Monday, December 26, 2011

உள்ளின் உள்

மரமேறி விளையாட்டில் 
உச்சிப் பொந்தில்
ஒளிந்திருந்த 
ஆந்தைக் குஞ்சைப் பிடித்துவிட்டோம் 
சத்தம் மட்டும் கேட்டு 
வெளியே வந்த 
வெளிச்சக் குருடு ஆந்தை 
தடுமாறித் தவித்தது 
பயத்தில் கிரீச்சிட்டது.
ஆந்தை 
என்று கத்தினோம் 
எல்லோரும்அருவருப்பாய் 


சேகர் அதைக் கொன்றுவிடலாம் 
என்றான் 
அலெக்ஸ் அதை ஆமோதித்தான் 
ஆந்தை சாத்தானின் பறவை 
என்ற போது அவன் உடல் நடுங்கியது 
கருப்பசாமி 
ஆந்தையை சுட்டுத் திங்கலாமா 
என்று சந்தேகம் எழுப்பினான் 
அம்பிக்கு அது பிடிக்கவில்லை 
உவ்வே என்று எருக்களித்தான் 

கூட ஏறிவந்த 
தனலக்ஷ்மி மட்டும் '
''ச்சே பாவம் குழந்தை"'என்ற படி 
பாவாடையில் பொதிந்து 
ஆதூரமாய்'
மீண்டும் கூட்டுக்குள்ளேயே
வைத்தாள் 



எப்போதுமே 
அவள் அம்மாவாகவே இருந்தாள்
என்று சொன்னால்
ஆணியச் சிந்தனை 
என்பீர்களானால்
சொல்லவில்லை.

2 comments:

சத்ரியன் said...

வெறுமனே ‘அருமை’-ன்னு சொன்னா நல்லாயிருக்காது இல்ல?

சிறந்த கருத்தை உள்ளடக்கிய கவிதை.

Santhini said...

அந்த கடைசி ஐந்து வரிகள் - அவை தாம்.... பெண்ணின் சிறப்பை உவக்கும் ஆணின் மனம்.

LinkWithin

Related Posts with Thumbnails