Friday, June 15, 2012

உடல் தத்துவம் 21

இருவரும் சற்று நேரம் அமைதியாக மெழுகுப்  பொம்மைகள் போல அங்கேயே உட்கார்ந்திருந்தோம்.அவள் விடும் மெலிந்த பெண் சிகரெட்டின் புகை மட்டும் அறையில் ஒரு ஈ போல சுற்றி சுற்றி வந்தது.அந்த ஈ தனது சிறகுகளை அடித்துக் கொள்ளும் சப்தம் கூட எனக்குக் கேட்டது போல இருந்தது.அது மெல்ல ஒரு புகைப்பந்து போல அல்லது பெருங்காற்றில் சுருண்டுகொண்டுவரும் தூசுக் கோளம் போல உருண்டு என்னருகே வந்தது.

ரூபி அதை ஊடுருவி திடீரென்று ''நாம் உடல் உறவு கொள்ளலாமா?''என்றாள்.
நன் திடுக்கிட்டு ''வேண்டாம்''என  மறுத்தேன்.
அவள் புருவத்தைச் சுளித்தபடி ''ஏன் ?இந்த நாள் வேறு எப்படியும்  முடியாது என்று எனக்குத் தோன்றுகிறது.எனக்குள் இருக்கும் ஒரு பெரிய சீழ்ப்பந்து இன்று உடைந்திருக்கிறது.நீ வந்து அதை உடைத்திருக்கிறாய்.அதன் வலி யை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.மீண்டும் என்னை ஒரு நீண்ட காலத்துக்கு நீ தூங்காமல் அடித்திருக்கிறாய்.எனது அம்மா இன்னமும் பிரபஞ்சத்தில் எதோ ஒரு இடத்தில் அமைதியற்ற ஆத்மாவாக  சுற்றிக் கொண்டிருக்கக் கூடும் என்ற செய்தி எனக்கு அச்சத்தையும் துக்கத்தையும் தருகிறது.வா.வந்து எனக்குள் பொங்கும் கடலைச் சமாதானப் படுத்து'' என்றாள்

''யார் கண்டது.உனக்குள் இருக்கும் முடிச்சுகளையும் அது விடுவிக்கலாம்.நீ எனது அம்மாவைக் காதலித்தாய் அல்லவா?கால தேச வர்த்தமானங்கள் சரியாக இருந்தால் அவளுடன் உறவும் கொண்டிருப்பாய் அப்படித்தானே?''
நான் ''ச்சீ''என்றேன்.,அந்த சொல்லின் உக்கிரம் தாங்காமல்
''பொய் சொல்லாதே.உனது பகல் ஸ்கலிதக்  கனவுகளில் அவள் வந்ததே இல்லையா என்ன?""
நான் முகத்தில் குத்தப் பட்டாற்  போல பின்னால் சாய்ந்தேன்.அவள் சொன்னது சரியே.எத்தனையோ தடவை அகத்தில் மேகி அத்தையுடன் நான் கூடி முயங்கி இருக்கிறேன்.அந்த பாழ் இரவில் இஞ்சியநீருக்குப் பதிலாக நான் மட்டும் இருந்திருந்தால் .....என்றெல்லாம் நடவாத நிகழ்வுகளை நீட்சியாக்கி சுகித்திருக்கிறேன்
ரூபி எனது அகத்தை வாசித்தவர் போல ''ஆ ராத்திரி மாஞ்சு போயி ..ஒரு ரத்த சோகமாய்...''என்று பாடினாள்  ''ஆயிரம் கினாக்களும் கூடி மறைஞ்சு''ஒரு புகழ் பெற்ற மலையாளத் திரைப்பாடல்

நான் கண்களை மூடிக் கொண்டேன்.நான் ஒரு தடவை தென்னகத்தில் புகழ்பெற்ற ஒரு தேவி ஆலயத்துக்குப் போயிருந்தேன்.போன அன்று கூட்டமே இல்லை.போன பொழுது அந்தி.அதுவும் மழை இறங்கிக் கொண்டிருந்த அந்தி.பிரகாரத் தாழ்வாரங்கள் எல்லாம் மழை ஈரம் சதசதத்துக் கொண்டிருந்தது.சந்தியா பூஜையின் சமயம்.திரை இழுத்து அவளைத் தயார் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.மின்சாரம் இல்லை.வெறும் எண்ணெய்   விளக்குகளின் மெல்லிய மஞ்சள் சல்லாத் துணி வெளிச்சம் ஆயிரமாண்டு பழமையான கருங்கல் சிலைகளின் மீது ஒரு குழந்தையைப் போல ஏறி ஏறி விளையாடிக் கொண்டிருந்தது.கல் விளக்குகளில் திரி கருகும், எண்ணெய்  மட்கும் நாற்றம்.தூரத்தில் கல் மண்டபப் புதிர்களில் குழிந்து  குவிந்து குழைந்து குவிந்து பிறகு சிதறும் குரல்கள்திரைக்குப் பின்னே சிந்தும் சிறு மணிச் சப்தங்கள்

நான் அங்கேயே அமர்ந்து கண் மூடி உள்ளே நிற்கும் அம்பாளை கற்பனிக்க முயன்றேன்.

முதலில் அது கூடவில்லை.எத்தனையோ படங்களில் பார்த்த சித்திரமே அது.ஏனோ எனது புரத மலர் சலித்து சலித்து விலகியது.நான் திரும்பத் திரும்ப ஒரு ஓவியத்தை கூட வைக்க முயன்றவன் போல முயன்றேன்.சித்திரத் தூரிகையின் நுனி ஒரு சட்டோரி கணத்தில் சட்டென்று கூர்மை பெற்றது.நன் துல்லியமாக அவளைக் கண்டேன்.நேரில் பார்ப்பது போல துல்லியமாய்.இல்லை நேரில் நாம் அவ்வளவு துல்லியமாக பார்க்கிறோமா  என்ன?மிகு வேகமாய் ஓடி விடுகிறது நிகழ்காலம்.அதை அதன் நிகழும் கூர்மையுடன் பிடித்துக் கொள்ள நமது போதத்தின் மழுங்கிய ஆடியினால் ஆவதில்லை.எப்போதாவது ஒரு ஜன்னல் திறப்பது போல சிலருக்கு அது கூடுகிறது.அப்போது அவன் கவி ஆகவோ ஞானி ஆகவோ ஆகிறான்.மற்றபடிக்கு அது ஆசீர்வதிக்கப் படாதவர்களுக்கு எனக்கு நிகழ்ந்தது போன்ற அகக் கண் திறக்கும் தருணங்கள் எப்போதாவது தான் கிட்டும் என்று ஒரு சாமியார் பின்னால் சொன்னார்.அதுவும் கருணையினால்.

நான் எத்தனையோ சித்திரங்களில் பார்த்த அதே முகம்தான்.அதே கிளிச் சுண்டன்  மாவின் நிறத்தோடு அப்போது கறந்த பாலில் பொங்கும் நுரை போன்று பொங்கி வழியும் சிரிப்போடு ஆனால் முழு நிர்வாணியாய் .

கேரளத்தில் திறந்த முலைகள் மேல் தொங்கும் வட ஆரங்களோடு   மார்பளவு பகவதி சிலைகளைப் பார்த்திருக்கிறேன்.இது ஸ்டார்க் நேகட்  என்பார்களே அப்படியொரு மிருக நிர்வாணம்.அவளது முலைகளைச் சுற்றி தாமரை இலைகளைப் போல படர்ந்திருக்கும் முலை  வட்டங்களை அவற்றின் நுண்ணிய துளைகளைக்  கூட என்னால்  காண முடிந்தது.மெல்ல மூச்சு ஏறி ஏறி இறங்கும் அவளது உதரக் குழியையும் மலைச் சரிவு போல மடிந்து இறங்கும் நாபி நாணயத்தையும்  யோனிச் சக்கரத்தையும் கூட காண முடிந்தது.நான் சட்டென்று ஸ்ரீ சக்ரம் என்றால் என்னவென்று உணர்ந்தேன்.ஸ்ரீ சக்ரம் மெல்ல அதன் இதழ்களைப் பிரித்து பிரித்து மணிகளை வீசிக் கொண்டிருந்தது.அவை ரத்தத் துளிகள் போல சுற்றிலும் தெறித்தன.அவை பெருகி நிறைந்து அவளது காலடியில் பெருகி ஒரு தடாகம் போல தேங்கி நின்றது.அந்த ரத்தக் குளத்துக்குள் அவளது தொடை வழியாக நீண்ட கரிய பாம்பு ஒன்று இறங்கி வந்தது நான் அச்சத்துடன் நிமிர்ந்து அவள் முகத்தைப் பார்த்தேன்.இப்போது மாமை ததும்பும் இந்திய முகமாய் இல்லை.அது ஆலிவ் எண்ணெய்  மினுங்கும் சருமத்துடன் பளபளக்கும் கூந்தலுடன் சோகத்துடன் என்னை நோக்கி இரக்கத்துடன் பார்க்கும் இத்தாலிய முகம்.இல்லை தூய கன்னி அன்னையின் முகம்.அந்த முகம் என்னை நோக்கி சோகத்துடன் ததும்பியது.நான் எனது செவி மடல்களுக்குள்ரத்தம் பரவுவதை உஷ்ணமாய் உணர்ந்தேன்.பாய்ந்த ரத்தம் உள்ளக்குள் கடல் அலை போல ஆர்ப்பரித்தது.பின்னர் தணிந்து குழறியது.இப்போது மேரி அன்னை மேகி அத்தையாக மாறிக் கொண்டிருந்தாள்.சட்டென்று  அவள் முலைகள் பூரித்துத் தாழ்வதைப் பார்த்தேன்.ஒரு கமல மொட்டு விரிவதைப் போல அவை பூத்தன.அதிலிருந்து அருவியாய் பால் சொரிந்து வயிற்றில்  என்னை நோக்கி இறங்கியது.நான் கூப்பிய உதடுகளுடன் அதை நோக்கிப் பாய்ந்தேன்.யாரோ என் அடி முதுகில் அடித்தார்கள்.''இன்னிக்கு இவன்''என்ற குரல் கேட்டது.விபூதிப் பச்சையின் வாசனை முகத்தில் அடித்தது.நான் மேலிருந்து  ஒரு அலை விழுவது போலக் கீழே விழுந்தேன்.இப்போது மேகி அத்தை முகம் அதன் வரிகளில் கசிந்து உடைந்து மாறியது.மெல்ல அது முன்னம்பல் நீண்ட ஒரு வெள்ளாள முகமாய் மாறியது .அம்மா!அது அம்மா.வேறு யாருமல்ல.அம்மா..அவளது யோனிக் குழியிலிருந்து இறங்கி வந்த சர்ப்பம் வேறு யாருமல்ல.நான்தான்.நான் சட்டென்று என்னைப் பிடித்துக் கொண்டிருந்த கைகளில் இருந்து ஒரு சர்ப்பத்தின் நெளிவோடு  உதறி மேல் நோக்கி திமிறினேன். .யாரோ பிடி பிடி என்றார்கள்.நான்  இப்போது ஒரு பறவையைப் போல மாறி அந்த முகத்தை நோக்கிப் பறந்து கொண்டிருந்தேன்.பெரிய முலைப் பாறைகள்  நடுவே பால் அருவி போல கொட்டுவதைக் கண்டேன்.கிழே  கிடக்கும் ரத்தத் தடாகத்தைப் பார்த்தேன்.போ போ சீக்கிரம் என்று எனது சிறகுகளை மேலும் வன்மையாய் அடித்துக் கொண்டேன் .அம்மாவின் முகம் கரைந்துபோகும் முன்பு சீக்கிரம் போ என்றார் யாரோ.ஆனால் அம்மாவின் முகம் அதற்குள் மாறத் துவங்கி விட்டது.அம்மையின் முன்னம் பற்கள் வளைந்து கூராகத் தொடங்கின.அவள் முகம் மழை மேகம் போல கருக்கத் தொடங்கியது.கண்கள் கருணையை இழந்து வெறித் தனம் கொண்டன.விழி ஓரங்கள் சிவந்து சட்டென்று ஒரு ஓங்காரக் கூச்சலுடன் வாய் பிளந்து உதிரக் கொடி  போல நாக்கு  வெளியே வந்து விழுந்தது.அம்மை தாய்மை தீர்ந்து  காளி  ஆகி இருந்தாள் .பறவை அந்த அகன்ற வாயின் அந்தகார இருட்டுக்குள் சென்று மறைந்தது
நான் மயங்கி விழுந்தேன்

அன்றிலிருந்துதான் எனது மன நலப்  பிரச்சினைகள் ஆரம்பித்தன.



Sunday, June 3, 2012

பொருக்கு

நீண்ட நாட்களுக்குப் பிறகு 
மாட்டுத் தாவணி பேருந்து நிறுத்தத்தில் 
பாசந்தி சாப்பிட்டுக் கொண்டிருந்த 
அவளைக் 
கண்டுகொண்டேன் 
கன்னத்தில் 
இறங்கியிருந்த 
மெலிய கோடுகளைத் தவிர 
வயது 
அவளைப் பெரிதாக 
மாற்றியிருக்கவில்லை 
மார் கூட 
இருபது வயதின் 
அதே கூரோடு
இருப்பதாக தோன்றிற்று 

இன்னமும் 
பாசந்தி தானா 
என்று சிரித்தேன் 
நானும் அவளும் 
சாப்பிட்ட 
அத்தனை பாசந்திகளையும் 
நினைவு கூர்ந்து ..

அவள் 
எனது புத்தகக் கனம்
இறக்கிய ஒற்றைத் தோளையும்
அழுக்குச் சட்டையையும் 
வரட்டுத் தாடியையும் 
செருப்புக்குள் பொருந்தாது 
துருத்தி நிற்கும் 
கால் நகங்களையும் 
கவனித்து 
இன்னமும் ஜோல்னாப் பைதானா 
என்று சிரிப்புடன் கேட்டாள்

வர்மப் புள்ளிகளில் 
உளிப்புள்ளி வைத்து 
திருகும் வித்தையை 
அவள் இன்னமும் 
பயிற்சி செய்கிறாள் 
என்று அறிந்து கொண்டேன்..

Saturday, June 2, 2012

கயம்

என்னால் உன்னைக் காதலிக்க முடியாது 
என்று நீ சொன்னாய் 
நீ அழகற்றவன் 
என்ற சொல் 
அதனுள் புதைந்திருக்கிறது 
திருப்பிய வேல் போல 
உன் கண்களில் 
மினுங்கும் கர்வத்தை நான் காண்கிறேன் 

நரம்புகளில் 
துருப் பிடிக்கும் ஓசை கேட்கிறது எனக்கு 
கண்களை மூடிக் கொள்கிறேன் 
காலம் பழுத்து நீள்கிறது 

குழித்துறை ஆற்றின் கரையில் 
சிவன் கோயில் துறையில் அமர்ந்து 
சுருங்கிய கண்களுடன் 
நடுங்கும் விரல்களால் 
நான் ஏதோ 
உற்றுப் பார்த்து எழுதிக் கொண்டிருக்கிறேன் 
எனது நரைமயிரை 
வெயில் பொன்னாக்கி வெள்ளியாக்கி 
மீண்டும் மயிராக்கி
விளையாடிக் கொண்டிருக்கிறது 


பூசை முடிந்து 
வெளுத்த பாதங்களுடன் 
நீ அருகே வந்து நிற்கிறாய் 
கசங்கிய இலை போல் இருக்கிறது அது 

கோபமா என்கிறாய் 
யுகங்கள் கடந்த கேள்வியைக் கேட்டு 
தவளை ஒன்று 
படியில் தயங்கி நிற்கிறது 
அதன் முதுகில் 
படர்ந்திருக்கும் பச்சைப் பாசியைச் 
சுரண்ட எனது விரல்கள் நம நமக்கின்றன  '

கோபமா என்கிறாய் மறுபடியும் 
தவளை பாசிக் கண்களில் மிதக்கும் ஆர்வத்தோடு காத்திருக்கிறது 

பின்பு பொறுமை இழந்து 
கண் அணைத்து
நதி நீரில் 
மெலிய ஒலியுடன் குதிக்கிறது 
ஒரு ஓவியம் அசங்கியது போல 
அதிர்ந்த அலைகள் 
ஒரு யோனி விரிவது போல 
ஒரு கணம் விரிந்து 
தவளையை விழுங்கி விட்டு 
மீண்டும் 
அமைதியாகின 


நான் எழுதிக் கொண்டிருக்கிறேன் 
அவள் நின்றுகொண்டிருக்கிறாள் 
நதி ஓடிக் கொண்டிருக்கிறது 
தவளை போய் விட்டது

Sunday, April 29, 2012

கால இயந்திரத்தில் ஜாலி ஜம்பர்

ரானா பிரதாப் சிங் 
கடிவாளத்தை இழுத்து 
சேத்தக்கை நிறுத்தினார் 
''மீண்டும் வழி தப்பிவிட்டது''
என்றார் அலுப்பாக.
''அடுத்த முறை ஒரு ஜி பி எஸ் வைத்துக் கொள்ள வேண்டும் ''

ஜாலி ஜம்பர் 
முதுகை உதறிக் கொண்டது 
வலது முன்னங்காலை தூக்கி முகர்ந்து பரிசோதித்தது 
''ஷிட் ''என்று சபித்தது 
''அதுவும் மனித ஷிட்''

அதற்குள் மேலே உட்கார்ந்து கொண்டே தூங்கிவிட்ட 
நெப்போலியனை 
உலுக்கி எழுப்பியது 
அலெக்சாண்டர் விழித்துக் கொண்டு 
''கருப்பழகி 
எங்கிருக்கிறோம்?"'
என்றான் 

அப்போது மழை பெய்ய ஆரம்பித்தது 
''இள மழை ''என்றான் 
பாக்சர் குனிந்து 
''இளம் புல்''எனும்போது 
செங்கிஸ்கான் 
தோல் காலணிகளால்
இடுப்பில் உதைத்து 
''இளம்பெண்''என்றான்

ஜிஞ்சர் சுதாரித்து 
''இப்போது கற்பழிக்கலாமா 
என்று தெரியவில்லையே?''
சார்ல்மேகன் குழம்பி 
''எல்லா காலங்களிலும் 
அரசர்கள் கற்பழிக்கலாம்''

''இது எந்தக் காலம்?""
என்று ப்ரு ப்ரு கேட்டது 
ராஜ ராஜன் 
பானையில் தண்ணீர் தூக்கி வந்த பெண்ணை நெருங்கிப பார்த்து 
''தேவை இல்லை 
இவள் பெண்ணே அல்ல
ஜீன்ஸ் அணிந்திருக்கிறாள்''என்றான் 

அவர்கள் குழம்பி நின்ற போது 
வானத்திலிருந்து ஒரு குரல் 
''பவுலே பவுலே 
ஏன் என்னைத் துரத்துகிறாய்?"'என்றது 
கிங் ஆர்தர் தலை உயர்த்திப் பார்த்து 
''இதப் பார்ரா ''என்றான் 
வானத்தில் புகை போல ஒரு பெரிய சிலுவை தோன்றியது 
''நாம் அந்தத் திசை போவோம் ''
என்று சொன்ன கஜினியை 
''நம்பாதே 
அது காபிர்களின் கடவுள் 
அந்த பக்கம் கடல்தான் இருக்கிறது 
தவிர''என்று கூர்ந்து பார்த்து 
''ஒரு அணு உலை வேறு இருப்பது போலத் தெரிகிறது''
மக்னோலியா தடுத்தது 


இவற்றை எல்லாம் 
மரத்தில் இருந்து கவனித்த இரு குருவிகளில் ஒன்று 
''விக்கிரமாத்தித்த ராஜா வும் பட்டியும்''என்றது 
மற்ற குருவி 
''பட்டி என்றால் நாய் அல்லவா?'
இது குதிரை போல் தெரிகிறதே?'' என 
''ஸ்க்ரிப்டில் இல்லாததை  எல்லாம் பேசுகிறாய்
இந்தக் காலக் குருவிகளுக்கு ஒழுக்கமே இல்லை''
என்று முதல் குருவி  கடிந்து கொண்டது 

கேட்டுக் கொண்டிருந்த சார்ல்மேகன் சோர்ந்து 
''குதிரையே நீ இதற்கு முன்பு 
கற்பழித்திருக்கிறாயா""என்று கேட்டான் 
அது திடுக்கிட்டு 
''இல்லை.
ஆனால் ஏன்?''என்று யோசித்தது 

நீண்ட மௌனத்துக்கு பின்பு 
லக்கி  லூக்
குதிரையிடம் ''மன்னிக்கவும் குதிரை மாறிவிட்டது''என்றான் 
ஜாலி சம்பரும் ''ஆம்.
ஆளும் மாறிவிட்டது என்றே தோன்றுகிறது 
காலமும் .
சாரி''
இருவரும் பிரிந்து நடந்தார்கள் 

லக்கி லூக் மவுத் ஆர்கனில் 
கீழ்கண்ட பாடலை இசைத்த படியே போனான் 


''தனிமையே எனது துணைவன் 
தனிமையே எனது இசை...''


ஜாலி ஜம்பர் 
எதிரே வந்த ஒரு பெண் குதிரையைப் பார்த்தது 

சார்ல் மேகனின் கேள்வி நினைவுக்கு வந்து 
''TO DO OR NOT TO DO?"'
என்று யோசித்தபடி அங்கேயே யுகாந்திரமாய் நின்றுகொண்டிருக்கிறது 

Wednesday, April 18, 2012

எலிப்பத்தாயம்

இன்றுடன் நம் தொடர்பு முறிந்தது
என்றாள் அவள் 
பேருந்து இரைச்சலில் 
சரியாகக் கேட்கவில்லை எனினும் 
விஷயம் அதுதான்.

பேருந்தில் இருந்து இறங்கித் 
தளர்வாய் நடக்கிறேன் 
என்னிடம் 
சில காகிதங்கள் உள்ளனவே
அவற்றில் 
அவள் மேல் சில கவிதைகள் உள்ளனவே 
என்பது நினைவுக்கு வருகிறது 

அவற்றை முதலில் தொலைக்கவேண்டும்
என்று எரிச்சலுடன் நினைத்துக் கொள்கிறேன் 

மின்சாரம் போன தெருவில் 
கும்பலாய் எல்லோரும் 
எதையோ தேடிக் கொண்டிருக்கிறார்கள் 
என்ன தேடுகிறீர்கள் 
என்றதற்கு 
சாவிகள் என்றார்கள்
சாவிகள்!
என்று முணுமுணுத்துக் கொள்கிறேன்

மனைவி 
கொண்டுவந்த சப்பாத்தி
மடிந்து உலர்ந்து இருக்கிறது 
இந்த சப்பாத்தியை 
புதைத்துவிடு 
எப்போதோ இறந்துவிட்டது 
என்று சீறுகிறேன் 

கை கழுவச் செல்கையில் 
நெடுநாள் இம்சித்த எலி ஒன்று 
மருந்தைத் தின்றுவிட்டு 
கிச்சனில் கிடப்பதைப் பார்க்கிறேன் 


அதை நேற்றிரவுதான் 
எனது படுக்கை அறையில் 
நேருக்கு நேராய் சந்தித்தேன் 
நான் படிக்கவே படிக்காத 
கருணானந்த சாகரம் 
புத்தகத்தை அது படித்துக் கொண்டிருந்தது 
இடையில்
ஒரு கணம் நிறுத்தி 
தனது எண்ணெய்த் துளிக் கண்களால் 
என்னைப் பார்த்தது 


அதைப் புதைக்கும் பணியுடன் 
வெளியே வருகிறேன் 
இன்னும் மின்சாரம் வரவில்லை 

கோயில் மணி ஓசையை விலக்கி நடக்கிறேன் 
எலித் தீட்டு.

கோயிலில்திரி தூண்டும் 
பெண்ணின் 
முகத்திலும் 
குதித்து ஏறுகிறது தீபம் 
யாரோ ஒரு வாலிபன் 
அவளிடம் 
ஓடிவந்து எதுவோ சொல்கிறான் 
அவள் மார்புகள் 
ஒரு பூ போல 
விரிவதை இங்கிருந்தே என்னால் பார்க்க முடிக்கிறது 
சட்டென்று 
பெருமூச்சுடன் விலகிக் கொள்கிறேன் 

அலைபேசியில் 
அந்த நேரத்திலும் அழைத்துக் 
கடன் வழங்குகிறாள் 
வங்கிப் பெண் 
அவள் குரல் இளமையாக இருக்கிறது 
இன்றிரவு என்னுடன் 
நீ உடையின்றி இருக்க முடிந்தால் 
உடனே கடனட்டை வாங்கத் தயார் 
என்று சொல்ல விரும்புகிறேன் 

ஆனால் சொல்ல முடியாது 
செப்பு போன்ற 
சிறிய குரல் உடைய 
ஒரு பெண்ணை ஒருதடவை 
நேரில் சந்தித்து பீதியடைந்துவிட்டேன் 
திருவாரூர்த் தேர் போல இருந்தாள்
அவளது பின்னம்பாகங்கள் 
நெடுநாள் என்கனவில் 
அசைந்து கொண்டே இருந்தன.

சிறுநீர் கழிக்க நிற்கிறேன் 
முன்புபோல் 
அது தொலைதூரம் செல்வதில்லை.
என்று கவனிக்கிறேன் 
எனது ஆண்குறி இறக்கிறதா என்ன?

பன்றிகள் உருமுகின்றன.
தொங்கும் முலைகளுடன் 
திரிந்த பன்றியை 
ஆண் பன்றிகள் விரட்டுகின்றன 

அதில் முதலில் ஓடும் பன்றி 
நிச்சயம் 
ஒரு ஆணாதிக்கப் பன்றிதான் 
என்பது அதன் குரலில் இருந்து தெரிகிறது 

பன்றிகள் புணர்வதை 
யாரும் இதுவரைப் 
பதிவு செய்ததே இல்லையே 
என்று கேட்டுக் கொள்கிறேன் 


மாடி ஜன்னலில் இருந்து 
ஒரு பெண் எட்டிப் பார்க்கிறாள் 
ஜன்னலுக்கு வெளியே 
அவள் முலை சரிந்து தொங்குகிறது 

எலியின் பிரேதத்தை 
கவனத்துடன் குப்பைத் தொட்டியில் இடுகிறேன் 

நடக்கிறேன் 
பின் கவனம் உற்றவவனாய் 
திரும்பிவந்து சொல்கிறேன்

'போய் வா நண்பனே''

Tuesday, April 17, 2012

இலக்கியம் பேசுதல்

சிக்கலான உடைகளிலிருந்து 
அவள் இன்னமும் 
தன்னை விடுவித்துக் கொண்டிருக்கிறாள் 
பழம் கடிகாரத்தில் 
பனிரெண்டு மணிக்கு 
முன்னிமிடத்தில் 
துடிக்கும் முள் போல 
என் குறி துடித்துக் கொண்டிருக்கிறது.
மேசை மீது 
பாதி குடித்த காபி 
ஆவி விட்டுக் கொண்டிருக்கிறது 
சிகரெட் புகைந்து கொண்டிருக்கிறது 
அவசரமாக நிறுத்தப் பட்ட 
சதுரங்க விளையாட்டு 
காத்திருக்கிறது 
விவாதிக்க விரும்பிக் கொண்டுவந்த புத்தகங்கள் 
பிரிக்கப் படாமலே கிடக்கின்றன 
அவள் கணவன் எப்போது வருவான் 
என்று மீண்டுமொரு தடவை
நான் பதற்றமாய்க் கேட்டுக் கொள்கிறேன் 

இவ்வளவு சீக்கிரம் 
இந்த முனைக்கு வருவோம் 
என எதிர்பார்க்கவில்லை 
பார்த்திருந்தால் 
நான் இன்னும் சற்று முன்னதாகவே 
பத்திரமான நேரத்துக்கு அங்கு போயிருப்பேன் 
அவளும் இன்னும் 
இலகுவான ஆடை ஒன்றை அணிந்திருக்கக் கூடும்

கந்தர்வன்

பேராற்றின் கரையில் 
நுண்மணல் மலர 
அமர்ந்திருந்தாள் அவள் 
இருள் 
ஒரு பெரும்பாம்பு போல 
பூமி மீது படரும் பொழுதில் 
வானிலிருந்து 
வீழ்ந்து கொண்டிருத்த 
அவன் அவளைக் கண்டான் 
மனிதர்களைப் போலவே இருந்தாலும் 
அவன் மனிதன் அல்லன். 
புராணங்களில் 
அவன் கந்தர்வனாகவும் 
விஞ்சையனாகவும் 
தேவனாகவும் 
இயக்கனாகவும் 
அறியப் படுகிறான் 
அங்கிருந்து நோக்க 
கரை மேல் ஏற்றி வைத்த அகல் போல 
அவளிருக்கக் கண்டு 
அவனருகில் வந்தான் 
சூறைக் காற்றில் ஒடுங்கி நடுங்கும் 
சிற்றகல் அவள் 
எனினும் 
முனைகளில் ஆடக முனை 
விட்டெறிந்த அந்த அகல் 
வெளிச்ச ஏணிபற்றி 
தான் வீழ்ந்த 
சொர்க்கத்திற்கு ஏற முடியும் 
என்று அவன் கண்டு கொண்டான் 
மெல்ல ஒரு இறகு போல 
இறங்கி அவளருகில் நின்றான் 
கைகூப்பி 
வான் முனை காண்பித்து 
அவளிடம் ஏதோ சொன்னான் 
ஒருவேளை 
நட்சத்திரங்களின் தோற்றம் பற்றி 
அவளிடம் சொல்லி இருக்கக் கூடும் 
அல்லது 
அவள் தனது கருவறையில் 
பொதிந்துவைத்திருக்கும் 
இன்னும் பிறக்காத பிரபஞ்சங்கள் பற்றி 
அவள் அதைக் கேட்டாளா 
தெரியவில்லை.
அதன்பிறகு 
இப்புவி மீது 
அவளைக் கண்டவரில்லை.

ஆனால் 
ஒன்று நிச்சயம் 
கணிணியில் 
வெறும் எண்களாய் 
அவளை 
நான் மாற்றிக் கொண்டிருந்த வேளையில்தான் 
இவையெல்லாம் நிகழ்ந்தது.

LinkWithin

Related Posts with Thumbnails