்சினை


2.எங்கிருந்தோ பறந்துவந்து 
ஜன்னல் விளிம்பில்
அமர்ந்துகொண்ட 
பட்டாம்பூச்சியை 
குறைந்தது 
பத்துப் பேராவது
கவிதை செய்திருக்கக் கூடும் 
என்று நினைத்துக் கொண்டேன் 
களங்கமின்மையின் பாவனைகளோடு 
புகைப்படத்துக்கு 
போஸ் தரும் 
குழந்தை நடிகை போல 
இது 
ஒரு தொழில்முறைப் பட்டாம்பூச்சியாகவும் இருக்கக் கூடும் தானே?
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

3.எப்படி இருக்கிறாய்
என்றவள் கேட்டதில் 
இருக்கிறாயா 
என்ற 
கேள்வியும் இருந்ததா?

4நான் இல்லாவிட்டால் 
இறந்துவிடுவேன் 
என்றவளை 
நேற்று தெருவில் பார்த்தேன் 
கையில் சாத்திய குழந்தையோடு..

இறந்தபிறகு 
பிறந்ததா இது?

5.நெடுநாட்களாய் 
உன் குகையில் நீ இருந்தாய் 
என் குகையில் நான் இருந்தேன் 
ஒரு சலிப்பான காலையில் 
ஒரே நேரத்தில் 
தற்செயலாய் வெளியே வந்தோம் 
காலைக் கதிரின
பொன் வெயில்
இருவர் மீதும் படர்ந்தது 

அந்த 
இனிப்புவெளிச்சம் 
மற்றவரிடமிருந்தே வருகிறது 
என்று தவறுதலாக நினைத்துக் கொண்டோம்... 
காதலிக்க ஆரம்பித்துவிட்டோம் ...


Friday, November 18, 2011

கிளையில் பறவை



1.இது எனக்கான பறவை 
என்று குறிவைத்து விட்டான் வேடன் 
இன்றைய இரவுணவு
என்று தனக்குள் சொல்லிக் கொண்டான் 
வழக்கம் போல 
பறந்துகொண்டிருந்தது பறவை 
வேடனின் கண்களையும் 
சுமந்துகொண்டு ....

2..நீங்கள் 
இறங்கும் போதிருந்த 
அதே ஆறுதான் இது 
ஆனால் 
நீங்கள்... 
இறங்கும் போதிருந்த 
அதே ஆள்தானா?

3.முடிவின்மையின் ஆழத்திலிருந்து 
கிளம்பி வந்தது அது 
கிளிஞ்சல்கள் பொறுக்கிக் கொண்டிருந்தவனை 
வா என்றது 
நான் அழுது 
கிளிஞ்சல்கள் அழகாய் இருக்கின்றன என்றேன் 
அது புன்னகைத்து 
உனக்கான கடைசி அழைப்பும் தீர்ந்துவிட்டது 
என்று சொல்லி 
மீண்டும் உள்ளே அமிழ்ந்து கொண்டது
கையிலிருந்த 
கிளிஞ்சல்கள் 
சட்டென்று நெளிந்து புழுக்களாவதை
உணர்ந்தேன் 
ஆனால் வெகு தாமதமாக...
அதற்குள் புழுக்கள் பெருகி 
என்னைத் தின்ன ஆரம்பித்தன

4.மழை
என்று சொல்வதே
மழைக்குச்
சரியாய் இருக்கிறது

5.உடனே 
புறப்பட்டு வந்தால் 
இந்த பட்டாம்பூச்சியைப் பிடித்துவிடலாம் 
ஆனால்...

விடுங்கள்... 
உங்களுக்கும் ஆனைக் கால்...
பாம்புக் கை..




LinkWithin

Related Posts with Thumbnails