Wednesday, April 17, 2013

சொல்வனத்தில் சிறுகதை

சொல்வனம் இணைய இதழில் நான் எழுதிய சிறுகதை ஒன்று  வந்துள்ளது
படித்துப் பீதியுறுக ....


ஆடியில் கரைந்த மனிதன்

Tuesday, April 2, 2013

கண்ணி 10

ஒரு நாடகம் .அதற்கு மூன்று அல்லது நான்கு முடிவுகளிருக்கக் கூடும்.ஆனால் அவை அனைத்தும் ஒரே நேரத்தில் நடந்தால் எப்படி இருக்கும்?நான் அப்படித்தான் உணர்ந்தேன் அன்று.அன்று திருநெல்வேலி டவுனில் ஒரு யாரோ உதறி உதறி நடந்தார் போல சாரல் பெய்த இரவில் மச்சு அறையில் நாங்கள் நிகழ்த்தியது திரும்ப நிகழ்ந்துகொண்டிருந்தது.


திடீரென்று ஆற்று மணல் வீச்சமும் குளிரும் மறைந்து டவுனின் மழைப் புழுக்கமும் குதிரை லாயத்திலிருந்து குதிரைகளின் தும்மலும் அவற்றின் சாண மணமும்   எழுந்து  ஒரு திரை போல விழுந்தது,இப்போது நடுங்கிய விரலுடன் சிகரெட்டைப் பிடித்துக் கொண்டு வேஷ்டிக்கு கீழே துடிக்கும் விரிந்த குறியோடு நான் அறைக்கு வெளியே உட்கர்ந்துகொண்டிருந்தேன்.உள்ளே சண்முகம் அவளை நெருங்கி ஆடையை அவிழ்க்கச் சொல்லி அதட்டுவது கேட்டது.காலர்பக்கம் வேர்த்து வழிந்து கசகசவென்றிருந்தது.அரித்தது.உள்ளே அவள் தேம்பும்  ஓசை கேட்டது

கடவுளே இப்போது நான் என்ன செய்யவேண்டும்?நான் எனது ஆண்குறியை ஒரு அன்னியப் பொருள் போல உணர்ந்தேன் அது ஒரு வேட்டை நாயைப் போல முன்னேறத் துடித்துக் கொண்டிருந்தது.அதை நான் மிகப் பலவீனமான ஒரு மானசீகக் கயிறால்  பிடித்து நிறுத்தி வைத்துக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தேன் .உடலே ஒரு பெரிய உறுத்தல் போல ஆகிவிட்டிருந்தது.உள்ளிருந்து முனகல்கள் கேட்ட வண்ணமிருந்தன.அந்த முனகல்கள் ஒரு பேறுகால மிருகத்தின் முனகல்கள் போல இருந்தன ஒரே நேரத்தில் கிளர்ச்சியையும் வெறுப்பையும் ஏற்படுத்தின. நான் பெருங் காற்றில்  மாட்டிக் கொண்டவன் போல நடுங்கினேன் நான் ஏதாவது செய்ய வேண்டும்.


நான் சட்டென்று உள்ளே போனேன் .சண்முகம் அவளது வெற்று  உடம்பின் மீது ஒரு பல்லி போல அடர்ந்துகொண்டிருந்தான்.அவன் முதுகு முழுக்க சிறு தவளைக் குஞ்சுகள் போன்ற தேமல்களைப் பார்த்தேன்/அந்த நேரத்தில் அவை ஏனோ அருவெறுப்பாய்  இருந்தது,எழுந்து என்ன என்பது போல பார்த்தான்.'பிறகு இளித்து 'கொஞ்சம் இருலே அவசரக் குடுக்கை. .நான் முடிச்சுடறேன்'

நான் அவனைத் தள்ளி ''இல்லை.வேணாம் விட்டுடு''

''என்ன''

''விட்டுடுன்னு சொன்னேன்''
அவன் கண்கள் கோபத்தில் விரிந்தன.

''போலே .மயிராண்டி.உனக்கு பிடிக்கலைன்னா வெளியே போலே''


''அதெல்லாம் முடியாது .விட்டுடு .எந்திரி.இது பாவம் ''என்று அவனை அகற்றினேன்.''இந்தா எந்திரிச்சி ட்ரஸ்  போட்டுக்க''என்று அவள் உடையை எடுத்துக் கொடுத்த கணத்தில் சண்முகம் என்னைத் தாக்கினான் .என் காது ஊம்ம்ம் என்று ஒரு ஒலிச்  சுழலில் மாட்டிக் கொள்ளள நான் திரும்பி அவன் மீது பாய்ந்தேன்.அவன் ஆங்காரமாய் எழுந்து வந்து என்னைச் சுவற்றில் தள்ளி என் குரல்வளைக் குழியில் அவனது விரலால் அழுத்தினான் என் கண்கள் இருண்டன.சண்முகத்துக்கு கராத்தே தெரியும் என்று என்பது அந்த விரல் அழுத்தலில் தெரிந்தது.ஒரு கூரிய  திருகாணி போல அவன் விரல் எனது குரல்வளையில் இறங்கிக் கொண்டிருந்தது.என் கண்கள் இருண்டன.நான் இறந்து  கொண்டிருந்தேன்.ஆனால் ஓரக் கண்ணால் அந்தப் பெண் அவசரமாக உடுத்துக் கொண்டு அறையை விட்டு விலகுவதைப் பார்த்தேன்.கொஞ்சம் சந்தோசமாக இருந்தது.சண்முகம் என்னை சட்டென்று ஒரு சொம்பை எடுத்துத் தலையில் தாக்க ஒரு பெரிய கருப்பு அலை என் மீது  பாய்ந்தது


இருள் ஒரு பெரிய கரிய கம்பளித்  திரை போல என் மீது அசைந்துகொண்டிருக்க நான் அந்த இருளையே மந்திரவாதம் செய்யப் பட்ட கோழி போல வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.அந்த இருள் மிக சுகமாக இருந்தது.மெத்து மெத்தென்று அம்மாவின் மடி போல.அவள் மூடத் தரும் சேலைச் சுருணை போல.அவர் உதரம் போல. நான் இறந்துவிட்டேன்!ஆனால் நான் இறந்துவிட்டேன் என்பதை உணர்ந்துகொண்டே நான் இருக்கிறேன்.சற்று நேரத்தில் யாரோ கை தட்டியதுபோல எனது இடது காதில் ஒரு ஒலித் துணுக்கு  வெடித்தது.நான்  திடுக்கிட்டு விழித்துப் பார்க்க நான் மீண்டும் அந்த அறையின் வெளியே மாறி  பெஞ்சில் காத்திருந்தேன்.உள்ளே அந்தப் பெண் முனகும் ஒலிகள் கேட்டன.சற்று நேரத்தில் சண்முகம் வேஷ்டியைச் சரி செய்தவண்ணம் வந்து ''போலே.சீக்கிரம் போ''என்றான்.அவன் உதடோரம் சிகப்பாய் அவள் குங்குமம் தீற்றி இருந்தது .அது ஒரு ஆபரணம் போல அவனுக்கு அழகாக இருந்தது. நான் செலுத்தப் பட்டவன் போல உள்ளே போய்க் கதவைச் சாத்தினேன்


ஆ எப்படி இருந்தாள்  அவள் !சதசதவேன்று சேறும்  தொழியும்   கிடக்கும்  வயல் போல..இறங்க இறங்க கால் அமிழும் விதை நிலம் போல...என்னால் அந்த சேற்றின் வாசனையைக் கூட உணர முடிந்ததுகூடவே அதிகாலையின் வாசனை.ஆற்றுப் படுகையின் வாசனை. நான் ஒரு கத்தியைப் போல என் உடலை உணர்ந்தேன் மிகக் கூர்மையாக மிக அண்மையாக  மிக வீரியமாக.ஒவ்வொரு அணுவிலும் உயிர் சொட்டி நிற்கும் பொருளாக.இதற்காகத்தானே இந்த உடல் ?என்பது போல..எனது உடலை இத்தனை அணுக்கமாய் நான் உணர்ந்ததே இல்லை. என் மனம் கூட அதன் சஞ்சலங்கள் அடங்கி அமைதியாகி விட்டிருந்ததைக் கவனித்தேன் .என் மூளையில்  எப்போதும் எனக்கு எதிராக பேசிக் கொண்டே இருக்கும் எனக்குள் சஞ்சலங்களை/பலவீனங்களை விதைத்துக் கொண்டே இருக்கும் மற்றொரு ஆள் சட்டென்று இறந்தது போல அமைதியாகி ஒரு பெரும் மௌனம் ஆங்கே நிலவியது.ஆ! எவ்வளவு பெரிய விடுதலை !என் மனம் கூர்ந்து என் குறியில் வந்து நின்றது.சிலீரென்று தணைக்கும்  ஐஸ்  கட்டி போல அவள் யோனி இருந்தது.அதே சமயம் ஒரு பெரிய நுரைக்கும் கடல் போலவும்  அது கொதித்துக் கொண்டிருந்தது.என் கால்கள் இடையே துடிக்கும் அவள் கால்கள் ஒரு வினோத வாகனத்தைப் போல தோற்றமளித்தது.அது உருண்டு உருண்டு எங்கோ போனது..வாகனத்தில் இருந்து பொங்கும் கிரீஸ் போல ரத்தம் கொட்டியது.எவ்வளவு ரத்தம் !எவ்வளவு உயிர்!நான் ஒரு வழுக்கு மரத்தைப் பிடித்துக் கொண்டு ஏறுகிறவன் போல உணர்ந்தேன் .ஆனால்  ஏற ஏற அந்த வழுக்கு மரமும் உயிர் பெற்று என்னை இறுகப் பிடித்துக் கொண்டது சட்டென்று அதன் முனை ஒரு பாம்பின் முகமாய் மாறி என் கண்களை உற்றுப் பார்த்தது. அதன் மூச்சுக் காற்றை என் முகத்தில் உணர்ந்தேன். மேட்டுத்தெருவில் உள்ள அத்தை  வீட்டில் பட்டாளையில்  ஒரு படம் உண்டு .கிருஷ்ணன் காளிங்க  நர்த்தனம் பண்ணும் படம். காளிங்கன்  ஒரு கறுப்புப் பாம்பு. விஷப் பாம்பு. அதைக் கிருஷ்ணன் அடக்கி அதன்மேல் ஏறி ஆடினான்குழல் வாசித்தான் எல்லா பெண்களும் காளிங்கப்  பாம்புகள் .அவர்கள் விஷத்தை அடக்கி ஆளவேண்டும் அவர்கள் விஷத்தை இரண்டு இடங்களில் வைத்திருக்கிறார்கள் .மேல் வாயில்.கீழ் வாயில்  .அந்த வாயில்கள் வழியே அவர்கள் விஷம் பொங்கிப் பொங்கி வருகிறது.அந்த விஷம் உங்களைத்தேடி வருகிறது. நீங்கள் சரியான ஆணாய்  இல்லாவிடில் அந்த விஷம் உங்களைக் கொன்றுவிடும் நீங்கள் அந்த விஷத்தைக் குடிக்கவேண்டும்.ஆனால்  அது உங்கள் வயிற்றுக்குள்  சென்று விடாமல் கண்டத்திலேயே நிறுத்தி வைக்கவேண்டும்  சிவனைப் போல,அந்தப் பாம்பின் மீது ஏறி அடக்கவேண்டும்.கிருஷ்ணனைப் போல..ஏனெனில் அந்தப் பாம்பு தன்னை அடக்கும் வீரர்களையே  விரும்புகிறது. மதிக்கிறது .தான் மதிக்காத அஞ்சாத யாரையும் அது விரும்பாது


நான் அவளுள் கிறுகிறுவென்று ஒரு பம்பரம் போல சுற்றி சுற்றி வேகம் வேகமாக இறங்கினேன் .ரயில் பிரயாணத்தில் மரங்களும் மனிதர்களும் பின்னோக்கி ஓடி மறைவது போல எல்லாம் ஓடி மறைந்ததன.அதுவரை நான் பார்த்த அத்தனைப் பெண்களும் அவ்வாறு ஓடி மறைந்தவர்களில்  இருந்தார்கள்.வாழ்நாளில் அவர்கள் ஒருபோதும் என்னை பொருட்படுத்தியவர்கள் அல்ல.இப்போது அவர்கள் கண்களில் தெரிகிற காதலையும் மதிப்பையும் கண்டு எனக்கே வியப்பாக/சிரிப்பாக  இருந்தது

எல்லோரும் ஓடி மறைந்தபிறகு அங்கு நான் மட்டுமே இருந்தேன். என் உடல் மட்டும்


அதை உணர்ந்த அந்த நொடியில் நான் ஆவென்று அலறியபடி  பீறிட்டு  ஒரு அருவி போல அவளுள் விழுந்தேன் .அப்போது ஒரு மங்கிய அகல் போல மினுங்கும் அவள் கண்களைப் பார்த்தேன் .பூ என்று ஒரு சிரிப்புடன் அந்த அகலை நான் ஊதி அணைத்தேன்

இருள்.

புதைகுழி போல அப்படியொரு இருள்


கண்ணி  முந்தைய பகுதி

http://ezhuththuppizhai.blogspot.in/2012_09_01_archive.html








Sunday, December 9, 2012

வருகை

 எத்தனை நாள் அவளுடன் பேசாதிருந்தேன் நினைவில்லை.தேரோட்டத்தை ஒட்டிதெருவே இணைந்துபோகும் பொருட்காட்சிக்கு .அப்போது கூட அவளுடன் பேசும் மனநிலை வரவில்லை.அப்போது நான் மிகப் பெரிய மனக் குழப்பத்தில் இருந்தேன்.பொருட்காட்சிக்கு எப்போதும் செல்வது போல பெண்கள் கும்பலுடன் அமாவின் முந்தானையைப் பிடித்துக் கொண்டு போக விரும்பவில்லை.ஆகவே அப்பாவுடன் ஆம்பில்லையாய் போகலாம் என்று முடிவு செய்து அவருடன் போய் வாழ்க்கையையே வேருத்துவிட்டேன்.அவர் எந்த ஒரு கடையைப் பார்த்தாலும் ''ஏலே அது பொம்பிளைங்க சாம்னுங்க விக்கற கடை அங்கே எங்கே ஏறுதே''என்றார்.அல்லது அங்கிருக்கும் அரங்கங்களில் நுழைய முயன்றால் ''அதிலே என்னாலே இருக்கு..''என்றார்.போருட்காட்சியித் திடல் முழுவதும் தனது கூட்டாளிகள் யாரும் தென்படுகிரர்களா என்று தேடஈ ஜெயன்ட் வீழ பக்கம்  ஒருவரைக் கண்டுபிடித்து  வேறு கரியங்கள் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டார்.''என்னவே இந்த வருஷம் எக்சிபிசன் சொகமில்லையே.இந்த வருஷம் ஆர் எஸ் மனோகர் நாடகம் இல்லையாமே.ஹெரான் ராமச்வாமிதானமே ''''
ஹெரான் ராம சுவாமி  நாடகத்தை நான் ஒருதடவை பார்த்திருக்கிறேன்.நண்பர்களுடன் போனால் அக்காவையும் என்னையும் சேர்த்து கேலியாய்ப் பேசுவார்கள்...அந்த வயதில் அது ஒரு குழப்பம்.அதுவரை அமா கூடவே எல்லா படங்களுக்கும் லேடிஸ் கவுந்தரிலேயே போய்ப் படம் பார்த்துவிடுவேன்.பூர்ணகலாவில் ஒருதடவை சட்டியைப் பிடித்து இழுத்து நிறுத்திவிட்டான்.''சின்னப் புள்ளையா''என்று அம்மா சொன்னதை அவன் நம்பமருத்தான்.''இவனா..இப்ப கல்யாணம் பன்னி வயி ..ஒரு வருசத்தில ரெட்டைப் புள்ள கையில வச்சிருப்பான்''ஆண்பிள்ளைகள் கவிண்டரிலோ நம் தலைமேல் மிதித்துப் போய் டிக்கட் வாங்கும் சர்க்கஸ் வீரர்கலைக் கண்டு அரண்டு போய் இருந்தேன்.அப்பா ஏன் கையில் ஐந்து ரூபாயைக் கொடுத்து ''ஏதாவது வாங்கித் தின்னு போ''என்று விரட்ட நான் கைக்கு ஒன்றாய் டெல்லி அப்பளத்தை வங்கி மிளகாய்ப் பொடி ஏராளமாய்த் தூவி தின்று கொண்டிருக்க பின்னாலிருந்து ''வயிறு எறியப போகுது''என்று குரல் கேட்டுத் திரும்பினேன்.

பரமு ஆச்சி பின்னால் நின்றுகொண்டிருந்தாள்.கூடவே அம்மா அடுத்தவீட்டு அத்தை அவளது பெண் எல்லோரும் விஷேச வீட்டுக்குப் போவது போல அலங்கரித்துக் கொண்டு நின்றிருந்தார்கள்.அத்தையின் ஏற்கனவே வெளியில் இருக்கும் பல்வரிசை சந்தோசத்தில் மொத்தமாய் வாய்க்கு வெளியே இருந்தது.''ரொம்ப மிளகாப் பொடி போட்டுத் தின்காதலே ..வயிறு எறியப போகுது''


ஆச்சி ''என்னலே இப்ப இல்லாம வீட்டுப் பக்கம் காணோம்.பெரிய பயலாயஈட்டியோ''
அம்மா ''நம்ம கூட வெளிய வர வெக்கமா இறுக்கம் தொரைக்கு சொல்றான்''என்று சிரித்தாள்.
''இல்ல ரெண்டு பெரும் சண்டை கிண்டி போட்டுகிட்ட்களா..இந்தக் காலத்துப் பிள்ளைக்க போக்கே பிடிபடலை''
அக்கா என்னைக் கானாதவள் போல ஜெயன்ட் வீளை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.அவளிடம் சில மாற்றங்களை உணர்ந்தேன்.சேலை கட்டியிருந்தால்.கண்களின் ஓரங்களில் மட்டும் வால் போல மை தீட்டி இருந்தால்.அது அவை பறப்பது போன்ற தோற்றத்தை அளித்தது.

ஆச்சி ''அய்யா...இந்த அக்காளுக்கு எதோ வலை கொலுசு வாங்கனும்னு சொல்றா...கூட போயிட்டு வரையா ..நாங்க சித்த இங்க உட்கார்ந்திருக்கோம்..முட்டி வலிக்கி''
நான் வேண்டா வெறுப்பாய் ஆவலுடன் கடை கடையாய் போனேன்.கண்ணைக் கூசும் பூச்சிகள் சுற்றும் விளக்குகளுக்கடியில் பெண்டுகள் காத்து மாட்டி ஜடை மாட்டி என்று விதம் விதமான மாட்டிகளைப் பரிசீலித்துக் கொண்டிருந்தார்கள்.இன்னொரு பக்கம் குழாயில் அலறும் விளம்பரங்கள்

''கோபாலு ''
''என்ன சார்''
''எங்க போற''
''கடைக்குப் போறான்''
''என்ன வாங்க''

;;ஷாலினி கூர்த்டுப் பெருங்காயம் வாங்க''

''போய்கிட்டே இரு''

ஷாலினியை விட்டால் கோபால் பல்பொடிஅல்லது ஆர் வி எஸ் பட்டணம் போடி ,அஞ்சல் அலுப்பு மருந்து அல்லது சைபால் சர்வரோக நிவாரணி
''அண்ணே இதில சின்ன சைஸ் இருக்கா''
''இதில கடல் நீல கலர் இருக்கா தம்பி''

''அந்த மயில் கலர் மாடியை எடுங்க''
அத்தனை விசயங்களையும் எப்போது அணிகிறார்கள் யாருக்காக அணிகிறார்கள் என்று வியப்பாக இருந்தது.நான் அவற்றை எல்லாம் பார்த்தே இல்லை.பெண்களின் உலகம் ஒரு காடு போன்றது என்று பின்னால் எனக்குத் தொன்றியிருகிறது.ஆரம்பத்தில் எல்ல்லாம் மொத்தையாகத் தோன்றுவது சற்றுக் கூர்ந்து  பாக்க்கப் பார்க்க ஒரு முழுப் பிரபஞ்சமாக விரிந்து கொண்டே இருக்கிறது.கொடிகள்,மரங்கள் ,பறவைகள்,மிருகங்கள் என்று முன்னர் காணாதவை எல்ல்லாம் அந்த மறைப்புக்குப் பின்னாலிருந்து வந்து கொண்டே இருக்கின்றன.

ஆறுமுகம் அக்கா அப்படித்தன் எனக்கு அப்போது தோன்றினால்.


நான் சற்றுநேரம் மந்திரித்த கோழிபோல நின்றுகொண்டே இருந்தேன்

அக்காதான் அதை உடைத்தால்.''உனக்கு எதுவும் வேணுமா ?"'
நான் வேணாம் என்பது போலத் தலையசைத்தேன்

''பைனாகுலர் வான்கிகிடுதியாடே ?""

நான் ''அது எதுக்கு?''என்றேன்
''தூரத்தில உள்ளதெல்லாம் கிட்டத்தில தெரியும்டே..குருவி கோபுரம் எல்லாம் கிட்டக்க தெரியும்லா ''

நான் குரோதமாய் ''எல்லாம் தெரிஞ்சவரைக்கும் போரும்''

அவள் பெருமூச்சு விட்டுக் கொண்டு ''உனக்கு என் மேல எதுவும் கோபமா?மூஞ்சி கொடுத்தே பேச மாட்டேங்கிறியே ??

நான் பேசவில்லை .என்ன ஒரு நாடகம்.ஒன்றுமே தெரியாதது போல.


அவள் கண்களைப் பாராமல் ''நான் ஒன்னும் தப்பு பண்ணலை ''என்றால் மெதுவாக

பிறகு ''எனக்கு கல்யாணம் வச்சிருக்கு.தெரியுமா ''

நான் பரபரப்படைந்து ''அப்படியா ?மாப்பிள்ளை யாரு ?""


''முனிசிபாலிட்டில ப்யூனா இருக்காரூ''என்றால் சட்டென்று அவள் கண்கள் உடைந்து நீர் கட்டி நின்றது ''நல்ல கருப்பு.ஒன்றரைக் கண் வேரடா.சனிக்கிழமை நிச்சயம் வச்சிருக்கு.''

எனக்கு சட்டென்று அவள் மீதுள்ள கோபம் எல்லாம் வடிந்தது

''எப்போ இது?யாரும் என்கிட்டே சொல்லவே இல்லியே ''

''அம்மா நீ பெரிய நாட்டாமை. உன்கிட்டே சொல்றதுக்கு உங்க அப்பாதான் சம்பந்தத்தைக் கொண்டு வந்ததே''

நான் ''வேணாம்னு சொல்லிடு.அப்பா கிட்டே நான் சொல்றேன்''

அவள் கண்களைத் துடைத்துக் கொண்டு ''போடா''என்றாள் ''வா இந்த ராட்டினத்தில ஏறி ஒரு கிரங்கு கிரந்கிட்டு வருவோம்''


கொலம்பஸ் என்கிற அந்த ராட்சத ராட்டினத்தில் ஏறி அக்கா திரும்பத் திரும்பச் சுற்றினால் ஒருமாதிரி பைத்தியக் காரத்தனமாக சிரித்துக் கொண்டே இருந்தால்.ஒருகட்டத்தில் எனக்கு  பயம் வந்துவிட்டது .என்னால இனி முடியாது என்று சொல்லிவிட்டேன்.

திரும்ப வரும்போது பார்வதி தியேட்டர் முடுக்கில் வைத்து ''அக்கா அப்பாட்ட சொல்லவா''என்றேன் இரகசியமாய்


அவள் என்னை இழுத்து அனைத்து நெற்றியில் முத்தமிட்டாள் ''அக்காவை மறந்துடாதேடா சங்கர்''


நான் ''நீ என்ன சொல்றே ?''

அவள் குளிர்வது போல தன உடலை ஒடுக்கிக் கொண்டு ''ஒண்ணுமில்லை ''என்றாள் .தெருவிளக்கின் மஞ்சள்  ஒளியில் அவர் முகம் ஒருகணம் ஒளிர்ந்து அணைந்தது.அப்போது அவள் கண்கள் மினுமினுத்தது போல எனக்கொரு கணம் தோன்றியது .அது அவளது கண்ணீரின் பளபளப்பு என்று பின்னால் தோன்றி இருக்கிறது .


அவள் தனது வீட்டின் முன்னால் மௌனமாக நின்றாள் என் கண்களைப் பார்க்காமல் ''நீ போ''என்றாள் .
அதுதான் நான் அவளைக் கடைசியாக பார்த்தது


மறுநாள் காலை
















Tuesday, November 20, 2012

காற்றே உணவெனும் சாகாக் கலை !

குற்றால மலை மேலே காற்றை மட்டுமே  உண்டு வாழ்ந்த ஒரு சாமியார் ஒருவர் இருந்தார் தேனருவிக்கும் மேலே அவர் ஜாகை எப்போதாவது கீழே வருவார்.

நாங்கள் எல்லாம் சீசன் சமயங்களில் அவரைப் பார்த்து ''லே சித்தர்லே ''என்று வியந்துவிட்டு திரும்பி வந்துவிடுவோம் ''அப்படியே பொங்கு மாங் கடல் மேல அந்தரத்தில நடப்பார்லா ?"'

ஒரு சீசனில்  சாமியாருடன் ஒரு வெள்ளைக் கார வாலிபனும் காணப் பட்டான் .நம்மைப் போல வேடிக்கைப் பார்த்து விட்டுத் திரும்பும் குணம் வெள்ளைக் காரனுக்குக் கிடையாது அல்லவா?அவனும் காற்றை மட்டுமே உண்டு வாழப் பயிற்சி எடுப்பதாகச் சொன்னார்கள்.

திடீரென்று வெள்ளைக் காரனைக்  காணவில்லை .ஊருக்குப் போயிருப்பான் என்று நினைத்துக் கொண்டோம்.

மூன்று மாதம் கழித்து தேன் எடுக்கப் போனவர்கள் அவனை செண்பகா தேவி அருவி அருகே ஒரு மரத்தடியில் குற்றுயிரும் குலை உயிருமாய்க் கண்டு பிடித்தார்கள்.

ஆள் ஒன்றுமே சாப்பிடாமல் இருந்து ஒரே இரவில் சித்தர்  ஆக முயற்சித்திருக்கிறான் ஒரு கட்டத்தில் மலையிலிருந்து இறங்கும் சக்தி கூடப் போய்  விட்டது சீசன் முடிந்துவிட்டதால் மேலே அருவிக்குப் போகிறவர்களும் இல்லாது போய் விட்டதால் யாரும் பார்க்காமல் ஆள் சாகிற நிலைக்குப் போய்விட்டான்.

அவனை தூக்கி வந்து தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தார்கள்.ஏறக்குறைய இரண்டு மாதங்கள் முடை நாற்றம் வீசும் படுக்கையில் விட்டத்தைப் பார்த்தவாறே படுத்துக் கிடந்தான் .கொஞ்சம் உடல் நலம் பெற்றதும் தூதரகத்தில் இருந்து ஆள் வந்து கூட்டிப் போனார்கள் .ஆஸ்பத்திரியில் எல்லோரிடமும் கண்ணீரோடு விடை பெற்றுப் போனான் ''எழவு கமலகாசன் மாதிரில்லா அழுவுதான் ?''என்றொரு நர்ஸ் அன்போடு வியந்தாள்.

இரண்டு வருடங்கள் கழித்து தன்னை மருத்துவமனையில் நன்றாகப் பார்த்துக் கொண்ட டாக்டருக்கு கடிதம் எழுதினான் .தான் இப்போது நன்றாக இருப்பதாக எழுதி இருந்தான்.கடைசியில் எழுதி இருந்ததுதான் விசேசம்.தான் பார்த்துவந்த  சர்வேயர் வேலையை விட்டுவிட்டு அமெரிக்காவில் பீப் பட்சணங்கள் விதம் விதமாய் விற்கும் சங்கிலி உணவகங்களை ஆரம்பித்திருப்பதாக எழுதி இருந்தான்.

நாங்கள் கொஞ்ச காலம் எப்படி காற்றையே உணவாக உண்டு வாழ வந்த வெள்ளைக் காரன் மாட்டிறைச்சி  ஓட்டல்க் காரனாக மாறி விட்டான் என்று பேசிக் கொண்டிருந்தோம்.''அது வெள்ளைக் காரன் ரத்தத்தில உள்ள குணம் லே .நம்மை மாதிரி மூக்கைப் பார்த்துகிட்டு உக்கார அவனால ஏலுமா ?புலன்  ஒடுக்கம்னா சும்மா மயிர் புடுங்கற வேலைன்னு நினைச்சுட்டான் போலிருக்கு பட்டினியாக் கிடந்த நாள் முழுக்க சாப்பாட்டையே நினைச்சு ஏங்கி இருப்பான் போல.இப்போ சமையக் காரனாகவே ஆயிட்டான் "


இதற்கிடையில் உண்ணாச் சாமியை நாங்கள் மறந்திருந்தோம்.அவரைப் பார்ப்பது அரிதென்றாலும் கடைசி சில வருடங்களாய் யாருமே அவரைப் பார்த்திருக்கவில்லை.

ஒரு சித்ரா பௌர்ணமி அன்று இரவு செண்பகவல்லி அம்மன் கோயிலில் கொடுத்த பொங்கச்  சோறை  தின்றுவிட்டு பேசிக் கொண்டிருந்தோம்.எல்லாம் சித்தர்களைப் பற்றிதான்.சித்ரா பௌர்ணமி அன்று பொதிகை மலையில் சித்தர்கள்' ட்ராபிக்' அதிகமிருக்கும் என்று பேச்சு உண்டு.''அகத்தியர் கூட வருவாராம் டே .நம்ம வள்ளியோட சகலை பார்த்திருக்கான் .அப்படியே ஆறடியிலே சிகப்பா இருப்பாராம் .கண்ணைப் பார்க்கவே முடியாதாம்.நட்சத்திரம் மாதிரி மினுங்கிக் கண்ணு கூசுமாம்'' 

''அவரு குள்ளமா இருப்பார்னு இல்லே சொன்னாங்க ''

சொன்னவன் திணறி 'குள்ளம்தான்.சித்த  ஜாதிக்குள்ள அவரு குள்ளம்''


நாங்கள் பேசிக் கொண்டிருக்கையிலேயே ஒரு அம்மா இடுப்பில் பாத்திரத்தோடு வந்து ''எய்யா பனங்கிழங்கு சாப்பிடறீங்களா ?நல்லா வேக வச்சது '' என்றார் .''இல்லம்மா இப்பதான் பொங்கச் சோறு தின்னோம்''என்று பேச்சைத் தொடர்ந்தோம்.''அது சரி.இந்த உண்ணாச் சாமியை சமீபத்தில பார்த்தியாலே?"
''அவரு முக்தி அடைஞ்சுட்டாராம்  லா'
''அப்படியா யாரு சொன்னா"'

''அதே வள்ளி சகலைதாம் .போன சித்ரா பௌர்ணமிக்கு சட்டுன்னு ஒளியா  மாறி வானத்துல ஏறிட்டாராம் நிறைய பேரு பார்த்திருக்காக ''
இதற்கு நடுவில் அந்த அம்மா திரும்ப வந்து 'எய்யா சுக்குக்  காப்பியாவது குடிங்க.நல்லா சூடா  இருக்குது ''என சரி என்று தலையாட்டினோம் 

சுக்குக் காப்பியைக் குடித்துக் கொண்டே ''அப்போ அவரை இனிமே பார்க்க முடியாதா ""
''பார்க்கலாம்.ஊனக் கண்ணால பார்க்க முடியாது .அகத்தியர் மாதிரி அவர் கீழிறங்கி வரும்போது யாராவது ஞானக் கண்ணு உள்ளவங்க பார்க்கலாம்''

இவ்வளவு நேரம்  நாங்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த அந்த அம்மா பாத்திரத்தை இடுப்பில் ஏற்றிக்கொண்டு எரிச்சலுடன் 'ஏன்  முடியாது?இப்படியே மலைல இறங்கிப் புனலூர்ப் போனீங்கன்னா எல்லாரும் பார்க்கலாம்''

''புனலூரா?அங்கெ எதுவும் ஆசிரமம் போட்டிருக்காரா?"
''ஆசிரமமும் இல்லை மண்ணுமில்லை.ஒரு மலையாளத்தியைக் கட்டிக்கிட்டு ஒரு இட்டிலிக் கடையையும் போட்டுக்கிட்டு உக்காந்திருக்காரு .எழவெடுத்தவன் .எனக்கு நிறைய பாக்கி வைச்சிட்டுப் போயிட்டான்''

Thursday, October 11, 2012

இரண்டு ராமர்கள்


ஆந்திரத்தில் பயணம் செய்யும்போதெல்லாம் இரண்டு விசயங்களைக் கவனித்திருக்கிறேன்.ஒன்று அவர்களுக்கு கோதாவரியின் மீதுள்ள பற்று.அடுத்து ராமனின் மீது அவர்களுக்கு இருக்கிற அபாரமான பிரேமை.வியப்பு.வாத்சல்யம்.எனக்கு அது சற்று மிகையாகவே எப்போதும் தோன்றி வந்திருக்கிறது.அவர்கள் எப்போதுமே சற்று அதிகம் உணர்ச்சிவசப் படக் கூடியவர்கள்  என்ற பிம்பம் எனக்குள் இருந்ததாலும் இருக்கலாம்.ஒருபக்கம் தெலுங்கானா  பிரச்சினை.நக்சலைட் நெருப்பு.இதற்கு நடுவில் ராம பக்தி.எந்த ராமன்?தியாகராஜ சுவாமிகளின் பாடல்களில் நின்றும் நடந்தும் கிடந்தும் என வருகிற ராமன்.மனித  குல மாணிக்கம் என்று கம்பன் சிலாகிக்கிற ராமன்.இந்தியாவில் எங்கு போனாலும் இது ராமர் வில் ஊன்றியஇடம்.சீதை இருந்த இடம்,அனுமன் தாவிய இடம் என்று குருதிக் கோட்டுடன்  வரும் தொன்மங்கள் ஊற்ற்டுக்கும் ராமன்.நாட்டார் கலைகளில் மீண்டும் மீண்டும் மறுபிறவி எடுக்கும் ராமன்.சீதையின் பிரிவுக்காக மனம் கலங்கி அழுத சீதா ராமன்.தந்தை வாக்கைக்  காப்பாற்ற நாடு துறந்த தசரத ராமன்.அதே சீதையை  ராஜனின் தர்மம் என்ற காரணத்துக்காக  காட்டுக்கும் அனுப்பிய ராஜா ராமன்.காந்தியின் ஆதர்ச ரகு ராமன்.


இன்னொரு பக்கம் .தொடர்ச்சியாக அரசியலாக்கப் பட்டுவரும் ராமன்.

இரண்டு ராமன்களையும் நான் பெரும்பாலோனோரைப் போலவே குழப்பிக் கொண்டிருந்தேன்.ஆனால் குழப்பம் என்னைப் போன்ற ராமனை புத்தியால் மட்டுமே  அணுகும்  அரைவேக்காடு அறிவு ஜீவிகளுக்குத்தான் என்றொருவர் உணர்த்தினார் 

போனதடவை ஆந்திரத்தில் பயணம் செய்யும்போது தான் ரயிலில் அந்தக் கிழவரைச் சந்தித்தேன்.கையில் தம்புரு போன்ற ஒரு கருவியுடன் ராமனைப் பற்றி எதோ ஒரு பாடலைப் பாடிக் கொண்டிருந்தார்.பிச்சை எதுவும் கேட்கவில்லை.நாங்கள் சாப்பிடும்போதெல்லாம் பாடிக் கொண்டே இருந்தார்.டிக்கட் இல்லை என்று தெரிந்தது.ஆனால் டிடிஆர் எதுவும் கேட்கவில்லை.ஒன்றும் சொல்லாமல் கடந்து போய்  விட்டார்.சிலர் அவருக்கு தாங்கள் சாப்பிடுவதைக் கொடுத்தபோது மறுக்காமல் வாங்கி கொண்டார்.ஒரு முஸ்லீம்  குடும்பமும் இதில் அடக்கம்.பர்தா அணிந்த அந்தக் குடும்பத்தின் பெண்கள் இருவரும் அவர் பாடல்களை உன்னிப்பாகக் கேட்டவாறே வந்தனர்.அவரது பாடல்கள் சில எனக்குப் பரிச்சயமானவை.தியாகராஜரின் கிருதிகள் போலத் தோன்றியவை.சில ஆந்திரத்தில் புழங்கும் நாட்டுப் புறப் பாடல்களாக இருக்கக் கூடும் என யூகித்தேன்.அ வரே சில பாடல்களைப் புனைந்து  பாடுகிறார் என்பதையும் அவர் முகத்திலிருந்து யூகித்தேன்..மத்திய குரலில் அவர் சீராகப் பாடிக் கொண்டே வந்தார்.எல்லாமே ராமனைப் பற்றி அல்லது சீதையைப் பற்றி, அனுமனைப் பற்றி.அவர்களிடையே இருந்த உறவு பற்றி.யாரோ ஒருவர் தூங்கவேண்டும் என்று ஆட்சேபித்த சமயம்  மட்டும் பாட்டை நிறுத்திவிட்டார்.ஆனால்அப்போதும்  மனதுக்குள் பாடிக்கொண்டுதான் இருந்தார் என்று முக பாவனைகளில் இருந்து தெரிந்தது. எங்கள்  செவிகளுக்குக் கேட்காத ஒரு ஸ்வர இழையில் சேர்ந்துகொண்டு அவர் உள்ளே  கசிந்து கொண்டிருந்தார்.நாங்கள் அவரிடம் பேச்சு கொடுத்தோம்.நானும் எனது நண்பரும்.நண்பர் ஒரு இந்துத்துவர்.அவருக்கு ஓரளவு தெலுங்கு தெரியும்.எனக்கு லேசு லேசாகப் புரியும்.கிழவருக்கு லேசாக தமிழும் தெரிந்திருந்தது.ராமேஸ்வரத்துக்கும் கும்பகோணத்தில் ஒரு ராமன் கோயிலுக்கு வந்திருக்கிறேன் என்று சொன்னார்.எனக்குத் தெரியவில்லை.மேலும் தமிழ்நாட்டில் ராம வழிபாடு அத்தனை தீவிரமாக இல்லை என்று சொன்னேன்.மற்ற தெய்வங்களிடம் இல்லாத ஒரு சோகமான அமைதியை  நான் போன மிகச் சில ராமர் கோயில்களில் உணர்ந்திருக்கிறேன்.ஏறக்குறைய கிறித்துவ சர்ச்களில் நான் உணரும் சோகம். மற்றபடி  நாங்கள் சைவ பாரம்பர்யத்தில் வந்தவர்கள்.ராமன் அத்தனை நெருக்கமில்லை. ஆகவே ஆரம்பத்தில் அவருடன் எனது நண்பர்தான் அதிகம் பேசிக் கொண்டிருந்தார்.அவர் உற்சாகமாகப் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.ராமன் மீதான அவரது காதல் அந்தப் பதில்களில் தெரிந்தது.ஆனால் அவர் ஒரு தவறு செய்துவிட்டார்.ராமபக்தர் என்பதால் அவர் ஒரு ஹிந்துத்துவ ஆதரவாளராகவும் இருக்க கூடும் என்று நினைத்துவிட்டார்.ராமனை மையப் படுத்திய அரசியல் பற்றி பேச்சு வந்ததுமே அவரது புன்னகை மறைந்தது..''அய்யா நீங்கள் பேசுவது எங்களது ராமனைப் பற்றியதல்ல''என்று சொல்லிவிட்டார்.எங்களை விட்டு விலகிப் போய்  அமர்ந்து கொண்டார்.அதன்பிறகு அவருடன் தொடர்ந்து பேச எடுத்துக் கொண்ட முயற்சிகள் எதுவுமே பலிக்க வில்லை.


ஆனால்  அவர் முகம் மாறிவிட்டது.எங்களையே அடிக் கண்ணால்  பார்ப்பதும் முணுமுணுப்பதுமாக  இருந்தார்.எங்களிடையே ஒரு இழை அறுந்து போனதை  நான் உணர்ந்தேன்.அவர் உதடுகள் பேசா விட்டாலும் உள்ளுக்குள் அசைந்து கொண்டே இருந்தது.அவர் எதையோ தீவிரமாக சொல்ல நினைக்கிறார் என்று நினைத்தேன்.ஆனால்  மந்திராலயம் நெருங்கும் முன்பு எங்களை ஒருகணம் உற்றுப் பார்த்துவிட்டு சட்டென்று உரத்த குரலில் பாட ஆரம்பித்துவிட்டார் .அதன் சுமாரான மொழி பெயர்ப்பு இது.



அய்யா 
எங்கள்  ராமன் உங்கள் ராமன் அல்ல 
எங்கள்  ராமன் 
தவளைக்கும் 
கல்லுக்கும் 
கூனிக்கும் 
குகனுக்கும் 
மந்திக்கும் 
ஏன் 
எதிரிக்கும் கூட  கருணை செய்யும் ராமன் 
துணி தோய்ப்பவன்  
சொல்லுக்கும் காதுள்ள ராமன் 
அப்பன் சொல்லுக்காக 
ராஜ்ஜியம் அத்தனையும் 
விட்டுப் போன ராமன் 
கல்லும் முள்ளும் குத்த 
காடுகளிலும் மேடுகளிலும் 
கட்டிய ஒரே பத்தினியைத் தேடி அலைந்தவன் 

உங்கள் ராமனோ எளியோரையும் 
முதியோரையும் 
பெண்களையும் வதைக்கின்ற ராமன் 
தோளில்  உள்ள சிசுவையும் 
வயிற்றில் உள்ள சிசுவையும் 
சேர்த்தழிக்கிற  ராமன் 


அரக்கனுக்கும் அடுத்த நாள் தந்த 
எங்கள்  ராமனை நீங்கள் அரக்கனாக்கினீர்கள்  

அய்யா 
அரக்கனாக்கியதின்  மூலம் 
எங்கள் ராமனின் ஆன்மாவை நீங்கள் கொன்றுவிட்டீர்கள் 

ஐயோ 
எங்கள்  ராமனை நீங்கள் கொன்று போட்டீர்கள் 
கொன்று போட்டீர்கள் 

நாங்கள் உறைந்து போய்  நின்றுவிட்டோம்.பெரிய மௌனம் பெட்டி முழுவதும் நிலவியது.எனது நண்பரின் முகம் மிக சிவந்துவிட்டது.அடிப்படையில் அவர் மென்மையானவர்.நாங்கள் மந்திராலயவில் இறங்கிவிட்டோம்.இறங்கி  வெளியே கூரை வேய்ந்த கடையில்  சிறிய குவளையில் டீ  குடித்தோம்.நண்பர் என் கண்களைச் சந்திக்க மறுத்தார்.நான்  பிடிவாதமாகச் சந்தித்த பொழுது   பதறி விலகி ''பைத்தியக் காரன் பைத்தியக் காரன்'' என்றார் 

Sunday, September 23, 2012

கண்ணி 9

அவர் மிகவும் அனுபவித்துக் குளித்தார்.அவருக்கு நீச்சல் நன்றாகத் தெரிந்திருந்தது.அக்கரைவரை நீந்தி போனார்.அங்கிருந்து திடீரென்று காணாமற் போனார்.திடீரென்று ஒரு நீர்க் காகம் போல தலையைத் தூக்கிக்  கொண்டு முழுநிலவைப் பார்த்துக் கூக்குரலிட்டார்.அந்த தனித்த நதிக் கரையில் முழுநிலவின் கீழே காற்றில் சலங்கைப் பட்டையை வீசியது போன்ற அவரது சிரிப்பொலி கதைகளால் நிறைந்திருப்பவருக்கு அச்சத்தையும் நடுக்கத்தையும் ஏற்படுத்தி இருக்கும்.எனக்கே முதுகு விசிறப் பட்ட சாட்டையைப் போல படபடவென்று நடுங்கியது.நான் கேட்டிருந்த மோகினிக் கதைகள் அனைத்தும் நினைவு வந்தது.அவை இப்படித்தான்  பிறக்கின்றன போலும்.என்று நினைத்தேன் .

சட்டென்று என் மனம் படித்தவர் போல சாமியார் பேச ஆரம்பித்தார்.

''தனித்த பெண் எப்போதுமே ஆணுக்கு அச்சத்தைத் தருகிறாள்.அதுவும் இயற்கையோடு தனித்திருக்கும் பெண்.அது அவன் வேட்டையாடிக் கழித்த காலத்தை நினைவுப் படுத்துகிறது.பெரிய மிருகங்களுக்கு குளிருக்கும் அஞ்சி இரவுகளில் குகைகளில் கழிந்த காலம்.இறப்பென்பதும் பிரப்பென்பதும் பெரிய புதிராக இருந்த காலம்.சந்தான விருத்தியில் ஆணுக்கு தனது பங்கு என்னவென்று தெரியாத காலம்.எந்தக் காயமும் இன்றி அவளது யோனியிலிருந்து பெருகும் உதிரம் கண்டு அவன் உறைந்த காலம்.உதிரம் என்பதே வாழ்க்கை என்று அவன் கண்டிருந்தான்.இறக்கும்போது உதிரம் பெருகுகிறது.நிறைய உதிரம்.நோயிலோ முதுமையிலோ இறப்பவர் என்று அங்கு யாருமே இல்லை.எல்லோருமே கொல்லப்  பட்டும் தின்னப் பட்டும் இறந்து போனார்கள்.ஆகவே உதிரம் என்பதே அவனுக்கு வாழ்க்கை.மரணம்.எல்லாம்.பெண் மட்டுமே மாத மாதம்  உதிரம் பெருக்கியும் உயிரோடு மீண்டு வருகிறாள்.சில நேரங்களில் அத்தோடு ஒரு மாமிசப் பந்து போல சுருண்டுகொண்டு ஒரு உயிரும் வெளிவருகிறது.எப்படி அது வருகிறது?யார் அதை உள்ளே வைத்தார் அதை அங்கு?என்ன்று அவன் வியந்தான்.யோனி என்பது ஒரு திறப்பு.தெய்வம் உலகிற்கு உயிரை அனுப்பும் வாசல் .கருவறை.உள்ளே அதன் இருட்டுக்குள் தெய்வம் இருக்கிறது.அழிக்கும் ஆக்கும் காக்கும் தெய்வம்.ஆகவே பெண்ணை அறிய அவளது யோனியை நீ அறிய வேண்டும்.அதை நீ வணங்க வேண்டும்.அதை அஞ்ச வேண்டும்.ஆராதிக்க வேண்டும்.ஏனெனில் அச்சமே அறிவின் ஆரம்பம் என்று சொல்லப் பட்டிருக்கிறது''

எனக்கு அவர் சொன்னதில் நிறைய புரியவில்லை.பொம்பிள சாமானைக் கும்பிடுன்னு சொல்றானா சாமியார்?என்று தோன்றியது

அவர் தொடர்ந்து பேசினார்.''பிறகு ஒரு காலகட்டம் வந்தது.அவன் குகையில் இருந்து வெளியே வந்தான்.ஆயுதங்கள் செய்தான்.விவசாயத்தைக் கண்டுகொண்டான்.அங்குமிங்கும் அலையாமல் ஒரே இடத்தில் அமர்ந்தான்.காடழித்து திருத்தினான்.எல்லாமே அவனுக்குப் பெண் கொடுத்தவை.விளைவாக அவனுக்கு குருதி என்பது தூரமாயிற்று.மரணம் எப்போதுமே கழுத்தைச் சுற்றிய மலைப்  பாம்பு என்ற நிலை மாறிற்று.தான் அவள் அருகில் போகாவிட்டால் யோனித் திறப்பு வழியாக உயிர் வருவதில்லை என்றவன் கண்டு கொண்டான்.இயற்கையின் மீது அச்சம் விலக விலக அவன் அவள் மீதான அச்சமும் வியப்பும் குறைந்தது.ஏனெனில் அதுவரை அவளை இயற்கையின் ஒரு பகுதியாகவே அவன் அகத்தில் வைத்திருந்தான்.சிங்கமும் புலியும் பாம்பும் விஷப்  பூச்சிகளும் புதை மணலும் காட்டாறும்  கொண்ட வனத்தின் ஒரு பகுதி.ஆனால் மெல்ல மெல்ல காட்டிலிருந்து அவன் விலகினான்..காட்டை தன்னிலிருந்து விலக்கினான் .இப்போது அவன் காட்டை வெறுத்தான்,அதுநாள் வரை அது தன மேல் செலுத்தி வந்த நுகத்தை அச்சத்தை எண்ணி சீற்றம் கொண்டான்.அதன் மீதான சீற்றம் அவனுக்கு இப்போது பெண் மீதான சீற்றமாக வெறுப்பாக மாறிற்று..காளியின் காலின்  கீழே புரண்டுகொண்டிருந்த சிவன் எழுந்தான்.அவளை வென்றான்.அம்மை இப்போது அவனுக்கு அடங்கியவள் ஆனாள் .அவளை அவன் தன்னுள்  ஒருபாகம் என்ற அளவிலே அடக்கிக் கொண்டான்.''



நான் அவர் இதையெல்லாம் அவர் என் என்னிடம் என் சொல்கிறார் என்பது போலப் பார்த்தேன்.அவர் கீழே மணலில் கிடந்த ஜோல்நாப்பையில் இருந்து எதையோ எடுத்தார்.அது ஒரு குழாய்ப் போலிருந்தது.சுரைக்காய் போன்ற எதோ ஒன்றால் செய்யப் பட்ட குழாய்.அவர்  எதையோ அதனுள் நிரப்பினார்.காட்டமான புகையிலை வாசம் போல வீசிற்று.அவர் அதைப் பற்றவைத்தார்.காற்று வீசிக் கொண்டிருந்ததால் சற்று சிரமமாக இருந்தது.கைகளை குவித்துக் கொண்டு அதை மறைத்துப் பற்றவைத்தார்.


குளித்துக் கொண்டிருந்த அந்தப் பெண்ணைக் காணவில்லை.

சாமியார் புகையை ஆழ இழுத்துக் கொண்டார்.என்னிடம் நீட்டினார்.நான்  தயங்கினேன்.''அவர் ''ம்ம்''என்றார்.''உனக்கு இன்னிக்கு ஒரு ஆப்பரேசன்  பண்ணப் போறேன்.ஆப்பரேசன் பண்றதுக்கு முன்னாலே மயக்க மருந்து கொடுக்கணும்ல?"'

நான் அதை வாங்கிக் கையைக் குவித்து இழுத்தேன்.முதலில் ஒன்றுமே தெரியவில்லை.''என்ன சாமி இது...மண்ணு மாதிரி இருக்கு?''
அவர் சிரித்தார்.என்னை உற்றுப் பார்த்துவிட்டு திரும்பி கொண்டார்.நான் ஒரு அசட்டு சிரிப்புடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
நிலவு ஆற்றின்மீது ஒரு வெள்ளிச் சேலை போல  கசிந்து அலைந்தது.ஈர மணலில் இருந்து மீன்வீச்சம் எழுந்து மூச்சை நிறைத்தது.இல்லை மீன் வீச்சம் இல்லை.நான் அந்த மணத்தை  வேறெங்கோ அறிந்திருக்கிறேன்.நான் எனது அகத்துக்குள் அந்த வாசனையின் மூலத்தைத் தேடி அலைந்தேன்.நீர்க் காக்கை ஒன்று கிராக் என்று கத்தியபடி தலைக்கு மேலே போனது.எங்கோ மர  மறைவிலிருந்து புறா ஒன்று க்கும் என்று செருமி நிறுத்திக் கொண்டது..நான் நாணல் ஒன்றை பிடுங்கி மோந்து பார்த்தேன்.எனக்கு ஏனோ எல்லாவற்றையும் மோந்து பார்க்கவேண்டும் போலத் தோன்றியது..நான் சாமியாரைப் பார்த்தேன்.அவர் என்னையே பார்த்தபடி தலைக்கு மேலே கைகளால் வெளியில் கோலம் வரைவது போல எதோ சைகைகள் செய்துகொண்டிருந்தார்.நான் இன்னொருமுறை புகையை இழுத்தேன்.இப்போது அது ஒரு திரவம் போல என்னுள் கனமாய் இறங்கியது உணர்ந்தேன்.எரியும் நெருப்புப் பந்து போல அது என்னுள் இறங்கியது.வளை  எலி தானியத்தைத் தேடுவது போல அது என்னுள் இறங்கி எதையோ தேடியது.நான் ஒருவித அச்சத்துடனும் வியப்புடனும் அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.அது எதைத் தேடுகிறது?அது எனது நெஞ்சில் இருந்து சட்டென்று தீர்மானித்துக் கொண்டது போல விலகி எனது அடி வயிற்றுக்குள்  புகுந்தது.பிறகு ஒரு முடிவற்ற காலம் காற்றில் மிதக்கும் ஒரு பலூன் போல அங்கேயே அது மிதந்த வண்ணம் நின்றது.ஒரு சிறிய பந்தளவு உள்ள மஞ்சள் வெளிச்சம்ஒன்று அங்கிருந்தது.அது மெல்ல அசைந்து ஆரஞ்சாகி சிகப்பாகி எழுந்து மேலே ஒரு ஷட்டில்காக்  போல நின்றிருந்த நெருப்புக் கோளத்தைச்  சந்திக்க வந்தது..இரண்டும் சந்தித்த வினாடியில் ப்ளக் என்று பாட்டில் வெடித்தது போல ஒரு சத்தத்தைக் கேட்டேன்.

சாமியார் சட்டென்று என்னை பிடித்து உலுக்கினார்.''இங்கே பார்'.இங்கே பார்''என்றார்.நான் சிரமப்பட்டு உள்ளிருந்து என் கண்களை திருப்பிக்  கொண்டு வெளியே பார்த்தேன்.''இது யார் பார்''என்றார்.

அங்கெ பளபளக்கும் நிலவொளியில் நிமிர்ந்து நிற்கும் சர்ப்பம் போல முழு நிர்வாணமாய் முலை  முட்கள்  இரண்டும் பெரிய கண்கள் போல வான் பார்த்து விழித்துப் பார்க்க நின்றிருந்த அந்தப் பெண்ணைப் பார்த்தேன்.சாமியார் ''இது யார்?''என்றார்.நான் இதென்ன கேள்வி என்பதுபோல அவரை பார்க்க அவர் ''இல்லை.திரும்பிப் பார்''என்றார்.''அவள் கண்களைப் பார்''என்றார்.

நான் திரும்பி அவரது கண்களைப் பார்த்தேன்.அவை இப்போது நுட்பமாக மாற்றம் பெற்றிருந்தன.ஒருநிமிடம் அது அந்தப் பெண் சாமியாரின் கண்ணாய் அது இருந்தது.மறுநிமிடம் ஒரு சர்ப்பத்தின் கண்ணாய் மாறியது .நான் அஞ்சி விலகும் சமயம் அது வேறு ஒருவரின் கண்களாய் மாற்றம் கொண்டது.சட்டென்று அந்தப் பெண்ணின் கண்கள்  இளகி இறைஞ்சலாய்  ''அண்ணன் மாதிரின்னு சொன்னியேண்ணே ?"'என்றது.
நான் தாக்கப் பட்டவன் போல அதிர்ச்சியுற்று திரும்பி சாமியாரைப் பார்க்க அவர் அங்கு இல்லை.மாறாக சண்முகம் நின்றுகொண்டிருந்தான்.''ஏலே சும்பக் கூதி.லட்டு மாதிரி பொண்ணு.இப்பவாது சோலியை முடி ''என்றான்.
நெருங்கி வந்து''எவ்வளவு ரத்தம்!தேங்காய் உடைச்சாப்ல!''என்றான்.
நான் அந்த மணம்  என்னவென்பதை இப்போது உணர்ந்தேன்.அது அவளது யோனி உதிரத்தின் உப்புவீச்சம் நிறைந்த மணம் .

கண்ணி 8
http://ezhuththuppizhai.blogspot.in/2011/08/8.html

Wednesday, August 29, 2012

இன்று ஓணம்

இன்று ஓணம்.வழக்கமாய் சுஜித் என்கிற எனது மலையாள நண்பர் ஒருவருக்கு வாழ்த்து சொல்வேன்.சமீபத்திய சொந்த அதிர்ச்சியில் மறந்துவிட்டேன்.காலையில் ஒரு போன் வந்தது .அவர் இறந்துவிட்டதாக.

tear jerker என்பார்களே அப்படி ஒரு வாழ்வு அவருடையது.அவருக்கு இரு பெண் குழந்தைகள்.மூத்தப் பெண்ணிற்கு பிறவியிலிருந்தே காது கேட்காது.மாற்றுத் திறனாளியான பெண்ணை வளர்க்க அவர் பட்ட பாட்டை எழுதப் போவதில்லை.எழுத்து எல்லாத்  துக்கத்தையும் பளபளப்பாக்கி விடுகிறது.காது கேளாதோருக்கான  சிறப்புப் பள்ளியில் அவளைச் சேர்த்தார்.ஆனால் அதற்கான செலவை அவரது அரசுச் சம்பளத்தில் ஈடு செய்யமுடியவில்லை.அதைச் சரி பண்ண அந்தப் பள்ளியிலேயே அவரது மனைவி ஒரு பயிற்றுனராகச் சேர்ந்தார்.கொஞ்ச காலத்திற்குப் பிறகு காக்ளியர் இம்ப்ளான்ட் என்றொரு வித்தை வந்தது..பொருத்தினால் காது கேட்கிறது எனறார்கள்.ஆனால் செலவு மிக அதிகம்.குறைந்தது பனிரெண்டு லட்சம்.அவ்வளவு பணத்துக்கு அவர் எங்கே போவார்?அரசிடம் கேட்டுப்பார்த்தார்.அரசு ஒரு விதி எண்ணைச் சொல்லி மறுத்துவிட்டது.இருந்தாலும் ஆசை விடவில்லை.சில தான அமைப்புகளிடம் முயன்றார்.அவை அவர் குறிப்பிட்ட மதத்தையோ குழுவையோ சேர்ந்தவராய் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தன.அல்லது அவர் குடிசையில் இருக்கவேண்டும் என்று வற்புறுத்தின.இருந்தாலும் அவர் நம்பிக்கை இழக்கவில்லை.காக்ளியர் கருவியின் விலை குறையும் என்று பணம் சேர்த்துக் கொண்டிருந்தார்.

அப்போதுதான்  அந்த நோய் அவருக்கு வந்து சேர்ந்தது.வலது கையைத் தூக்குவதில் அவருக்குச் சிரமம் இருந்தது.பிறகு அடுத்த கைக்குப் பரவியது.பிறகு கால்களுக்கு.டாக்டர்கள் அவருக்கு பார்கின்சன்ஸ் என்று கண்டு பிடித்தார்கள்.வழக்கமாய் அறுபது வயதுக்கு பிறகு  மட்டுமே வரக் கூடிய நோய்.இவருக்கு நாற்பது வயதில் வந்துவிட்டது.இந்த நோய் உடையவர்களுக்கு தலையும் கை கால்களும்  ஆடிக் கொண்டே இருக்கும் .எல்லாத் தசைகளும்  கல் போல் இறுகிவிடும்.ஒரு அடி எடுத்து வைப்பதே பெரிய சாதனை போல் இருக்கும்.ஏதோ ஒரு சாபத்தினால் கல்லாய் சமைந்துவிடுகிறவர்கள் பற்றி புராணங்களில் படித்திருக்கிறோமே அது போல்.புன்னகை செய்வது கூடக் கடினமாக இருக்கும். பர்கின்சனின் முக்கியமான அறிகுறிகளில் ஒன்று கல்முகம் எனப்படும்  முகத் தசை இறுக்கம்.ஆனாலும் அவர் கடைசிவரை புன்னகைக்க  முயன்றுகொண்டே இருந்தார்.

சிகிச்சை எடுத்துக் கொண்டார்.ஆரம்பத்தில் கேட்டது.ஆனால் பக்க விளைவுகள் மிக அதிகம்.ஒரு மருத்துவர் அதிக வீர்யம்  உள்ள  மருந்து கொடுத்தது மூளையைப் பாதித்து மனக் கோளாறுகளில்  கொண்டு போய் விட்டது.மூன்று மாதம் எர்ணாகுளம் அமிர்தானந்த  மயி மருத்துவமனையில் தங்கி இருந்தார்.தன் மனைவி வேறு யாருடனோ ஓடிப் போய்விடப் போவதாக சந்தேகம்.மனைவியைக் கண்டாலே அடிக்க ஆரம்பித்தார்.இந்த  நாட்களைப் பற்றிப் பின்னால் என்னிடம் ஒரு புன்னகையுடன் சொல்லி இருக்கிறார்.'என்னுள் இரண்டு நான்கள் அப்போது இருந்தன.ஒரு நான் அவளைச் சந்தேகித்துக் கொண்டே இருந்தது.இன்னொரு நான் அதைத் தவறெனச் சொல்லிக் கொண்டே இருந்தது.எனது இரண்டாவது நானால் முதல் நானைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.'

விளைவாக ஆங்கில மருத்துவத்தை நிறுத்திவிட்டு சித்தம்,ஆயுர்வேதம்.ஹோமியோ என்று எது எதுவோ சாப்பிட்டார்.பூனைக்காலி சாப்பிட்டா சரியாயிடும்னு சொல்றாங்க  சங்கர்.அதுலதான் இயற்கை டோப்பமின் இருக்குதாம் என்பார்.மேலும் ஆங்கில மருத்துவம் செலவு பிடிப்பதாகவும் இருந்தது.அடிக்கடி லீவ் போடவும் முடியவில்லை.சம்பள இழப்பு.அதிகாரிகளின் கடிதல்கள்.நியாயமாகப் பார்த்தால் அவருக்கு நிறைய ஒய்வு தேவை.ஆனால் ஓய்வெடுக்க முடியாத நிலையில் அவர் இருந்தார்..அதிகாலையிலே திருவனந்தபுரத்திலிருந்து கிளம்பி குழித்துறையில் இறங்கி பஸ் மாறவேண்டும்.ஆனால் குழித்துறை ரோட்டைக் கடக்க முடியாமல் கால்கள் இழுத்துக் கொண்டு ஒரு சிலை போல் ஒரே இடத்தில் கால் மணி நேரத்துக்கு மேலாய் நிற்பதை பார்த்திருக்கிறேன்.விபரம் புரியாதவர்கள் அவரைத் தண்ணி கேசு என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன்.

மாற்று மருத்துவமும் கொஞ்ச நாட்களுக்குப் பிறகு செயல் இழந்தது/இடையில் அவரது தாய் வேறு மார்புப் புற்று நோய் வந்து இறந்து போனார்.அவருடைய எல்லா இடர்கள் நடுவிலும்  அவர் உளம் சாய்ந்து கொள்ளும் தூணாக அவர் இருந்தார்.மீண்டும் ஆங்கில மருத்துவம்.அதன் பக்கவிளைவுகள்.ஒரு விடச்  சுழல்.

இப்போது காக்ளியர் கருவியின் விலை சற்று இறங்கிவந்தது.ஆறு லட்சம்..ஆனால் ஆறு லட்சமும் கூட  இப்போது அவர்களுக்குப் பெரிய தொகை ஆகியிருந்தது.சேர்த்து வைத்திருந்தது எல்லாம் இவரது மருத்துவச் செலவுக்கே  சரியாகி இருந்தது .ஆனால் மீண்டும் ஒரு ஒளிக் கீற்று .மறுபடியும் பணம் சேர்க்க ஆரம்பித்தார்.விற்றார்.கடன் வாங்கினார்.அரசு கொடுத்த அத்தனை லோன்களையும் வாங்கினார்.அவரது சம்பளப் பில்லை ஒருதடவை பார்த்து அதிர்ந்து போயிருக்கிறேன்.மிகச் சிறு தொகை.

காக்ளியர் கருவிக்குப் பின்னால் அலைந்ததில் ஒருதடவை அவர் சென்ற ஆட்டோ கவிழ்ந்து தலையில் அடிபட்டு ஒரு மாதம் மீண்டும் ஆஸ்பத்திரியில் இருந்தார்.
சங்கர் ஆலுவால ஒரு ஆஸ்பத்திரில இருக்கேன் என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.
கடைசியாக இரண்டு மதங்களுக்கு முன்பு அவர் மகளுக்கு அந்தக் கருவி பொருத்தப் பட்டுவிட்டது.சந்தோசமாய் என்னிடம் போன் பண்ணிச் சொன்னார்.'இப்போது அவளுக்கு மழைச் சத்தம் எல்லாம் கேட்குது சங்கர்' என்றார்.


நான் அவரை மந்திராலயத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறேன்.ஏதோ ஒரு அற்புதம் நிகழ்ந்து விடாதா  என்ற நம்பிக்கையில்.உண்மையில் சமீபத்திய அஹோபிலப் பிரயாணத்தில் அவர் பற்றி நினைத்துக் கொண்டே வந்தேன்.நானும் அவரும் நிறையப் பேசி இருக்கிறோம்.வாழ்வு  பற்றி,நோய் பற்றி,மன நலம் பற்றி,கடவுள் பற்றி,கர்மா பற்றி.ஜே கிருஷ்ண மூர்த்தி பற்றி,ஓஷோ பற்றி,கம்யூனிசம் பற்றி.,சினிமா பற்றி ..அவருக்கு அபாரமான நகைச்சுவை உணர்வு இருந்தது.தன்மாத்திரா படம் பார்த்து அவரது மொத்தக் குடும்பமும் அழுதது என்றார் சிரித்துக் கொண்டே..

அருமனை ஆபிசில் இருந்து திரும்புகையில்  சில சமயம் போன் செய்வார்.நான் குழித்துறை ரயில் நிலையத்தில் காத்திருப்பேன்.சிமென்ட் பெஞ்சில் அமர்ந்து ரயில் வரும்வரை பேசிக் கொண்டிருப்போம்.நான் எப்போதுமே ஒரு நம்பிக்கையற்ற பதட்டத்தில் இருப்பேன் அல்லது அதீத நம்பிக்கையில் இருப்பேன்.இதைச்   செய்தால்எல்லாம் சரியாகிவிடும்.இந்தக் கோயிலுக்குப் போனால் போதும்.இந்த மருந்தை சுவாசித்தாலே போதும்,இந்தத் தத்துவம்தான் எல்லாவற்றுக்கும் தீர்வு இது போன்ற மிகை உணர்வுகள்.அவர் எப்போதுமே நிதானமாய் ஒரு புன் சிரிப்புடன் இருப்பார்.கடைசிக் காலங்களில் அவரது தசை இறுகி  புன்னகைப்பது கூட கடினமாக இருந்தும்...ஏனெனில் நான் பேசுவதை எல்லாம் அவர் நேர் வாழ்வில் கடந்துவிட்டிருந்தார்.நான் துயரத்தின் ஆழ் கிணற்றுக்குள்  விழும்போது எல்லாம் அவரைத்தான் நினைத்துக் கொள்வேன்.அவருடன் ஒப்பிட என் துக்கங்கள் என்ன?ஒன்றுமே இல்லை.


ஆகவே அவரது மகளுக்கு ஆப்பரேசன் முடிந்ததும் அவர் தனது துக்கக் குகையின் முடிவுக்கு வந்துவிட்டார் என்றே நினைத்தேன்.எல்லா குகைகளின் முடிவிலும் ஒரு வெளிச்சப் புனல் உண்டு என்று சொல்லி இருக்கிறதே.முதன்முதலாய் மழைத்துளியின் சத்தத்தைக் கேட்கும் மகள்...

ஆனால் 

நேற்று ஓணத்திற்காக அவரது வீட்டில் எல்லோரும் கொட்டாரக்கரை சென்றிருக்கிறார்கள்.இரவு பணி முடிந்ததும் அவரும் கொட்டாரக் கரைக்கு வருவதாக சொல்.வரவில்லை.தேடி இருக்கிறார்கள்.இங்கே வீட்டில் விளக்கு எரிந்த வண்ணமே இருந்திருக்கிறது.முற்றத்தில் எடுக்கப்படாத பால் பாக்கட்டுகள்  செய்தித்தாள்கள்.எந்த விளிக்கும் பதில் இல்லை.போலீசுக்குச் செய்தி சொல்லி கதவுடைத்துப் போனால் பாத்ரூமில் இறந்து கிடந்திருக்கிறார்.கீழே விழந்ததில் நல்ல அடிபட்டு ரத்தம் பெருகி இறந்திருக்கிறார்.இன்று போஸ்ட் மார்ட்டத்துக்குப்பிறகு கொட்டாரக் கரைக்குக் கொண்டு போகிறார்கள்.



கடைசியாகப் போன் பண்ணும்போது ''சங்கர்.என் சம்பளத்துல ஏதோ பிரச்சினை சரியான தொகை வரலை .ஆபிஸ்ல என்னன்னு பார்க்க முடியுமா?இத வைச்சுதான்  ஓணம் பர்சேசிங் பண்ணனும்.மகள் 'கேட்கிற' முதல் ஓணம் !''என்றார்.

இன்று ஓணம்.

தாயோளி கடவுளே என்ன டைமிங்டா  உன்னுது...

LinkWithin

Related Posts with Thumbnails