Thursday, November 25, 2010

உடல் தத்துவம் 12

சுஜா சுதா இரண்டு பேரும் வீல் என்று அலற விநாயகம் ''குதிச்சுட்டா குதிச்சுட்டா'' என்று திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருக்க நான் நெஞ்சுக்கூடு அதிர க்வார்டர்ஸ் நோக்கி ஓடினேன்.அத்தை வீட்டின் பின்னால்குத்தவைத்து துணி தேய்த்துக் கொண்டிருக்க அவளது எண்ணெய் தடவினது போன்ற முழங்கால்களை வைலெட் கலர் உள் பாவாடையை அந்த அவசரத்திலும்கவனித்தேன்.என்னைப் பார்த்ததும் அவள் சரேல் என்று சேலையை இழுத்துவிட்டுக் கொண்டு என்ன எனறாள்.விசயத்தைச் சொன்னதும் அவள் பதறி முனுசாமியை அழைத்து வரும்படி சொல்லிவிட்டு  ஓடினாள்.முனுசாமி விடுமுறைநாள் மதிய உறக்கத்தில் இருந்த மொத்த பேரையும் எழுப்பிக் கொண்டு ஓடி  கிணற்றை துழாவும்  கொரண்டி போன்ற உபகரணங்களுடன் ஓடி வந்தான்.நாங்கள் போகும் முன்பே விநாயகத்தி சைரன் சத்தம் கேட்டு சிறு கூட்டம் கூடி இருந்தது.கிணற்றின் சிமின்ட்  விளிம்பைச் சுற்றி ஒரு கூட்டம் .க்வார்ட்டர்சைச் சேராத வெளிநபர்கள்  கூட நின்றிருப்பதைக் கவனித்தேன்

நான் மயக்கம் வருவது போல உணர்ந்தேன். ஏனோ சங்குவின் நினைவு வந்தது.ரூபியின் ஆடையற்ற சிவந்த உடல் கிணற்று நீரின் ஆழத்தில் நீரின் மெல்லிய முட்டலுக்கு ஒரு செடி போல  அசைந்துகொண்டு கிடக்கும் ஒரு காட்சி உள்ளே தோன்றி விட்டிருந்தது.அடி வயிற்றிலிருந்து ஒரு கசப்புத் திரவம் பொங்கி வர வர வாந்தி எடுத்தேன்.


ஆனால் ரூபி சாகவில்லை.அவளுக்கு நீச்சல் தெரிந்திருந்தது.நீந்தி கேணியின் ஓரத்தில் இருந்த திண்டைப் பிடித்து ஏறி அதன் மீது அமர்ந்திருந்தாள்.சுஜா வீசிய உள்ளாடையை மட்டும் அணிந்திருந்தாள்.முழு ஆடையும் அணிந்து கொள்வதற்குள் எங்கள் கூச்சலில் கூட்டம் சேர்ந்துவிட தலை நிமிராமல் மேலிருந்து அவள் மேல் எறியப் படும் குரல்களுக்கு செவி கொடாமல்  அவளது மொக்கு முலைகளை  முழன்காலோடு  இறுக்கி அணைத்து மறைத்தவாறு பாசி பொங்கும் கிணற்று நீர்ப் பரப்பையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்..விநாயகம் கிளிப் பிள்ளை போல ''டிரஸ் எல்லாம் அவுத்துட்டு கிணத்துல குதிச்சுட்டா''என்று திருப்பித் திருப்பி சொல்லிக் கொண்டிருக்க அத்தை அப்படியே குறுகி கிணற்றடியில் உட்கார்ந்து அழுவதையும் பெண்கள் அவளை வட்டமாய்ச்  சூழ்ந்து கொண்டு ஆறுதல் சொல்வதையும் பார்த்தேன்.பின்னொருநாள் கேரளவனம் ஒன்றில்காணிகள்  வெட்டி வைத்திருந்த குழி ஒன்றில் குட்டி யானை ஒன்று விழுந்து கதற அதைச் சுற்றி பிற யானைகள் சூழ்ந்து கொள்ளும் ஒரு காட்சியை பார்க்கநேர்ந்தது.சட்டென்று அப்போது இந்தக் காட்சி ஏனோ நினைவுக்கு வந்தது..விநாயகத்தின் அம்மா அவனை நெருங்கி அதட்டி வீட்டுக்குப் போகச் சொன்னாள்

ரொம்ப ஆலோசனைக்குப் பிறகு என்ஜினீயர் சொன்னபடி முனுசாமி கொண்டுவந்த தடக் கயிற்றை அவள் பிடித்துக் கொள்ள அவனும் அவரும் சேர்ந்து அவளைத் தூக்கினார்கள்...மேலேறி வந்ததும் ஆண்கள் மெல்ல சிரிப்புடன் விலகிப் போக  அவள் அங்கேயே ஆடைகளை மாற்றிக் கொள்ள அதுவரை தலை தாழ்ந்து அழுது கொண்டிருந்த அத்தை சட்டேன்று எழுந்து பக்கத்திலிருந்த வேப்ப மரத்தில் இருந்த ஒரு கொப்பை முறித்துக் கொண்டு அது வரை நான் அவளிடம் பார்த்திராத ரௌத்திரத்துடன் அவளை நோக்கிப்  போனாள்..ஒரு மரத்தை உலுக்குவது போல அவள் ரூபியை சடேர் சடேரென்று அடித்துக் கொண்டே இருந்ததை யாரும் தடுக்கவில்லை.ஆனால் கடைசிவரை ரூபியின் கண்களில் ஒரு சிறு சலனம் கூட தென்படவில்லை.தூரத்தில் எதையோ வெறித்துக்  கொண்டு அப்படியே நின்றிருந்தாள்...


அன்றிரவு நான் அத்தை வீட்டுக்கு படுக்கப் போவதா வேண்டாமா என்று குழப்பத்தில் தவித்தேன்.ஆச்சி போய் விட்டு வந்து ''அங்கே சமையல் சாப்பாடு எதுவுமே ஆனாப்பிலேயே தெரில...அந்தம்மா சாமி படத்துக்கு முன்னால முக்காடு போட்டு அழுதுட்டு இருக்கு..அந்தப் பொண்ணு முன் ரூம்ல  கால் மேல காலைப் போட்டுட்டு ஒண்ணுமே நடக்காதது மாதிரி கதைப் புத்தகம் படிச்சுட்டு இருக்குது ..உடம்பெல்லாம் ஒரே  ரத்தக் கோரை...மருந்து கூட போடாம..''எனறாள்.''சரி நான் கொஞ்சம் சாதம் வடிச்சுத் தாரேன் போய் சாப்பிடக் குடு என்னா ..''
''ஆச்சி நான் இன்னைக்கு இங்க படுத்துக்கறேன்''
ஆச்சி ''இன்னைக்குதான் நீ அங்க போய் படுக்கணும்.பிரச்சினைன்னு வந்தவுடனே ஓடுறவன் என்ன ஆம்பிள''என்றாள்.
நான் ஆம்பிள்ளையாகப் பிறந்ததை நொந்து கொண்டே அவள் தந்த பாத்திரங்களுடன் போனபோது ஆச்சி சொன்னது போலவே ரூபி முன்னறையில் படுத்தவாறே அவள் கிணற்றில் குதித்த அதே குட்டைப் பாவாடையோடு உள்ளாடை தெரிய கால் மேல் கால் போட்டுக் கொண்டு புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள்..கால்கள் முழுவதும் வரிவரியாய் சிகப்புக் கோடுகள் கசிந்து கொண்டிருக்க முகம் வீங்கியிருந்தது.அழுதிருக்கலாம்.ஆனால் என்னைப் பார்த்ததும் காட்டிக் கொள்ளாது  ';அட வந்திட்டியா கொடு கொடு ரொம்ப பசிக்குது'' என்று பாத்திரங்களைப் பிடுங்கிக் கொள்ள நான் பலவீனமாய் ''அத்தைக்கு ?''என்றேன் .;;''அவ இன்னைக்கு சாப்பிடுவான்னு எனக்குத் தோணலே..நீ வேணும்னா கேட்டுப்பாரு''

உள்ளே அத்தை இருதயத்திலிருந்து ரத்தம் சொட்டும் ஏசுவின் படத்தின் முன்பு  ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்து அதன் பக்கத்திலேயே வெறும் தரையில் சுருண்டு படுத்திருக்க மெழுகுவர்த்திச் சுடர் நான் உள்ளே  நுழைந்தவுடனே யார் என்று சலித்தது.

அத்தை சாப்பிட மறுத்துவிட்டாள்.அன்றிரவு முழுவதும் எழுந்து எழுந்து ஏசுவை ஏறிட்டு உள்ளேயே பேசிக் கொண்டிருந்தாள்..வல்லமை கொடு என் பிதாவே என் தேவனே என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்க  நான் தூங்கிவிட்டேன்.இடையில் ஒருதடவை சேர்ந்து பிரார்த்திக்க  வருமாறு ரூபியைக் கூப்பிட்டு வரச் சொன்னாள்.ரூபி அதற்கு கேலியாக ''இவள்சிலுக்குத் தனத்துக்கெல்லாம் கர்த்தர் மயங்கமாட்டார்னு சொல்லு ''என்று சிரித்தாள்.[அப்போதுதான் ஜெயமாலினிக்களின் காலங்கள் முடிந்து சிலுக்குவின் காலம் தொடங்கி இருந்தது]சட்டென்று என்னை  அருகே இழுத்து 'அது சரி பொம்பிளப் பிள்ளைங்க பின்னால நீங்க ஏன்டா வந்தீங்க''எனறாள் ரகசியமாக...''பார்த்திட்டில்லே.. என்னை டிரஸ் போடாம ...அதுக்குத்தானே வந்தீங்க நீயும் அந்த குண்டனும்...முதல்லியே சொல்லியிருக்கலாம் இல்லே..பார்க்கறியா இப்ப பார்க்கறியா''என்று அவளது சட்டையைக் கழற்ற ஆரம்பிக்க நான் தப்பித்து ஓடிப் போனேன்.
''அவள் வரலையாம் என்று சொன்னதும் அத்தை முகம் சுருங்கியது.மறுபடியும் யேசுவோடு பேச ஆரம்பிக்க நான் களைப்பில் உறங்கிப் போய் விட்டேன்.கனவில் அந்தக் கிணறு மீண்டும் வந்து அதில் சங்கு ரூபி இருவரும் நிர்வாணமாகக் குதித்து மிதக்க நான் மீண்டும் பின்சிகை பறக்க ஓடி அத்தையிடம் சொன்னேன்.ஆனால் அத்தையும் ஓடிவந்து அந்தக் கிணற்றுக்குள் அவளது வைலட் உள் பாவாடையைக் கழற்றிவிட்டு அவளது சொம்பு மார்புகள் துள்ள அவர்கள் பின்னால் குதித்தாள்.நான் கதறிக் கொண்டு ஓடுகையில் ஒரு உயரமான ஆள் மேல் முட்டிக் கொண்டேன்.நிமிர்ந்து பார்க்க மஞ்சள் அங்கியில் புரளும் தாடியுடன் சொட்டும் இருதயத்துடன் ஏசு நாதர் 'பாவத்தின் சம்பளம்''என்றார்.


விதிர்த்து விழித்த போது அத்தையை அருகில் காணவில்லை.மெழுகு அழுது புரண்டு அணைந்திருந்தது.ஜன்னல் வழி வரும் இரவின் சாம்பல் வெளிச்சத்துக்கு கண் பழகும்வரை நெஞ்சு அதிர காத்திருந்தேன்.சங்கு அத்தை ரூபி எல்லோருமே கிணற்றில் விழுந்துவிட்டார்கள் என்பது புத்தியில் இருந்து விலக சற்று நேரமாகியது.மெல்ல எழுந்து முன் அறைக்கு வந்தேன்.ரூபி தூங்கியிருந்தாள்.அவள் அருகில் அத்தை ஒரு நிழல் சித்திரமாய் அமர்ந்து அவளது கால் காயங்களுக்கு மருந்து போட்டுக் கொன்டிருந்தாள்.நான் சற்று நேரம் அவர்களையே பார்த்தவாறே நின்றிருந்தேன்
திரும்ப வந்து பாயில் படுத்தபோது ஜன்னலின் மேல் கம்பி மேல் ஒரு ஒற்றை நட்சத்திரப் புள்ளி வந்திருந்தது...

ஒரு வாளின் வீர கதா..

இன்னுமொரு முறை
காதல்
மறுக்கப்பட்ட
ஒரு சாம்பல்நாளில்
கடலோரம்
இன்னுமொரு முறை
தற்கொலையைப் பற்றி
சிந்தித்துக் கொண்டிருந்தபோது
அந்த வாள் கிடைத்தது
மாமிச  வீச்சம் அடிக்கும்
மிருகத் தோல் உறையுடன்
முனையில் உலர்ந்த
உதிரக் கறையுடன்

அன்றிரவு அவனுடன்
அவன் படுக்கையில்
அதுவும் உறங்கியது
ஆண்குறியை
சதா சீண்டிக் கொண்டிருக்கும்
விடலைப் பையன் போல
அவன் அதை தொட்டுக் கொண்டே இருந்தான்
அல்லது இரவோடு இரவாக
தன்னைவிட்டு ஓடிவிடக் கூடும்
துரோக மனைவியைக்
கண்காணிப்பது போல
உளவு பார்த்துக் கொண்டே இருந்தான்
ஆனால் அது அங்கேதான் இருந்தது
அலுவலகம் செல்ல
அவன் ஆயத்தம் ஆகையில்தான்
அது பேசியது
தன்னையும் அழைத்துச் செல்லும்படி ...
அலுவலகத்தில் அதை
அனுமதிப்பார்களா  என்று
அவன்  முதலில் தயங்கினான்
ஆனாலும் அது விடாது வற்புறுத்தவே
கொண்டு போனான் 
பேருந்தை நடத்துபவன் 
பாதியிலேயே இறக்கிவிட
நடந்தே வேலைக்குப் போனான் 
அலுவலகத்திலும்
அது சும்மா
இருக்கவில்லை
அவனறியாது
பக்கத்து இருக்கையில் இருந்தவனை
குத்திப் பார்த்ததில்
மேல் அதிகாரியிடம்
அழைத்துச் செல்லப்பட்டான்
அங்கும்  அவன்
மன்னிப்ப்பு
கேட்பதற்குள்
அது  போரை அறிவித்துவிட்டது 
பணியிடை நீக்க  உத்தரவுடன்
படியிறங்கி
குடிக்கப் போன இடத்தில்
கலகமாகி கைது செய்யப் பட்டான்
தவறு அவனுடையதல்ல என்று
அவன் எவ்வளவு சொல்லியும்
அவர்கள் கேட்கவில்லை
அவர்கள் யார் கண்ணுக்கும்
அது தெரியவில்லை
விடுதலை ஆனதும் 
போன இலக்கியக் கூட்டத்திலும்
அவனது வாள்
அறச் சீற்றம்
பிடித்து அலறியதில்
மூக்கில் குத்தப் பட்டு
புறக்கணிப்பின் மூலைக்கு
தள்ளப் பட்டான்
கொஞ்சம் கொஞ்சமாக
அவன் வாழ்வை அது
வாழத் தொடங்கி இருக்கிறது
என்பதை அவன்
உணர்ந்தபோது
காலம் தாமதமாகி இருந்தது
மூன்று நாட்கள்
இரவும் பகலும்
விடாது
அவன் அதனுடன்
பேசிக் கொண்டிருப்பது பார்த்து
அவன் வீட்டார் கொண்டு போன
மருத்துவர்தான்
அவனது பிரச்சினையைப் புரிந்து கொண்டார்
அவர் கண்ணுக்கு மட்டும்
இந்த வாள் எப்படி தெரிந்தது
என்று அவன் கேட்டதற்கு
ஒவ்வொருவர் ஆன்மாவிலும்
குத்தி  நிற்கும் வாள்களைப்
பார்க்கும் சிறப்புப் பயிற்சி
தனக்கிருப்பதாக சொன்னார்
அவனது வாளை வாங்கிப் பார்த்துவிட்டு
இது சங்க காலத்திய வாள் என்றார்
ஒன்று இது தட்டானிடம் இருக்கவேண்டும்
அல்லது போர் வீரனிடம்
நீ இரண்டுமே இல்லை
உனக்கு  இது சரிப்படாது  என்றார்

அதன் முனையில் இருப்பது
பெரும்பாலும்
அதை வைத்திருந்தவர் உதிரமே
உடனே இதைத் தொலைத்துவிடு என்றார்
அன்றிரவு அவனும் அவரும்
அது கிடைத்த இடத்திற்கே போய்
அதை கடற்கரை மணலில்
புதைத்துவிட்டு வந்தார்கள் 

அன்றிரவு  அவன்
நிம்மதியாக உறங்கினான்
விடிகாலை எழுந்து
நெடுநாள் அறிந்திராத
சுதந்திர உணர்வுடன்
காலை நடை போக தீர்மானித்து
காலணிகளை மாட்டும்போது தான்
கவனித்தான்
ஈர ஓசோன் வீச்ச
மணலுடன்
மெலிதான மூச்சிரைப்புடன்
அவனுடன் நடை போக
காத்திருந்த அவன் வாளை.....

Tuesday, November 23, 2010

எழுத எழுத இன்பம் தருவது...

பிருஷ்டப் பிரிவு வரை
சரியாக ஓடி நிற்கும்
புரிநாகக் கூந்தல்
தொப்புள் வெடிப்புவரை
தொடர்ந்தலையும் பொன்சரம்
அதைக் கடித்துக் கடித்துச் 
சிவந்த
செம்பூச் சுளைகள்
பால்கிண்ணக் கன்னத்தில்
பொதிந்தசையும்
கருமபூக் கண் தும்பிகள்
மூக்கெழுந்த மாங்காய்கள் போல்
முகிழ்த்தெழுந்து
முண்டசைக்கும் 
முலைநாவல் பழங்கள்
இடுப்பிறங்கும் இடத்தில்
இணைந்து இறங்கும்
இனிப்புத் தசைச் சுருள்கள்
அடுக்குச் செம்பருத்திகள்
அடுக்கடுக்காய் புதைந்த பாகம்
கறுப்புச் சாக்லேட் குழி

அவள் அல்குலை
மையமாகக் கொண்டு
எழுந்த புயலில்
அழிந்த பலரில்
ஒருவன் எழுதிய கவிதை ...

Sunday, November 21, 2010

இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள்

அவனது கவிதைகள்
நன்றாய் இருப்பதாய்
நான்குபேர் சொன்னபோது
அவன் திடுக்கிட்டு
இருக்காதே என்றான் தயக்கமாய்
உங்கள் வைப்பாட்டி
அழகாய் இருக்கிறார்
என்று யாரோ நடுத்தெருவில்
நிறுத்தி
சொல்லிவிட்டது போல
சற்றே லஜ்ஜையாய் உணர்ந்தான்
அப்படி இருக்க வாய்ப்பில்லையே
என்று சந்தேகித்தான்

தன்னைத்தான் சொல்கிறார்களா
என்று பலமுறை கேட்டு
உறுதிப் படுத்திக் கொண்டான்

ஏனெனில் அவை எல்லாம் பெரும்பாலும்
அவன் பொழுதுபோகாமல்
இடது கையால் கிறுக்கியவை  
ஆனாலும் பலபேர்
திரும்பத் திரும்பச் சொல்வது
உண்மையாகத்தான் இருக்கவேண்டும் அல்லவா
என்று அவனுக்கே தோன்றியது
எல்லா நேரமும்
கவிதைக் கண்களுடன்
அலைய ஆரம்பித்தான்
விழித்திருக்கும் ஒவ்வொரு கனமும்
கவிதை ஒன்று விழவேண்டும்
என நினைத்துக் கொண்டான்

ஆனால் அந்தோ
அவன் கவி என்று
உலகம் ஒத்துக் கொண்ட
அந்த வினாடியில் இருந்து
அந்த வேசி
அவன் வீட்டுப் பக்கமே வரவில்லை
நவீனக் கவிதைப் புத்தகங்களில் இருந்து
நிகண்டுகள் வரை படித்தும்
அவனது மனப் பூட்டுகள்
மௌனித்தே இருந்தன
கஞ்சாவும் கள்ளும்
இன்ன பிற வஸ்துக்களுக்கும்  என
கள்ளச் சாவிகளுக்குக்  கூட
அது கால்விரிக்காமலே இருந்தது
ஆனால் அதற்குள் அவனது கவிதைகளுக்கான
ஆர்டர்கள் வந்து குவிந்து கொண்டே இருந்தன
கொஞ்ச நாட்கள்
அவனது பழைய உருப்படிகளையே
புது உடை பூசி அனுப்பிக் கொண்டிருந்தான்
ஆனால் எத்தனை நாட்கள்
இலக்கிய மல்லர்களை
ஏய்க்க முடியும் என்று அஞ்சி
நண்பர்களிடம் ஆலோசித்தான்
எல்லா நேரமும் கவிதை
உன்னைத் தேடி வராது
நாம்தாம் அதைத் தேடிப் போகவேண்டும்
என்று யாரோ சொனார்கள்
அவன் ஜோல்னாப் பையுடன்
தூரதேசங்கள் போக ஆரம்பித்தான்
நினைத்தறியாத இடங்களிலெல்லாம்
யூகிக்க முடியாத வேடங்களில்
அவன் கவிதைக்காய்க் காத்திருந்தான்  
பிணவறை வாசல்களில் காவலாளியாக
கோயில்களில் பிச்சை எடுப்பவனாக
தொழுநோயாளிகளின் புண்களுக்கு
மருந்து தடபுவனாக
ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு
காதல் கடிதம் எழுதிக் கொடுப்பவனாக
ஈரினங்கள்  புணரும்போது
ஆம்லேட்டுடன் ஆணுறை வாங்கி வருபவனாக

கழிப்பறைக் கோப்பைகளைச்
சுத்தம் செய்பவனாக கூட  
எல்லாம் கவிதைக்காக
என்று தளரும்போதெல்லாம்
தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்
பாரதிக்கு அடுத்த மகாகவி அவன்தான்
என கர்ணப் பிசாசுகள்
அவன் இடது காதில்
ஓதிக் கொண்டே இருந்தன
 சில சமயங்களில் அபூர்வமாய்  
அவன் தேடல்களுக்குப் 
பலன் கிடைக்கவே செய்தது

புழுதி பறக்கும் வெயிலில்
ஆந்திரத்து பொட்டலில்
ஒரு கவிதை கிடைத்தது
கேரளத்துக் காயலில் ஒன்று
காசி மயானத்தில் ஒன்று
இமயத்தின் உச்சியில் ஒன்று
ஆல்ப்ஸ் மலையின் உச்சிகளில்
ஆங்கிலக் கவிதைகள் மட்டுமே கிடைக்கும்
என்று சொன்னதால் அங்கு போகவில்லை
கல்கத்தாவில் சாந்தி நிகேதனில்
இந்த வருஷம் சீசன் மோசம் எனறார்கள்

பிரமிள்களும் பிச்சமூர்த்திகளும்
பொறுக்கியது போக
மிச்சமிருந்தவைகளைப் பொறுக்கிக் கொண்டு
அவன் பை கனக்கக
வீடு திரும்பியபோது
காற்று இப்போது எதிர்த்திசையில்
மாறி இருப்பதை உணர்ந்தான்
அவர்கள் இப்போது
அவனை வழியிலும்
இணையத்திலும்
சந்தித்து
அவன் கவிதைகள்
அப்படி ஒன்றும் உயர்ந்தவை அல்ல
என்று சொல்லத் தொடங்கினார்கள் . 
வாழ்நாளில் ஒரு கவிதை கூட
செய்யாதவர்கள் எல்லாரும்
நீண்ட கோட்பாட்டு வாள்களோடு வந்து
உன் வைப்பாட்டி
அப்படி ஒன்றும் அழகில்லை என்று சொன்னபோது
அவன் தளர்ந்து
இதைத்தானே நான்
ஆரம்பத்திலேயே சொன்னேன்
என்று அழ ஆரம்பித்தான்...

அக்காளின் புத்திரர்கள்

நான் கவனித்திருக்கிறேன்
காலணிகள் அணியும் முன்பே
சிலருக்கான பாதைகள்
சுருண்டு கொள்வதை
தலையை நிமிர்த்தும் முன்பே
அவர்களுக்கான ஏணிகள்
மறைக்கப் படுவதை கண்டிருக்கிறேன்

திரையரங்குகளில் அவர்களுக்கு
முந்திய நபரோடு
சீட்டுகள் முடிந்து விடுவதை
ரேசன் கடைகளில்
அவர்கள் முறைக்கு  முன்பே 
அரிசியோ சர்க்கரையோ தீர்ந்து விடுவதை
பேருந்துகள் எதிலும்
அவர்களுக்கான இருக்கைகள் இல்லாததை
அல்லது அவர்களுக்கு கிடைக்கும்
இருக்கைகள்  மீது மட்டும்
சரியாக ஒழுகுவதை
அவர்கள் வங்கிக் கணக்குகளில் மட்டுமே
அதிகப் பற்று
செய்யப் பட்டு விடுவதை 
அவர்கள் சான்றிதழ்களில் மட்டுமே 
எழுத்துப் பிழைகள்
வந்து விடுவதை
அவர்கள் விரும்பும்
பெண்களெல்லாம்
உடனே திருமணம் ஆகி சென்று விடுவதை
அவர்களுக்குப்
பொருத்தமில்லாதபெண்களுடன்
உடனே திருமணம் ஆகிவிடுவதை
அவர்கள் குழந்தைகளுக்கு மட்டும்
வினோத நோய்கள் வந்து விடுவதை
அவர்கள் வீட்டு முற்றங்களில் மட்டும்  
வீதி நாய்கள் மலம் கழித்து விடுவதை 
அவர்கள் வீடுகளுக்கு மட்டும்
அடிக்கடி தனியே
மின்சாரம் போய் விடுவதை
அவர்களது கணினிகளில் மட்டும்
அதி வீர்ய வைரஸ்கள் புகுந்து விடுவதை
அவர்களது இசைநாடாக்கள்  மட்டும் அறுந்துவிடுவதை
அவர்களது புத்தகங்களில் மட்டும்
சில பக்கங்கள் தவறி இருப்பதை
அவர்கள் கவிதை எழுத உட்காரும் போதெல்லாம்
உறவினர்கள் வந்துவிடுவதை
அவர்களுக்கு காமம் எழும்பும் போது மட்டும்
சரியாக குழந்தைகள் விழித்துக் கொள்வதை
அவர்கள் தாமதிக்கும் நாளில் மட்டும்
கோபக்கார உயர் அதிகாரி
சீக்கிரமே வந்துவிடுவதை
அவன் கேட்கும் கோப்பு மட்டும்
தொலைந்து போய் விடுவதை
அவன் குடிக்கும்  குளிர் பானத்தில்
மட்டுமே கரப்பான் பூச்சி கிடப்பதை
அவனுக்கு வரும்  கத்தரிக்காய் மட்டும்
அழுகி இருப்பதை
அவன் வாங்கும் பொருட்கள் மட்டுமே
புத்திசாலிப் போலிகளாக இருப்பதை
அவன் போகும் சாமியார்கள் மட்டும்
கண்காணிப்புக் கேமிராவில் சிக்கிக் கொள்வதை
அவன் போகும் கோயில்கள்  மட்டும்
சீக்கிரமே
நடை சாத்திக் கொள்வதை
தல யாத்திரைக்காக தொலைவண்டிக்கு
காத்திருக்கையில்
அத்தனைக் கும்பலிலும்
அவர்களை  மட்டும்
தீவிரவாதிகளின்
குண்டுகள் தேடிக் கொல்வதை
நான் கண்டிருக்கிறேன்

Saturday, November 20, 2010

மழைத்தலின் விதிகள்

ஒரு ராட்சத
டெகிலாக் கோப்பையைக்
கவிழ்த்தது போல
மண் மாதுவின்
ரகசியத் துவாரங்கள் அனைத்தையும்
திறந்துவிடத் துடிக்கும் அசுரன் போல
ஒரு நீர்மத்தாப்பூ  வேடிக்கை போல
பெய்துகொண்டிருந்தது மழை .
பட் பட்டென்று
குடை மொட்டுக்கள்
சாலைகள் மேல்
வெடித்துக் கொண்டே இருந்தன.
யாரோ
பெருக்கித் தள்ளியது போல
நிமிடத்தில்
தெருவோரத்தில்ஒதுங்கியது
ஜனக் குப்பை.
வீடற்ற விளிம்பனும்
வீதியுலா போகும் இறைவனும்
மழைச் சுருள் சாட்டைக்குப் பயந்து
ஒரே கூரை கீழ் பதுங்க
பேருந்து ஜன்னல்களிலிருந்து
வரிசையாய் சிலிர்ப்புடன்
மழைப் பதம் பார்க்கும்   
பெண்களின் கைகள்..
மழை உறைகள் தந்த
தற்காலிகப் பாதுகாப்புடன்
உலர்துளைகள் தேடி
இரு சக்கரங்களில்
கருத்த பாம்புச் சாலைகளில்
வழுக்கி விரையும்   ஆண்கள்.

காபிக் கப்புகளின் கீழே
விரியும் கவிதைப் புத்தகங்கள் 
நீண்ட பெருமூச்சுடன்
மூடப் படும்  அலுவல் கோப்புகள்

ஓயாத திரிதலை மறந்து 
தூக்கிய  வால்களுடன்
வீடுகளோரம் ஒதுங்கி
வேதாந்த சிந்தனையில்
ஆழும் தெருநாய்கள்
எல்லா  இசையும்   நிறுத்தி
மழைப் பிடில் மட்டுமே
நீளமாய் வாசிக்கும்
மண்டூகப் பாகவதர்கள்

என எப்போதும் எங்கும் என்றும்
மழைத்தலின் விதிகள்
மாறுவதே இல்லை

Wednesday, November 17, 2010

அவன் இவன் ஆண்டவன்

அவனைப் படைத்தவன்
அவன் எனறார்கள் அவர்கள்
அவன் பெரியவன் எனறார்கள் மேலும்
அவன் எலும்பிலிருந்து
உருவி
அவளைப் படைத்தவனும்
அவன்தான் எனறார்கள்
அவன் என்றால்
அவன் எனில்
அவனுக்கு ஆண்குறி உண்டா
என்றதற்கு பின்வாங்கி
அவர்கள் அனுப்பிய இடத்தில்
அது எனறார்கள்.
அவர்கெளெல்லாம் பிரம்மவாதிகள் 
என அறிந்தேன் 


அது என்றால் எது
அது என்பது அக்றிணை அல்லவா
என்றால் குழப்பமாய்
அது எதுவும் இல்லை என்கிற
சூநியவாதிகளிடம் அனுப்பிவைத்தார்கள்
அவர்களிடம் எதுவும் இல்லாதது
எதையும் படைத்திருக்க முடியததல்லவா
என்றால் ஏதும் பேசாது மௌனித்திருந்தார்கள்
திருப்தியற்று வெளியேவந்து நடந்தேன்
வெளியெங்கும்
ஆண்குறிகள் கொட்டிக் கொடந்தன
பெண்குறிகள் அவற்றைத் தொழுது கிடந்தன
நெற்றியில் மூன்றாம் விழி அணிந்த
தாந்த்ரீகன் ஒருவன்
தெருமுனையில் என்னை அணுகி
கேரளத்திலிருந்து
கன்னித்திரை கிழியாதது
வேண்டுமா என விசாரித்தான் 
விடாத தத்துவ விசாரணையில் 
என் தலை மறைகளெல்லாம் 
விட்டுப் போயிருந்தன 
சரி என்று 
சக்கரப்  படி ஏறி போனேன் 
அவள் கன்னி எல்லாம் இல்லை 
எத்தனையோ ஏர்கள் உழுத தரை 
சோடசம் எல்லாம் முடிந்து
அவளது
யோனிச் சகதியில்
வீரியம் பீறிடும் வேளையில்
எனக்கு சட்டென்று
ஒரு சட்டோரி வெட்டியது
ஆ அத்வைதம் என்று
அவள் இடுப்பை இறுக்கிக் கொண்டு அலறினேன்
அவள்
ஐயோ
நீ உறை போடவில்லையா
என்று கத்தினாள்

Tuesday, November 16, 2010

எழுத்து எனும் பிசாசு 2

போன பதிவைப் படித்து விட்டு ஒரு நண்பர் இது நீங்கள் குறைந்த பட்சம் இருபது வருடமாவது இலக்கிய  உலகத்தில் ஆண்டு அவிந்து காதோரம் எழுத்துக்  கிருதா கடல்நுரை போல் வெளுத்த பிறகு செய்திருக்கவேண்டிய கட்டுரை என்றார்.ஆனால் பாருங்கள்.நான் எப்போதும் வரிசைப் படி எதையும் செய்ததில்லை.கதையோ கவிதையோ முதலில் கடைசி வரியைத்தான் எழுதுவேன்.பிறக்கும் போதே என் கல்லறையில் எழுத வேண்டிய வாசகத்தோடுதான் நான் பிறந்ததாக நினைக்கிறேன்.Here is my epitaph.'HERE LIES A MAN WHO TRIED TO WRITE HIS WAY TO IMMORTALITY'
வெறும் முயற்சி மட்டுமா முயற்சி முளைத்ததா என்பதைக் காலமே தீர்மானிக்கும்.[சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று சினிமாவில் சொல்வது போல இது ஒரு இலக்கிய கிளிஷே].

ஆனால் எது இலக்கியம் என்று யார் தீர்மானிக்கிறார்கள் என்று அப்பாதுரை கேட்டார்.என்னுடைய கதை ஒன்றைப் படித்துவிட்டு நண்பர் ஒருவர் 'amusing'என்று சொன்னார்.எனக்கு அது ஏனோ பாராட்டாகத் தோன்றவில்லை.அவரே 'disturbing'என்று சொல்லி இருந்தால் என் நடையில் ஒரு வரி மிடுக்கு கூடி இருக்கும்.அவர் குறிப்பிட்ட படைப்பு என்னை ஒரு கள்ளக் காதலி போல் பலநாள் இம்சை செய்த  பிறகு எழுதியது.அது வெறுமனே சுவராஸ்யம் மட்டும்தானா.பெண்ணின் வயிற்றுக் குழியில் விரல் வைத்து சுவைக்க நினைப்பது இலக்கியம் இல்லையா
என்று அவர் கேட்டார்...


மார்கஸ் டி சாதி  எழுதியது எல்லாம் பெண்ணின் உடல் குழிகள் வளைவுகள் பற்றிதான்.அதற்காகப் பல முறை சிறைப் படுத்தப் பட்டும் மனம் சிதறி இறக்கும் வரை அவன் அதை எழுதுவதை நிறுத்தவில்லை.
நான் சொல்ல விரும்பியதன் மிகச் சரியான உதாரணம் அவன்.எழுத்தினால் வாழ்ந்தவர்களை விட வீழ்ந்தவர்கள் அதிகம்.ஓவியம்,இசை போன்ற மற்ற கலைகளுக்கும் இது பொருந்தும் என்றாலும் எழுத்து எனும் அரக்க மரத்திற்கு ஊற்றப் பட்ட ரத்தம் அதிகம்.கொஞ்சமாவாது உங்கள் புத்தி சுவாதீனத்தை இழக்கத் தயார் இல்லை எனில் எழுத வராதீர்கள்.இது குடி போலவேதான்.ஆரம்பத்தில் நீங்கள் தான் அதிகாரத்தில் இருப்பதாக அது உங்களை நம்பவைக்கிறது.மெல்ல மெல்ல உங்கள் வாழ்வை அது கையில் எடுத்துக் கொண்டு விட்டது என்பதை நீங்கள் உணரும்போது காலம் கடந்து போய் இருக்கிறது.ஆர் வி எஸ்  சொன்னது போல எழுத்து மெல்ல உங்களை மற்றவரிடமிருந்து முக்கியமாக உங்கள் குடும்பத்திடமிருந்து அன்னியராக்கி விடுகிறது. நீங்களும் அவர்களும் ஒரே வீட்டைப் பகிர்ந்து கொண்டிருந்தாலும் ஒரே உலகத்தை அல்ல.பெரும்பாலான எழுத்தாளர்களின் மணவாழ்க்கை சிலாக்கியமானதாக இலை.நிறைய பேர்களுக்கு நாடோடி வாழ்க்கைதான் வாய்த்திருக்கிறது..நிறைய எழுத்தாளர்கள் சராசரிக்கும்  அதிகமான ஆளுமைக் கோளாறுகள் உடையவர்கள்.மனச் சிக்கல்கள் நிரம்பியவர்கள்.பலர் இதற்காக ரகசியமாக சிகிச்சை பெறுபவர்கள்.மது அருந்திய குரங்கைத் தேள் கடித்தது போன்ற ஒரு அதிர்வில்தான் பலர் இருக்கிறார்கள்.ஆனால் இந்த அவஸ்தையில்தான் அவர்கள்  எழுத்து புண்ணிலிருந்து கசியும் குருதி போல் ஒழுகி வருகிறது.இந்தச் சுட்டியைப் பாருங்கள்.எழுத்தும் துறவும் பித்தும் எவ்வளவு நெருக்கமானவை என்று புரியும்.
http://navinavirutcham.blogspot.com/2010/11/14.html.

எல்லோருமா இப்படி எழுதுகிறார்கள் என்று ஒரு தோழி கேட்டார்.சிலருக்கு எழுத்து வெறும் தொழில் நுட்பம் மட்டுமே என்பது உண்மை.இன்னும் சிலர் அவர்கள் எழுதும் ஒவ்வொரு எழுத்தையும் உதிரத்தில் நனைத்துதான் எழுதுகிறார்கள்.உண்மையில் இந்த இரண்டு வகையில் எதாவது ஒரு வகையாக இருந்து விடுவதே நல்லது.வணிக எழுத்தாளர்கள் அதற்கான பலனை புகழை அன்றே அடைந்து விடுகிறார்கள்.தீவிர இலக்கியம் செய்வார்கள் வாழும் காலத்தில் புறக்கணிக்கப் பட்டாலும் மெல்ல அவர்கள் தங்கள் சாயுச்சியத்தை எப்படியோ அடைந்துவிடுகிறார்கள்.நடுவாந்திரங்களுக்கு இவ்வுலகமும் இல்லை அவ்வுலகமும் இல்லை.ஒரு எழுத்தாளன் அஞ்ச வேண்டிய இடம் இதுவே.அவர்கள்   சரித்திரத்தில் இன்னுமொரு பெயராக எண்ணிக்கையாக ஒரு அடிக் குறிப்பாக மட்டுமே ஆகி மறைகிறார்கள்.

நீங்களும் இன்னொரு இலக்கிய வியாதியாக மாறிவிட்டீர்களா என்று ஒரு நண்பர் அச்சம் தெரிவித்திருந்தார்.சமீபகாலமாக உங்கள் எழுத்து மிகுந்த இலக்கியத் தரத்துடன் இருக்கிறதே என்று இன்னொரு நண்பர்  வருந்தி இருந்தார்.அவர்களுக்கெல்லாம்  நான் சொல்லிக் கொள்ள விரும்புவது இது ஒரு தற்காலிகப் பின்னடைவு என்பதே.ஒரு மிகப் பெரிய பரப்பிய எழுத்தாளனாக ஆவதற்கு நான் மேற்கொண்டிருக்கும் கடினமான இந்தப் பிரயாணத்தில் எந்த சபலத்துக்கும் நான் இடம் கொடுக்கமாட்டேன் என்று உறுதி அளிக்கிறேன்.It is just an acute literary disorder.சீக்கிரம் குணமாகி பழைய படி மொக்கையாய் எழுத ஆரம்பித்துவிடுவேன்.கவலையை விடுங்கள்..ஆனால் பாருங்கள் பரப்பிய இலக்கியத்தின் பொற்காலம் முடிந்து விட்டது என்று ஜெமோவின் கோர்ட் சமீபத்தில்தான் தீர்ப்பு சொல்லியிருக்கிறது.அதுதான் சற்று கிலேசமாய் இருக்கிறது.

மேலும் நான் இலக்கியம் இலக்கியம் என்று மூச்சுக்கு மூன்று இலக்கியம் போடுவதற்கும் என்னுடைய படைப்புகள் இலக்கியமாக இருப்பதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.உதாரணமாக சமீபத்தில் .பாலகுமாரன் எழுத்தைப் பற்றி ஜெமோ விமர்சிக்கும் போது அவர் ஒரு காம எழுத்தாளர் என்பது போல் எழுதி இருந்தார்.எனக்கு அதைப் படித்ததும் ஒரு எழவும் புரியவில்லை.ஏன் எனில் பாலகுமாரன் காமம் என்பது என்ன காமத்தை எப்படி அணுக வேண்டும் என்றெல்லாம் கதாகாலேட்சபம் செய்து கொண்டிருப்பாரே தவிர அவரது ஒட்டு மொத்த படைப்புகளில் உள்ள காமம் சாரு போன்றவர்களின் ஒரு சிறு கதைக்கு உறை போடக் கூட காணாது.[இரட்டை அர்த்தம் உத்தேசிக்கப் பட்டதே]கனவுகள் விற்பவன் என்றொரு கதை.தாந்த்ரீகம் பற்றிய கதை .புகுந்து விளையாடி இருக்கலாம்.எத்தனை அல்குல் எத்தனை முலை போட்டாலும் கதையில் நியாயப் படுத்திக் கொள்ளலாம்.ஆனால் கடைசி வரை கதைப் பெண்  அதிகபட்சம் அடிவயிற்றைத் தடவுகிறாள் அவ்வளவுதான்.அதேபோல்தான் எனது இலக்கியமும்.இலக்கியம்னா அது பெரிய கடல்னா என்று பேசிக் கொண்டிருப்பேனே தவிர அது மாதிரி தவறு எதுவும் செய்துவிடமட்டேன்.

நண்பர் தெக்கிகாட்டான் என்னிடம் ரொம்ப ஜெமோவின் பாதிப்பு தெரிகிறது என்று எச்சரித்திருந்தார்.எனக்கு என்னவோ அவர்தான் ஜெமோவினால்  அதிகம் பாதிக்கப் பட்டிருப்பது போல தெரிகிறது.கடவுளைக் கடைசிவரை மறக்க முடியாத பெரியாரிஸ்ட் போல அவர் ஆகிவிட்டார் என நினைக்கிறேன்.அல்லது ஆறு தாண்டியும் இன்னமும்
பெண்ணை தனது மனதில் இருந்து இறக்கிவிடாத பௌத்தத் துறவி போல.

அதேசமயம் ஜெமோவை நான் தொடர்ந்து வாசிக்கிறேன் என்று சொல்லிக் கொள்வதில் எந்த நாணமும் கொள்ளவில்லை.அவர் பெரும்பாலும் பயன்படுத்தும்  மலையாளம் கலந்த குமரி வழக்கு மொழி இன்று நான் தினமும் புழங்கும் மொழி..அவர் கதைகளில் வரும் இடங்களை நிலப் பரப்பை நான் தினமும் கடந்து செல்கிறேன்.இலக்கியம் தவிர வரலாறு.யட்சிகள்,இந்திய தத்துவம் போன்ற அவரது ஆர்வங்களில் எனக்கும் ஆர்வம் உண்டு.அதேசமயம் அவற்றில் எனது நிலைப்பாடு பெரும்பாலும் அவரது நிலைபாட்டுக்கு நேர் எதிர்.[அவரது தளங்களில் எனது பின்னூட்டங்களில் இதைக் காணலாம்]நான் ஆர்வம் கொண்டுள்ள இந்தத் துறைகளில் பொருட்படுத்தும்படியான கட்டுரைகளை அவர் மட்டுமே இன்று தொடர்ந்து எழுதுகிறார்.மற்றவர்களெல்லாம் எந்திரன் படத்துக்கு பத்துப் பக்க விமர்சனம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.ஆகவேதான் அவர் சொல்வதில் பலவற்றில் உடன்பாடு இல்லை எனினும் தொடர்ந்து வாசிக்கிறேன்.மெல்ல மெல்ல எனக்கான தர்க்கங்களை  உருவாக்கிக் கொள்ள இது உதவுகிறது.ஆனால் இது அவரது பஜனைக் குழுவில் நானும் சேர்ந்துவிட்டேன் என்று சிலரால் புரிந்துகொள்ளப்படுகிறது என அறிகிறேன். நீங்கள் வாசிக்கும் ஜெமோ சாரு போன்றவர்கள் இலங்கைப் பிரச்சினை போன்ற தருணங்களில் ஏன் மௌனகுருவாகி விட்டார்கள் என்று அவர் கேட்டார்.எனக்கும் இதில் தனிப்பட்ட வருத்தம் உண்டு.இவர்களால் வணிகப் போலியாக அறியப் படும் பாலகுமாரன் கூட இலங்கைப் பிரச்சினையில் தனது கருத்தைத் தெரிவித்திருந்தார்.சமீபத்தில் கூட தமிழர்களுக்குச் செய்த கொடுமைக்கெல்லாம் பதிலாக இலங்கை சீனர்களின் கையில் சிக்கிச் சீரழியும் என்று குறி சொல்லி இருந்தார்.ஆனால் இதை ஒற்றை அளவு கோலாக  வைத்துக் கொண்டாள் ஜெமோ சாரு மற்றும் பல தீவிர இலக்கிய வாதிகளைவிட அவரைத்தான் மேலான இலக்கியவாதியாக கொண்டாட வேண்டி வரும்.


மேலும் எனக்கு மலையாளத்திலிருந்து வரும் எதன் மீதும் ஒரு கவர்ச்சி உண்டு.நான்அதிகம் புழங்குகிற இடமாய் அது இருப்பதால்.இது முற்றிலும் புவியியல் சார்ந்த ஒரு சாய்வு.மலையாள இலக்கியம்,மலையாளப் படங்கள்,மலையாளப் பெண்களின் தெங்கிள முலைகள் எல்லாம்  எனக்குப் பிடிக்கும்.[ஆனால் மலையாள  ஆண்களை எனக்குப் பிடிக்காது.ஆகவே மலையாளிகள் நமக்கு செய்யும் துரோகங்கள் பற்றிய சுட்டிகளை எனக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டுகிறேன்]ஜெமோ,சு ரா  போன்றோரை நான் அதிகம் வாசிப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.நாகூரிலோ மதுரையிலோ பிறந்து புழங்குபவர் ருசி வேறுவிதமாக இருக்கக் கூடும்..

உலகைப் புரட்டி சமூக மாற்றத்தைக் கொண்டுவர வேண்டாமா இலக்கியம் அவ்வாறு செய்யாத இலக்கியம் என இழவுக்கு என்று யாரேனும் சொல்லலாம்.இலக்கியம் சமூக மாற்றத்தைக் கொண்டு வரலாம்.ஆனால் அது உபவிளைவே.அவ்வாறு மாற்றத்தைக் கொண்டு வந்த படைப்புகள் எல்லாம் அந்த உத்தேசத்தில் எழுதப் பட்டவை அல்ல.அதனால்தான் பிரச்சார முன் நோக்கத்துடன் எழுதப் பட்ட படைப்புகள் எதுவும் காலத்தில் நிற்கவில்லை.நல்ல படைப்பாளி எப்போதும் சரியான அல்லது நியாயமான அரசியல் நிலைப்பாட்டை எடுப்பவனாகவும் இருப்பான் என்று நாம் என் எதிர்பார்க்கிறோம் என்றே எனக்குப் புரியவில்லை..சமீபத்தில் திருவனந்தபுரம் புத்தகக் கண்காட்சியில் நெருதாவின் சுயபுராணம்[பின்னே..நானும் இலக்கியவியாதி ஆகி விட்டேன் இல்லையோ] வாங்கினேன்.அதில் நெருதா  தான் இலங்கைத் தமிழ்ப் பெண் ஒருத்தியை பட்டுப் புடவை கொடுத்து கவிழ்த்த கதையை விவரித்திருக்கிறான்.அதிலும் அவள் பாட்டாளி வர்க்கம் வேறு என்று அறிந்தபோது எனது பச்சைத் தமிழ் ரத்தம் சிகப்பாய் கொதிப்பதை என்னால் தடுக்கவே முடியவில்லை.ஆனாலும் எளவு அவன்
நல்ல கவி என்ற எனது கருத்தை அது மாற்றவில்லை.

ஆகவே நண்பர்களே ஒரு இலக்கியக் குடிகாரனின் பாவமன்னிப்புப் படலம் இத்துடன் இப்படியாக முடிகிறது..இதை ஏற்றுக் கொண்டு தீவிர இலக்கியவாதி என்ற பழிச் சொல்லில் இருந்து  என்னை விடுவித்து விடும்படி கேட்டுக் கொள்கிறேன்.

அனுபந்தம்
புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய மேலும் சில புத்தகங்கள்

India -A million mutinies now-V.S.Naipaul
The Historian-Elizabeth kostova
White Mughals
Nine lives -both by William Dalrymple
கடைசிப் புத்தகம் மிக அற்புதமான புத்தகம் என சிபாரிசு செய்கிறேன்.Paul theroux ற்கு
பிறகு நான் ஆழ்ந்து படித்த ஒரு பயண இலக்கியம்.அங்கே இட்லி சாப்பிட்டேன் இங்கே புட்டு என்ற வகை பயண இலக்கியம் அல்ல.பல இடங்களில் இயல்பாய் கண்ணீர் பொங்குவதைத் தவிர்க்க முடிய வில்லை.இந்தியாவின் இன்றைய நிலை பற்றிய ஒரு அனாயசமான குறுக்கு வெட்டுத் தோற்றத்தை இந்நூல் அளிக்கிறது.தமிழில் கட்டாயம் மாற்றம் செய்யவேண்டிய புத்தகம்.கிழக்கு கவனிக்க..

டிஸ்கி-இந்தக் கட்டுரையை எழுதியதும் படித்துப் பார்த்தேன்.பாதி எனக்கே புரியவில்லை.மீதியால் யாருக்கும் எந்த உபயோகமும் இல்லை எனத் தோன்றியது.ஆஹா..நீங்கள் சந்தேகப் பட்டது உண்மைதான் போல் இருக்கிறது.நான் இலக்கிய வாதி ஆகிவிட்டேன்.

Sunday, November 14, 2010

வந்தியத் தேவனின் காதல் ..

இப்போதெல்லாம்
என் கவிதைகளைப் படித்துவிட்டு
யாராவது என்னைத்
தேடி வந்துகொண்டே இருக்கிறார்கள்..
ஆனால் ஒவ்வொருவரும்
வெவ்வேறு மனச் சித்திரத்தோடு வருகிறார்கள்.
சிலர் மார்புவரை
தத்துவத்தாடி நுரைத்துத்
தொங்கும் கிழவனாக
என்னை உருவகித்துக் கொள்கிறார்கள்..
அவர்கள் வாழ்வு முழுதும்
ஒற்றைச் சொல்லில்
தங்கள் துயர் அனைத்தையும்
துடைத்தெறிந்துவிடும்
ஒரு குருவைத்
தேடி அலைபவர்கள்
என யூகிக்கிறேன்
சிலர் என்னை
எப்போதும் புகையும்
துப்பாக்கியுடன் திரியும்
புரட்சிக் காரனாக
கற்பனை செய்து கொள்கிறார்கள்
அவ்வாறு வருபவர்கள்
பனியன்களில்  இருந்து மட்டும்
பத்து விதமான
சே குவேராக்களை நான் அறிவேன்.
இன்னும் சிலர் 
மலர்மை  கொஞ்சும்
ஒரு பெண்ணை எதிர்பார்த்து வருகிறார்கள்
அவர்கள் என்னுடன்
'சேர்ந்து '
ஒரு கவிதை எழுதும்
கனவோடு வருகிறார்கள்
வேறு  சிலர்
ஏதாவது பெரிய குற்றம் ஒன்றைச்
செய்துவிட்டு வருகிறார்கள்
அவர்கள் எதிர்பார்த்து வருவது
பாவ மன்னிப்புத் தண்ணீருடன்
ஒரு பாதிரியை ...
பெண்களில் அநேகம் பேர்
செத்துப் போன
அவர்கள் அப்பாக்களைத்
தேடியே வருகிறார்கள்
அல்லது
அவர்களைத் துரத்தும்
இருத்தலில் இருந்து விடுவித்து
மார்பு நெருங்க
அணைத்துத் தூக்கி
குதிரை மேல்  இருத்தி
காவிரிக்கரை முழுதும்
செலுத்திப் போகும்
ஒரு வந்தியத் தேவனாய் நான் இருப்பேன்
என்று கற்பனையில் வருகிறார்கள்
எனக்கு சைக்கிள் கூட
ஓட்டத தெரியாது
என்று தெரிந்ததும்
அவர்கள் திரும்பி வருவதே இல்லை
பெரும்பாலான நபர்களை
கீழ்வீட்டுப் பெண்மணியே
அப்படி யாரும் இல்லை
என்று விரட்டிவிடுகிறாள்
அவள் எனை
யார் முகமும்
பார்த்துப் பேசாத
மூன்றுமாத வாடகை தராத
சந்தேகக் கஞ்சாக் கேசாகவே
அறிந்திருக்கிறாள்
இருப்பினும் அவளையும் மீறி
யாராவது வந்துவிடுகிறார்கள்
இதோ இப்போது கூட
யாரோ அழைப்பு மணியைத்
துன்புறுத்துகிறார்கள்
கணினியில் இருந்து
இந்தக் கவிதை காயாத கையுடனே
எழுந்து கதவு திறக்கிறேன்
நீலப் பூக்கள்
ஒழுகும் சுடியில்
ஒட்டகச் செருப்பில்
திகிரிக் கண்ணாடிக் கடியில்
எண்ணெய்த் துளிகள் போன்று
மினுங்கும் கண்களுடன்
வந்தவள் கேட்கிறாள் ..
''மிஸ்டர் வந்தியத் தேவன்?''

Thursday, November 11, 2010

சிலரே தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்..

இன்றும் அது
நான் அலுவலகம் செல்ல
வெளிப்படுகையில்
வாசல் அருகே காத்திருந்தது
நான் சினந்து
நேற்றே உன்னை வராதே
என்றேனே எனக் கத்தினேன்
குற்றம் செய்துவிட்ட குழந்தை போல்
அது தலை குனிந்து நின்றது
நான் புறக்கணித்து
அலுவலகம் போனேன்
போன உடனே
உங்களுக்காக வெகுநேரம்
யாரோ காத்திருகிறார்கள்
என்றான் பையன்
வரவேற்பறையில் புத்தகங்கள் 
படித்துக் கொண்டு ..அதுவேதான்!
என்னை வேலை செய்ய
விட மாட்டாயா  என்று
கண்ணீர் மல்கினேன்
நான் இதற்கு சரியான
ஆள் அல்ல
என்று விளக்கிப் பார்த்தேன்
வேறு உத்தமமமான
ஆட்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்
குடும்பம் வேலை ஆரோக்கியம்
எல்லாவற்றையும் விட்டுவிட்டு
நீ சொல்வதை எல்லாம்
செய்து கொண்டிருப்பார்கள்
அவர்களைப்  பிடி என்றேன்
அது தளராமல்
'நான் உன்னைத் தேடித்தான் வந்தேன்
பலர் அழைக்கப் படுகிறார்கள்
சிலரே தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்'
என்றது.
ஐயோ என்று
நான் ஆவேசமாகக் கத்தியதற்கு
மொத்த அலுவலகமும் ஓடி வந்தது
விபரம் அறிந்து சினமுற்றார்கள்
ஒரு மனிதனை
நல்லவிதம் வாழவிடமாட்டாயா
என்று அதனுடன் சண்டைக்குப் போனார்கள்
அது கையில் வைத்திருந்த
புத்தகங்களைக் கிழித்து
கழுத்தைப் பிடித்து
வெளியே தள்ளினார்கள்.
அது வாசலில் ஒருகணம்
தயங்கி நின்றது
பின் தளர்வாய் நடந்து
வீதிகளில் தேய்ந்து மறைந்தது
தெரு முனையில் பைஜாமா
அணிந்த ஒருவரை அணுகி
அது ஏதோ பேசுவதை
ஜன்னலில் இருந்து கடைசியாய்க் கவனித்தேன்
 நீண்ட நாட்கள் கழித்து
என் வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தேன்
நீண்ட நாட்களுக்குப் பிறகு
மனைவி குழந்தைகளை நினைவு கூர்ந்து
பூவும் இனிப்பும்
மாலையில் வாங்கிப் போனேன்
அது வந்ததா
என்று மனைவியிடம் விசாரித்ததற்கு
எது எனறாள்.
நிம்மதியாய் உணர்ந்தேன் 
ஒரு நீண்ட கலவிக்குப் பிறகு
எல்லோரும் உறங்கிய பிறகு
கணினியைத் திறந்து
வெறுமனே அமர்ந்திருந்தேன்
சட்டென்று எழுந்து
ஜன்னல் திரை விலக்கி பார்த்தேன்
சில சமயம்
கீழே தோட்டத்து
பவழமல்லி நிழலில்
அது என் பார்வைக்காய்
ஏங்கி நின்றிருக்கும்
நிற்க வில்லை .
நான் திரும்ப கணினியின் முன்பு
கொஞ்ச நேரம் அபத்தமாய்க் காத்திருந்தேன்
அது வரவே இல்லை.
ஏனோ
கண்ணீர் பெருகி  
அழ ஆரம்பித்தேன்.

Tuesday, November 9, 2010

எழுத்து எனும் பிசாசு

இணையத்தில் நான் எழுத ஆரம்பித்து ஏறத்தாழ ஆறு மாதங்கள்தான் ஆகி இருக்கிறது.அதற்குள் ஏறக் குறைய 150 இடுகைகள் எழுதிவிட்டேன் என்று திரும்பிப் பார்க்க வியப்பாக  இருக்கிறது.பெரும்பாலும் கதை கட்டுரை கவிதை என்று படைப்புகள்தான்.சினிமா விமரிசனங்கள்.அறச் சீற்ற பாவனைக் கட்டுரைகள்.இலக்கிய மொக்கைகள்,இலக்கியமற்ற மொக்கைகள்,கோஷ்டி இலக்கியம் [சாரு vs ஜெமோ] இவை எதுவும் இல்லாமலே இந்த ஆறு மாத காலத்தைத் தாண்டிவிட்டதை சோனா கஞ்சிற்கு உறை அணியாமல்  போய் நோயில்லாமல் தப்பி வந்து விட்டதைப் போல் ஒரு  சாகசமாகவே கருதுகிறேன்.எது என்னைச் செலுத்துகிறது என்று யோசிக்க மேலும் மேலும் வியப்பே மிஞ்சுகிறது.இன்னும் நான் பிரபலம் இல்லை.என்னைத் தேடிப் படிப்பவர் சிலரே.ஆயினும்  சளைக்காமல் எழுதுகிறேன்.

உண்மையில் எழுதுவது என் உடல்நிலையையும் மண நிலையையும் வெகுவாகப் பாதிக்கிறது.என்னால் எதையும் உணர்வுப் பூர்வமான ஈடுபாடு இல்லாமல் எழுத முடிவதில்லை.சில கவிதைகளை,கதை அத்தியாயங்களை  யோசிக்கும் போதே தன்னை மீறி விம்மி கண்ணீர் வந்து என்னடா இது ரொம்ப டி ராஜேந்தர்த்தனமா  இருக்கே என்று நானே வெட்கி இருக்கிறேன்.ஆனால் இதுவே என் நிலை.எழுதுவது  என் உடல் நிலையை வெகுவாகப் பாதிக்கிறது.நான் எப்போது  தீவிரமாக எழுத அமர்ந்தாலும் என் வயிற்று தசைகள் எல்லாம்  இறுகி  இரண்டு மூன்று முறை டாய்லட்  போய் விடுமாறு ஆகி விடுகிறது.அடிக்கடி அங்கு போகிறேன் எனில்  என் மனைவி என்ன பெரிய கவிதையா என்று கேலி செய்யும் வரை ஆகிவிட்டது.உடல் தத்துவம்,கண்ணி போன்ற சில தொடர்களை அந்தரத்தில் தொங்க விட்டிருப்பதன் காரணம் கற்பனை வறட்சியினால்  அல்ல.அவை உணர்வுப் பூர்வமாக என்னை வெகுவாகப் பாதிக்கக் கூடிய அத்தியாயங்கள் ஆக இருப்பதால் தான்.இரு வாரங்களுக்கு முன்பாக அகத்தியர் அத்தியாயத்தை நடு இரவில் எழுந்து மிகுந்த படைப்பு  ஊக்கத்துடன் எழுதியதில் கடுமையான வயிற்று வலி ஆகி ஒரு நாள் முழுக்க  தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தேன்!வலி நிவாரண ஊசிகள் எல்லாம் போட்டும் வலி குறையாததால் பயம் வந்துவிட்டது.அந்த அத்தியாயத்தில் அகத்தியரைப் பற்றி சற்று கேலியாக எழுதி இருந்ததில் அவர் எதுவும் கோபித்துக்  கொண்டு விட்டாரோ  என்று கிலி ஆகி குணம் அடைந்து வெளியே வந்தவுடன் சதுரகிரி வருவதாக வேண்டிக் கொண்டிருக்கிறேன்.எழுத்து எவ்வளவு அபாயங்களைக் கொண்டு வருகிறது என்று பாருங்கள்.

சுஜாதாவைப் பற்றிக் குறையாக சுஜாதா ஏன் இலக்கியம் இல்லை எனில்  அவர் உணர்வு ஈடுபட்டுடன் எழுதுவதில்லை என்கிறார் ஜெயமோகன்.இதைச் சொன்ன போது அவருடன் சண்டைக்குப் போனேன்.எனக்கும் இப்போது யோசிக்க அது சரியெனத் தோன்றுகிறது.சுஜாதா மொழிவித்தகர். ஆனால் அவர் எழுத்து சுதந்திர  தினம் மற்றும் குடியரசு தினங்களில் ராணுவம் செய்யும் பேரேட் போலதான் ..அவர் அந்த மொழியை வைத்துக் கொண்டு நிஜப் போருக்குப் போகவே இல்லை .இணைய நண்பர்கள் அப்பாதுரை, ஆர் வி எஸ் எழுத்து பற்றியும் இதே கருத்து உண்டு.இவர்கள் மொழி அபாரமாக இருக்கிறது.வாழ்வை நுணுகி ஆராயும் கண் இருக்கிறது.ஆனால் அதை வைத்துக் கொண்டு இவர்கள் கொசு அடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.ஏன் எனத் தெரிய வில்லை.அவர்கள் இந்த உணர்வு ஈடுபாட்டை அஞ்சுகிறார்கள் என்றே எண்ணுகிறேன்.தவறில்லை.சுஜாதாவே அப்படித்தான்.இந்த ஒரு காரணத்தினாலேயே பாலகுமாரனை அவர் எவ்வளவோ விசயங்களில் தத்தியாக இருந்தாலும் நான் விரும்புகிறேன்.மனுஷன் நெஞ்சுக் கூட்டுக்குள் கையை விட்டு உங்கள் இதயத்தைப் பிசைந்து விடுவார்.மனுஷன் எல்லா விசயத்தையும் நாபிக் கமலத்திலிருந்துதான் பீல் பன்னி எழுதுவார்.

நான் அஞ்சான்கிளாசிலேயே எழுத ஆரம்பித்துவிட்டேன் என்று சொன்னால் நம்பமாட்டீர்கள்.ஆனால் உண்மை அதுவே.தமிழ்வாணன்  படித்துவிட்டு கிடைத்த சாணிக் காகிதங்களைப் புத்தகம் போல் சுருட்டி தொப்பியும் கண்ணாடியும் வரைந்து கெய்ரோவில் சங்கர்லால் என்று யோசித்து யோசித்து எழுதி வைத்திருந்ததை ஒரு எழுத்தறிவில்லா  அ- இலக்கிய ஆடு  ஒன்று  தின்றுவிட்டது..அதன் பிறகு முப்பது வயது வரை ஏதாவது நான் எழுதாத நாளே இல்லை.ஆனால் ஒன்று கூட பிரசுரம் ஆகவில்லை.ஏன் எனில் ஒன்று கூட அனுப்பவில்லை!.அனுப்பாததற்கு காரணம் சொன்னால் நீங்கள் சிரிக்கக் கூடும்.சிறு வயதிலிருந்தே எனக்குள் தபால் நிலையங்கள் வங்கிகள் போன்ற  அரசு அலுவலகங்கள் மீது  பெரும் அச்சம் இருந்தது.அவற்றின் மீது இன்னும் எனக்கு அச்சமும் பிரமிப்பும் உண்டு. இன்று நானே ஒரு அரசு அலுவலனாக ஆகிவிட்டாலும் கூட..மிகச் சிறு வயதிலிருந்தே நான் அதீத  கூச்ச உணர்வும் தாழ்வுணர்வும்  உடையவன்.என் தம்பிக்கும் இது இருக்கிறது.ஒருவேளை குடும்பத்தில் ஓடுகிறது போல.ஒரு தடவை ஆனந்த விகடனுக்கு கதை அனுப்பப் போகையில் ஸ்டாம்பு போதாது என்று அங்கிருந்த ஊழியர் ஏதோ சொல்லி விட கூனி குறுகி  கண்ணீர் மல்கி நின்றது நினைவிருக்கிறது.இந்த அதீத கூச்ச உணர்வினால் என் வாழ்வில் நல்ல வேலை, காதல் என்று பல விசயங்களை இழந்திருக்கிறேன்.இந்த தொட்டால் சிணுக்கம் குறைய முப்பது வயதாயிற்று.இன்னும் முழுதாய் மாறவில்லை .இன்று உளவியலில் அது ஒரு குறைபாடாக அறியப் பட்டு சிகிச்சை முறைகள் வந்திருக்கின்றன.ஆனால் அன்று இதெல்ல்லாம் சொல்லி தெளிவாக்கிவிட ஆள் இல்லை..மனுஷ்ய புத்திரனை அவரது துவரங்குறிச்சி கட்டிலிலில் இருந்து தூக்கிவிட நண்பர்கள் வந்தது  போல எனக்கும் யாரேனும் கிடைத்திருந்தால் சற்று வெளிச்சம் கிடைத்திருக்கக் கூடும்.

என்னுடைய பதட்டத்துடன் நான் போராடி வெளி வர ஏறக்குறைய முப்பது வருடம் ஆகிவிட்டது,ஆனால் இதற்குள் நான் எனது எழுத்துக் காய்ச்சலை இழந்திருந்தேன்.இது வரை எனது எழுத்தை பதின்மத்தில் சந்தித்த தோழி ஒருவர் மட்டுமே படித்திருக்கிறார்.நானும் அவளும் மாறி மாறி கவிதை எழுதி விமர்சித்துக் கொள்வோம்.புத்தகங்கள் பரிமாறிக் கொள்வோம்.சுஜாதா எங்கள் கனவு எழுத்தாளர்.அவரது பிரிவோம் சந்திப்போம் எங்கள் கனவுப் புத்தகம்.நான் அதற்கு சினிமா ட்ரீட்மென்ட் கூட ஒன்று சுமாராய் செய்து வைத்திருந்தேன்.நாங்கள் பிரிந்து வேறு திசைகள் போனோம்.அவர் திருமணத்திற்கு அப்புறம் இசை இலக்கியம் எல்லாம் ஒரு பெண்ணுக்கு தகுதிகள் அல்ல தடைகள் என்று கண்டு கொண்டார்.இப்போது வாராந்தரிகளில் நாப்கின் விளம்பரங்கள் கூடப் படிப்பதில்லை.நெடுநாள் தொடர்பே இல்லை.போன வருடம் தீபாவளி  என்று திடீர் என்று போன்.''பிரிவோம் சந்திப்போம்.பார்த்தியா''எனறாள்.நான் ட்ரீட்மென்ட் எழுதி வைத்திருந்த சுஜாதாவின் நாவல் வேறு யாரோ படமாய் எடுத்திருந்தார்கள்.அன்றைய டிவி படம் அதுதான்.மோசமில்லை.ஆனால்  அது  என், எங்கள் படம் இல்லை .நாங்கள் சற்று நேரம் மௌனமாய் இருந்தோம்.நான் மீண்டும் எழுத ஆரம்பித்தேன்.

மிகச் சமீபத்தில்தான் இணையத்துக்கு வந்தேன்.இலவசமாகத் தராங்களே என்றுதான் எழுத ஆரம்பித்தேன்.மெல்ல மெல்ல அது என்னை ஒரு பழைய பிசாசு திரும்ப வருவது போல் பிடிப்பதை உணர்கிறேன்.எதிர்பாராத நேரங்களில் எல்லாம் அது  என் உச்சியைப் பிடித்து உலுக்குகிறது.தூக்கம் இழக்கச் செய்கிறது.மனைவியோ குழந்தைகளோ பேசுவது காதில் விழாமல்  காய்ச்சல் கார விழியுடன் கேளாத ராகத்தைக் கேட்கும் முயற்சியில் பாகிரதியை பேனா முனைக்குக்  கொண்டு வரும் முயற்சியில் பித்து கொண்டவன் போல் என் வீட்டிலேயே அன்னியனாகத் திரிகிறேன்.முதலில் இந்தக் கணினியை நிறுத்து என்று கூச்சலிடுகிறாள் மனைவி.சரியெனத் தோன்றினாலும் கேட்பதில்லை.ஏதோ உலக  இலக்கியம்  படைக்கப் போவது போல  போல உண்மையிலேயே உயிரைக் கொடுத்துதான் எழுதுகிறேன்.இந்தக் கிறுக்கல்களுக்கே இத்தனைப் பாடு என்றாள் ஜெயமோகன்,சாரு  போன்றவர்களை யோசிக்க மலைப்பாக இருக்கிறது.என்னைப் பொறுத்தவரை இது உயிரோடு கரும்பு மெசினுக்குள் போய் வருவது போல அவர்கள்  தினசரி போய் வருகிறார்கள்.இத்தனை புத்தகங்களுக்கும் போன மாதம் முடிந்த இரண்டாவது பை பாசுக்கும் அப்புறம் பாலகுமாரன் இன்னும் 1500 பக்கங்கள் உடையாரின் அடுத்த பாகம் இருக்கிறது என்று பேட்டி கொடுக்கிறார்!

இதன் நடுவில் பாரதி ,ஷெல்லி  எல்லாம் சின்ன வயதிலேயே செத்துப் போனது யதேச்சை இல்லையோ என்று வேறு  ஒரு சிந்தனை.இது பைத்தியக்காரத் தனம் என்று அவ்வப்போது பின்மண்டையில் ஒரு குரல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அதுவும் மத்திய வயதில்.இது நான் சம்பாதிக்க வேண்டிய நேரம்.இதற்கு விழிக்கிற விழிப்பை சிந்துகிற புத்தியை பங்கு வணிகத்திலோ தொழிலிலோ செலவழித்தால் ..என்று யார் யாரோ புத்தி சொல்கிறார்கள்.அக்கறையுடன்தான் சொல்கிறார்கள்.கொஞ்சநாள் அதையும் செய்து பார்க்கிறேன்.செத்த பெண்ணைப் புணர்வது போல் இருக்கிறது.

ஆனால் கொஞ்சம் சரித்திரத்தைப் புரட்டினால் கூட இந்த பிசாசு பிடித்தவர்கள் நிறைய பேரைக் காணமுடிகிறது.பாரதியில் இருந்து.கைக் காசு,வாழ்நாள் எல்லாம் செலவழித்து அபிதான சிந்தாமணி எழுதிய சிங்காரவேலு முதலியார்,போலிஸ் ஆபிசில்  குமாஸ்தா பணியில் இருந்து கொண்டே ஐந்து பாகத்தில் சித்த மருத்துவ அகராதியை வாழ்வு முழுவதும் எழுதி எந்த அங்கீகாரமும் பெறாது போய்ச் சேர்ந்த சாம்பசிவம் பிள்ளை போன்ற அகராதி எழுத்தாளர்கள் முதல் சி சு செல்லப்பா வரையான  எத்தனையோ சிறு பத்திரிக்கை எழுத்தாளர்கள்.வழியெங்கும் விழுந்து கிடக்கும் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை மிகப் பெரிது.இன்னும் ஒரு எலும்புக்கூடாய் மாற நான் ஏன் துடிக்கிறேன் என வியக்கிறேன்.அதே சமயம் இவர்கள் பேரெல்லாம் இழுத்துப் போட்டுக் கொள்வதால் என்னுடைய எழுத்தின் தரம் பற்றிய பிரமைகள் எதுவும் எனக்கில்லை என்று சொல்லிக்  கொள்கிறேன்.நான்  இப்போதுதான் மண்ணைக்  கீறி இருக்கிறேன்.வலு இருந்தால் முளைத்து வருவேன்.அல்லது எத்தனையோ பழைய பேப்பர்க் கடைகளில் கிடைக்கும் எண்ணற்ற காகிதம் நிரப்பிகளில் நானும் ஒருவனாய் ஆவேன். 

சரி ரொம்ப சுய  புராணமாகப்  போய் விட்டது.எழுத்து,படைப்புத்திறன்  பற்றி எல்லாம் ஆர்தர் கோஸ்லர் The act of creation என்று  நல்ல  புத்தகம் ஒன்று எழுதி  இருக்கிறார்.அதில்  இந்த  அவஸ்தைகள்  பற்றி  எல்லாம்  விவரித்ததை  பாளையங்கோட்டை மைய நூலகத்தில்  மரம் இன்னும் மணக்கும் ராட்சத மேசைகளில் சாய்ந்து கொண்டே படித்திருக்கிறேன்.எழுதி விட்டு அவனும் அகாலமாய் [தற்கொலை]செத்துப் போனான் என்றே நினைவு.இந்த எழுத்தெனும் தெய்வம் வாங்கி இருக்கும் பலிகளின் வரிசை பெரிது.on writing என்று ஸ்டீபன் கிங் அற்புதமான ஒரு புத்தகம்  எழுதி இருக்கிறார்.தமிழில் எழுதுவது பற்றி ஜெமோதான் அவ்வப்போது எழுதுவார்.எழுதுவது எப்படி என்று ரா கி ரங்கராஜன்  புத்தகம் எழுதி கொஞ்ச நாள் கிளாசும்  எடுத்தார் என்று நினைவு.எழுத விரும்புகிறவர்கள் எல்லாம் கட்டாயம் தவிர்க்க வேண்டிய புத்தகம்.

கடைசியாக ,நடித்துக்  கொண்டிருக்கும் போதே மேடையில்  என் உயிர் போய் விட வேண்டும் என்று சிவாஜி சொன்னதாக கேள்விப் பட்டிருக்கிறேன்.அந்த மாதிரி போன நடிகர்கள் உண்டு.அது போல்,எழுதிக் கொண்டிருக்கும் போதே செத்துப் போன எழுத்தாளர்கள் உண்டா  என்ன..அது போல் இதுவரை யாரும்செய்துவிடவில்லை எனில் சரித்திரத்தில் அந்த  இடத்தை  நான் முன்பதிவு செய்து கொள்ள விரும்புகிறேன்.
இன்ஷா அல்லாஹ்...

Monday, November 8, 2010

ரத்தக் கறை படிந்த கவிதை

இந்தக் கவிதையில்
பச்சை ரத்தத்தின்
வாசனை அடிக்கலாம் உங்களுக்கு ..

ஏனெனில்
இப்போதுதான் ஒரு காதலை
மறுத்து விட்டு வந்திருக்கிறேன்
வாழ்வின் முதன் முறையாக
சொருகப்பட்ட கத்தியின் மறுபுறம்
நானில்லை என்பதை
நிம்மதியாக  உணர்ந்தேன்
ஆனால் பொறுங்கள்
என்னைக் குற்றம் சொல்ல
உங்களுக்கு அதிகாரம் இல்லை
உங்களால் மறுக்கப் பட்ட
காதல் கடிதங்களும்
என்னைத் தவிர வேறு யாரும்
வாசிக்காத கவிதைகளும்
என் வீட்டுப் பரணில்
மறைக்கப் பட்ட பிணங்கள் போல்
இன்னும் அழுகிக் கொண்டிருக்கின்றன
அவற்றின் விஷக் காற்றில்
நான் இன்னமும்
நள்ளிரவில் சுடுகாட்டுநாய் போல்
அலறிக் கொண்டே இருக்கிறேன்

என் முறை
இனி இவ்வுலகில்
வரவே வராது என்றிருந்த போதுதான் 
அவள் வந்தாள்..
இங்கு சர்ப்பங்களை நேசிப்பவர்களும் இருக்கிறார்கள்
என்பதை
அவளைக் கண்ட பிறகே  உணர்ந்து கொண்டேன்
கொஞ்சம் கொஞ்சமாய்
ஒரு பார்த்தீனியச் செடி போல
அவள் மனதில்
நான் வளர்வதை
புன்னகையுடன் கவனித்துக் கொண்டிருந்தேன்
அதை அழிக்க
நான் எதுவும் செய்யவில்லை
ஏன் செய்ய வேண்டும்?
இது என் முறை..
கள்ளி எனத் தெரியாமலே
கள்ளி வளர்ந்தது
கவிதை செய்து
கனவு நெய்து
இன்று காலை
பூவுடன் வந்து நின்றது
நான் மறுப்பெனும்
விஷத்துடன் தயாராக இருந்தேன்..
நிராகரிப்பை நம்பவே முடியாது
மெல்ல அவள்
கண்ணிலிருந்த கனல்
அணைந்து சாம்பாலாவதை
மனம் கரைந்து
உடல் தளர்ந்து
நடந்து போவதை
பார்த்தேன்
இனி அவள் இறக்கும் வரை
அவள் நினைவில் கடுக்கும் முள்ளாய்
நான் இருப்பேன்
என்ற திருப்தியுடன் வந்து
இக்கவிதையை எழுதுகிறேன்
ஆம்
உங்களில் சிலருக்கு
இக்கவிதையில்
உடைந்த ஒரு இதயத்திலிருந்து
ஒழுகிய உதிரத்தின்
உப்பு வீச்சம்
அடிப்பதாய்த் தோன்றினால்
 அது சரிதான்.

Sunday, November 7, 2010

பராபரக் கண்ணி['பின்' நவீனத்துவச் சுவை]

குண்டு போட்டாலும் தாங்குவேன்
ஜன்னல் இல்லா
பத்துக்குப் பத்து
மேன்சன் அறையில்
ஏழு ஆம்லேட்
பனிரெண்டு வெங்காயத் தோசைக்கு
அப்புறம்
ஒற்றையாய் மாட்டிக் கொண்ட
என் மேல்
குசு போட்டால்
தாங்குவேனோ பராபரமே ...

Saturday, November 6, 2010

சுருதி

எப்போதும் போல
இந்தக் கவிதையின்  மறுநுனி
உங்கள் கையில் இருக்கிறது
கயிறு இழுக்கும் போட்டி போல
இது  பல சமயம் ஆகிவிடுகிறது
என்பதை அறிந்திருக்கிறேன்
பெரும்பாலும் நான்தான் துவங்குகிறேன்
ஆனால் நீங்கள்தான்
அநேகமாய் முடிக்கிறீர்கள்
கவிதைக்குள் நான் வைக்காத
கண்கள் உங்களுக்கு மட்டும்
எப்படியோ கிடைத்துவிடுகின்றன
சிலசமயம் என் உயிரிலிருந்து
பிறந்த இசையைக் கேட்காமல்
புறக்கணித்து விடுகிறீர்கள் 
பல சமயங்களில்
நான் அழுத இடத்திலெல்லாம்
நீங்கள் சிரித்து வைக்கிறீர்கள்
நான் புன்னகைத்த வரிகளில்
ஏனோ புரண்டு புரண்டு அழுகிறீர்கள்
எப்போதாவதுதான்
இருவரும் சுரம் சேரும்
கவிதை வந்து சேர்கிறது
இருவர் சுவர்களும் விழுந்து
சட்டென்று  வெளிச்சம் வந்த அறையில்
முதன் முதலாய்க் கண்டதும்
தோன்றும் வியப்பு போல
பட்டாம் பூச்சி
இறகை நிறுத்தி
மீண்டும் அசைக்கும்
ஒரு நொடிக்குள்ளாகவே 
நிகழக் கூடும்
அந்த உத்தேசத் தருணத்துக்காகவே
நீங்களும் நானும்
வேறு வேலை செய்யாமல்
தூங்காமல்
கூடாமல்
ஊடாமல்
புரட்சி செய்யாமல்
சமாதானம் பேசாமல்
கடவுளுடன் கதறாமல்
கம்யூனிசம் பண்ணாமல்
இந்தக் கவிதையை
எழுதிக் கொண்டும்
படித்துக் கொண்டும் இருக்கிறோம்

Friday, November 5, 2010

பூவை


i promise, originally uploaded by bee hives.


என்னுடைய படைப்புகளை விட அவற்றுடன் நான் இணைக்கும் படங்கள் பரவலான கவனம் பெறுவது எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்துவது உண்டு..ஆகவே அதில் சிலரது வேண்டுகோளுக்கிணங்க வலையில் என்னைக் கவர்ந்த படங்களை சிறு குறிப்புகளுடன் வெளியிடுவதென முடிவு செய்திருக்கிறேன்.இவை பெரும்பாலும் என்னால் எடுக்கப் பட்ட படங்கள் அல்ல.ஆனாலும் ரசனையின் கண் உள்ளவர்களுக்கு இவை பிடிக்கும் என்ற நம்பிக்கையுடன்...

Wednesday, November 3, 2010

இந்தக் கவிதையில் நீங்கள் உட்கார முடியாது ..

என்னிடம்
ஒரு நாற்காலி இருந்தது
அதன் பெயர் ஜிம்மி
ராஜ பாளையத்தில் வாங்கியது
என்னிடம்
இன்னுமொரு நாற்காலியும் இருக்கிறது
அதுவும் ராஜ பாளையத்தில்
செய்ததுதான்
ஆனால்
அதற்கு ஏனோ
எந்தப் பெயரும் இல்லை
ஜிம்மியைப் போல
அது இங்கும் அங்கும்
அலைவதில்லை
வருசத்துக்கு
இரண்டு குட்டி போடுவதில்லை
மார்பில் ஏறி
மூக்கை நக்குவதில்லை
எப்போதும்
என் எதிரில் நின்றுகொண்டு
என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறது
இதுவரை நான்
அதைப் பொருட்படுத்தியதே இல்லை
ஆனால் முதல் முறையாக
எல்லோரும் போன பின்பு
என்னிடம் இன்று பேசியது
என்னைச் சற்று
உட்கார  வைக்க முடியுமா என்றது
என் வலது முழங்கால்
ரொம்ப வலிக்கிறது என்றது
நான் பிறந்ததில் இருந்து
நின்று கொண்டே இருக்கிறேன்
நீங்கள் எல்லோரும்
போன பிறகும் கூட
கால் கடுக்க நிற்கிறேன் என்றது
எனக்கு அதன் பிரச்சினை புரிந்தாலும்
நாற்காலிகளின் மேல் உட்காரமுடியுமே தவிர
நாற்காலிகளால் உட்கார முடியாது
என்று நான் விளக்கினேன்
ஜிம்மிக்கும் நான்கு கால்கள் தானே
என்று அது வாதித்தது
எனக்கும் நியாயம்தானே
என்று தோன்றியது
நான் இது பற்றி
நிரம்ப யோசித்தேன்
நண்பர்களிடமும் விவாதித்தேன்
அவர்கள்
நான் குடிக்கவில்லை என்று
உறுதி செய்து கொண்டு
மருத்துவரிடம் அழைத்துப் போனார்கள்
அவருக்காக காத்திருக்கையில்
அங்கிருக்கும் பணக்கார பஞ்சு நாற்காலியும்
அறிமுகம் செய்து கொண்டு என்னுடன் பேசியது
அந்த டாக்டருக்கு
எல்லோரையும் பைத்தியம்
என்று சொல்லும் வியாதி
வந்திருக்கும் ரகசியத்தை
அதுதான் சொன்னது

நான் தப்பித்து ஓடிவந்து
பஸ் சிற்கு காத்திருக்கையில்
இரண்டு காலுமற்றவன்
ஒருவன்
தரையைத் தேய்த்துக் கொண்டு வந்து
பிச்சை கேட்டான்
அவனிடம்  என் நாற்காலியின்
கால்வலி பற்றி சொன்னேன்
அவன் அது எல்லாம் கனவு என்றான்
யார் கனவு என்றதற்கு
நாற்காலியும் நானும்
அவனும் சேர்ந்து காணும் கனவு என்றான்
சொல்லிக் கொண்டிருக்கையிலேயே
அவன் ஆயிரங்கால் பூச்சியாக மாறி
பூமியைத் துளைத்துப் போவதைப் பார்த்தேன்
பஸ் வந்ததும்
பதறி ஏறி அமர்ந்தேன்
பிறகே கவனித்தேன்
ஆளற்ற அந்தக் கடைசிப் பேருந்துள்ளே
என்னிடம் பேசுவதற்காக
இன்னும் பல நாற்காலிகள்
ஆவலுடன் காத்திருந்தன...


[டிஸ்கி-சல்வடோர் டாலியின் நினைவாக]

Tuesday, November 2, 2010

கொக்கைன்

ஊர் உறங்கி விட்டாலும்
இரவெல்லாம்
ஒற்றையாய் விழித்திருந்து
ஊளையிடும் அனாதைத் தெருநாய்போல
குரைத்துக் கொண்டே இருக்கும்
இந்த மனத்திலிருந்து
ஓடி விட மிக விரும்பினேன்

உக்கிர கோடையில்
புழுக்க வீட்டிலிருந்து
கதவு திறந்து
திண்ணைக்குப் போய்விடுவது போல
பிடிக்காத சினிமாவிலிருந்து
வெளியேற முடிவது போல
சரியாய் வராத கவிதையை
அப்படியே விட்டுவிடுவது போல

வெளியேற முடிந்தால்...
என்று ஏங்கினேன்

அந்தி இறங்கும் நேரத்தில்
ஆவாரம் பூக்கள்
நுரைத்திருந்த
இருப்புப் பாதை ஓரம்
நிழலாய் வந்தவன் தந்தான்
'இது மௌனத்தின் சாவி'என்றான்
முதல் தொடுகையில்
எந்தக் குமிழும்
வெடிக்க வில்லை
ஆனால் மெல்ல
குரல்கள் யாவும்
மழை தீர்ந்த ஈசல்கள் போல்
உதிர்ந்து விழுவதைக் கவனித்தேன்
அல்லது வீதி வளைவில்
ஓடி மறையும்
வாகனங்கள் போல
தொலைந்து போயின
சட்டென்று ஆளற்றுப் போன
சாலை போல் ஆனது மனது
எப்போதும் அர்த்தமற்று
மதிய நேரத்தில்
கத்திக் கொண்டிருக்கும்
புழக்கடைக் காகம் போல

பிதற்றிக் கொண்டிருக்கும்
என்னை விட்டுவிட்டு
தெருவில் இறங்கி
தொலைந்தே போனவர்களில்
நானும் இருந்தேன்..

LinkWithin

Related Posts with Thumbnails