Saturday, February 12, 2011

படுதா

சில நாட்களாகவே கேரள தமிழக எல்லைப் பகுதிகளில் உள்ள மழைக் காடுகளில் திரிந்து கொண்டிருந்தேன்.ஒளிந்து கொண்டிருந்தேன் என்று சொல்லவேண்டும்.அலைபேசிக் கற்றைகள் அணுக முடியாத உயரங்களைத்  தேடித் தேடிப்  போய்க் கொண்டிருந்தேன்.ஒரு பஜாஜ் பிளாடினா  பைக்கில் மலையாளத்தின் பச்சைக்குள் ஒரு குறி யோனியில் நுழைவது போல் துழாவித் துழாவிப் போய்க் கொண்டே இருந்தேன்.ஒரு பெண் காமத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்து இளகி தன்னை விரித்துக் கொள்வது போல் அது  என்னை மெல்ல மெல்ல ஏற்றுக் கொண்டது .பகல் முழுக்க பருந்துகள் திரியும் உச்சிகளில் சுற்றிவிட்டு இரவு தங்கலுக்காக ரப்பர் தோட்டங்களுக்கு இறங்குவேன்.மின்சார வசதி இல்லாத பழைய  தூசி ஒழுகும் ஒரு ஓட்டுவீடு.ரப்பர் மரங்களுக்குள் ஒரு ரகசிய நோய் போல் புதைந்து  கிடந்தது.ஜெனரேட்டர்  இருந்தது.ஆனால் அதைத் தொடவே இல்லை.கையில் ஒரு சிறு மின்விளக்கு இருந்தது.ஏசுநாதரைப் போல் கதறிக் கதறிப் பொங்கி உருகும் சில மெழுகுவர்த்திகள்.உண்மையில் அவற்றைக் கூட அதிகம் பயன்படுத்தவில்லை.சிறு இருள் பொந்து கிடைத்தாலும் அதில் புதைந்து மறைந்து கொள்ளவே விரும்பினேன்.வெளிச்சம்ஏனோ ரொம்ப ஆபாசமாய் இருப்பது போல் பட்டது அப்போது.

விடிகாலைகளில் ஒரு சாம்பல் பலூன்  போல் ரப்பர் மரங்களின் தலைக்குமேல் கதிரவன் உயர்வதை ,பிறகு என்ன நினைத்தாயடா என்னை என்று சற்றுநேரம் சினம் கொண்டு எழுந்து ஆள்வதை பிறகு ஸ்கலிதம் செய்துவிட்ட  ஆண் போல் தளர்ந்து  அவற்றின் காலடியில் தளர்ந்துவிழுவதை பார்த்தேன்.அதிகாலை இரண்டு மணிக்கே  தலையில் பொருத்திய விளக்குகளுடன் கொள்ளிவாய்ப் பேய்கள் போல் ஆட்கள் ரப்பர் மரங்கள் ஊடே பால் கறக்க அலைவதை,மரங்களின்  தொடைகளைக் கீறி வழியும் வெண் குருதியை  சிரட்டைகளில் சேர்ப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தேன்.வெட்டுப் பட்ட பிளவுகளில் பிளாஸ்டிக் சருகுகளை பெண்கள் மாதந்திர தினங்களில் அடைத்துக் கொள்வது போல் சொருகிச் சுற்றுவதைப் பார்த்தேன்.சேகரித்த றப்பர்த் துளிகள் இயந்திரத்தின் பற்களிடையே ஒரு தசைத் தட்டு போல் உருவாவதைப் பார்த்தேன்.அதன் அழுகிய நிண வீச்சத்தை ஒரு நறுமணம் போல்  முகர்ந்து கொண்டு இரவெல்லாம் இருளில் பத்து நாட்களுக்கும் மேலாக படுத்துக் கிடந்தேன்.

முதல் நாள் மட்டும் தனிமை கனத்து திண்டுக்கல்லில் உள்ள நண்பனிடம் பேசினேன்.
''என்னடா எங்கிருக்கே..என்ன ஆச்சு ஆபிசுக்கு பத்துநாளா வரலியாமே.லீவ் லெட்டரும் கொடுக்கலைன்னு சொல்றாங்க...உங்க அம்மா வேற எனக்குப் போன் பண்ணி அழறாங்க...ஏன் இப்படிப் பண்றே..இந்த தேவடியா இல்லேன்னா உலகத்துல எழவு வேற ஒண்ணா இல்லே?''என்ற போது வைத்துவிட்டேன்.
வேற இருக்கா இவ இல்லையே என்று நினைத்துக் கொண்டேன்.அதற்குப் பிறகு அவனுக்குப் போன் செய்யவில்லை.சார்ஜ் தீர்ந்த போனை உயிர்ப்பிக்கவும் எந்த முயற்சியும் செய்யவில்லை.

ரப்பர் தோட்டங்களில் பெரும்பாலும்  காலை இரண்டு மணிக்கு வேலை ஆரம்பித்து பத்து மணிக்கு முன்பே ஆள் அரவமற்றுப் போய்விடும்.இரவெல்லாம் புணரப் பட்டபிறகு பகலில் களைத்துப் படுத்துறங்கும் வேசி போலதான் அவை என நினைத்துக் கொண்டேன்.அதன்பிறகு அவற்றின் இலைகளின் ஊடே உதிரும் வெயில் ஊசிகளின்  சத்தத்தைக் கூட கேட்கும்படியாகத் தானிருக்கும்.பழக்கமற்றவர்களைப் பயப் படுத்திவிடக் கூடிய நிசப்தம்.மற்ற மரங்களைப் போல் இல்லாமல் அவை உஷ்ணம் என்பதால் பறவைகள் கூட அதிகம் அங்கே தங்குவதில்லை.அவ்வபோது கீழே குப்பையாய்க் குவிந்துகிடக்கும் சருகுகளின் ஊடே அணில்கள் ஓடும் சரசரப்பு  மட்டுமே கேக்கும்.அவை பாம்புகளாகக்  கூட பல சமயங்களில் இருக்கும்.பிற்பகல்களில் அந்த அமைதி ஒரு கம்பளிப் போர்வைபோல கனத்துக் கொண்டே வந்து முன்னிரவுகளில் இதயத்தை வெடிக்கச் செய்வது போல் யாரோ நெஞ்சின் மீது ஏறி நின்று மிதிப்பது போல் ஆகிவிடும்.அப்போதெல்லாம் நான் உரத்த குரலில் அழுவேன்.பெரும்பாலும் அவளைக் கெட்ட வார்த்தைகளில் திட்டுவேன்.திட்டியவுடனே துணுக்குற்று  வருந்தி அழுவேன்.அவளிடம் மன்னிப்பு கேட்பேன்.நடு ராத்திரிகளில்  நான் அவ்வாறு ஓநாயைப் போல் நிலவைப் பார்த்துக் கதறிக் கூவும்போது சமவெளியைச் சார்ந்தவர்கள் கண்டால் அச்சம் அடையக்  கூடும்.ஆனால் மலையில் இருப்பவர்களுக்கு அது புதுமையாக இருக்கவில்லை.இதுபோல அவர்கள் நிறைய கண்டிருக்கிறார்கள்.தனிமை என்ன செய்யும் என்று அவர்கள் அறிவார்கள்.அதுவும் மலைகளின் தனிமை.
''என்ன சாரே கரைஞ்சு தீரல்லே இன்னும்?''என்பார்கள்.''கொஞ்சம் வள்ளம் வடிக்கனும்  சாரே.எல்லாத்தையும் கரைக்கும் அமிர்தமாக்கும் அது''

ஆனால் எப்போதுமே என்னால் குடிக்க முடிந்ததில்லை.புகை பிடிக்க முடிந்ததில்லை.என்னால் எப்போதுமே பிரச்சினைகளிலிருந்து தற்காலிகமாகவேணும்பொய்யாகவேனும் கொஞ்சநேரம் கூட விலகி இருக்க முடிந்ததில்லை.கொல்லவரும் புலியின் கண்களிலிருந்து விலக முடியாத  இரை போல் அது தன்னைத்  தின்று தீரும்வரை  அங்கேயே நிற்கும் மடமிருகம் போலதான் நான்..

சில நேரம் பின்மதியங்கள் உடைந்து மழை பெய்வதுண்டு ரப்பர்க் காடுகளில்  மழை ஒரு ஹிந்துஸ்தானி பாடகன் போல் ஒரே ச்வரமாய்ப் பெய்யும்.யாரோ ஸ்தாயியை திருகுவது போல் நிதானமாக ஏறி இறங்கி..ஆனால் உச்சிகளில் அப்படிப் பெய்யாது.அங்கு மழை என்பது பிரளயம் அம்மாதிரியான மதியங்களில் நான் அவள் மீது எழுதிய கவிதைகளை எழுதிக் கொண்ட காதல் கடிதங்களை எல்லாம் திரும்ப வாசித்துப் பார்பேன் நிறைய கடிதங்கள் எனக்கு ஏமாற்றமே  அளித்தன.என் காதலை ஒருதுளி கூட அவற்றில் நான் சொல்லி இருக்கவில்லை.அதனாலதான் அவள் என்னைவிட்டுப் போய்விட்டாள், என் காதலை அவளிடம் சரியாகச் சொல்லவில்லை என்பது போல் ஒரு பரிதவிப்புக்குள்ளாகி புதிய கடிதங்களை விளக்கெரித்து எழுத ஆரம்பித்தேன்.மெல்ல என் தலை நிறைய அவளுக்கான கடிதங்கள் நிரம்பின.சட்டென்று ஒருநாள் வார்த்தைகளின் சுமை தாங்காது எல்லா  கடிதங்களையும் பெரிய வட்ட நிலா  கீழே குவித்து எரித்தேன்.சடத்து தெறித்து  எறிந்த அக்னியில் ஆகுதி போல் ஒவ்வொரு கடிதமாய் இட்டுக் கொண்டே இருந்தேன் அது உடல் நீங்கிப் போகும்  ஆன்மா போல் புகையாகி சாம்பல் வானில் ஏறிப் பரந்தது.

முதலிரண்டு நாட்கள் மலையை விட்டு இறங்கி  களியல்  என்ற ஊர் வரை வந்து ஓட்டலில் சாப்பிட்டேன்.மோடா அரிசி .மீன் குழம்பு,வட்டத் தோசை.மாட்டிறைச்சி,கிழங்கு,பயறு,பப்படம் என்று மலையாள மணம் வீசும் சாப்பாடு.ஆனால் இரண்டாம் நாள் போகையில் மாஸ்டர் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தார் இளையராஜா ரசிகர் போலும்.ரசித்துக் கொண்டே 'இந்த ஆள் எப்படி பாண்டியில போய் பிறந்தான்''என்று அடிக்கடி ஐயம்  கொண்டார்.அன்னக்கிளியிளிருந்து ஒவ்வொரு பாட்டாய்ப் போட்டுக் கொண்டிருந்தார்.பாட்டுவீச்சில்  குழம்பு ஊற்ற மறந்து வசவு வாங்கினர்.''எளவு அந்த சாமானை உடைச்சாத்தான் உம்ம  கடை விளங்கும்.சொல்லச் சொல்ல மூணாவது தடவையா சாம்பாரே  ஊத்திதீரே''''

நான் அதை எதிர் பார்த்திருக்கவேண்டும் அந்த ஸ்வர வரிசை ஆரம்பிக்கும்போதே உணர்ந்து நிறுத்தச்  சொல்லியிருக்கவேண்டும்.செய்யவில்லை.சுலோச்சனாவுக்கு மிகவும் பிடித்த பாட்டு அது.ஆரம்பத்தில் தமிழில் இருந்து  வந்த எதன் மீதும் அவளுக்கு பிடிப்பு இருந்ததில்லை.பாட்டாயினும்  படிப்பாயினும் சரி.''ஒரு தமிழனைக் காதலிப்பேன்னு நினைச்சுக் கூடப் பார்த்ததில்லே''என்று அடிக்கடி சொல்லி இருக்கிறாள்.இவ்வளவுக்கும் தமிழ் நன்றாகத் தெரியும்.ஆனால் இந்தப் பாடல் அவளுக்கு ரொம்பப் பிடிக்கும்.ரொம்பப் பிரபலமான பாடல்தான்.ஆனால் கேட்கும்போதெல்லாம் கண்கள் உள்ளிறங்கி காணாமற் போய் விடுவாள்..வைர முத்துவைவிட பெரிய ஆட்கள் எல்லாம் தமிழில் உண்டு என்று சிலதடவை சொல்லிப் பார்த்தேன்.ஏறவில்லை.ஏனோ இந்தப் பாட்டு அவளை உருக்கி உள்ளுக்குள் எறிந்தது.கூடவே குரல் நடுங்கப் பாடுவாள்.ஒவ்வொரு தடவை  பாட்டு முடிந்ததும் நெஞ்சில் கைவைத்து'ஐயோ  ஆசானே ''என்பாள் .என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டு ''ஒருக்கலும்என்ன மறக்கறது முரளி .கேட்டோ?''என்பாள்.''ஒருக்கலும்''

விழியில் விழுந்து
இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே...

என்ற வரியிலேயே நான் சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன்.
அலையின் கரையில் காத்திருப்பேன்
அழுதவிழிகளோடு என்றபோது மூச்சிரைத்து கட்டுப் படுத்திக் கொள்ள முயன்றேன்.
எனக்கு மட்டும் சொந்தம்
உனது இதழ் கொடுக்கும் முத்தம்
உனக்கு மட்டும் கேட்கும்
எனது உயிர் உருகும் சப்தம் என்று சசிரேகா தேய்ந்தபோது வெடித்தழுதுவிட்டேன்.சட்டென்று கடையில் எல்லோரும் ஸ்தம்பித்து நிற்க மாஸ்டர் ''ஐயோ சாரே.என்ன ஆச்சு''என்று பதறி ஓடிவர நான் விருட்டென்று எழுந்து சோற்றோடு இலையை வாரிக் குழிக்குள் எறிந்தேன். உள்ளிருந்து பையன் அகப்பையோடு வந்து ''ஆம்லேட் வேண்டே?''என்றதற்கு மறுத்து பைசாவைக் கொடுத்துவிட்டு துரத்தப் படுபவன்போல பைக்கை உதைத்து விலகி ஓடினேன்.

தீப் பிடித்தவன் போல் வண்டியை காளிமலை சாலையில் செலுத்தினேன்.வழியில் நின்றுகொண்டிருந்தவன் 'சாரே அ வழி வேண்டா..பாறை மறிஞ்சு கிடக்கு ''என்று சொன்னதைப் பொருட்படுத்தவில்லை.அங்கு சாலை என்பதே இல்லை.என்றோ போட்ட சாலையின் நினைவுகள் மட்டுமே இருந்தன.சித்ரா பௌர்ணமிக்கு மட்டும் அங்கு நடக்கும் திருவிழாவுக்காக கொஞ்சம் சாலையை சரி செய்வது போல் பாவனை செய்வார்கள்.மற்ற நாட்களில் அந்த வழியில் செல்வது அதுவும் மழைநாட்களில் பைக்கில் வேகமாகப் போவது தற்கொலை  முயற்சிதான்.ஆனால் அது எனக்குத் தேவையாக இருந்தது.ஏறக்குறைய செங்குத்தாக ஏறிய அந்தப் பாதையில் ஏறி ஏறிப் போய்க் கொண்டிருந்தேன்.வண்டி தொடர்ச்சியாக முதல் கியரில் முனகி முனகி ஏறியது அது எந்த நேரமும் என்னை பள்ளத்தில் தள்ளிக் கொன்றுவிடும் தருணத்தை எதிர்பார்த்தேன்.ஒருவகையில் அதை விரும்பவும் செய்தேன்.ஆனால் அது விசுவாசமான ஒரு குதிரையைப் போல் நான் என்ன செய்தாலும் ஒத்துழைத்தது.

பகல் முழுக்க மலையுச்சியில் விசை தீராமல் நிறுத்த முடியாத பம்பரம் போல் திரிந்தேன்.பின்மதியத்தில்தான்  பசியாலும் களைப்பாலும் மெல்லத் தளர்ந்து கீழிறங்கினேன்.சிற்றாறு அணை அருகில் வண்டியை நிறுத்தினேன்.அணை நிறைய தண்ணீர் சலனமே இன்றி ஒரு பளிங்குத் தாள் போல் கிடந்தது.ஒரே ஒரு நாரை மட்டுமே நீர்ப்பரப்பை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்க செங்கால் நாராய் செங்கால் நாராய் என்று நான் கூப்பிட்டதைக் கேட்டுத் துணுக்குற்று ஒரு மௌனப் படம் போல் சிறகு பிரித்து பறந்து போனது.உள்ளே இறங்கி உடல்முழுவதும் ஏறி இருந்த தூசியைக் கழுவிக் கொண்டேன்.இது போல் அவள் நினைவுகளையும் செய்ய முடிந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன்..ஒரு வாய்த் தண்ணீர் குடித்துவிட்டு தூரத்தில் தெரியும் நீல மலை   முகடுகளை வெறித்துப் பார்த்தவாறே அமர்ந்திருந்தேன்.நேரம் செல்லச் செல்ல நீர்ப் பரப்பு அப்படி ஒன்றும் சலனமற்று இருக்கவில்லை என்று அறிந்தேன்.குச்சி போன்ற பூச்சிகள்  நீர்ப் பரப்பின் மேலே துள்ளிக் கொண்டிருந்தன.அவற்றுக்குப் பேர் உண்டா என்று யோசித்தேன்.கருத்த மீன்கள் நீரின் கீழே சிறிய கப்பல்கள் போல் உள்ளேயே அமைந்திருக்கும் அவர்கள் கண்ணுக்கு மட்டுமே தெரிந்த நீர்ச் சாலைகளில் அவசரமாகப் போய்க் கொண்டிருந்தன.அவற்றின் பின்னால் ஒரு நீர்ப்பாம்பு கூட போவதைப் பார்த்தேன்.
''என்னா சாரே வெள்ளம் கண்டு மதியாயில்லே''என்று குரல் கேட்டு விழித்தேன்.முப்பது வயதுகளில் ஒரு கருத்த பெண்.பக்கத்தில் இருக்கும் குடிசைகளில் வசிப்பவளாய் இருக்கலாம்.கையில் பிளாஸ்டிக் வாளியில் துணிகளுடன் இறங்கிவந்தாள் .அவள் வாளியைவைத்துவிட்டு ''ஸ்தலம் எவிட''

நான் பொதுவாய் ''தாழ''என்றேன்.அவள் ''மார்த்தான்டமா..அங்க மழை உண்டா .இன்னலே இங்கு வலிய மழ''எனறாள்.'இப்போ எங்கு போச்சு அந்த மழ..என்ன ஒரு சூடு இன்னு கண்டோ ''என்ற வண்ணம் அப்புறம் திரும்பி சேலையைக் கலைந்து வெள்ளை நிறப் பாவாடையை அணிந்துகொண்டாள்.என்னை அதிகம் பொருட்படுத்தவில்லை.பிறகு வரித்து உட்கார்ந்துகொண்டு துணி கழுவ ஆரம்பித்தாள்.தண்ணீர் தெறித்து தெறித்து அவள் பாவாடை மெலிந்து பாலாடைக்குள்  கருப்பட்டிகள் போல் அவள் முலைகள் அசைவது பார்த்தேன்.நான் கவனிப்பது உணர்ந்து அவள் நிமிர்ந்து ''சார்  முன்னம் முலை கண்டில்லே?''என்று சிரித்தாள்.அவளது பற்கள் வெளேரென்று மினுங்கின .உதட்டுக்கு மேலே வியர்வை பூத்திருந்தது உயிர் அறுத்தது.நான் மேலேறினேன்.கீழே பார்க்கையில் அவள் அவளது பின்பாகங்கள் இரண்டும் கல் தசை உருளிகள் போல் அசைய அவள் நீருக்குள் இறங்கிக் கொண்டிருந்தாள்,




சுலோச்சனாவுக்கு இரண்டு புட்டங்களும் பிரியும் இடத்தில் ஒரு மச்சமுண்டு.நான்தான் அதை அவளுக்குக் கண்டுபிடித்துச் சொன்னேன்.மதுரையில் காலேஜ் மேன்சனில் அறையில் வைத்து ''உனக்கு இங்கே ஒரு மச்சம் இருக்கு''
அவள் திரும்பிப் பார்க்க முயன்று ''எங்கே''
நான் கைவைத்து அழுத்தி  ''இங்கே''
அவள் முழுக்கத் திரும்பி மிதக்கும் கண்களுடன் 'வரு''
ஒரு துளி ஆடை கூட அவள் மேல் இல்லை.உடம்பு முழுக்க உடம்பாக மட்டுமே நின்றிருந்தாள்.
நான் ''என்ன''
''அகத்த வருன்னான்னு பறஞ்சது''
''உள்ளேதானே  இருக்கோம் இப்ப''என்றேன் மூடிய கதவைப் பார்த்தவாறு.
அவள் ''அந்த உள்ளே இல்லை ஆசானே''எனறாள்.
பைக்கை உதைக்கும்போது என் கைகள் நடுங்கிக் கொண்டிருப்பதைக் கவனித்தேன்.அன்றைக்கு அதைச் செய்திருந்தால் இன்றைக்குப் பித்து பிடித்தவன் போல் இந்த காட்டில் சுற்றிக் கொண்டிருக்க வேண்டாம் என்று என் மனம் சொல்லிக் கொண்டது.பைக் கிளம்ப மறுத்தது.ஆத்திரமுற்று ஒரு மாட்டை அடிப்பது போல் அதை உதைத்தேன்.நீண்ட நேரத்துக்குப் பிறகுதான் பெட்ரோலைப் பூட்டிவைத்திருக்கிறேன் என்று உணர்ந்து திருப்பி வைத்தேன்.ஒரு வழியாக கிளம்பும்போது தோன்றியது அந்த புட்டத்து மச்சத்தை இந்நேரம் அவள் புருஷன் கண்டுபிடித்திருப்பானா ?

தன்னிச்சையாய் கண்களில் நீர் வழிந்தது

                                                                                                                        

8 comments:

  1. உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு...

    ReplyDelete
  2. அற்புதம்!
    இந்த இடமென்று இல்லாமல் முழுக்க முழுக்க ஆழமும் அகலமும் ஆக்கிரமிக்கும் எழுத்து. பிரதேச பாஷை புரிந்தால் இன்னும் ரசித்திருப்பேன் (தமிழ் நடையே கொஞ்சம் ஆழமாக இருக்கிறது). கடிதம் எழுதி எரித்த விவரம் பல முறை படித்தேன். சில இழப்புகள் இறப்போடும் வரும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  3. http://fouruseofgooglereaderintamil.blogspot.com/2011/02/google-reader-4.html

    share it with others in ur buzz

    ReplyDelete
  4. மிகப் பிரமாதமான எழுத்து நடை. நல்ல முயற்சி... பல உவமைகள் ஊர்ப்பக்கத்து கவிச்சி மணம் வீசினாலும், பயனபடுத்தப்பட்ட இடமும், விதமும் அதை நியாயப்படுத்தின...


    வாழ்த்துக்கள் நண்பரே...

    ReplyDelete
  5. சில இடங்களில் இயல்பாகத் தெரியும் காமம், சில இடங்களில் வலித்துத் திணித்தது போல் உள்ளது. ஆனாலும் அருமை.. வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. வம்சி போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  7. மறுபடியும் படிப்பதில் பெருமகிழ்ச்சி. முதலில் படித்த நிறைவே மறுபடியும்.
    பாராட்டுக்கள்.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails