Saturday, May 21, 2011

அருசி

ஒரு தனித்த இரவாய்ப்
போயிற்று இது
மூடிக் கிடக்கும்
பெரிய வீட்டில்
ஒற்றையாய் அலையும்
பூனை போல திரிகிறேன்
கடிகாரம் உதிர்க்கும்
மணித் துளிகள்
பெருகிப் பெருகி
வெறுமையை நிரப்புவதைப் பார்த்துக் கொண்டு..

காட்டின் வாசனை
இன்னமும் வீசும்
புத்தகங்களை மேய்கிறேன்
உலகப் பெருங்கவிகள்
உதிரம் கொண்டு எழுதியவை அவை ..
உயிர் கொடுத்திசைத்த
இசைத் தட்டுகளை வருடுகிறேன்
கந்தர்வர்களின் மூச்சுக் காற்று
அவையெல்லாம்
என அறிவேன்

ஆனாலும் எதிலும்
ருசியற்று
சலித்தது மன நாக்கு..

உறை பனி மேல்
விழும்
தீத் துளிகள் போல 

அவை யாவும்
கடுங்குளிரில் அவிந்தன


கரை நனைத்தோடும்
பெருவாற்றில்
கைகள் அற்றவன் தாகத்துக்குத்
தண்ணீர் இல்லை

யாராலும் கொடுக்கமுடியவில்லை
இறந்தவனுக்கு

வாழ்வின் வெப்பத்தை..

5 comments:

  1. கொடுக்கவும் முடியாது.

    தனிமையின் சொட்டுக்கள் கவிதை பூராவும்.

    அருமை.

    ReplyDelete
  2. ஒற்றையாய் அலையும் பூனை - fantastic.. கவிதைக்குள் கவிதை.

    புரிய மறுக்கும் பிற வரிகள்.

    (ரெண்டு நாளா உங்க ப்லாக் பாதி இறங்கி நின்னுட்டிருந்துச்சு.. கவிதையாட்டம்:-)

    ReplyDelete
  3. பிரமாதம்! மிகவும் இறுக்கமான கவிதை. பலமுறை படித்தேன். கடைசி வரிகள் இன்னமும் மனதில் உழன்று கொண்டிருக்கிறது.

    ReplyDelete
  4. ///யாராலும் கொடுக்கமுடியவில்லை
    இறந்தவனுக்கு
    வாழ்வின் வெப்பத்தை..////
    வெப்பத்தை இழந்த சோகம் மனதை அறுக்கிறது.
    அந்த இறந்தவனை தேடிப்பிடித்து வாழ்வின் ருசியை அளித்துவிடும் கருணை பெருகுகிறது.
    எங்கே தேடுவது ?
    --

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails