Monday, November 14, 2011

இவை கூட...

1.சற்றே சரிந்த
பிள்ளையார் கண்
என்றாலும் அழகுதான்
இரண்டில் ஒரு மார்பு சிறியது
எனினும்
இரண்டுமே அழகுதான்

மூக்கில் அமர்ந்த
ரத்தினத்தின்
நிழல் காட்டிய
சிகப்பு உதடுகள்
கண்ணாடித் துளிகள்
மினுங்கும் சேலையுள்
பொதிந்து உறங்கும்
தொப்புள்...

யூகித்துத் தீராத பெண்...






2.வரிகளை
தேய்த்துக் கொண்டு
நாற்காலியில்
மர்ந்திருக்கிறது புலி
பசிக்கென
பையில்
சில பழங்களை
வைத்திருக்கிறது
அலுவல் முடித்து
வீடு போய்
ஆசார உணவு
படுக்கும் முன்பு
ஒரு தம்ளர் பால்
வேட்டையின் கனவுகள்
வந்துவிடாமலிருக்க
தூக்க மாத்திரைகள்
என்று நன்றாகத்தானிருக்கிறது புலி
யாராவது
காடு என்று உச்சரிக்கும்போது மட்டும்
முகம் வலியில் கோணுகிறது
மற்றபடி
சுகமாய்த்தானிருக்கிறது
புலியாய் இருப்பது எப்படி
என்று மறந்த புலி ...


3.கரிந்துபோன 
தென்னை மரத்தின் 
உச்சியில் 
வந்தமர்ந்தது 
விலாவில் 
பச்சை தடவிய 
அப்புவின் கைப்பிடி அளவே இருந்த 
பூங்குருவி .
காய்ந்த மட்டைகளைக் 
கிலுக்கிப் பார்த்து 
''வீண் ..வீண்... ''
என்று கத்தியது 
அப்பா ஆசையாய் 
வைத்துப் போன தென்னை அது ..
நான் எதிர்வாதம் புரியாது 
மௌனமாய் இருந்தேன் 
உண்மைதான் .
எல்லாம் வீண்... வீண் ...


6 comments:

பத்மா said...

இரண்டாவது எங்கேயோ படிச்சுருக்கேன்

அப்பாதுரை said...

stunning photo.எங்கிருந்து தான் படங்களைப் பிடிக்கிறீர்களோ!
மூன்று கவிதைகளும் அருமை. மூன்றாவது பிடிபட கொஞ்சம் நேரமானது.

bogan said...

எனக்குப் பிடித்த ஓவியரின் படம் அது அப்பா சார்.இவர் அதிகம் இங்கு அறியப் படவில்லை.இவர் படங்கள் இணையத்திலேயே கிடைக்கின்றன .பாருங்களேன் http://www.bouguereau.org/

அப்பாதுரை said...

thanks bogan! சுவாரசியமான artist.

meenakshi said...

தலைப்பு மனதை கவர்ந்தது.
அருமையான கவிதைகள். இரண்டாவது வேதனை.

இராஜராஜேஸ்வரி said...

நினைவில் காடுள்ள புலி!

LinkWithin

Related Posts with Thumbnails