Friday, August 12, 2011

பிடி

அன்றைய
கடைசி வாடிக்கையாளன் இயங்க
காலகட்டி படுத்திருந்தாள் சிறுமி
அப்போதுதான்
உயரத் தொடங்கியிருந்த
மார் மேடுகளைக்
குதறிக் கொண்டிருந்தான் அவன்

வந்தவனின் வியர்வை நாற்றம்
படுக்கையின் முடை நாற்றம்
வெயில் காணாத் தீட்டுத் துணிகள்
அறையில் புழுங்கும் நாற்றம் ...

நாற்ற ஜீவன்களை
உயரத்து ஜன்னலின்
கம்பிகளை விலக்கி
மெல்ல
எட்டிப் பார்க்கிறது நிலா

கிராமத்தில்
கூரை வழியே கசியும்
பழைய நிலவா இது
என்று வியக்கிறாள் சிறுமி


அந்த அறையில்
ஒரு ஜன்னலும்
அதற்கு வெளியே
ஒரு நிலவும்
இல்லாவிடில்
அவள் என்றோ இறந்திருக்கக் கூடும்

8 comments:

meenakshi said...

என்றோ இறந்திருக்கலாம்.

அப்பாதுரை said...

my goodness!
இதைப் படிக்கத் தவறியது ஏன் (என்று தோன்றாதது ஏன்?)

படித்த பிறகு... மரத்துப் போன மனங்கள் சில நினைவுக்கு வருகின்றன. நிலவை நம்பி உயிர் வாழ்வும் ஒருவரையாவது அறிவேன் என்று தோன்றுகிறது.

Santhini said...

அந்த சிறுமியின் அறைக்குள் பயணம் செய்கிற மனம் எப்படி வாய்த்தது ?
என் பெருமூச்சிற்குள், வாழ்வுக்கு அர்த்தம் உண்டு என்கிற உளறல்கள் எல்லாம் சிதறிப் போகிறது.
குதறல் - வலிக்கிறது போகன். ஆணாய் பிறந்த என் மகன் மீது கூட வெறுப்பு படிந்து விடுமோ ?
--

bogan said...

இதை விட கொடூரமான விசயங்கள் இந்தியாவில் இலங்கையில் உலகில் நடை பெற்றுக் கொண்டேதான் இருக்கின்றன பெண்கள் மேல் குழந்தைகள் மேல் ....நான் உட்பட எல்லா ஆண்கள் கைகளிலும் இதன் ரத்தக் கறை இருக்கிறது .ஆண்கள் இயல்பிலேயே எட்டிப் பார்க்கும் இச்சை உடையவர்கள்.பெண்களின் உலகை அவர்கள் கண்கள் பின்தொடர்ந்துகொண்டே இருக்கின்றன .இந்தக் கண்களில் இருந்து முதுமையிலும் மரணத்திலும் மட்டுமே பெண்களால் விடுதலை பெற முடிகிறது .சிலசமயங்களில் அப்போதும் முடிவதில்லை

Santhini said...

பெண்ணின் வலிமை மகத்தானது என்பது உண்மை எனும் பட்சத்தில், ஒரு பெண்ணின் விடுதலை, அவளின் வலிமையைப் பொருத்து, அவள் வாழும் காலத்திற்குள்ளாகவே ஏதேனும் ஒரு புள்ளியில் அடையப் பட்டுவிடுகிறது. அதன் பிறகும் அப்பெண் வாழ்கிறாள். இருப்பதனால் வாழ்கிறாள்.
பெண்ணின் புரிதலில் ஆணின் தோற்கும் புள்ளிகளும் அடக்கமே. உலகம் முழுதும் பெண்ணின் மேல் அடக்குமுறை செலுத்தப் படுவதாக கருதப் பட்டாலும், அது ஒரு மாய பிம்பமே. அந்த பிம்பம் ஆண்களால் உருவாக்கப்பட்டு ஆண்களால் அனுபவிக்கப் படுவது. அந்த கருத்தாக்கத்தை பெண் கண்டு கொள்வதேயில்லை. உடலை அடிமை படுத்திவிட்டு, பெண்ணை வெற்றி கொண்டதாய் எக்களிக்கும் மனங்கள் தான் எங்கும் நிறைந்திருக்கின்றன.
உடலை தாண்டிய உண்மைகளை பெண் எளிதாய் இனம் கண்டு கொள்கிறாள். ஆண் உடலை தாண்ட முடியாது நின்று விடுகிறான்.
இந்த உண்மை எப்போதும் புரிந்திருந்தாலும், உங்கள் கவிதை படிக்கும்போது வெகுவாய் மனம் கசிந்து விட்டது.
(I changed my nick name "Nanum en kadavulum" into my original name Santhini)

Anonymous said...

உடல் வேறு, மனம்-ஆன்மா வேறு என்று பிரித்துப் பார்ப்பதெல்லாம் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் கை மைதுன சன்னியாசி ஜீவனம் அன்றி வேறல்ல. உடல் தினமும் தின்னப்படும்போது ஆன்மா இருந்தால் என்ன, செத்தால் என்ன ? உடலை அடிமைப்படுத்தும் கயவனுக்குத்தான் கடைசி வெற்றி. நீ மனத்தளவில் சுதந்தரப் பறவையாய்ப் பற, ஆனால் தினசரி எனக்காகக் கால் மட்டும் அகட்டு என்று உள்ளூர விஷமப் புன்னகை புரிகிறவனைக் காயடித்துவிட்டு உடல் விடுதலை பெற வேண்டும். அதுதான் நிஜ விடுதலை.
- அனுஷா

Santhini said...

You are right Anusha. உடல், மனது, ஆன்மா என்பதெல்லாம் வெற்றுக் கதையே. ஒன்றை விடுத்து மற்றொன்றில்லை.
மனம், ஆன்மா, உடல் என்று வேறுபடுத்தி அறியப்படுகிற தொகுப்பான, ஒரு மனுஷியின் விடுதலை என்பது, எதை நோக்கி இயங்குவதாக இருக்கக் கூடும்? சமுதாய கட்டுகளுக்குள் தம்மை உட்படுத்திக் கொள்கிற, ஒரு பெண், எதை நோக்கின பயணத்தை தனது விடுதலையாக கருதுவாள்? உடலை விடுவித்துக் கொண்டாலும், மனம் கண்ணுக்குத் தெரியாத பல சிறைகளுக்குள் அல்லவா சிக்கிக்கொண்டிருக்கிறது. பல கயவர்களிடமும் சிக்காமல் விடுதலை அடையும் சாத்தியம் பெண்ணுக்கு கண்டிப்பாய் உண்டு எனவே கருதுகிறேன். ஆனாலும் பெண் தனது சாத்தியங்களை ஆராய்ந்தே, தனக்கு சாதகமான பாதையை தேர்கிறாள். அது அவளின் விடுதலை. விடுதலையின் வரையறை அனைவர்க்கும் பொதுவானதில்லை. ஒரு பெண்ணையோ அன்றி ஆணையோ முழுதாய் அறிய முடிந்தவர் எவருமிலர். அனைத்து மாந்தர்களும் தாம் எப்போதும் மகிழ்வோடிருக்க விரும்புவதில்லை. அதேபோல் அவர் எப்போதும் துன்பத்திலும் உழல்வதுமில்லை. இது ஒரு சுழற்சி, வலியதும் எளியதும் வாழும் பூமி.

அப்பாதுரை said...

அனுஷா, உடல் அடிமைப்படுவதாக நினைக்கிறோமே தவிர, மனம் தான் அடிமைப்படுகிறது என்பது என் எண்ணம்.

உடல் வேறு மனம் வேறு என்பதை விவாதித்து அறிய முடியாது என்றும் நினைக்கிறேன்.

LinkWithin

Related Posts with Thumbnails