Saturday, April 25, 2015

மீட்பு

''அப்பா உலகத்திலேயே அரிதான பட்டாம்பூச்சி எது தெரியுமா ?''
''தெரியாதே ''
''palos verdes peninsula .கலிபோர்நியாவிலே இருக்கு ''
''ம்ம்''என்றான் பிலிப்.
''உலகத்தின் அழகான பட்டாம்பூச்சி எது தெரியுமா ?"'
''தெரியுமே''என்றான் பிலிப் ஒரு புன்னகையுடன்.அவள் கண் விரித்து ''தெரியுமா ?"'
''தெரியுமே .அதன் பெயர் லில்லி ''

லில்லி நாணமுற்று ''போப்பா''என்று அவனை ஆரஞ்சுச் சுளைகள் போன்ற குளிர்ந்த
உதடுகளால் முத்தமிட்டாள் .''banded peacock butterfly.கொடைக்கானல்
மலைகளில் இருக்கு .அங்கே எங்களைக் கூட்டிட்டுப் போவியா ?"'
''நிச்சயமா .அதுசரி உன்னோட தங்கச்சி பட்டாம்பூச்சி எங்கே பொண்ணே ?''
''அவ தூங்கறாப்பா ''என்றவள் நெருங்கி ரகசியமாக அவன் காதில் ''தேவமலர்
தூங்கும்போது குறட்டை விடறாப்பா ''என்றாள்

நேற்று பியூலா காணாமல் போன தேவ மலரின் ஒற்றைக் கொலுசைக் கண்டுபிடித்தாள்
.அது பீரோவில் உட்கார்ந்திருந்த அவளது பாண்டா கரடி பொம்மைக்கு
அணிவிக்கப்பட்டிருந்தது

பியூலா  அதைக் கண்டதும் சுவரோரம் சரிந்து அப்படியே அமர்ந்துவிட்டாள்

உள்ளிருந்து ஓடிவந்த வள்ளியம்மாள் ''ஐயோ ''என்றலற
யாரோ அவளை அதட்டி நிறுத்துவதை பிலிப் படுக்கையிலிருந்து நடுங்கியவன்னமே
கேட்டுக் கொண்டிருந்தான்.

போன் ஒளிர்ந்து ஒளிர்ந்து அணைந்துகொண்டிருப்பதைப் பார்த்தான்.பாய்ந்து
எழுந்து அதை அணைத்தான்
அதைப் பார்த்தாலே பயமாக இருந்தது

''மிஸ்டர் பிலிப் ?"'
''ஆமா நீங்க ?''
பிலிப் ஆபிசிலிருந்து  கிளம்பும் அவசரத்தில்
இருந்தான்.நாளையிலிருந்து கிறித்துமஸ் விடுமுறை தொடங்குகிறது.அந்தப்
பரபரப்பும் மனதில் இருந்தது.

''வந்து உங்க பொண்ணு சாலோம் இண்டர்நேசனல்  ஸ்கூலில் படிக்கிறாங்களா ?"'

அவன் ''ஆமாம் "'என்றான் ''என் பொண்ணுங்க ""

குரல் தயங்கி நின்றது.பின்னணியில் ஆற்றுநீரில் குடம் முழுகுவது போல
குழப்பமான சத்தங்கள் கேட்டன. .பிறகு ''நீங்க ஜி எச் வரை வர முடியுமா ?ஒரு
சிறிய விபத்து ''


''தம்பி மதியமாச்சி எந்திருக்கலியா ''சகாயம் படுக்கையருகில் வந்து
நின்றார்''காலையிலே ஒருதடவை சகாவு கோபாலன் நாயர் வந்துட்டுப் போனார் .நீ
இன்னும் உறங்கிக் கிடக்கறது பாரத்ததும் போயிட்டார் ''என்றவர்
கவிழ்ந்துகிடந்த காலி மதுப் புட்டிகளை  அகற்ற ஆரம்பித்தார் ''அந்த
பள்ளிக் கூடத்து ஓனரைக்  கைது பண்ணிட்டாங்களாம் ''

ஒரு கண எழுச்சிக்குப் பிறகு பிலிப் மிகுந்த வெறுமையாக
உணர்ந்தான்.முடிவேயில்லாது நீண்ட இந்த துக்க இரவின் நடுவில் அந்த நபர்
மீதான வெறுப்பு மட்டுமே கொஞ்சம் சிகப்பாக ஒரு கங்கு
ஒளிர்ந்துகொண்டிருந்தது என்பதை உணர்ந்தான்.இனி என்ன ?இனி என்ன நான் செய்ய
வேண்டும் ?

சாகவு கோபாலன் நாயருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று
தோன்றியது.பிறகு...பிறகு செத்துப் போய்விடலாம்.

முணுக்கென்று கண்ணீர் புறப்பட்டு வழிந்தது .எவ்வளவு கண்ணீர்!ஊற்று மாதிரி
புறப்பட்டு வந்துகொண்டே இருக்கிறது

எழுந்து முகத்தைக் கழுவிவிட்டு சன்னல்  வழியே எட்டிப் பார்த்தான்.வாசலில்
இன்னும் பிளாஸ்டிக் சேர்கள் கிடந்தன.வெயில் அதன் மீது தூசி போல
புரண்டுகொண்டிருந்தது வாசலுக்கு நேர் எதிரே கருப்பு எழுத்துக்களில்
''அஞ்சலி!எங்கள் இதயத்துக் கண்மணிகளுக்கு ..லில்லி மற்றும் தேவமலர்''என்று போட்டிருந்தது

பிலிப் நடுங்கி சகாயத்தை அழைத்து ''அந்த போஸ்டரைக்  கிழியும்வே  ''என்று கத்தினான்
அவர் ''ரோடெல்லாம் ஒட்டிருக்குது பிலிப்பு ''என்றார்

இதே சகாயம் தான் அன்று ''ரோடெல்லாம் ரத்தம் பிலிப்பு ''என்றார் ''நம்ம
குழந்தைங்களோட ரத்தம் ''

பிலிப் முகத்தைத் திருப்பிக் கொண்டு ''பியூலா எங்கே ''என்றான்
கேட்கும்போதே அதற்கான பதில் அவனுக்குத் தெரிந்திருந்தது ''அவ இன்னும்
நேத்து போட்ட ஊசி மருந்து மயக்கத்திலருந்து வெளியே வரலை ''என்றார் சகாயம்
''டாக்டர் வந்து தொடர்ச்சியா இப்படி ஊசி  போட்டுட்டே இருக்க முடியாதுன்னு
சொல்றார் ''

பிலிப் பேசாது இருந்தான்

''வெளியே வரணும் பிலிப்பு ''என்றார் சகாயம்

பிலிப் சட்டென்று ''என்ன மயித்துக்கு வெளியே வரணும் ?இனி என்னவே இருக்கு
இங்கே ?போரும்வே உம்ம சோலியப் பார்த்துகிட்டு '' என்று கத்தினான்

சட்டென்று ஒரு எதிர்வினை போல அடுக்களையிலிருந்து வள்ளியம்மாளின் ஒப்பாரி எழுந்தது


''மழை பெய்த வாசலிலே மண்ணளையப் பிள்ளையில்ல
தண்ணிக்குப்  போகையிலே தடம் மறிக்கப் பிள்ளையில்ல
கறித்தேங்காய் அரைக்கையிலே கை நீட்டப் பிள்ளையில்ல...''

சகாயத்தின் முகம் விடுபட்டு ''ஏட்டி இப்போ நிறுத்தப் போறியா இல்லியா
''என்று அங்கிருந்தே கத்தினார்

''உனக்கு இங்கனக்குள்ளவேலைக்கு  ஆள் கிடைகல்லைன்னா பாண்டில இருந்து ஆள்
பிடிச்சிட்டு வந்தே..இவ நம்மையும் குழிக்குள்ள ஆக்கிட்டுத்தான் மறுவேலை
பார்ப்பா போலிருக்கு ''

பிலிப் பரபரப்பாய்த் தேடி மேசை டிராயரிடமிருந்து ஐநூறு ரூபாயை எடுத்து
சகாயத்திடம் எறிந்து  ''கடை வரைக்குப் போயிட்டு வாரும்  ''என்றான்.அவர்
வாங்காமல் நிற்கவே '' ''தாயோளி .சொன்ன வேலையைப் பண்ணுவே.என்னால தெருவில
இறங்க ஒக்காது ''என்று கத்தினான்

அவர் அப்போதும் அப்படியே நிற்கவே ''நல்லது .நீரு என்னைக் கொல்லாம விட
மாட்டீரு இல்லையா ''என்று தேடி சட்டையை அணிந்துகொண்டான்.அதன் மீது
முழுக்க வாந்தி வீச்சமடித்து குமட்டியது

கூடத்தைக் கடக்கையில் ப்யூலாவின் அறையில் எட்டிப் பார்த்தான்.அணக்கமே
இல்லை.இருளாய் இருந்தது .இவன் வெளியே கிளம்பியது பார்த்ததும்
வள்ளியம்மாள் ஓடிவந்து ''அய்யா எங்கே போறே ?"

அவன் மீண்டுமொரு முறை ப்யூலாவின் அறையைப் பார்த்து ''முழிச்சாளா ?''

வள்ளியம்மாள் முந்தானையால் முகத்தைத் துடைத்துக் கொண்டு ''காலைல ஒருதடவை
முழிச்சு வள்ளியம்மை குட்டிங்களுக்கு இன்னிக்கு ஸ்கூலுக்கு என்ன
கொடுத்துவிடறதுன்னு  கேட்டா..''என்றவள் மீண்டும் உரத்த குரலெடுத்துப் பாட
ஆரம்பித்தாள்.அவள் கண்களிலிருந்து கண்ணீர் வாய்க்கால்கள் போல வழிந்து
அவளது மார்ச் சட்டையை நனைப்பதைப் பார்த்தான்.


பிலிப்  சற்றுநேரம் அங்கேயே நின்றிருந்தான் .கால்கள் தளர்ந்து
இற்றுவிடுவது போல ஆடின.தலை சுற்றியது.பிறகு வள்ளியம்மாள் அவன் கையில்
இப்போதும் நீட்டிப் பிடித்துக் கொண்டிருந்த ரூபாய் நோட்டைப் பார்த்து
''என்ன வாங்கனுமய்யா ?நான் வாங்கிட்டு வாறன்''

அவன் அதிர்ந்து ''ச்சேச்சே ''என்று மறுத்துவிட்டு இறங்கி நடந்தான்

வெயில் பளீரென்று முகத்தில் அறைந்தது.நல்ல வேளையாக தெருவில் அதிகம்
கூட்டம் இல்லை .அலை உள்வாங்கிவிட்ட கடற்கரை போல இருந்தது இன்று வேலை
நாளாக இருக்கவேண்டும்.வீடுகளில் குழந்தைகள் அரவம் இல்லை.எல்லோரும்
பள்ளிக்குப் போயிருக்கவேண்டும்..பள்ளிக்கு....ஆனால் அவர்கள்
வீட்டுக்கெல்லாம் அலை திரும்ப வரும்.என் வீட்டுக்கு ..ஐயோ...

தெருவெங்கும் சகாயம் சொன்னது போல அஞ்சலி போஸ்டர்கள் சிறிதும் பெரிதுமாக
ஒட்டப்பட்டிருந்தன.பெரும்பாலும் ஒரே புகைப்படம் இந்த புகைப்படங்களை
அவர்கள் எங்கிருந்து பெற்றார்கள் என்று யோசித்தபடியே ஒரு போஸ்டரின் முன்
அவன் நின்றான்.இது அவர்களைப் பற்றி ஒருதடவை செய்திதாளின் சிறுவர்
வாரந்தரி யில் வந்த புகைப்படம் அல்லவா ?அதில் லில்லி பட்டாம்பூச்சிகள்
பற்றி எழுதியிருந்த ஒரு சிறிய கட்டுரையும் அதற்கு தேவமலர் வரைந்திருந்த
சித்திரங்களும் வந்திருந்தது லில்லி -தேவ மலர்... தேவனின்
பட்டாம்பூச்சிகள்

தேவனின் பட்டாம்பூச்சிகள்.....

''தேவனே உங்களது கரங்களில் இந்த ஆன்மாவை ஒப்படைக்கிறோம் பிதாவே.பூமியின்
மீது அவர்கள் இருந்த சிறிய வாழ்வில் உமது கிருபையை அவர்கள் மீது
செலுத்தினீர்கள்.அதற்காக எங்களது நன்றிகள்.இப்போது உமது  சித்தத்தால்
இவர்களை உம்மோடு சேர்த்துக் கொண்டீர்கள்.நித்திய சமாதானமும் அமைதியும்
உள்ள உமது பரலோக ராஜ்யத்தில் இவர்களை சேர்த்துக் கொள்ளும்படி உம்மை
மன்றாடி மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம் பிதாவே.இந்த ஆன்மாக்கள்தங்களை
அறியாது  செய்திருக்கக் கூடிய சிறிய சிறிய பாவங்களைக் கூட மன்னித்து
.....''

''பாவங்கள் !மயிரு!''என்று கத்திய பிலிப்பை யாரோ பின்னிருந்து அமைதிப்
படுத்தினார்கள்
ஐரெனியஸ் பாதிரியார் ஒருமுறை கண்ணை உயர்த்திப் பார்த்துவிட்டுத் தொடர்ந்தார்

''மண்ணிலிருந்து உருவாகிய எதுவும் மண்ணுக்குத் திரும்புகிறது  எனினும்
எங்கள் ஆன்மா துயரம் தாங்காமல் அலைப்புறுகிறது .அதைத் தாங்கும்
பெலத்தையும் ஞானத்தையும் எங்களுக்குத் தாரும் கர்த்தாவே ...''

பிலிப்புக்கு இப்போது யோசிக்க வியப்பாக இருந்தது.நான் இவற்றையெல்லாம்
எப்படி கடந்தேன் ?ஏறக்குறைய ஒரு கனவு மாதிரி இருந்தது

ஆசுபத்திரிக்கு அவனேதான் மோட்டார் சைக்கிளை செலுத்திக் கொண்டு
சென்றான்.அடுத்த தெருவில் இருந்த தம்பிக்கு மட்டும் போன் செய்து
சொன்னான்.அவன் பதறியபோது கூட ''ஒன்னுமில்லடா சின்ன விபத்துன்னுதான்
சொல்றாங்க.அங்கே நம்ம அருள்ராஜன் தானே பார்மசிஸ்ட்டா இருக்கான் ?அவனுக்கு
நம்ம லில்லியை நல்லாத் தெரியுமே ''

போகும்போதே ஒருமுறை பள்ளி எண்ணுக்கு போன்செய்து பார்த்தான். ரிங் போய்க்
கொண்டே இருந்தது


நன்றாக நினைவிருக்கிறது.நகரம் ஜகஜோதியாக
ஒளிர்ந்துகொண்டிருந்தது.மரங்களில்  எல்லாம் நட்சத்திரங்கள் பூத்தது போல
வண்ண விளக்குகள் உதித்து விழுதுகளாய்ப் பூமி நோக்கி
வந்துகொண்டிருந்தன..ட்ராபிக் ஜாமாகி வாகன வரிசை நின்று நின்று
ஊர்ந்துகொண்டிருந்தது . ஆற்றுப் பாலத்தில் அது நெடு நேரம்
நின்றுகொண்டிருந்தது.ஆற்று நீரில் விளக்குகள் கரைந்ந்து சரிகை போல
படபடத்தன.அந்தோனியார் கோவிலிலிருந்து மாலை பூசைக்கான மணி எழுந்து வந்தது
பக்கத்தில் வந்து நின்ற பைக் காரர் அவனை நோக்கிப் புன்னகைத்தார் .இவனும்
புன்னகைத்தான் 'ஆ !புது வருஷம்  முடியறவரைக்கும் இந்த ரோட்டில
இப்படித்தான் இருக்கும்.இந்த நாற்கர சாலையை போட்டுத் தீரானுங்க இல்லை ''

''ஆமா.ஒரு மாநிலத் தலை நகரத்துக்கு பிச்சைக்காரன் கோவணம் மாதிரி இந்த
ஒத்தை ரோட்டை வச்சிக்கிட்டு உயிரை வாங்கறாங்க .இந்தா இருக்கிற
நாரோயிலுக்கு காலைலயும் அந்தியிலயும் போக இரண்டு மணிக் கூறாவுது ''
இன்னொருவர் ''ட்ராபிக் நெரிசல் மட்டுமா ?ஆக்ஸிடண்டு ..நித்தம்  ஒரு ஆக்ஸிடண்டு ..''

பிலிப் சப்பாத்துப் பாலத்தில் பூச்சி போல நடந்து செல்கிற மனிதர்களைப்
பார்த்தான்.மீன் சந்தைக்குப் போய் வரச் சொன்னாள் பியூலா.பண்டிகைக் காலம்
.எல்லாமே குதிரை விலையாயிருக்கும்.ஆனால் மீன் இல்லாவிட்டால் தேவ மலருக்கு
சாப்பாடு இறங்காது..

இன்னொருவர் தொடர்ந்து ''இன்னிக்கு கூட ஒரு ஆக்ஸிடண்டு ''என்றார் ''இரண்டு
பள்ளிக் குழந்தைகள் ரோட்டைக் கடக்கையில்  கேரளா பஸ்லே மாட்டி ....''

மற்றவர் ''அய்யோ ''என்றார்


பிலிப் அவசரமாக வண்டியைத் திருப்பி அவர்களிடமிருந்து தள்ளி நிறுத்த
முயற்சித்தான் யாரோ ஒருவர் திட்டினார் ''இங்கே எங்கே இடமிருக்குன்னு
நுழையறீங்க ?''யாரோ ஒருவர் நின்றுகொண்டிருந்த பேருந்திலிருந்து எட்டிப்
பார்த்து  ''ஏ பிலிப்பு  கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்டே  ''
பிலிப் வெட்டுப் பட்டவன் போல நிமிர்ந்து பார்த்து சன்னமாய்
''வாழ்த்துக்கள் ''என்றான்


யாரோ அவன் தோளில் கை வைத்தார்கள் ''பிலிப்பு என்ன இங்கே நிக்கறே ?""அவன்
திரும்பிப் பார்த்தான்.சாஜன் வண்டியை நிறுத்தி நின்றுகொண்டிருந்தான்
.அவன் முகத்தில் கவலை இருந்தது .பிறகு அந்த போஸ்டரைப் பார்த்து  பதறி
கண்ணை விலகி ''எங்கியாவது போகனுமா பிலிப்பு ?''

பிலிப் வேண்டாம் என்பது போல விலகி நடந்தான் .அவன் வண்டியை பின்னாலேயே
உருட்டிக் கொண்டு வந்து ''வண்டில போகலாம் பிலிப்பு ''

பலவருடங்களுக்கு முன்பு சாஜனை இதே தெருவில் வைத்து பிலிப் ஒருமுறை
அடித்திருக்கிறான்.ரொம்ப நாட்களாக அவர்கள் குடும்பங்களிடையே பகை
இருந்தது.பதிலுக்கு சாஜன் ஐந்து பேரைக் கூட்டிக் கொண்டுவந்து பிலிப்பை
அடித்திருக்கிறான்.போலிஸ் வழக்கெல்லாம் பதிவாகி ஐரெனியஸ் பாதிரியாரின்
சமாதானப் பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு வழக்கு விலக்கிக்
கொள்ளப்பட்டது.பிரச்சினைக்குக் காரணமான ப்ளோரி இருவருக்கும் கிடைக்காமல்
போனாள் .அவள் புருஷன் அந்த ஊரின் கடும் குடிகாரனாக கொஞ்ச நாள் திரிந்து
ஒருநாள் காணாமல் போனான்.பிலிப் கண் கூச ஒரு கணம் ப்ளோரியின் வீட்டை
ஏறிட்டு பார்த்தான்.அவள் வீட்டின் மாடிசன்னலின் திரைச் சீலைகள் ஒருகணம்
அசைந்து மீள்வதைப் போலத் தோன்றியது.அவள் புருஷன் தொலைந்து போன பிறகு அவள்
வெளியே வருவதேயில்லை.

''பிலிப்பு ?பேச மாட்டியா ?"'சாஜன் குரல் மறுபடி கேட்டது.பிலிப் கண்களைத்
தாழ்த்திக் கொண்டான்.


''அந்த பிலோமினாள் தேவிடிச்சி குடும்பம்தான் ஏதோ மந்திரவாதம் பண்ணி எம்
வம்சத்தைக் கருவருத்துடுச்சு ''அம்மா அடக்க ராத்திரி அன்றைக்கு கத்தியது
நினைவுக்கு வந்தது

அவன் சாஜனின் கண்களை உறுத்துப் பார்த்தான் .அவன் உடைந்து ''எங்களுக்கும்
புள்ளை குட்டி இருக்கு பிலிப்பு .நானும் ஒரு தாயி வயித்துல ஜனிச்ச மனுஷப்
பிறவிதான்.என்றான்

பிலிப் அவன் வண்டியில் ஏறிக்  கொண்டு ''எங்கியாவது குடிக்கிற
இடத்துக்குக் கூட்டிட்டுப் போடா ..முழிச்சிருக்கவே முடியலை ''


 தேவையானதை வாங்கிக் கொண்டு திரும்புகையில் வீட்டில் ஐரேனியஸ் சாமியார்
அமர்ந்திருந்தார் .அம்மா அவருக்கருகே நின்று விசித்துக்
கொண்டிருந்தார்அவள்தான் அவரைக் கூட்டி வந்திருக்க வேண்டும்..ப்யுலாவின்
அறையில் இன்னமும் எந்த அசைவுமில்லை.பாதர் ''பிலிப்பு நீனும் ப்யுலாவும்
இங்க இருந்து கொஞ்சம் மாறி நில்லுங்க ''

அவன் கேட்காதது போல ''சகாயம் இதை உள்ளே கொஞ்சம் வையி .கொஞ்சம் தண்ணி கொண்டா ''

அவர் விடாது ''பள்ளி தாளாளரைக் கைது பண்ணியாச்சு.''என்றார் .பிலிப்
ஆங்காரமாய்த் திரும்பி ''அது சகாவு பண்ணின காரியம்.உங்க சபை அவரைக்
காப்பாத்தல்லா முயற்சி பண்ணுச்சு ?''

அவர் பேசாதிருந்தார் ''ஐஸ்வர்யம் உள்ளவனும் கள்ளக்  கடத்தல் காரனும்தான்
உங்க சபையோட மக்கமாரு .இல்லே?எங்க உதிரம் நீங்க அவங்களுக்கு கொடுக்கிற
பலி ''

அவர் ''நடந்தது ஒரு விபத்து பிலிப் ''

''சிலரோட பொறுப்பின்மையால நிகழ்ந்த விபத்து .சிலரோட அலட்சியத்தால
நிகழ்ந்த விபத்து '' என்று பிலிப் சீறினான் ''உங்க பிள்ளைகளை யார்
துணையுமில்லாம ஒரு நேசனல் ஹைவேயில இறக்கி விட்டுட்டுப் போயிடுவீங்களா
?உங்க பிள்ளைகளைஆயா இல்லாம  ஒரு குடிகார ட்ரைவர் கிட்டே ஒப்படைப்பீங்களா
?பள்ளிக் கூடம் சீக்கிரம் விடறோம் னு  பெற்றோர்கள் கிட்டே கூட சொல்லாம
செய்வீங்களா ?"'

பாதர் ''யாரும் எதிர்பார்க்கலை பிலிப்பு .அன்னிக்கு அந்தவிடத்துல
ட்ராபிக் ப்ளாக் ஆகும்னு யார் எதிர்பார்த்திருக்க முடியும்
?எல்லோருக்கும் பண்டிகை அவசரம்''

''இது முதல் தடவை இல்லை பாதர் ஏற்கனவே நிறைய  கம்ப்ளைன்ட் போயிருக்கு
.அந்த வேன் ட்ரைவர் அவரோட சொந்தக் காரன்.குடிகாரன்.பொம்பளைப் பொறுக்கி
அவன் மேல ஏற்கனவே ஒரு கேசு இருக்கு.தெரிஞ்சே வச்சிருக்கார் ''என்று
கத்தினான் ''பணத்திமிர்.அவங்க பின்னால நீங்க இருக்கற திமிர்''

அவர் ''நான் அவர் பின்னால இல்லை பிலிப் ''என்றார்

பிலிப் தளர்ந்து ''போங்க பாதர்.இனி என்ன ?என் செல்லங்க போயிட்டாங்க .இனி
எதன் மீதும் எனக்கு ஆர்வமில்லை.எதுவும் அவங்களைத் திருப்பிக் கொடுத்திடப்
போறதில்லை ''

''நீ கொஞ்சம் இந்த இடத்தைவிட்டு மாறி நில்லு ''என்றார் அவர் மறுபடியும்
''உன்னை உன் அம்மையை  உன் புள்ளைங்களை எனக்கு சின்ன வயசிலருந்தே தெரியும்
உங்களை இப்படிப் பார்க்கவே கஷ்டமா இருக்கப்பா ''

''நான் எங்கே போறது பாதர் ?செத்தா என் மக்க  கிட்டே போயிடலாம்னா
அங்கேதான் போக விரும்பறேன் .ஆனா அதுக்கும் சம்மதிக்காத உங்க கடவுள
நினைச்சா அடிவயித்திலிருந்து கசப்பா வருது ...ஆ!பண்டிகை !இவர்
பண்டிகைக்கு என் மகள்க ரத்தத்தைல்லா குடிச்சிருக்காரு உங்க கருணா
மூர்த்தி !''

அம்மா அழுதபடியே ''தேவ தூஷணை பண்ணாதே மவனே ''என்று கிட்டே வர அவன் அவளைப்
பிடித்துத் தள்ளினான் ''போட்டி இங்கிருந்து.நான் பாட்டுக்கு துபாய்ல
சந்தோஷமா இருந்தேன்.என்னை நைநைன்னு நச்சரிச்சி இங்கே கூட்டி வந்து
கல்யாணம் பண்ணி வச்சி ...''

சாமியார்  எழுந்து ''கொடைக்கானலுக்குப் போ ''என்றார் ''அங்கே என் நண்பர்
ஒருவர் இருக்கார் .அங்கே நம்ம சபைக்கு சொந்தமான ஒரு ஆற்றுப்படுத்தும்
மையம் இருக்கு .அங்கே போயி கொஞ்ச நாள் இரு.அங்கே போனா உனக்கு நீ இழந்த மன
சமாதனம் திரும்பக் கிடைக்கும் ''

பிலிப் சிரித்து ''மன சமாதானம் !''என்றான் ''உங்க சமாதானத்தை வேற யாராவது
பணம் உள்ளவன் கிட்டே  விக்கக் கூடாதா பாதர் ..என்கிட்டே உங்களுக்கு என்ன
கிடைக்கும் ?"

அவர் நெருங்கி அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு ''உன் துக்கம் எனக்குப்
புரியுதுடே ''

பிலிப் கைகளை உதறிக் கொண்டு ''உங்களுக்கு எப்படிப் புரியும் பாதர்
?உங்களுக்கு ஆயிரம் புள்ளைங்க.ஆயிரம் பொண்டாட்டிங்க ''என்றான்
இகழ்ச்சியாக.

அம்மா எழுந்து ''அப்படிப் பேசாதே மவனே.சொல்லுங்க பாதர் .இவனுக்கு இன்னும்
என்ன வயசாச்சி.கர்த்தர் நினைச்சார்னா இன்னும் இவனுக்கு நூறு சந்தானத்தைத்
தர மாட்டாரா ? ''

பிலிப் அடுத்து என்ன செய்தான் என்று அவனுக்கு நினைவு வரவில்லை
.உள்ளிருந்து சகாயம் ஓடிவந்து அம்மாவைத் தூக்குவதைத்தான் அடுத்து
கவனித்தான் .அவள் உதடு கிழிந்து ரத்தம் சொட்டி தரையில் பரவிக்
கொண்டிருக்க  பியூலா உள்ளிருந்து தள்ளாட்டமாய் எழுந்து வந்து ''அத்தே
இன்னிக்கு ராத்திரி ஆப்பத்துக்குக் கடலைக் கறி  பண்ணனும் .தேவ மலர்
இரண்டு நாளா கேட்டுட்டு இருக்கா ''என்றாள்



கொடைக்கானலுக்குக் கிளம்பும் அன்று மாலை திடீரென்று தோன்றி பிலிப்
மகள்களின் பள்ளிப் பக்கம் போனான்.மதியத்துக்கான இடை வேளை
விடப்பட்டிருந்தது.பிள்ளைகள் புழுதி எழும்ப விளையாடிக் கொண்டிருந்தார்கள்
உள்ளே வரிசையாக மஞ்சள் நிறத்தில் பள்ளி வாகனங்கள்
நிறுத்தபட்டிருந்தன.ஒருகணம் மனம் அதிர்ந்து கண்களை விலக்கிக்
கொண்டான்.காவலாளி அவனைக் கண்டுகொண்டு ''சார் ''என்றான்.பிலிப் பதில்
பேசாது பிள்ளைகளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.எத்தனையோ தடவை இந்த
கேட்டின் முன்பு அவர்களுக்காகக் காத்திருந்திருக்கிறான்.அந்த மாலை
மட்டும் அது போல அவன் காத்த்திருந்திருப்பான் எனில் ..காவலாளி அவனை
நெருங்கி ''சின்ன பாப்பா என்கிட்டே நல்ல அன்பா இருக்கும் சார் '' என்றான்
''அன்னிக்கு போகும்போது கூட எனக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து
சொல்லிச்சி''பிலிப் காவலாளி சொல்லிய காட்சியை மனத்தில் உருவாக்க
முயன்றான்.என் செல்லங்கள் இந்த மண்ணில் கடைசியாக கால் வைத்த
தருணங்கள்.அப்போது அவர்கள் என்ன நினைத்துக் கொண்டார்கள் ?தேவ மலருக்கு
இந்த கிறிஸ்துமசுக்கு சிறிய சைக்கிள் வாங்கித் தருவதாகச் சொல்லி
இருந்தான் (பிங்க் கலர் )அவள் அதைக் காண மிகுந்த ஆவலாக இருந்தாள் .
லில்லியின் உடைகள் அன்று மாலைதான் தைத்து வருவதாக இருந்தது.அவள்
''டெய்லர் கொடுத்துடுவாராப்பா?'என்று கேட்டுக் கொண்டே இருந்தாள் பிலிப்
கண்கலங்கி  குனிந்து அந்தப் பள்ளி மைதானத்து மண்ணை  எடுத்து ''மகளே நான்
போறன்  ''என்றான்


ரயிலடிக்கு பாதர் வந்திருந்தார்.அம்மாவை வரவேண்டாம் என்று
சொல்லிவிட்டிருந்தான்.சகாயம் ''பிலிப்பு ப்யுலாவை கொஞ்சம் கவனிச்சிக்க
''என்றார்.ஒருவகையில் பிலிப்புக்கு அவள் மேல் பொறாமையாகக் கூட இருந்தது
.அவள் பிரயாணத்துக்கு எப்போதும் போலவே மகள்களின் துணிகளையும் எடுத்து
வைத்துக் கொண்டுதானிருந்தாள் ''அண்ணே அங்கே ரொம்ப குளிருமே ...போனதடவை
ஊட்டில புள்ளைகளுக்கு வாங்கின ஸ்வெட்டரெல்லாம் எங்கே ?"அவளிடம் ஏதோ
சொல்லப்போன அம்மாவை சகாயம் அதட்டி அந்தத் துணிகளையும் எடுத்துக்
கொடுத்தார்.,அவள் அவற்றை நெஞ்சோடு அணைத்துப்  பத்திரமாக எடுத்து வைத்துக்
கொண்டாள்

அன்றைக்கு ரயிலில் கூட்டமில்லை.ரயில் நகரும்போது தன்னையும் மீறி ஒரு
கேவல் எழுந்தது.போன தடவை பிரயாணம் குழந்தைகளுடன் மேற்கு நோக்கி
இருந்தது.இரண்டு நாட்கள் வர்கலையில் தங்கியிருந்தார்கள் .இரவும் பகலும்
அதன்  கடற்கரையிலேயே கிடந்தார்கள் .டூ பீஸ் மட்டுமே அணிந்து கிடந்த
வெள்ளைக்காரிச்சிகளைப்  பார்த்து லில்லி  ''ச்சை!''என்று நாணினாள்
.தேவமலருக்கு நாணமெல்லாம் இல்லை.அவர்களை ஆவென்று பார்த்தாள் .அன்றிரவு
பியூலா அறையில் ''பிள்ளைகளை எங்கே கூட்டிட்டு வந்து என்னத்தியெல்லாம்
காமிக்கீக ?"'என்று சிணுங்கினாள்.பிலிப் அவளை அனைத்துக் கொண்டு
''இதிலென்னட்டி இருக்கு ?கர்த்தர் படைச்ச ரூபம்தானே ?ஆதாமும் ஏவாளும்
இப்படித்தானே ஏதேன்லே திரிஞ்சாவ?''என்றான் ''அதுக்காக ?சின்னப்
பிள்ளைகளல்லா ...''என்றாள்  அவள் ''எது சின்னப் பிள்ளை ?லில்லி பொறந்த
அன்னிக்கு ஓர்மையிருக்கா ?சின்னதா ஒரு வெள்ளைப் பல்லி மாதிரி கிடந்தா
..எனக்கு கூட இதுக்கா இத்தனை பாடுன்னு தோனுச்சு ..இப்போ பாரு எப்படி
இருக்கா உன் வெள்ளைப் பல்லி குட்டித் தேவதை கணக்கா?காலம் ரொம்ப வேகமா
ஓடுது ..நாளைக்கே திமுதிமுன்னு வளர்ந்து கல்யாணத்துக்கு நிப்பா பாரு ''

பிலிப் தன்னை உலுக்கிக் கொண்டான்.காலம் இனி எங்கும் ஓடப் போவதில்லை.அது
ஒரு டிசம்பர் மாதம் மாலைப் பொழுதில் நிரந்தரமாக நின்று போய்விட்டது .

இரணியலில் ஒரு வெள்ளைக் காரர் மட்டும் ஏறினார்.அவனைப் பார்த்துப்
புன்னகைத்தார்.ரயில் சற்று நேரம் அப்படியே நின்றுகொண்டிருந்தது .இரண்டு
தட்டான்கள்  ரயில் பெட்டிக்குள் ஒன்றையொன்று  துரத்திக் கொண்டு
வந்தன.அவன் அவற்றையே பார்த்துக்கொண்டிருந்தான்.ரயில் சட்டென்று
கிளம்பியது.பிலிப் சற்றே பதற்றத்துடன் அந்த தட்டான்களைத் தேடினான்.அவை
லாகவமாக வெளியே போய்விட்டன.


வர்கலையில் கடலை விட அங்கு மனிதர்கள் பாரா கிளைட் மூலம் பறப்பது
லில்லிக்கு வியப்பாக இருந்தது ''நானும் இப்படிப் பறக்கணும் அப்பா''என்றாள்.
ப்யூலா ''அம்மாடி .நான் விட மாட்டேன் ''என்றாள்.பிலிப் அவள்
தலையைத் தடவி ''கொஞ்சம் நீ பெரிசாகணும் அதுக்கு கை கால் பலம்
வரணும்.இப்படி குச்சி கணக்கா இருந்தியான்னா ?  ''

ப்யுலா ''காய்கறியே சாப்பிடறதில்லை.மீன் மட்டும் போதுமா ?''
தேவமலர் ''பட்டம்பூச்சியெல்லாம் குட்டியா இருக்கப்பவே பறக்குதே ?"'என்றாள்



பிலிப் ரொம்ப நாட்களுக்குப் பிறகு போனை எடுத்து செய்திகளைப்
பார்த்தான்.ஆறுதல் செய்திகளைத் தவிர்த்தான்.கொடைக்கானலில் இருந்து
ஐரேனியஸ் பாதிரியாரின் நண்பர் தாமஸ் ஒரு மின்மடல் எழுதியிருந்தார் .அதைத்
திறந்தான்


அன்புள்ள பிலிப்


ஐரேனியஸ் உங்களைப் பற்றி எல்லாம் சொன்னான்.நான் உங்களது துயரத்த்துக்கு
ஆறுதல் என்று எதுவும் சொல்லப்போவதில்லை.எங்களைப் போன்றவர்கள் சொல்லும்
எதுவும் இங்கு சொற்களாகவே இருக்கும் என்பதை அறியாதவனல்ல நான்.அது
அப்பத்தைக் கேட்கிறவனுக்கு கற்களை அளிப்பது.உங்களைத் தேற்றவும்
குணப்படுத்தவும் ஒருவராலேதான் முடியும்.அவர் கூட தனது இறுதிப்பாட்டை
நெருங்கும்போது ''முடியுமானால் இதை என்னிடமிருந்து நீக்கும் பிதாவே
''என்று கலங்கியிருக்கிறார் எனில் நாம் எம்மாத்திரம் ?தந்தை இந்த
சிலுவையை சுமக்க உங்களை ஏன் தேர்ந்தெடுத்தார் என்று எனக்குத்
தெரியாது.தந்தை என்று ஒருவர் இருக்கிறாரா உண்மையில் அதுவும் எனக்கு
நிச்சயமாகத் தெரியாது.நான் பிரார்த்தனைகள் செய்கிறேன்.அவை எங்கு போகின்றன
?அதுவும் எனக்குத் தெரியாது .கர்த்தர் நம் பிரார்த்தனைகளைக்
கேட்கிறாரா?ன்று கேட்டால் அதுவும் எனக்குத் தெரியாது.ஆனால் ஒன்று
சொல்வேன்.எப்போதாவது மாலைப் பொழுதுகளில் இந்த மலைப்  பிரதேசத்தில்
நடக்கப் போகும்போது அவர் நமது பிராத்தனைகளுக்குப் பதில் சொல்வது போல
உணர்கிறேன்.அவரை மிக நெருக்கமாக குரான் சொல்வது போல பிடரியில் துடிக்கும்
நரம்பு போல உணர்கிறேன்.உண்மையில் அவர்தான் பதில் சொல்கிறாரா ?பதில்
சொல்வது அந்த மலைகளாகக் கூட இருக்கலாம்.ஏனெனில் இந்த மலைகளைப் பற்றி
இங்கு உலவும் கதைகள் விசித்திரமானவை.பெரும்பாலும் பழங்குடிகளின்
கதைகள்.அறிவியலுக்கும் நமது மதத்துக்கும் புறம்பாலான வெளிகளில் கிடக்கிற
கதைகள்.அதனாலேயே சில சமயம் இந்த மலைகள் கொடுக்கிற அமைதி எனும் மதுவை
அருந்துகையில் எனக்கு குற்ற உணர்வு கூட ஏற்படுவதுண்டு.ஆ னால் இந்த மலைகள்
நிச்சயம் நமக்கு மன அமைதியை அளிக்கின்றன.இதை நமது சபை முன்னோர்களும்
உணர்ந்திருக்க வேண்டும்.அதனால்தான் இப்படி ஒரு இடத்தில் இவ்விதமொரு
மையத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது



அந்தக் கதைகளில் ஒன்றை இங்கே உனக்குச் சொல்லட்டுமா ?

இந்தப் பக்கத்தில் உள்ளவர்களின் வாய்மொழிப்படி இந்த மலை
உயிருள்ளது.அதற்கு நல்லவர்கள் தீயவர்கள் யாரென்று பகுத்தறியும்
அறிவுள்ளது.தனக்குப் பிடிக்காதவர்  எவரும் உள்ளே நுழைந்தால் அவர்களை வழி
தவறச் செய்து கொன்றுவிடும் குணமுடையது.அதே சமயம் தனக்குப் பிடித்தவர்களை
தாய் போல அணைத்துக் கொள்ளும் தன்மையுடையது

போன நூற்றாண்டில் ஒரு சமயம் பிரபலக் கொள்ளைக் காரன் செம்புலிங்கம் இங்கே
ஒளிந்திருக்கிறான்.செம்பு லிங்கம் பற்றி நீ கேள்விப் பட்டிருக்கிறாயா
?அவன் தென்னகத்தின் ராபின் ஹூட் என்று சொல்லலாம்.கொள்ளைக் காரனே தவிர
ஏழைகளின் மீது கருணை உள்ளவன்.டோனாவூரில் இருக்கும் நமது கன்னியர்
மடத்தின் மீது அவனுக்கு நிறைய மதிப்புண்டு என்று சொல்வார்கள் .ஒரு தடவை
அவனைத் துரத்திக் கொண்டு  ஒரு வெள்ளைக்கார அதிகாரி தலைமையில் படை இந்த
மலைக் காட்டுக்குள் நுழைந்திருக்கிறது .ஒரு இடத்தில் பாதை இரண்டாகப்
பிரிந்திருக்கிறது .வெள்ளைக்காரர் சிலரை மட்டும் தன்னுடன் நிறுத்திக்
கொண்டு இரண்டு குழுக்களைப் பிரித்து அனுப்பியிருக்கிறார்.இரண்டு
குழுக்களும்  காலை வரை திரும்பாமல் போகவே மறுநாள் கொடைக்கானலுக்குத்
திரும்பி மேலும் கொஞ்சம் படைகளுடன் திரும்பி இருக்கிறார் .மறுநாள் அவர்
எவ்வளவோ தேடியும் அந்தப் பாதைகள் பிரிந்த இடத்தை அவரால் கண்டுபிடிக்கவே
முடியவில்லையாம்.காணாமல் போன அந்த வீரர்களும் இன்றுவரை வீடு
திரும்பவில்லையாம் .கொடைக்கானலில் இருந்தவரை செம்பு லிங்கத்தை யாராலும்
பிடிக்கவில்லை என்று சொல்கிறார்கள் ...இங்கிருந்தவரை செம்புலிங்கத்தை
இந்த மலைகள் காப்பாற்றின,

பிலிப் சலிப்புடன் போனை மூடி வைத்தான்.மலைகள்.மனிதர்கள்.கடவுள்கள் என்று
எதுவும் யாரும் என் பிள்ளைகளைக் காப்பாற்றவில்லை.மலைகள் கூட கள்ளர்களையே
காப்பாற்றுகின்றன


ஆசுபத்திரிக்குள்  ஒரு சிறிய கூட்டம் இருந்தது..வெளியே ஒரு ஆம்புலன்ஸ்
நின்றிருந்தது.அதன் வாசல் திறந்து கிடக்க அதன் படிகளிலிருந்து ரத்தம் ஒரு
சாலை  போல இறங்கி ஆஸ்பத்திரிக்குள் ஏறிச் செல்வதைப் பார்த்தான்.டாக்டர்
 ஒருவர் பணியாளர் ஒருவரை அதைச் சுத்தம் செய்யும்படி சத்தம் போட்டுக்
கொண்டிருந்தார்.அருகில் ஒரு போலிஸ் வாகனம் நின்றிருந்தது.பிலிப்
அதனருகில் நின்றுகொண்டிருந்த கூட்டத்தை நோக்கிப் போனான்.கிட்டே போனதும்
அந்தக் கூட்டத்தில் அருள்ராஜ் இருப்பதைப் பார்த்தான்.இவனைப் பார்த்ததும்
அருள் ராஜ் விலகி வந்து ''பிலிப்பு ? என்ன இங்கே?''என்றான்
பிலிப் ''போன்  வந்துச்சு ''என்றான் .''இங்கே வரச் சொல்லி .புள்ளைகளுக்கு
ஏதோ ஆக்சிடண்டுன்னு ''
அருள்ராஜின் கண்கள் சட்டென்று மாறின .அவன் ''அய்யோ !''என்று கத்தினான்


பிலிப் வண்டி நாகர்கோவிலை தாண்டிவிட்டதை  உணர்ந்தான்.ப்யுலா வெளியே
வெறித்த வண்ணம் அமர்ந்திருந்தாள் காற்றில் அவள் சிகை
புரண்டுகொண்டிருந்தது.பத்து நாட்களிலேயே அவள் மிக வயதானவள் போல
ஆகிவிட்டதை பார்த்தான்.அவன் இதுவரை பார்த்தேயிராத நரை வெள்ளிகள் அவள்
தலையில் மின்னின.கண்களுக்குக் கீழே கருத்த பைகள்

''ப்யுலா சாப்பிடறியா ?''

அவள் திரும்பி ''சாப்பிடலாம் ''என்றாள் .பிறகு யோசித்து ''புள்ளைக  வந்துடட்டுமே ''

பிலிப் அவளையே பார்த்தான்.அவள் ஏதோ தப்பு செய்த குழந்தை போல சங்கடமாக
மறுபடியும் புன்னகைத்தாள்

எதிரே இருந்த வெள்ளைக்காரர் புன்னகைத்து ''Going far ?''என்று கேட்டார்
பிலிப் ''Very far ''என்றான்

அந்த இரவுதான் அவனது மிகக் கொடுமையான இரவாக இருந்திருக்க வேண்டும்.ஆனால்
அவனுக்கு அதுவெல்லாம் மிக தூரத்தில் வேறு யாருக்கோ நடப்பது போலவேதான்
இருந்தது.குரல்கள் கூட எங்கோ தூரத்தில் இருந்து வருவது போலதான்
கேட்டன.தம்பி வந்து கதறியபோது கூட  இவன்தான் சமாதானப்படுத்தினான்.விசயம்
கேள்விப் பட்டு வந்து சகாவுதான் எல்லா விசயங்களையும் பார்த்துக்
கொண்டார்.ஆனால் அவர் எவ்வளவோ முயன்றும் கூட அன்றிரவே உடல்களை வாங்கக்
கூடவில்லை.''ஆறுமணிக்கு மேலே போஸ்ட் மார்ட்டம் பண்ணக் கூடாது
கவர்ன்மெண்ட் ரூல் ''

தம்பி கொதித்து ''அதெல்லாம் பண்ணக் கூடாது என்று கத்தினான் .அருள்ராஜ்
நெருங்கி ''கொஞ்சம் பெரிய ஆக்சிடன்ட் தம்பி.அடக்கத்துக்கு ஏத்ததா உடம்பை
தயார் பண்ண வேண்டாமா ?''

சகாவு பிலிப்பிடம் நெருங்கி ''காலைலதான் தருவாங்களாம் பிலிப் ''என்றார்
பிறகு தயங்கி ''நாம காலைல வரலாம் ''


பிலிப் அவரைப் புரியாமல் பார்த்து ''சரி காலைல வாங்க ''என்றான்
பிறகு சம்பந்தமில்லாமால் ''அந்த முந்திரி பேக்டரி சமரம் சரியாயிடுச்சா
அண்ணாச்சி ''

அவர் அவன் கையைப் பிடித்து இழுத்து ''இல்ல தம்பி இப்போ நாம போகணும் காலைல
வருவோம்  ''

பிலிப் கைகளை விடுவித்துக் கொண்டு ''நான் எப்படி என் பிள்ளைகளை விட்டுட்டு
வர்றது ?''என்றன் ''அதுவும் தேவ மலருக்கு புது இடம்,இருட்டுன்னா ரொம்பப் பயம்
''என்றவன் அங்கு நின்றிருந்த அட்டெண்டரிடம் ஒரு நூறு ரூபாயை சட்டென்று எடுத்து
கொடுத்து ''உள்ளே ராத்திரில எல்லா லைட்டையும் அணைச்சிராதீகண்ணே  '


பெரிய டாக்டர் வந்து ''எல்லோரும் காலைல வாங்க இங்கே நிக்காதீங்க ப்ளீஸ் ''என்றார்
யாரோ அவரிடம் ஆவேசமாகப் பேசப் போக பிலிப் தடுத்து ''இவங்க போயிடுவாங்க
.நான் என் பிள்ளைகளைக் கூடீட்டுப் போகாம எப்படி வீட்டுக்குப்
போவேன்?அவளுக்கு பண்டிகைக்கு துணியெல்லாம் எடுத்து வச்சிருக்கு
.சின்னவளுக்கு சைக்கிள் வேற வாங்கணும்.பிங்க் கலர் ''என்றான்

சகாவு டாக்டரிடம் ''சார் புள்ளைங்களோட அப்பா இவரும்  நானும் மட்டும்
இன்னிக்கு இங்கே நிக்கோம் ''

அவர் தயங்கி ''பிரச்சினை ஆகக் கூடாது அவ்ளோதான்..வேணும்னா இவருக்கு ஒரு
அட்மிசன் போட்டு பெட்டு தரேன்.காம்போஸ் இன்ஜெக்சன் போடச் சொல்றேன் ''

பிலிப் ''அதெல்லாம் வேணாம் டாக்டர் நான் தூங்கிட்டா புள்ளைங்க பயப்படும்''என்றான்
ஆனால் எப்படியோ தூங்கி விட்டான்.நடு இரவில் விழித்தபோது ஏதோ
ஒரு வார்டில் இருந்தான்.பக்கத்து படுக்கையில் சகாவு
படுத்திருந்தார்.நன்றாக உறக்கத்தில் இருந்தார்.கொஞ்ச நேரம் அவரையே
பார்த்தபடி அமர்ந்திருந்தான்.வார்டின் எல்லா
விளக்குகளும் அணைக்கப்பட்டு ஒரு சிறிய விளக்கு மட்டும் எரிந்து
கொண்டிருந்தது.எங்கோ யாரோ வேதனையில் முனகும் ஒலி  மட்டும்.பிலிப் எழுந்து
வெளியே வந்தான்.ட்யூட்டி அறையில் பைல்களின் மீது தலைவைத்து சாய்ந்திருந்த
அரைத் தூக்க நர்ஸ் நிமிர்ந்து பார்த்து ''எங்கே ?''என்றாள் .பிலிப்
''ஒண்ணுக்கு ''என்றான்.

பிலிப் மெதுவாக கீழே  இறங்கி பிண  அறை என்று போட்டிருந்த அந்த அறையை
நோக்கிப் போனான் பூட்டியிருந்தது.பெரிய புங்க மரத்தின் நிழலில் மௌனமாக
இருந்தது.வெளியே இருந்த  டீக்கடையிலிருந்து மட்டும் பெட்ரோ மக்ஸ் விளக்கின்
புஸ்சென்று சத்தம் வந்ந்து கொண்டிருந்தது.மற்றபடி மௌனம்.பிலிப்
சுற்றிவந்து ஒவ்வொரு சன்னலாய் முயற்சித்துப் பார்த்தான்.கண்ணாடி
சன்னல்கள்.உள்ளே ஒன்றும் தெரியவில்லை.''விளக்கு போடச் சொன்னேனே ?அந்த
தாயோளியிடம் ?'ஒரு கணம் கடும் கோபம் வந்து.பிலிப் லேசாக ஒரு சன்னல்
கண்ணாடியைத் தட்டி ''லில்லி?''என்றான் ''லில்லி ?தேவ மலர் ?நான்தான்
அப்பா...டா ..''என்று சொல்லிப் பார்த்தான்

பதிலில்லை.பிறகு இன்னொரு சன்னலுக்கு நகர்ந்து சன்னல் கண்ணாடியோடு
முகத்தை ஒட்டி வைத்துக் கொண்டு 'பேடிக்காத மக்களே..நான் இங்கேதான்
இருக்கேன் ''

சற்று நேரம் அங்கே அப்படிய ஏதோ ஒரு சங்கீதத்தை உற்றுக் கேட்பது போல
நின்றான்.இப்போது அந்த வார்டு நர்சு மாடிப்படி உச்சியில் நின்று தன்னைத்
தேடுவதைப் பார்த்தான். சரி போகலாம் என்று மீள்கையில்தான் அந்த சத்தத்தைக் கேட்டான்
உள்ளிருந்து.என்ன சத்தம் அது ?எதுவோ நகர்வது போன்ற சத்தம்.கிசுகிசுப்பு
போன்ற சத்தம்.ஒரு விளி போன்ற சத்தம்.பிலிப் மிகுந்த ஆவேசத்துடன் ஓடி ஒரு
பெரிய கல்லை எடுத்து சன்னலை உடைக்க ஆரம்பித்தான்.






திண்டுக் கல்லில் இறங்கும்போதே மதியமாகியிருந்தது.பாதர் வண்டி அனுப்பி
இருந்தார்.ட்ரைவர் ''இருட்டறதுக்குள்ள மலை ஏறிடணும் சார்.கொடைக்கானலுக்கு
மேலே பத்து கிலோ மீட்டர் போகணும் ''என்றான்


பியூலாவை வற்புறுத்தி சாப்பிட வைத்தான்.சில நாட்களிலேயே ப்யூலாவின்
உடல்மொழி ஒரு சிறுமியைப் போல மாறிவருவதைக் கவனித்தான்.கண்ணை மூடிக்
கொண்டு கேட்டால் சில நேரங்களில் அவளது குரல் லில்லியின் குரல் போலவே
ஒலித்தது .போகும் வழியெங்கும் அவள் காரில் ஒரு சிறுபெண் போலவே சுருண்டு
தூங்கினாள் .லேசாக வாய் பிளந்து சிறிய மகள் தேவ மலர் போலவே ...




கொடைக்கானலில் ட்ரைவர் வண்டியை நிறுத்தினான்.''சார் டீ
சாப்பிட்டுக்கலாம் ''ப்யூலா  இன்னமும் உறங்கிக் கொண்டிருந்தாள்
.ரெஸ்டாரண்டில் அந்த வெள்ளைக்காரர்  அமர்ந்திருந்தார் .அவனைப்
பார்த்ததும் ' கையசைத்து ''ஹலோ...மறுபடியும்....''என்றார்.அவர்
பக்கத்தில் ஒரு வெள்ளைக்காரி நெருக்கமாக இருக்க அவர்கள் நடுவில் பூக்கள்
சிதறிய கவுன் அணிந்து வைக்கோல் நிறத்தில் தலைமுடியும் இரட்டை சடையும்
சற்றே பெரிய பற்களுமாய் ஒரு சிறுமி இருந்தாள் .அவளது வெளுத்த சருமத்தில்
மருதாணிப் புள்ளிகள் போல வெயில் கன்றல்கள் .அவள் ஒரு ஐஸ் க்ரீம் கூம்பை
தின்று கொண்டிருந்தாள் .பிலிப் செலுத்தப் பட்டவன் போல அவர்களை நோக்கிப்
போனான்.வெள்ளைக்காரர் எழுந்து அவனுக்கு ஒரு நாற்காலியைக் கொடுத்தார்
.''காபி ?"'

அவன் சரி ''என்றான்.அந்த சிறுமி மிகக் கவனமாக ஐஸ் கிரீமை
தின்றுகொண்டிருந்தாள்.அப்போது அவள் முகத்தில்  காணப்பட்ட தீவிரம் சாதாரண
நேரங்களில் புன்னகையை வரவழைக்க் கூடியது.தேவ மலரிடமும் அவன் இதே  போன்ற
ஒரு மனக் கூர்மையைப் பார்த்திருக்கிறான்.குழந்தைகளுக்கே உரிய
தீவிரம்.அவளால் ஒரு எறும்பை  ஒரு நாள் முழுவதும்  பார்த்துக் கொண்டே
நிற்க முடியும்.

வெள்ளைக்காரர் திடீரென்று ''இங்கே பட்டாம்பூச்சிகளைப் பார்க்க வந்தோம் ''என்றார்


பிலிப் ''என்ன ?''என்றான்
''பட்டாம்பூச்சிகள்.பட்டாம்பூச்சிகள் பற்றி உங்களுக்கு ஏதாவது  தெரியுமா ?"'

அவன் ஒரு இயந்திரம் போல ''தெரியும் உலகத்தின் மிக அரிதான பட்டாம்பூச்சி
பாலோஸ் வெர்டிஸ் .கலிபோர்னியாவில் இருக்கிறது .உலத்தின் மிக அழகான
பட்டாம்பூச்சி மயில் பட்டாம்பூச்சி எனப்படும் Banded butterfly .இங்கே
இந்தியாவில் கொடைக்கானலில் இருக்கிறது ''

அவர் ''அற்புதம் ''என்றார் .அவன் எழுந்து வெளியே வந்து காருள் ஏறிக்
கொண்டான்.''போகலாம் ''


கொடைக்கானலில் அன்று அவ்வளவு பனி இல்லை.தூரத்தில் மலை முகடுகள் தெளிவாக
தங்கக் கோபுரங்கள் போல தெரிந்தன.ட்ரைவர் ''அம்மா முழிக்கவே இல்லை
''என்றான்.வண்டி மெதுவாக சுற்றுலாப் பயணிகள் ஊடே நகர்ந்தது.சிகப்பு பீச்
ப்ளம் பழங்கள் தள்ளுவண்டிகளில் குவிக்கப் பட்டிருந்தன.அவற்றை ஸ்வெட்டர்
அணிந்த பெண்கள் பேரம் பேசி வாங்கிக் கொண்டிருந்தார்கள் மலைப்பாதை
சட்டென்றுஉயர ஆரம்பித்தது''இப்படியே போனா மூனாறு போயிடலாம் சார்.வெள்ளைக்
காரங்க போட்ட ஒரு ரோடு இருக்கு.இப்போ விட மாட்டாங்க ''. பிலிப்
சுற்றிலும் விரிகிற பசுமையைப் பார்த்துக் கொண்டே வந்தான்.வண்டியை இப்போது
பெரும்பாலும் முதல் இரண்டு கியர்களிலேயே ஓட்ட முடிந்தது.வண்டி
திணறியது''இதான் சார் குணா படத்தில வருகிற குகை .சின்ன வயசில இங்கே வந்து
விளாண்டிருக்கேன்.கொஞ்சம்  பசங்க இங்கே வந்து செத்துப் போனதிலிருந்து
இங்கேயும் விடறதில்லை '' பிலிப் வெளியே எட்டிப் பார்த்தான்.'பிசாசின்
சமையலறை 'என்றொரு கைகாட்டி சொல்லியது.அதன் மேல் ஒரு குருவி மெளனமாக
தாடையை இறுக்கிக் கொண்டு அமர்ந்திருந்தது'' வண்டி ல கொஞ்சம் வேலை இருக்கு
சார் ''என்றார் ட்ரைவர் ''சாமிட்டே சொல்லிட்டே இருக்கேன் ''
பியூலா பின் சீட்டில் எழுந்து ''தலை சுத்துது ''என்றாள் .ட்ரைவர் ''இப்போ
வந்துடும்மா ''என்று சொன்ன கணத்தில் வண்டி சட்டென்று ஒரு குலுக்கு
குலுக்கி நின்றுவிட்டது

சற்று நேரம் வண்டியிலேயே அமர்ந்து பார்த்து விட்டு பிலிப்  கீழே
இறங்கினான் .ட்ரைவர் பானட்டிலிருந்து வியர்வை மினுங்கும் முகத்துடன்
நிமிர்ந்து பார்த்து ''பெரிய பிரச்சினையா இருக்கும் போல சார் ''என்றான்
பரிதவிப்புடன்

பிலிப் ஒன்றும் சொல்லாமல் அவனையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்
பிறகு செல்போனை எடுத்து பார்த்தான் டவர் சுத்தமாக இல்லை.''இங்கே டவர்
கிடைக்காது சார் .ஒன்றரை கிலோ மீட்டர் தாண்டி பாரஸ்ட் செக் போஸ்ட்
இருக்கு அங்கேதான் கிடைக்கும் ''

''இப்போ என்ன பண்றது ?''என்றாள் ப்யுலா.அவள் கண்கள் இடுகி சிறுத்திருந்தன.


ட்ரைவர் ''தப்பா நினைச்சிக்கலைன்னா ஒன்னு சொல்லவா ''என்றான் ''வண்டியை
இப்படியே விட்டுட்டு வர முடியாது.ஏதாவது லாரி பிடிச்சி கொடைக்கானலுக்கு
போய் மெக்கானிக்க கூட்டிட்டு வரணும்.உங்களால ஒரு கிமீ நடக்க முடியுமா ?"'

பிலிப் ப்யூலவை பார்த்தான்.அவள்  சரி என்றாள் ''எனக்கும் நடக்கணும்
போலத்தான் இருக்கு ''

''இப்படியே நடந்தீங்கன்னா ஒரு கிமீட்டர்ல பாரஸ்ட் செக்போஸ்ட் வரும்.அங்கே
சிக்னல் கிடைக்கும்.அங்கிருந்து பாதருக்கு போன் பண்ணுங்க.அவரே வந்து
கூட்டிட்டுப் போவார் ''என்றான் பிறகு தயங்கி ''போயிடுவீங்க இல்லே..நான்
வரணுமா ?"'

பிலிப் ''போயிடலாம் ட்ரைவர் நேர் ரோடுதானே .தவிர க்ளைமேட்டும் தெளிவா இருக்கு ''


அவர்கள் இருவரும் நடக்க ஆரம்பித்தார்கள்.வானம் தெளிவாக இருந்தது.ட்ரைவர்
அங்கே நின்று கொண்டு பார்த்துக் கொண்டே இருந்தான்.வளைவில் ஒருமுறை பிலிப்
திரும்பிப் பார்த்து கை அசைத்தான்.ட்ரைவர் அப்படியே போங்க என்பது போல
கையை ஆட்டினான்.பிறகு பார்வையிலிருந்து தொலைந்து போனான்

காற்றில் இப்போது சட்டென்று குளிர் ஏறத் தொடங்கியதை பிலிப்
கவனித்தான்.ப்யுலா முதல் முறையாக ''''குளிருது என்றாள் ''ஸ்வெட்டரை
வண்டிலேயே விட்டுட்டு வந்துட்டோம் ''

பிலிப் ''இதோ வந்துடும் ''என்றான்

குளிர் மட்டுமல்ல இப்போது வானம் சட்டென்று அடர்ந்து இருட்டுவதையும்
பிலிப் கவனித்து ''இங்கே சட்டுன்னு வெதர் மாறிடுதே ''பியூலா நெருங்கி
அவனை அனைத்துக் கொண்டாள் .அவள் கண்கள் இப்போது நன்கு
திறந்திருந்தன.அவற்றில் நீண்ட நாட்களுக்குப் பிறகு தெளிவு திரும்பி
இருப்பதை அவன் கண்டான்.அவை நீரால் நிரம்பி இருந்தன.''பிலிப்பு லில்லி
இங்கே வரணும்னு கேட்டா நினைவிருக்கா ''என்றாள்

பிலிப்பின் உடல் வாளால் ஊடுருவியது போல அதிர்ந்தது .அவளை நன்கு அணைத்துக்
கொண்டான் .

இப்போது இருட்டு நன்கு முற்றி இருந்தது.மேகங்கள் கருத்த பட்சிகள்  போல
தரைக்கு இறங்கத் துவங்குவதை அவர்கள் கண்டார்கள்.பறவைகளின் சத்தம்
வெளியில் முற்றிலுமாக நின்று ஒரு கனத்த அமைதி அங்கே சூழ்ந்துகொண்டது
.பத்தடிக்கு அப்புறம் உள்ள பொருட்கள் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே
பணிப்புகைக்குள் புதைந்து போயின.சூரியன் இருந்த இடத்தைக் காணவே
இல்லை.பிலிப் மணி பார்க்க முயன்றான்.அதன் கண்ணாடி முழுவதும் பனியால்
மூடப்பட்டிருந்தது

அவர்கள் தடுமாறி தடுமாறி ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு நடந்தார்கள்.ஒரு
கட்டத்தில் ஒளி முற்றிலுமாகவே நிலத்தின் மீதிருந்து விலக்கிக்
கொள்ளப்பட்டு இருள் ஒரு ஊற்று போல சுரந்து சுரந்து பூமியை
நிரப்பியது.பியூலா ''பிலிப் ''ன்றாள் பிலிப் கைபேசியை உயிர்ப்பித்து
அதிலிருந்த டார்ச்சை ஏற்ற முயன்றான் .அதன் திரை உறைந்து நகர
மறுத்தது.பிலிப் ''பயப்படாதே ப்யூலலா ஒரு கிமீ தானே சொன்னான்.இப்படியே
போனா வந்துடும்.கொஞ்சம் விரசலா நட ''என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே
நிலவு ஒரு பெரிய பந்து போல அவர்கள் மீது எழுந்தது.அவ்வளவு பெரிய நிலவை
அவன் பார்த்ததே இல்லை . அது திடீரென்று வானில் எழுந்த வேகமும் வியப்பை
அளிக்கக் கூடியதாக இருந்தது.வானில் ஏறக்குறைய செலுத்தப்பட்டது போல அது
ஏறிக்  கொண்டே போய்  சரியாக அவர்கள் தலை மீது அது நிலைத்தது.

இப்போது ஒரு வினோதமான வெளிச்சம் பூமியின் மீது  படர்ந்தது.வழக்கமாய்
நிலவு சுரக்கும்  வெள்ளி வெளிச்சமோ தங்க வெளிச்சமோ அல்ல அது.ஒரு மாதிரி
மண் நிறத்தில் பழுப்பு வெளிச்சம்.அந்த வெளிச்சத்தில் கை ரேகைகளைப்
பார்த்தால் ரத்த நிறத்தில் தெரிந்தது...இப்போது அவர்கள் முன்பு பாதை
மிகச் சரியாக இரண்டாகப் பிரிந்து கிடந்தது.அவர்கள் ஒருகணம் திடுக்கிட்டு
நின்றார்கள் .ட்ரைவர் இந்த பிரிவு பற்றி எதுவுமே சொல்லியிருக்கவில்லை.

குளிர் இப்போது எலும்பைத் துளைக்கிற அளவுக்கு இருந்தது.பியூலா தன்னை
அறியாமல் நடுங்கினாள் .பிலிப் புதர்களில் இருந்து அடையாளம் காண முடியாத
சலசலப்புகள் கேட்டன. ஒரு புதர் சட்டென்று தீப்பந்தம் போல ஒளிர்ந்து
அணிவதைப் பார்த்தான்.எங்கோ ஆந்தை ஒன்றின் கூச்சலும் சிறகடிப்பும் கேட்டது
காற்று ஊளையிடத் துவங்கியது பிலிப் ஒரு முடிவெடுத்தவனாக ப்யூலா வை
இழுத்துக் கொண்டு வலது  பக்க பாதையில் திரும்பினான் .அந்தப் பாதை
முழுவதும் யூகலிப்டஸ் மரங்களும் தேவதாரு மரங்களும்
அடர்ந்திருந்தன.யூகலிப்டஸ் மரங்களின் உச்சியில் மாறி மாறித் தங்கும்
நிலவும் இருட்டும் முதுகந்தண்டில் வினோத அதிர்வைக் கொடுத்தது.மருந்துக்கு
கூட  ஆள் நடமாட்டம் இல்லாது பாதை ஹோ என்று   தனித்திருந்தது.எங்கோ
கிளிகள் கிறிச்சிடும் ஒலிகள் மட்டுமே கேட்டது.புதர்களில் நெருப்புத்
துண்டங்கள் போல் ஒளிப்பொட்டுகள் பிரகாசிப்பது போல்
பார்த்தான்.ஓநாய்கள்?ச்சே .கொடைக்கானலில் ஏது ஓநாய்கள்?மின்மினிப்
பூச்சிகளாக இருக்கக் கூடும்.

தலைக்கு மேலே ஹூம் என்றொரு பெரிய ஊங்காரம் கேட்டது.அவர்கள் நிமிர்ந்து
பார்த்தார்கள்.ஒரு பெரிய பருந்து. ?ஏறக்குறைய மூன்றடி இருக்கக் கூடிய
ராட்சதப் பருந்து மரத்து மேல் அமர்ந்திருந்தது அதன் கனம்  தாங்காமல்
மரக்கிளை முனகுவதை அவர்கள் கேட்டார்கள்.பருந்தாய் இருந்தாலும்  அதன்
முகம் ஒரு வௌவாலின் முகமே இருந்தது.ஒரு வவ்வாலின் பழுத்த நாவல் பழம்
போன்ற கண்கள்

அவர்கள் வழி தவறி விட்டோம் என்று இன்னும் சற்று தொலைவு போன பிறகே
உணர்ந்தார்கள் பியூலா நடுங்கி ''திரும்பப் போயிடலாம் பிலிப் ''என்றாள்
.ஆனால்  அந்தப் பருந்து இப்போது மரத்திலிருந்து இறங்கி அவர்களது பாதையின்
நடுவில் நின்றிருந்தது.இப்போது அது இன்னமும் வளர்ந்து விட்டது போலத்
தோன்றியது.ஏறக்குறைய ஒரு சிறிய மனிதனின் உயரம்.அது அஅது வர்களை நோக்கி
நடந்து வர முயல்வதைப் போல இருக்க அதன் கால்கள் பறவையின் கால்கள் போல
அல்லாமல் ஒரு ஆட்டின் குளம்புகள் போல இருப்பதை பிலிப் கவனித்தான்.ப்யூலா
ஏறக்குறைய ஒரு வீறலாய் ''கர்த்தர் என் மேய்ப்பராக இருக்கிறார் ''என்று
சத்தமிட்டுப் பிரார்த்திக்க ஆரம்பித்தாள்

இப்போது அவர்கள் அந்த சத்தத்தைக் கேட்டார்கள்.ஒரு பெருங்காற்று அடிப்பது
போல சத்தம்.கணவாயில் காற்று புகுந்து வருவது போல சத்தம்ஆரல்வாய்மொழிக்
கணவாயில் அவன் அது போன்ற சத்தத்தைக் கேட்டிருக்கிறான்..ஊஊஊம் என்று ஒரு
ஆழமான கார்வை கொண்ட ஒலி .அவர்கள் ஏறக்குறைய அந்த சத்தம் வரும் திசை
நோக்கி ஓடினார்கள் ஓடியோடி அவர்கள் அந்த மலை விளிம்பை அடைந்தார்கள் .
அங்கு அவர்களுக்கு கிடைத்த காட்சியை விவரிக்க பிலிப்பால் முடியவேயில்லை
என்று பின்னால் பாதிரியார் சொன்னார்.

அங்கு அவர்கள் கண்டது ஒரு பெரிய பள்ளத்தாக்கு.பள்ளத்தாக்கு முழுவதும்
பல்வேறு நிறங்களில் ஒளிரும் ரத்தினங்கள்.நகைகள் .ஆம் முதலில் அவர்கள்
அப்படித்தான் நினைத்தார்கள். ஆனால் அவை ரத்தினங்களோ நகைகளோ அல்ல.அவை
அசைந்து கொண்டிருந்தன.பிலிப் சற்று முன் நகர்ந்து மலை விளிம்பிலிருந்து
பார்த்தான்.அவை ஒவ்வொன்றும்  மினுங்கி மினுங்கி ஒரு இருதயம் சுருங்கி
சுருங்கி விரிவது போல ஒளி  விட்டுக் கொண்டிருந்தன.காற்று முழுவதும் அந்த
ஓங்காரச் சத்தம் கேட்டது,இப்போது அது அதன் அச்சுறுத்தும் தன்மையை இழந்து
மென்மையாக  கம்பீரமாக இருந்தது.இப்போது நிலவொ ளியின் நிறம் மாறி
விட்டிருந்ததையும்  அவர்கள் கவனித்தார்கள்.அது உருக்கிய நெய் போன்ற பொன்
நிறத்தில் வழிந்து பரவிக் கொண்டிருந்தது.ப்யூலா ''கீழே பாரு பிலிப்
''என்று கத்தினாள் .பள்ளத்தாக்கு முழுவதும் பளிங்கு போன்ற நீர் நிரம்பி
இருப்பதை அவன் அப்போதுதான் கவனித்தான்.அது மிகச் சிறிய தளும்பும்
சத்தங்களோடு அசைந்துகொண்டிருந்தது.அதனுள்ளே வானவில்லின் அத்துணை
நிறங்களிலும் மீன்கள் நீந்திக் கொண்டிருந்தன.பியூலா அதை உற்றுக் கவனித்து
''மீன்களல்ல,பட்டாம்பூச்சிகள் !''என்று கத்தினாள் நீந்தும்
பட்டாம்பூச்சிகள் !

அவள் குரல் கேட்டதும் சட்டென்று அந்த நீந்தும் பட்டாம்பூச்சிகள் பெருங்
கூட்டமாக  நீரிலிருந்து எழுந்து வானத்தில் பறந்தன.காற்றில் அவை
பறக்கும்போது வளையல்கள் கினுங்குவது போன்ற ஒரு இசை  ஏற்பட்டது அவை
வானத்தின் உச்சி வரைக்கும் போய்  ஏறி  பின்பு கீழே  வந்தன.ஒரு கட்டத்தில்
அவை நிலவு முழுவதையும் மொய்த்துக் கொண்டது போல மறைத்துக்
கொண்டன.வெளியெங்கும் ஒரு கனத்த மவுனம் நிரம்பியது.பிறகு அவை  மிகுந்த
வேகத்துடன் திரும்பி கீழே திரும்பி வந்தன.அவற்றின் வேகம் பிரமிக்கத்
தக்கதாய் இருந்தன.அதே வேகத்துடன் அவை தலை கீழாக
நீருக்குள் பாய்ந்தன.அப்போது பள்ளத்தாக்கில் இருந்த நீரிலிருந்து
குழந்தைகள்  முலை சப்புவதைப் போன்ற ஒரு சத்தம் ஏற்பட்டது

ப்யூலாவும் பிலிப்பும் பிரமிப்புடன் மலை  விளிம்பு வரை சென்று குனிந்து
கீழே நீரில் வெட்டி வெட்டி திரும்பி நீந்தும் பட்டாம் பூச்சிகளைக்
கவனித்தனர்.


பிறகு பிலிப்தான் முதலில் அவற்றை பார்த்தான்
இரண்டே இரண்டு பட்டாம்பூச்சிகள் மட்டும் நீருக்குள் பாயாமல் வானிலேயே
துடித்துக் கொண்டிருந்தன.இரண்டுமே சிறிய ஒளிரும் மயில் பட்டாம்பூச்சிகள்
.அவை மெல்ல அவர்கள் தலை மேலிருந்து இறங்கி அவர்கள் முன்பு வந்து
சிறகடித்த வண்ணமே நின்றன.அவை சிறகடிக்கும் ஓசையை மட்டும் அவர்கள்
துல்லியமாகக் கேட்டார்கள்.ஒரு கணம் அவை பறப்பதை நிறுத்தி  அந்தரத்திலேயே
நிற்பது போல நின்றன.எதையோ எதிர்பார்த்து நிற்பது போல..

சற்று நேரம் அங்கே ஒரு ஆழ்ந்த மவுனம் நிலவியது

அந்த  ஒரு கணத்தில் ப்யூலா அவர்களைக் கண்டு கொண்டு ''மக்களே! ''என்று
கதறினாள் ''மக்களே லில்லி தேவமலர்! ''


என் குறிப்பு

பிலிப்பின் கதையை நான் என்னுடைய வாழ்வின் மிக துக்கமான தருணம் ஒன்றில்
கேட்டேன்.பாதர் தோமஸ் அந்தக் கதையை என்னிடம் சொன்னதற்கு அதுவே ஒரு
காரணமாகவும் இருக்கக் கூடும்.ஒரு சிகிச்சை  போல.நாங்கள் இருவருமே சற்று
மது அருந்தி இருந்தோம்.பாதரின் பங்களா வராண்டாவில் வனம் இரவில் எழுப்பும்
ஓசைகளைக் கேட்டவாறு அமர்ந்திருந்தோம்.சங்கப் பாடல்களில் சொல்வது போலவே ள்
ளென்று இரையும் யாமம்.

நான் ''அந்த இரவு அந்தப் பள்ளத்தாக்கில் அவர்களுக்கு என்ன நடந்தது பாதர் ?''என்றேன்
அவர் தனது சிவந்த கண்களைத் திருப்பி என்னைப் பார்த்து ''நீ என்னை நினைக்கிறாய் ?""

நான் தயக்கமே இல்லாமல் ''பிரமை.delusion ''என்றேன் ''அவர்கள் அடைந்தது
ஒரு தீவிரமான மன உடைவு ''

அவர் பேசாதிருந்தார்

நான் சற்று சினத்துடன் ''நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ?அது கர்த்தர்
காட்டிய ஒரு அடையாளம் என்றா ?''என்று கேட்டேன்.''அல்லது அந்த
மலைதெய்வத்தின் செய்தி ?''

அவர் சிரித்து ''எது உண்மை என்பது இருக்கட்டும..அது கடவுளின் வெளிப்பாடு
என்ற விஷயம் ஏனுனக்கு இவ்வளவு கோபத்தை அளிக்கிறது ?''

நான் ''ஏனென்றால்.... ஏனென்றால் ...''என்று தடுமாறினேன் ''ஏனென்றால் அது
ஆபாசமானது . அது கடவுளாகவே இருந்தாலும் இரண்டு ரத்தமும் சதையுமான
உயிர்களைப் பறித்துவிட்டு அதற்குப் பதிலாக ஒரு பிரமையை அளிப்பது ''

அவர் எழுந்து அங்குமிங்கும் கொஞ்சம் நடந்தார்.பிறகு மீண்டும் உட்கார்ந்து
இன்னொரு பெக்  ஊற்றிக் கொண்டார்


''பிலிப்பும் அவன் மனைவியும் மூன்று நாட்கள் இங்கு வரவே இல்லை நாங்கள்
வனத் துறை யின் உதவியோடு மலையெங்கும் தேடினோம்.கிடைக்கவே இல்லை சலித்துக்
கைவிட்டோம்.நான்காம் நாள் காலையில் கதவு திறக்கும்போது இருவரும் நாம்
அமர்ந்திருக்கும்  இதே திண்ணையில் அமர்ந்திருந்தனர்.என்னைக் கண்டதும்
பிலிப் எழுந்து வந்து ஸ்தோத்திரம் பாதர் என்றார் .நான் அவர்களிடம் எங்கு
போயிருந்தீர்கள் என்று கேட்டேன்.அவர் சிரித்து ''எங்கள் மகள்களிடம்
''என்று சொன்னார் .அவ்வளவுதான்.அதன்பிறகு அவர்கள் தங்கள் ஊருக்குத்
திரும்பவில்லை.மறுவாரமே இங்கே பிலிப் சிறிய அளவில் ஒரு பட்டாம்பூச்சிப்
பூங்காவை உருவாக்க ஆரம்பித்தார்.பட்டாம்பூச்சிகள் பற்றிய அவரது அறிவு
வியக்கத்தக்கதாக இருந்தது.சில வருடங்களிலேயே அவரது பூங்கா பெரிய அளவில்
விரிவாக்கப்பட்டது.எங்கிருந்தெல்லாமோ அவருக்கு உதவிகள் வந்து
குவிந்தன.இன்று தென்னகத்தின் பெரிய பட்டாம்பூச்சிப் பண்ணையாக இது
இருக்கிறதுஆயிரக்கணக்கான பட்டாம்பூச்சி இனங்கள் இங்கு
இருக்கின்றன.வெளிநாடுகளில் இருந்தெல்லாம் இதைப் பார்க்க மனிதர்கள்
வருகிறார்கள்.போன மாதம் டிஸ்கவரி சானலில் இருந்து  ஒரு ஆவணப்படத்துக்காக
வந்து போனார்கள் ''என்றார் .பிறகு நிறுத்தி என்னை உற்றுப் பார்த்து
''நீங்கள் சொல்கிற அந்த மனப் பிரமை அவரைக் காப்பாற்றி விட்டது
.ஆயிரக்கணக்கான அரிதான பட்டாம்பூச்சி இனங்களையும் ''என்றார் ''காலையில்
பட்டாம்பூச்சிகள் சிறிய மேகம் போல அவரைப் பின்தொடர அவர் மலைக்குள் நடை
போவதை நீங்கள் காணவேண்டும் ''

நான் திகைத்துப் போய் அமர்ந்திருந்தேன் பிறகு

''அவர் தனது மகள்கள் பற்றி எப்போதாவது பேசுவதுண்டா ?''

பாதர் எழுந்து தனது கச்சையைத் தளர்த்திக் கொண்டு ''உண்டு ''என்றார்

''ஆனால் எப்போதும் நிகழ் காலத்தில் .இறந்த காலத்தில் அல்ல ''

LinkWithin

Related Posts with Thumbnails