Thursday, September 8, 2011

ஸ்ட்ரைக்கர் 1

ஒற்றைச் செருப்பு எங்கே என்ற தமிழ்வாணனின் புத்தகத்தைப் படித்திருக்கிறீர்களா?மணி மொழி என்னை மறந்துவிடு?கருநாகம்?பேய் பேய்தான்?இவை எல்லாவற்றையும் டவுன் மார்க்கட் நடுவில் இருந்த முனிசிபாலிட்டி நூலகத்தில்தான் நான் படித்தேன்.சந்தையின் தினசரி இரைச்சல் நடுவே நானும் பரமு அக்காவும் வேடிக்கை பார்த்துக் கொண்டே மார்க்கட்டுக்கு எதிரே இருந்த கடைகளில் இஞ்சி சேர்த்த கரும்புச் சாறும் குடித்துவிட்டு போய் புத்தகம் எடுத்துக் கொண்டு வருவோம்.தமிழ்வாணன் மட்டுமல்ல லட்சுமி ஹேமா அனந்த தீர்த்தன்,பி வி ஆர். போனவர்களும் படித்தேன்.ஆனால் தமிழ்வாணன் தான் முதல்.

பரமு அக்காவின் முழுப் பெயர் பரமசிவம்.ஆண் பிள்ளைப் பெயர்தான்.ஆனால் பிள்ளைமார் வீடுகளில் பெண்களுக்கும் வைப்பார்கள்.ஆறுமுகம் என்று கூட வைப்பார்கள்.அதே போல் ஆண்களுக்கு கோமதி பார்வதி என்று பெண் பெயர்களும் வைப்பதுண்டு.பரமு அக்காவின் அப்பா மார்க்கட்டில் வாழை மண்டிக் கமிசன் வைத்திருந்தார்.விடி காலையிலேயே எழுந்து போனார் எனில் நடுராத்திரிதான் வீட்டுக்கு வருவார்.பத்தரை மணி வாக்கில் நானும் பரமு அக்காவும் அவருக்கு சாப்பாடு தூக்குச் சட்டியில் கொண்டு போவோம்.அதாவது நான் பள்ளி போகாத நாட்களில்.அக்கா சமைந்தவுடன் ஆச்சி பொட்டப்புள்ள இப்படி ஊர்க் காட்டில விரிச்சிகிட்டுப் தனியா போறது நல்லா இல்லைன்னு சொல்லித் தடுத்துவிட்டாள்..அப்போது நான் ஒன்பதாம் வகுப்பில் இருந்தேன்.இரண்டுங்கெட்டான் பருவம்.ஒருநாள் அக்கா என் தொடையைத் தடவி இனிமே நீ வேஷ்டி அல்லது பேண்ட் போட்டுட்டு வா என்றதும் வெட்கப் பட்டு ஒருவாரம் அவள் வீட்டுக்குப் போகாமல் இருந்தேன்.


அக்கா அழகு.அதுவரை நான் பார்த்த பெண்களிலேயே என்று சொல்லவேண்டுமோ.மாநிறம்தான்.ஆனால் மாநிறப் பெண்கள் அழகாக இருந்தால் மிக அழகாக அமைந்துவிடுகிறார்கள்.நான் பார்த்த பிள்ளைமார்ப் பெண்களுக்கெல்லாம் முன்பல் இரண்டும் வாய்க்கு வெளியே தேங்காய்த் துருவி போல நீட்டிக் கொண்டிருக்கும்.அவ்வாறு இல்லாவிடில் அவர்கள் வழி சுத்தமான பிள்ளைமார் அல்ல என்று எனது ஆச்சி சொல்லக் கேட்டிருக்கிறேன்.அவ்விதம் பரமு அக்காவுக்கு இல்லாததே எனக்குப் பெரிய அழகாக தெரிந்தது.அவளுக்கு அரிசி மாதிரி பல்.ஆனால் அதைப் பார்க்க அதிகம் வாய்ப்பு கிடைப்பதில்லை.சிரிக்கும்போது உதடைக் கடித்துக் கொண்டுதான் சிரிப்பாள்.உதட்டுக்கு வரும் முன்பே அது கண்ணுக்கு வந்துவிடும்.அங்கிருந்து காட்டில் நெருப்பு பரவுவது போல அவள் கன்னத்தை முழுவதும் சிகப்பாக்கி நிதானமாகத்தான் உதடுகளை வந்தடையும் அப்போது உங்களுக்கு அவளைக் கட்டிப் பிடித்துக் கொள்ளவேண்டும் போல இருக்கும்.ஒருதடவை சொல்லியே விட்டேன்.அவள் ''அடி''என்று செல்லமாக சிரித்தாள்.''உங்க அம்மைகிட்ட சொல்லி உனக்கு சீக்கிரம் ஒரு பொண்ணு கட்டிக்க''

.அப்படி கட்டினால் நான் உன்னைத்தான் கட்டுவேன் என்று வாய்வரை வந்துவிட்டது.ஒரு மாதிரி கன்றுக் குட்டிக் காதல்.நான் ரொம்பக் கிட்டத்தில் பார்த்த முதல் பெண் அவள் என்ற காரணமாய் இருக்கக் கூடும் என்றாலும்..இன்று நான் நினைக்கையிலும் என் நினைவில் அவள் அழகு தேய்ந்துவிடவில்லை.நாங்கள் இருவருமே நகராட்சிப் பெண்கள் பள்ளியில்தான் படித்துக் கொண்டிருந்தோம்.அங்கு ஐந்தாம் வகுப்புவரை பையன்களுக்கும் அனுமதி உண்டு.அதன் பிறகு நான் சாப்டர் ஸ்கூலுக்குப் போய்விட்டேன்.ஒன்தாம் வகுப்பில் அக்கா சமைந்தாள் .பேட்டைக்குப் போகிற சாலை வளைவில் இருந்த நயினார் வகை மண்டபத்தில்  வைத்து பெரிய அளவில் சடங்கு செய்தார்கள்.அன்றுதான் முதன் முதலாக பாயாசத்தில் பூந்தி கலந்து சாப்பிடுவதைப் பார்த்தேன்.அதன்பிறகு அவள் பள்ளிக்குப் போவதை நிறுத்தி விட்டார்கள்..அதன் பிறகு ஒரு வருடம் கிட்ட அவளை நான் வீட்டுக்கு வெளியே பார்க்கவே இல்லை.ஒரு நாள் அம்மா ''ஆச்சியிடம் உரைக்கு மோர்வாங்கி வா என்று அனுப்பியபோதுதான் மீண்டும் நான் அவளைப் பார்த்தேன்.அழி போட்ட முதல் அறையில் இருந்து ஆச்சி ஆச்சி என்று நான் கத்திக் கொண்டிருக்க அக்கா உள்ளிருந்து வந்தாள்.''ஏன் இப்படி கத்துதே.என்ன வேணும் ஆச்சிக்கு உடம்பு சரியில்லை.தூங்குதா 'என்ற படி வெளியே வந்தாள்.நான் ஒரு கணம் அப்படியே கல்லால் அடித்தது போல நின்றுவிட்டேன்.அக்காவா இது?சிகப்புப் பாவாடை தாவணியில் வேறு ஆள் போல இருந்தாள்.முகத்தில் லேசாய் மஞ்சள் பூசி இருக்க காதோரம் பூனை மயிர் இரங்கி கை வைத்த ஜாக்கட் வைத்து இடுப்பில் புதிய வளைவுகள் வந்து கொலுசு எல்லாம் அணிந்து அசையும்போதேல்லாம் அது சிதற....

''ஏலே ஏன்னா?இப்படிப் பார்க்க..என்ன வேணும்?""
நான் தடுமாறி ''மோரு..அம்மா கேட்டாங்க''
''ஆமா மோரு கேட்கற லட்சணத்தைப் பாரு''
அவள் மோர் எடுத்துக் கொடுக்கும்போது ''பரமுக்கா நீ ஆளே மாறிட்ட''என்றேன் மெதுவாய்.
அவள் வேறெங்கோ பார்த்து ''ம்க்கும்.என்ன மாறிட்டனாம்"'என்றாள்
பிறகு ''அது கிடக்கட்டும்.வீட்டில உட்கார்ந்து உட்கார்ந்து போரடிக்குது...லைப்ரரில இந்தப் புத்தகத்தைக் கொடுத்துட்டு வேற ஏதாவது எடுத்திட்டு வருவியா"'என்றாள்.நான் சரி என்றேன்.

லைப்ரரியன் என்னைக் கண்டதுமே கொதிப்படைந்து ''ஏலே எங்கலே உங்க அக்கா?புத்தகம் எடுத்திட்டுப் போய்ஆறு மாசமாச்சு..ஆபிசரு என் உசிர எடுக்கான்''என்றார்.

''நான் ''அக்கா சமைஞ்சிடுச்சு''சார்.''என்றதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.''சமைஞ்ச புள்ளைக்கு எதுக்குல கதைப் பொஸ்தவம்?பேசமா குப்புற அடிச்சுப் படுத்துக்கச் சொல்லு''என்று அந்த புத்தகத்தையும் பிடுங்கி வைத்துக் கொண்டார்.

நான் திரும்பி போகையில் ஆச்சி முன் அறையில் உட்கார்ந்து கல் அரவையில் எதையோ திரித்துக் கொண்டிருக்க .''பரமு மச்சில இருக்கா போய்ச சொல்லு''என்றாள்.நான் மரப் படிகள் அதிர மச்சு ரூமுக்குப் போனேன்.அங்கு லைப்ரரியன் சொன்னது போலவே அவள் கட்டிலில் குப்புறப் படுத்துக் கொண்டு ராணி படித்துக் கொண்டிருந்தாள்..என்னைப் பார்த்ததும் எழுந்து கொண்டு ''என்னடா பொஸ்தகம் வாங்கிட்டு வந்தியா''என்றாள் ஆவலுடன்.
நான் ''தரமட்டேன்னுட்டான்''என்றதும் ஒருகணம் அவள் முகம் வாடியது.''போறான எழவெடுத்தவன்'என்றவள் ஒரு கணம் யோசித்து ''உனக்கு உடனே போகனுமா''என்றாள்
நான் ''இல்லியே ஏன்''
''கேரம் போர்ட் வெளாடுவோமா''
''கேரம் போர்டா ..எங்க இருக்கு''
''இருக்கே''என்று அறை மூலையில் சாய்த்து வைத்திருத்த கனமான கேரம் போர்டை தூக்கி வந்தாள்.
அப்படித்தான் எங்கள் விளையாட்டு ஆரம்பித்தது.லீவு நாட்களில் முழுக்க அவள் வீட்டில்தான் கிடந்தேன்.வெறி பிடித்தது போல் விளையாடிக் கொண்டே இருந்தோம்.சில நாட்களில் அங்கேயே சாப்பிட்டுக் கொண்டேன்.எப்போதும் அங்கு ஸ்ட்ரைக்கர் போர்டை மோதும் ஒலி டக் டக் என்று கேட்டுக் கொண்டே இருந்தது.அந்த மூன்று நாட்களில் மட்டும் ஆச்சி ''அவளுக்கு உடம்புக்கில்லை.மூணு நாள் கழிச்சு வா''என்றுவிடுவாள்.அந்த நாட்களில் எல்லாம் பித்து பிடித்தது போல இருப்பேன்.''அதென்ன சரியாக உனக்கு மாதத்தில் மூன்று நாட்கள் உடம்பு சரியில்லாமல் போய் விடுகிறது என்று கேட்டதற்கு அவள் முகம் சிவந்து ''அது அப்படித்தான்''என்றாள்.

கேரம்போர்டில் அவளது திறமை ஆச்சர்யமூட்டுவது.ஒரு தடவை கூட அவளை என்னால் ஜெயிக்க முடிந்ததில்லை.சில நேரங்களில் எனது முகவாட்டம் பார்த்து அவளே விட்டுக் கொடுத்து விடுவாள்.சைனிஸ் கட எல்லாம் அடிக்கத் தெரியும் அவளுக்கு.

கேரம்போர்டு தவிர அவளிடம் ஒரு மர்பி ட்ரான்சிஸ்டர் இருந்தது.அது மௌனமாய் இருந்து நான் பார்த்ததே இல்லை.எப்போதும்  சளசளவென்று பேசிக் கொண்டோ பாடிக் கொண்டோ இருக்கும்.''அதுக்கு கட்டை வங்கியே சொத்தெல்லாம் போயிரப் போகுது என்று ஆச்சி சலித்துக் கொள்வாள்

பரமு அக்கா அழகாகிக் கொண்டே போவதை நான் நேரடியாகவே உணர்ந்தேன்.என் கண் முன்னாலேயே அவள் மாபெரும் அழகியாகிக்  கொண்டிருந்தாள்.அது அவளுக்கும் தெரிந்திருந்தது.மார்புகள் விரிந்து மெல்லிய சிவந்த பருக்கள் முகத்தில் எழும்ப...ஒரு நாள் நான் போனபோது ஆச்சி இல்லை .அவள் கீழே பின்கட்டிலிருந்து சிந்தால் சோப்பு வாசனையோடு நெஞ்சோடு ஒட்டிய ஈரப பாவாடையோடு வந்து ''குளிச்சிட்டிருந்தேன்''என்று கடந்து போனாள்..அலமாரியில் இருந்து துவர்த்தை எடுக்கும்போது உயர்ந்த கைகளுக்கிடையே தெரிந்த மெல்லிய ரோமக் கற்றையும் கூடவே எழும்பிய மார்புகளும் மூச்சடைக்கவைத்தன.அடுத்த அறையில் அவள் ஈர உடைகளைக் களையும் ஒலிகளைக் கெட்டுக் கொண்டு தணல மேல் இருப்பது போல் நின்றிருந்தேன்.
ஆடை மாற்றிக் கொண்டு கூந்தலை நீர் சிதற உதறிய படியே வெளியேவந்தவளின் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றிருக்க 'ஏலே என்னத்தைப் பார்க்கே ?'
''ஒண்ணுமில்லை''
''ஒன்னுமில்லாததையா இப்படி விழுந்து விழுந்து பார்க்கே''என்று சிரித்தாள்.அன்று முழுவதும் எனக்கு ஆட்டத்தில் கவனமே இல்லாமல் மைனஸ் மைனசாகப் போட்டுக் கொண்டிருந்தேன்.


ஏனோ அன்றிரவு எனக்கு காய்ச்சல் வந்துவிட்டது.சாதாரணமாய்த் தொடங்கிய காய்ச்சல் எதற்கும் அடைபடாமல் ஒரு மாதம் வரை இழுத்து டைபாய்டு என்று பின்னால் கண்டு பிடித்து டவுன் சர்க்கார் ஆஸ்பத்திரியில் ஊசி மேல் ஊசியாய் போட்டுத் தேற்றி அனுப்பி வைத்தார்கள்..இடையில் ஒரு தடவை அக்கா வீட்டுக்கு வந்து என்னைப் பார்த்தாள் ''எலே என்னா எதைக் கண்டு பயந்தே''என்று சிரித்த போது ஏதோ உளறினேன்

திரும்ப அவளைப் பார்க்க சரியாக மூன்று மாதமாகிவிட்டது.

ஆச்சி ''ஏலே நால்லாயிடுச்சா உடம்பு .பரமு மேல இருக்கா போ'''என்றாள்.
பரமு அக்கா என்னைக் கண்டதும் சட்டென்று எழுந்துவந்து என்னை அப்படியே அணைத்துக் கொண்டாள் .அவளது வெப்பமான மூச்சு மார்பின் மீதேறி போவதை நான் என் முகத்தில் உணர்ந்தேன்.அவள் மார்பு நடுவிலிருந்து கோகுல் பவுடரின் வாசனை நாசியை நிறைத்தது.பின்னர் விலக்கி ''ச்சீ''என்று சிரித்தாள்.''அய்யோ நீ இப்ப பெரிய பிள்ளைல்லா...இல்லே?"'.

நான் கேரம்போடு விளையாடுவோமா என்று கேட்டேன்.சரி என்றாள்.ஆனால் முன் போல் அவள் விளையாட்டில் அதிக கவனம் செலுத்தவில்லை என்பதை கவனித்தேன்.தொடர்ச்சியாக மைனஸ் போட்டுக் கொண்டிருந்தாள்.அடிக்கடி தட்டட்டிக்குப் போகும் சிறிய வாசலைப் பார்த்துக் கொண்டால்.அங்கிருந்து பார்க்க அடுத்த வீட்டின் தட்டட்டியும் மச்சு அறையும் தெரியும்.ஏன் இங்கிருந்து தாவி அங்கு போய் விடக் கூட முடியும்.அங்கு யாரைப் பார்க்கிறாள் என்று எனக்குத் தெரியவில்லை.அந்த வீட்டின் கீழ் தளத்தில் ஒரு வாசிங் பவுடர் கம்பனியின் குடோன் மட்டுமே இருந்தது.மச்சு அறையின் வாசல் எப்போதும் பூட்டியே கிடக்கும்

ஆனால் மறுநாளே அந்த அறை திறந்துகிடப்பதை நான் பார்த்தேன்.அக்காவை ஆச்சி கூப்பிட கீழே போய் இருந்த போது தட்டட்டிக்குப் போக அங்கே அகலக் கண்ணாடி ஸ்டேப் கட்டிங் பெல்பாட்டம் பேண்ட பட்டைப் பெல்ட்டுடன் சரத்பாபு மாதிரி ஒரு ஆள் இங்கேயே பார்த்துக் கொண்டு புகை விட்டுக் கொண்டிருக்க என்னைப் பாத்ததும் திடுக்கிட்டு சட்டென்று வேறுபக்கம் திரும்பிக் கொண்டார்.

அதன்பிறகு பரமு அக்கா வேறு மாதிரி ஆகிவிட்டாள்.அவளுக்கு என்னுடன் கேரம் போர்டு விளையாடுவதில் விருப்பமே இல்லது போயிற்று.நான் மாடிஏறிப் போகும்போதெல்லாம் ஏதோ ஒரு கனவிலிருந்து விழித்துக் கொண்டது போல் பதற்றத்துடன் இருந்தாள்.ஒரு நாள் நான் போகும்போது கட்டிலில் படுத்துக் கொண்டே ஏதோ படித்துக் கொண்டிருந்தவள் பதறி எழுந்து அதை மறைத்துக் கொண்டாள்.அது ஏதோ ஒரு கடிதம் போல் இருந்தது. என்னைக் கண்டதும் சிடுசிடுத்து ''எக்சாமுக்குப் படிச்சிட்டியா நீ''என்றாள்
.
ஒரு நாள் மதியம் வாத்தியார் ஒருவர் இறந்துவிட்டாரென்று பள்ளி விட்டுவிட்டார்கள்.நான் ஆச்சி வீட்டுக்குப் போனேன்.ஆச்சி முன் அறையில் சேலையை விரித்து வாய்பிளந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.மேலே இலங்கை வானொலி கரகரத்துக் கொண்டிருந்தது.நான் ஏதோ ஒரு உள்ளுணர்வில் ஒரு பூனையைப் போல சத்தமிடாது படிகளில் ஏறிப் போனேன் ஆனால் உள்ளே முழுவதும் ஏறும் முன்பே நான் அறிந்துகொண்டுவிட்டேன்..சிலோன் ரேடியோவின் மங்கையர் மலரையும் மீறி கசிந்த மூச்சுசிதறல்கள் முனகல்கள் என்னை வந்தடைந்து விட்டன.அக்காவின் கட்டிலுக்கு எதிரே ஒரு கண்ணாடி வைத்த பீரோ இருந்தது.அது வழியாக எல்லாம் தெரிந்துவிட்டது.அக்கா இடுப்பில் மட்டும் ஒரு பச்சைப் பாவாடையோடு நின்று கொண்டிருந்தாள்.சரத்பாபு அவளைக் கட்டிப் பிடித்து முத்தமிட்டுக் கொண்டிருக்க அவன் தோளில் அவள் முகம் கண் மூடிக் கிடந்தது. நான் கண்ணீருடன் ஒரு யுகம் போல அந்த கண்களையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன்.
ஏதோ ஒரு வினாடியில் அந்தக் கண்கள் திறந்தன.சட்டென்று நேர் எதிரே கண்ணாடியில் தெரிந்த என் கண்களை சந்தித்தன.விரிந்தன.

நான் கீழிறங்கி வந்துவிட்டேன்.








Tuesday, August 30, 2011

ஈசலோடாயினும்...

1.ஒரு மழைநாளிரவில் 
பிறந்த
ஈசல் ஒன்று
சற்றே எம்பிப் பறந்தது
வானில் ..

பக்கத்தில் பறந்துகொண்டிருந்த
பறவையைப் பார்த்து
நானும் ஒரு பறவையென்று
பெருமிதம் கொண்டது

கொண்ட வினாடியே
ஆயுள் தீர்ந்து
விழுந்திறந்தது


2.விழுந்த ஈசல் 
இறக்கும் முன்பு நினைத்தது
ஒரு நாள் வாழ்க்கைக்கு
எதற்கிந்த சிறகு?


3.பறக்காத பொழுதும் 
பறவை
பறவையாகவே இருக்க
வாழ்நாள் முழுக்கப்
பறந்த போதும்
ஏனோ
ஈசல்
ஈசலாகவே இருக்கிறது

Sunday, August 28, 2011

ஒரு கடிதம்


அண்ணாச்சி,

                          நீங்கள் எழுதும் தொடரில் ஒரு பகுதிக்கும் அடுத்த பகுதிக்கும் இடையில் எவ்வளவு நாட்கள் இருக்கும். ஏன் இவ்வளவு தாமதம்? அரிவை அரண்ல அக்டோபர் மாசத்தோட அகத்தியர் நிக்கிறாரு. அமெரிக்க ரிஷி போன வருஷம் ஜூலை மாசத்தோட நிக்கிறாரு. அவருக்கு முன்னாடி  அடுத்த பகுதில வருவானான்னு தெரியாமலே  ரச்புத்தின் நிக்கிறாரு. ஒரு  கண்ணிக்கும் அடுத்த கண்ணிக்கும் இடையில் நீண்ட இடைவெளி, போலவே உடல் தத்துவமும். கமெண்ட் ரெம்ப கம்மியா வருதேன்னு யோசிக்கறீங்களா இல்ல நாம எழுதி யாரு படிக்கப்போறான்னு நினைப்பா? சொல்லுங்க ஒவ்வொரு பதிவுக்கும் கமெண்ட் போட்டு நிரப்பிடுறேன்.
நாங்க எவ்வளவு நாள்தான் காத்திருக்கிறது.
நீங்களே ஒரு ஞாயம் சொல்லுங்க..

நட்புடன்,
ராஜகோபால்.




அன்புள்ள ராஜகோபால் 
                             இந்தக் கேள்வி என்னிடம் அடிக்கடி கேட்கப் படுவதால் ஒட்டுமொத்தமாக எல்லோருக்கும் சேர்த்தே பதில் சொல்லிவிடுகிறேன்.
 நான் துண்டு துண்டாக எழுதுகிறேன் தொடர்களை அப்படியே விட்டுவிட்டுப் போய்விடுகிறேன் என்பது முக்கியமாக சொல்லப் படுகிறது இதற்கு சரியான காரணம் ஒரு மிருகம் இரைக்காக காத்திருப்பதைப் போலதான் நான் ஒரு படைப்புக் கணத்திற்காக காத்திருக்கிறேன்.இரை கண் முன்னால் வரும்போது மிருகம் பசித்திருப்பதும் முக்கியம்.எல்லா சமயங்களிலும் இது இசைந்து போவதில்லை.உணர்வெழுச்சி இல்லாமல் எதையுமே நான் எழுத விரும்புவதில்லை.முடிவதில்லை.ஒரு விஷயத்துடன் ஒன்றாமல் எதையும் உங்களால் படிக்க முடியுமா?படைப்பும் அது போலவேதான் எனக்கு.என்னைத் தூண்டாத எதையும் என்னால் எழுத முடியாது.அதற்கான தொழில் நுட்பம் என்னிடம் இல்லை.௦ஆனால் கவிதைகளை என்னால் அப்படி ''செய்ய'' முடியும் .குளத்தின் மீது வீசும் ஒரு கல் தத்தித் தத்திச் செல்வது போல ஒரு வார்த்தையை மனதில் எறிந்துவிட்டு அது எழுப்புகிற அலைகளைப் பார்த்துக் கொண்டே இருப்பேன்.அவற்றில் சில நல்ல கவிதைகளாக ஆவதும் உண்டு.கவிதைகள் பெரும்பாலும் எனது மறை மனதிலிருந்து வருகின்றன.அதன் மீது எனக்கு பெரிய கட்டுப்பாடு எதுவும் இல்லை.கட்டுப்படுத்த விரும்புவதுமில்லை.பலசமயங்களில் அது சிறுநீர் கழிப்பதைப் போன்றதுதான்.அதை நீங்கள் செய்தே ஆகவேண்டும்.வேறு வழியில்லை.ஒப்பிட நான் நிறைய கவிதைகள் எழுதுகிறேன் எனக் கவனித்திருப்பீர்கள்.தளத்தில் எழுதுவதை விட கூகிள பஸ்சில் நிறைய எழுதுகிறேன்.அது ஏறக்குறைய a quick fuck in the closet மாதிரிதான் .அதற்கு நிறைய சக்தியும் முன்னேற்பாடும் தேவைப் படுவதில்லை.ஒருவேளை இந்த மாதிரி நொறுக்குத் தீனி நிறைய சாப்பிடுவது தான் நீண்ட விருந்துக்கான பசியை மட்டுப படுத்துகிறதோ என்னவோ?

ஆனால் கதைகளும் கட்டுரைகளும் அப்படியல்ல.அவற்றின் மீது என் முழுக் கட்டுப்பாட்டையும் முழு ஈடுபாட்டையும் விரும்புகிறேன்.நான் நுணுக்கி நுணுக்கிச் செய்ய விரும்புகிற வேலை அது.ஏறக்குறைய ஒரு ராணியை அலங்கரிப்பது போன்ற வேலை..அதை கவிதைகள் போல் இடது கையால் எழுத விரும்புவதில்லை.அவை நேரடியாக படிப்பவர் குரல்வளையை நோக்கிப் பாயவேண்டும் .குறி தப்புதல்களை இவற்றில் நான் விரும்பவில்லை ஆகவே அதற்கான உணர்வெழுச்சி வரும்வரை காத்திருக்கவே விரும்புகிறேன்.

ஆனால் இவ்விதம் எழுதுவது எனது உடல் நிலையைப் பாதிக்கிறது என்று சொன்னால் உங்களுக்கு விநோதமாகப் படலாம்.ஆனால் உண்மை அதுதான்.கண்ணி உடல் தத்துவத்தின் உணர்ச்சிகரமான பகுதிகளை எழுதி முடித்த பிறகு நான் சமநிலைக்கு வர நிறைய காலம் பிடித்தது .இரண்டு தடவை ஐ சி யூவில் போய் இருக்க நேர்ந்தது/மேடம் போவரியில் கதா நாயகி ஆர்சனிக் தின்பதை எழுதும்போது ப்ளாபர்ட்டுக்கு விஷம் சாப்பிட்ட அறிகுறிகள் ஏற்பட்டன என்று சொல்வார்கள்.நான் நம்புகிறேன்.ஆகவே இவற்றை தொடர்ச்சியாக அதே தீவிரத்துடன் எழுதுவது என் உடல் நிலையையும் பொறுத்தது.


அரிவை அரன் தளம் எனது ஆன்மீகத் தத்துவ ஈடுபாடுகளுக்கு என்றே தனியாக ஆரம்பிக்கப் பட்டது.அது முற்றிலும் வேறு ஒரு மனநிலை.என்னால் அதில் இயங்கும்போது எழுத்துப் பிழையில் இயங்க முடியாது.இங்கு இயங்கும்போது அங்கு.ஜெயமோகனிடம் ஒரு தடவை கேட்டது போல இலக்கியத்தையும் தத்துவத்தையும் என்னால் ஒன்றாய் இணைக்க இன்னும் முடியவில்லை 

வாழ்க்கை ஒரு வேட்டை நாயைப் போல என்னை ஆன்மீகத்தை நோக்கித் துரத்திக் கொண்டே இருக்கிறது.ஆனால் நானோ அதனிடம் புனித பிரான்சிஸ் அசிசி போல ''வருகிறேன் கடவுளே வருகிறேன் ..ஆனால் உடனடியாக அல்ல..இத்தனை சீக்கிரமாக அல்ல'என்று சால்ஜாப்புகள் சொல்லிக் கொண்டு இலக்கியம் இசை கவிதை சினிமா என்று இடைச சந்துகளில் திரிகிறேன்.வேட்டை நாய் முயலை நெருங்கிவிட்டது.ஆகவே வெகு சீக்கிரமே அங்கும் எழுதுவேன் 


Thursday, August 25, 2011

ஒரு பறவைக் கணம்

அதிகாலை .
ப்ளூ ..........யிட்ட்ட்ட்...
என்று
பளிங்குத் தரையில் 

தண்ணீர் சிந்தியது
போலொரு குஞ்சு சத்தம் கேட்டுவிழித்தேன்
கருக்கலிருட்டில் ,
அரை ஒளியில்
ஒரு சிறிய குருவி
ஜன்னல்கம்பியில் ஆடியபடி
கழுத்தை மாற்றி மாற்றி
என்னையே பார்த்துக் கொண்டிருந்தது
அது பயந்து விலகிவிடாமல்
இருக்கும் பொருட்டு
நான் மூச்சடக்கிக் கிடந்தேன்

பறவை பறந்து போனபின்னும்... 
வெகுநேரம் 
நான் பறத்தலால் நிரம்பிஇருந்தேன் 

Monday, August 15, 2011

உடல் தத்துவம் 18


ஆனால் எல்லா அநீதியும் காலப் போக்கில் பழகிவிடுகிறது எனவே தோன்றுகிறது .நான் மறுநாளே செல்வியைத் தேடித் தனியாகப் போனேன்.செல்வி என்னைக் கண்டு ஆச்சர்யப் படவில்லை ''வா''என்றாள்.''நீ வருவேன்னு நினச்சேன்''
அன்று கொஞ்சம் சந்தோசமாக இருந்தது போல் இருந்தது காரணம் கேட்டதற்கு ''ஆங்.எனக்கு கல்யாணம் நிச்சயமாயிருக்கு. வந்த சோலியப் பார்த்துட்டு போவியா''என்று புடவையை அவிழ்க்க ஆரம்பித்தாள்
''ச்சை ...இதை கழட்டறதுக்கும் சுத்தறதுக்குமே பாதி வாழ்நாள் போகுது.சுத்தி சுத்தி வச்சிருக்கு எல்லாத்தியும் புண்ணு மாதிரி''
நான் ''செல்வி நான் உன்ன இங்கிருந்து காப்பாத்தறேன் ''என்றேன் 
அவள் கவனிக்காமல் உள்பாவாடையின் வெள்ளை முடிச்சை இழுத்துக் கொண்டிருந்தாள் '
நான் மறுபடியும் ''செல்வி உன்ன நான்...''

அவள் ''அரை  மணிதான் அடுத்த ஆளு வந்துடுவான் சீக்கிரம் வா''

நான் அவளது வெற்றுடம்பை மௌனமாய்ப் பார்த்துக் கொண்டிருக்க ' கண்களை உற்றுப் பார்த்து 'உனக்கு என் மேல ரொம்ப பாசம் பொத்து வழியுதுன்னா நாளைக்கு வரப்ப ஒரு பாட்டில் நம்ம ஊரு நாரத்தை ஊறுகாய் வாங்கிட்டுவா ..இங்கே எல்லாம் கடுகு எண்ணெயில பண்றாய்ங்க ஆக்கங்கெட்டவங்க..வாயில வச்சால குமட்டுது .பான்சோத்.அவன் சாமானும் சுத்தமில்லை ஊறுகாயும் சுத்தமில்ல''

நான்எரிச்சலடைந்து ''நான் சொன்னதைக் கேட்டியா''
அவள் ''பொத்திட்டு சோலியப் பாரு..என்ன .. ''என்றாள் 
எனக்கு அவள் கோபம் புரியவில்லை என்று சொன்னேன் 
அவள் சட்டென்று ஆங்காரமாய்த் திரும்பி ''உன்னால சரியாய் பிடிச்சு ஒழுகாம சோலி பார்க்கத் தெரில நீ என்ன இங்கிருந்து கொண்டுபோகப் போறியா ?வெட்டிப் போட்டுடுவாங்க புரிதா?''

நான் ''என்னால முடியும் செல்வி...நீ நினைக்கிற மாதிரி பால்ப் பையனில்ல நான்''
அவள்''ஹ..உன் கண்ணுலையே தெரியுது நீ ஒரு பால்ப் பையன்னு ..இல்லாட்டா வந்த இரண்டாவது நாள் இப்படி ஒரு கேள்வி கேட்கமாட்டே''

நான் அந்தக் பதிலால் மிக ஆழமாகச் சீண்டப் பட்டேன் ஏனோ ஊரில் ராமேஸ்வரி அத்தை நினைவு வந்தது அவளது கேலிப் பார்வை ..அவள் மட்டுமல்ல அதுவரை நான் சந்தித்த பெண்கள் எல்லார் கண்களிலுமே அந்தப் பார்வையைச் சந்தித்திருக்கிறேன்.உனக்கு உலகம் தெரியாது என்பது போன்ற இரக்கப் பார்வை ..
நான் எழுந்து மிகுந்த கோபத்துடன் அவளைக் கீழே தள்ளி அவள் மேல் பாய்ந்தேன் .முரட்டுத் தனமாய் அவள் கால்களை அகட்டி ''தேவிடியா தேவிடியா''என்று கத்திய படியே அவளுக்குள் புக முயன்றேன் அவள் சிரித்து ''ஏய் முட்டாள்..எங்க வைக்கிற உன் சாமான?'என்று கத்தினாள் 

என்னால் அதிக நேரம் இயங்க முடியவில்லை மூச்சிரைக்க பின்வாங்கி விழுந்தவனை அவள் ''சொன்னேன்ல""என்பது போல் பார்த்தாள் 
எழுந்து அவசரமாக உடுத்த ஆரம்பித்தவனை எழுந்து முழன்கையைப் பிடித்துக் கொண்டு''கோபமா''என்றாள். நான் உதற சட்டென்று முகத்தைப் படித்துத் திருப்பி அவள் தொடையின் உட்பாகத்தைக் காண்பித்தாள். கரும்சிகப்பில் நீளமாய் ஒரு தீற்றல். அதே போல் எதிர்த் தொடையிலும் இருந்தது ''இங்கே பார்''என்று உள்ளன்காலைக் காண்பித்தாள்.மற்றொரு தீற்றல் உற்றுப் பார்க்க பார்க்க அவள் உடம்பில் தீற்றல்கள் தோன்றி வந்துகொண்டே இருந்தன ''சூடு போடாத இடம் முகத்திலயும் சாமானிலயும்தான் ..பிசினெஸ் போயிடுமே..தப்பிச்சுப் போக முயற்சி பண்ண ஒவ்வொரு தடவையும் மூணுநாள் ஒட்டு துணி இல்லாம சாப்பாடு தண்ணி இல்லாம ரூம்ல அடைச்சு வச்சிருந்தாங்க..அப்புறம் ஒருவாரம் தூங்கவே விடாம தொடை முழுக்க ரத்தத்தால நனையறவரை கஸ்டமரை அனுப்பி வச்சுகிட்டே இருந்தாங்க ..புரிதா''என்றாள்.

நான் நிமிர்ந்து அவளைப் பார்த்தேன்.அவள் உடல் முழுக்க நடுங்கிக் கொண்டே இருந்தது நான் எழுந்து அவளை அணைத்துக்கொள்ள முயல ''விடுறா பன்னி''என்றாள். .கதவை யாரோ தடதடவென்று தட்டி ''ஜல்தி .நயா  கஸ்டமர் ஆகயி'''என்றார்கள். 

அதன்பிறகு நான் அவளைச் சந்திக்க முயலவில்லை 
ஆனால் அவள் சொன்னது நினைவில் தைத்து உறுத்திக் கொண்டே இருந்தது.யோசித்துப் பார்க்க என்னைச் சந்தித்த எல்லாப் பெண்களுமே இந்த செய்தியை ஏதோ ஒருவிதத்தில் என்னிடம் சொல்லிக் கொண்டே இருந்திருக்கிறார்கள் என்று தோன்றியது மேகி அத்தையிலிருந்து லீலா தாமஸ் வரை எல்லாருமே..அவர்கள் எல்லோருமே என்னை நேசித்தார்கள் ஆனால் ஒரு சிறுவனை நேசிப்பது போலதான் அது.பதிலாக வாழ்நாள் முழுவதும் நான் அவர்களுக்கு என் ஆண்மையை நிரூபிக்க முயன்றுகொண்டே இருந்தேன்.

ஏறக்குறைய பதினைந்து வருடங்களுக்குப் பிறகு நான் மீண்டுமொரு தடவை கொல்கத்தாவுக்குப் போக நேர்ந்தது.திடீரென்று வேலை இல்லாத ஒருநாள் மாலை சொனாகச்சிற்குப் போய் செல்வியைத் தேடினால் என்னவென்று தோன்றியது.போய்ப் பார்த்தேன்.சோனாகச்சி முன்பைவிட சத்தமாக முன்பைவிட வெளிச்சமாக முன்பைவிட கூட்டமாக முன்பைவிட அழுக்காய் இருந்தது முன்பைவிட வயது குறைந்த பெண்கள் பொருந்தவே பொருந்தாத முகப் பூச்சுடன் சிகப்பாக்கிக் காண்பிக்கப் பட்டப் பிஞ்சு உதடுகளுடன் உயர்த்திக் காண்பிக்கப் பட்ட மார்புகளுடன் ''ஆசோ ஆசோ ஏய் அமிதாப் ஏய் சாருக் ஏய்ய் கமல்ஹாசன் ''என்று கையை இழுத்துக்  கொண்டிருந்தார்கள்

திண்டுக்கல்செல்வியை யாருக்கும் தெரியவில்லை ஒவ்வொரு கட்டிடமாக ஏறி ஏறி இறங்கினேன்.''செத்துப் போயிருக்கும் சார்''என்றான் ஒரு ஆள் அலட்சியமாக.''பதினஞ்சு வருஷம்னு சொல்றீங்க.''

கடைசியில் ஒரு மலையாளப் பெண் தான் சொன்னாள்'நாகர்கோயில் என்றதும் அவளுக்கு என் மேல் கொஞ்சம் பாசம் வந்திருக்கவேண்டும்.அல்லது நான் நிறையப் பணம் கொடுப்பதாகச் சொன்னது.யோசித்து 'நிறைய இங்க்லீஷ் பரயுமோ அ சேச்சி?அச்சன் டாக்டர்னு பறையும் அல்லே ?''

அவள் என்னை அந்தக் கட்டிடத்தின் பின்பக்கம் அழைத்துப் போனாள்.பாதையெங்கும் சாக்கடைகள் பொங்கி வழிந்துகொண்டிருக்க அவற்றைத் தாண்டித் தாண்டிப் போனோம்.''யாரானு அது உங்களுக்கு?ரிலேடிவோ?''
கட்டிடங்களுக்குப் பின்னால் வரிசையாக குடிசைவீடுகள் இருந்தன ..வாசலில் கிடந்த கயிற்றுக் கட்டில்களில் நிறைய கிழவிகள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.சிலர் புகைத்துக் கொண்டிருக்க நிறைய அரவாணிகளையும் அங்கு பார்த்தேன்.அவர்கள் என்னை வெறுப்புடன் பார்த்தார்கள்.கொசுக்கள் ஒரு மேகம் போல எங்களைப் பின்தொடர்ந்துவந்தன.நான் அவற்றை அறைந்து கொண்டே அவளைப் பின்தொடர்ந்து போனேன்.மலையாளப் பெண் மூக்கைச் சுளித்துக் கொண்டே வந்தாள்.அவள் வாழும் நரகத்தைவிட கொடிய நரகம் ஒன்று இருக்கமுடியும் என நான் அதுவரை எண்ணியிருக்கவில்லை

கடைசியாய் அவளொரு குடிசையின் முன்பு நிற்பதற்குள் நான் சலித்திருந்தேன்..திரும்பிவிடலாம் என்று சொல்ல வாய் எடுக்கும் முன்பு அவள் நின்று ''போய் நோக்கு .இதானோ நீங்க தேடி வந்த ஆளுன்னு''

நான் தயக்கமாய் அவளைத் திரும்பிப் பார்க்க ''போய்நோக்கு..போ...சேச்சி அசுகத்திலானு''என்றாள்.நான் குடிசையை மூடியிருந்த சாக்குத் திரையை விலக்கி உள்ளே பார்த்தேன்.சட்டென்று ஒரு அழுகிய நாற்றம் என்னை வந்து அடைந்தது.நெடுநாளாய் மூத்திரமும் மலமும் சீழும் கலந்த நாற்றம் அது.மூக்கை கர்சீப்பால் மூடிக் கொண்டு உள்ளே பார்த்தேன்.மிகச் சிறிய அந்தக் குடிசையில் ஓரத்தில் ஒற்றை மஞ்சள் விளக்கினடியில் ஒரு கயிற்றுக் கட்டிலில் அவள் படுத்திருந்தாள்.உடம்பில் இருந்த தசைஎல்லாவற்றையும் உருக்கி யாரோ உரித்து எடுத்துவிட்டார்போல குழிவிழுந்த கண்களுடன் தலைமுடி எல்லாம் உதிர்ந்து சருமம் முழுவதும் பச்சையாய் பூசணம் போல பூத்து ஒரு குழந்தையைப் போல ஒடுங்கி யாரோ ஒருவர்.....நிச்சயம் அவள் இல்லை என்றே முதலில் நினைத்தேன்.இது யாரோ ஒரு சாகக் கிடக்கும் சீக்குக் கிழவி .

எனக்கு சட்டென்று அந்த மலையாளப் பெண் மேல் கோபம வந்தது.இவள் ஏன் இங்கு என்னைக் கூட்டிவந்தாள்?என்று எரிச்சலுடன் திரும்பும்போது தான் கட்டிலில் கிடந்த உருவம் அசைந்து ''கோன்?"'என்றது
நான் அப்படியே ஆணி அடித்தாற்போல் உறைந்தேன்.அந்தக் குரல் ?அப்படி இருக்குமா?இருக்கக் கூடுமா?
நான் திரும்பி ஒரே ஒரு நிமிடம்தான் அவள் கண்களைப் பார்த்தேன் அந்தக் கணத்தை என்னால் வாழ்வில் மறக்கவே முடியாது.அடிவயிற்றில் யாரோ திடீரென்று குத்தினார் போல வலியுடன் என் போதத்தில் ஒரு துளை விழுந்த தருணம் .அது அவள்தான்.எல்லாம் அழிந்து போயிருந்தாலும் சட் சட்டென்று கனன்றுபற்றிக் கொள்ளும் அதே அதே கண்கள்தான்.
''யாரு?""என்று மறுபடியும் அவள் கேட்க நான் சட்டென்று அந்தக் கண்கள் என்னைக் கண்டு பற்றிக் கொள்ளும் முன்பு பதறி விலகி வெளியே மூச்சிரைக்க ஓடிவந்தேன்.
வெளியில் நின்றிருந்த அந்தப் பெண் பான் பராக்கை வாயிலிருந்து துப்பிவிட்டு ''கண்டோ?இதானோ அது?"'என
நான் அவசரமாய் ''இதில்லை இதில்லை ''என்றேன் ,கைகள் நடுங்க குரல் நடுங்க கண்ணீர் வழிய ''இதில்லை இதில்லை''என்றேன் மறுபடியும் ''போவோம் போவோம்''
அந்தப் பெண் என்னை நெருங்கி ஒருகணம் உற்றுப் பார்த்தாள். ஒரு இகழ்ச்சியான சிரிப்பு மெல்ல அவள் உதடுகளில் படர்ந்தது.மீண்டுமொரு தடவை கீழே துப்பிவிட்டு ''செ...ரி....''என்றாள்.

Saturday, August 13, 2011

கோடு


எல்லா உறவுகளிலும்
இதற்கு மேல் வராதே
என்ற அறிவிப்பில்
நான் முட்டி நிற்கிறேன்
பல நேரங்களில்
புழக் கடையோடு
நிறுத்தப் படுகிறேன் .
சில நேரங்களில்
வாசற்படி வரை
செல்வதுண்டு.
மிகச் சில சமயங்களில்
கூடம் வரை
அனுமதித்து
குடிக்க ஏதாவது தருவதுண்டு .
ஆனால் எவர் வீட்டு
அடுக்களையிலும்
நான் அனுமதிக்கப் பட்டதில்லை .
படுக்கை அறையை
சிந்திக்கவே விடுவதில்லை .

மிக எளிதாக
ஒரு தேய்ந்த சொல்லில்
கடினமாகும் பார்வையில்
சட்டென்று இறுகும் புன்னகையில்
அவசரமாகத் துண்டிக்கப் படும்
தொலைபேசியழைப்பில்
எனக்கு செய்தி உணர்த்தப்பட்டுவிடும்
சட்டென்று சாத்தப் பட்டுவிடும்
இக் கதவுகளைப்
புரிந்துகொள்ள இயலாமல்
யுகங்களாய்
நீட்டிய கையில்
துடிக்கும் இருதயத்தோடு
அங்கேயே நின்றுகொண்டிருப்பதுண்டு

ஆனால் எல்லோரும்
தங்கள் எல்லைகளை விட்டு
படி இறங்கி வெளியேறுகையில்
தவறாது என்னைத் தேடுகிறார்கள் ....

அவர்கள் என்னிடம்
எதிர்பார்ப்பது
நட்பை அல்ல,
ஒரு நாய்க்குட்டியின் விசுவாசத்தை
என்று அறிந்துகொள்ள
நான் நிறைய
அழவேண்டியிருந்தது

Friday, August 12, 2011

பிடி

அன்றைய
கடைசி வாடிக்கையாளன் இயங்க
காலகட்டி படுத்திருந்தாள் சிறுமி
அப்போதுதான்
உயரத் தொடங்கியிருந்த
மார் மேடுகளைக்
குதறிக் கொண்டிருந்தான் அவன்

வந்தவனின் வியர்வை நாற்றம்
படுக்கையின் முடை நாற்றம்
வெயில் காணாத் தீட்டுத் துணிகள்
அறையில் புழுங்கும் நாற்றம் ...

நாற்ற ஜீவன்களை
உயரத்து ஜன்னலின்
கம்பிகளை விலக்கி
மெல்ல
எட்டிப் பார்க்கிறது நிலா

கிராமத்தில்
கூரை வழியே கசியும்
பழைய நிலவா இது
என்று வியக்கிறாள் சிறுமி


அந்த அறையில்
ஒரு ஜன்னலும்
அதற்கு வெளியே
ஒரு நிலவும்
இல்லாவிடில்
அவள் என்றோ இறந்திருக்கக் கூடும்

LinkWithin

Related Posts with Thumbnails