Thursday, April 17, 2014

பாரன்ஹீட் 451 -ஒன்று

எரிப்பது ஒரு இன்பமான விஷயம். 
பொருட்கள் தீயினால் தின்னப்படுவதை ஓரங்கள் கருகி கொஞ்சம் கொஞ்சமாய் வேறு பொருளாய் மாறுவதைப் பார்ப்பது இன்னும் இன்பமான விஷயம் 

கைகளில் நெளியும் மலைப்பாம்பு போன்ற அந்த  உலோகக் குழாயின் முனையை இறுகப் பற்றிய கைகளுடன்  சரித்திரத்தின் இடிபாடுகளை அழிக்கும் போது அவன் ஒரு இசை நடத்துனன் போலத் தோன்றினான் .451 என்று எண் இட்ட  தலைக்கவசத்துடன் அவன் குழாயின் விசையை அழுத்தினான்.கெரசின்  பீறிட்டு  பாய்ந்தது..பிறகு நெருப்பு..வீடு குபீரென்று அந்தி வானத்தைச் செக்கராக்கிவிட்டு கொழுந்து விட்டெரிந்தது .அவனைச் சுற்றிலும் எரிப்பூச்சிகள் படபடத்து பறந்தன.புறாவின் இறகுகளைப் போன்று படபடக்கும் செட்டைகளுடன்  முற்றத்தில் குவியலாகக் கிடந்த புத்தகங்கள் புகைச் சுருளை காற்றில் பரவவிட்டுக் கொண்டு மரித்தன. 

தீயை நெருங்கும்போது எல்லார் முகங்களிலும் தோன்றும் இளிப்பு போன்ற தசைஇழுப்பு மாண்டேக்கின் முகத்தில் எப்போதும் இருந்தது .தீயணைப்பு நிலையத்துக்குத் திரும்பியபிறக்கும் பணி  முடிந்த பிறகும் இருட்டிலும் அந்த இளிப்பு மறைவதில்லை என்று அவன் அறிவான் .ஒரு போதும்.

அவன் தனது கருவண்டு போன்று பளபளத்த தலைக் கவசத்தைத் துடைத்த பிறகு அவனது தீயெரிக்காத சட்டைக்குப் பக்கத்தில் தொங்க விட்டான் .நன்றாக குளித்தான்.பிறகு விசிலடித்தவாறே  நிலையத்தின் முதல் தளத்தில் நடந்து அங்கிருந்த துளைக்குள் விழுந்தான்.தரையைத் தொடும் முன்பு கடைசிக் கணத்தில் நடுவிலிருந்த சுழலும் இரும்புக் கழியைப் பிடித்து தன்னை நிலைநிறுத்திக் கொண்டு மெதுவாக இறங்கினான். 

தீநிலையத்தை  விட்டு அவன் நள்ளிரவில் நிலத்தடி ரயில் நிலையத்தை அடைந்து  காற்றால் உந்தப்படும் ரயில் ஒன்றில் ஏறினான். அது ஒரு நீண்ட உஷ்ணப் பெருமூச்சுடன் அவனை புறநகர்ப்பகுதியில் தள்ளிவிட்டு புறப்பட்டது. 

நிலையத்திலிருந்து விசில் அடித்தவாறே  நகரும் படிக்கட்டுகள் மூலம் ஏறி காற்று அசையாது உறைந்து நின்ற வீதிக்கு வந்தான். மெதுவாக தெருவின் திருப்பத்தை நோக்கி நடந்தான். அதை அடையும் முன்பு சட்டென்று நடையை நிதானப் படுத்தினான். யாரோ அவனை அழைத்தாற்  போல... 


காரணம் கடந்த சில நாட்களாக இந்த இரவு நடையில் சில வினோதமான உணர்வுகளுக்கு அவன் ஆளாகி இருந்தான். .அந்த குறிப்பிட்ட முனையில் திரும்பும் முன்பு அங்கு யாரோ நின்று இருந்தார் போல ஒரு உணர்வு...யாரோ அவனுக்காக அமைதியாகக்  காத்திருந்தார் போல...அவன் வருவதற்கு சில வினாடிகள் முன்புதான் மனதை மாற்றிக் கொண்டு நிழலாக மாறி அவனை ஊடுருவிப் போக விட்டது போல....ஒருவேளை அவனது மூக்கு அந்த நபரின் மெலிய மணமூட்டியின்  வாசனையை கண்டு கொண்டிருக்கலாம். அல்லாத அவனது புறங்கை சருமம் காற்றில் ஒரு உஷ்ணக் கூடுதலைக் கண்டு கொண்டிருக்கலாம். ஆனால் ஒவ்வொரு தடவையும் அவனால் யாரையும் அங்கு கண்டுபிடிக்க முடியவில்லை. ஒருநாள்  இரவு மட்டும் சட்டென்று ஒரு வேகமான அசைவு போல புல்வெளியின் குறுக்கே ஓடுவதைக் கண்டு கொண்டானா அவன் ?


ஆனால் இன்று அவன் நிச்சயமாகவே உணர்ந்தான் .அங்கே  யாரோ இருக்கிறார்கள்.ஒரு  கிசுகிசுப்பு .அவன் சட்டென்று தன் நடையின் வேகத்தைக் குறைத்து மெதுவாக அந்தத் திருப்பத்தில் திரும்பினான் .

நிலா அலம்பிய இலையுதிர்க்காலத்து சருகுகள் புரண்டுகொண்டிருக்கும் அந்த நடைபாதையில் ஏறக்குறைய மிதப்பது போலதான்  அவள் நடந்துவந்துகொண்டிருந்தாள்.சருகுகளைப் புரட்டும் காற்று அவளையும் புரட்டி பறக்க வைப்பது  போல இருந்தது.அவள் தனது கால்களைச் சுற்றிச்  சுழலும்  சருகுகளைக் கவனிப்பது போல தலைகுனிந்து நடந்து வந்துகொண்டிருந்தாள்.மெலிந்த பால்வெள்ளை முகம் கொண்ட அவளிடம்  எப்போதும் ஒரு வியப்பு இருந்தது. கருத்த கண்களில் எப்போதும் ஒரு தவிப்பு.பசி ,உலகில் எதையும் தவறவிட்டுவிடக் கூடாது என்பது போல ஒரு ஆர்வம்..கிசு கிசுக்கும் வெள்ளை உடைகளை அவள் அணிந்திருந்தாள்.காற்றில் அவளது மெலிய கரங்கள் அசையும் ஒலியைக் கூட அவனால் கேட்க முடிந்தது.வழிநடையில் அவன் நிற்பதை மிகக் கடைசிக் கணத்தில்தான் கண்டுகொண்டாள்  அவள்.

அவர்கள் தலைமேல் நின்றிருந்த மரம் சருகுகளை ஒரு சிறிய மழை போல ஓசையுடன் அவர்கள் மீது  உதிர்த்தது .அவள்  ஒருநிமிடம் திரும்பிப் போய்விடப் போவது போலத் தயங்கி நின்றாள் .பிறகு அங்கேயே நின்று அவன் எதுவோ பெரிய  விஷயம் ஒன்றைச் சொல்லிவிட்டது போல அவளது கருத்த கண்களால் அவனைப் பார்த்தபடியே நின்றாள் .ஆனால் அவன் வெறுமனே  ''ஹலோ''என்றுதான் சொன்னான்.பிறகு அவளது கண்கள் அவனது தோள்பட்டையிலிருந்த நெருப்புப் பல்லி  சின்னத்தால் கவரப் பட்டிருப்பதைக் கண்டு ,

''ஆமாம்"'என்றான்''நீ என்னுடைய பக்கத்து வீட்டுக்குப் புதிதாய் வந்திருக்கிறாய் .இல்லையா?''

''ஆமாம் .நீங்கள்தான் அந்த தீயணைப்புத் துறையைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் 
அவள் குரல் தேய்வாக ஒலித்தது. 
''எவ்வளவு வினோதமாகச் சொல்கிறாய் அதை நீ !''என்றான் அவன்.
''எளிது.நான் கண்ணை மூடிக் கொண்டு அதைக் கண்டுபிடித்திருப்பேன் ''என்றால் அவள்.

''எப்படி ?இந்த கெரசின் வாசனை மூலமாகவா?என் மனைவி எப்போதும் சொல்வதுண்டு.எவ்வளவு கழுவினாலும் அது போவதில்லை.ஆனால் என்னைப் பொருத்தவரை அது ஒரு நறுமணம்தான்''என்றான் அவன் 

''உண்மையாகவா?""
''உண்மையாகத்தான்.ஏன் ?"'

அவள் பதில் சொல்லாது திரும்பி ''நான் உங்களுடன் நடக்கலாமா?என் பெயர் க்ளாரிஸ்  மக்லீலன் ''

''க்ளாரிஸ் .என் பெயர் கய் மண்டேக்.போகலாம்.க்ளாரிஸ் இந்த நேரத்தில் ஏனிப்படி தனியாக அலைந்துகொண்டிருக்கிறாய்?உன் வயதென்ன ?''

அவர்கள் அந்த மெல்லிய குளிர்காற்று வீசும் வெள்ளிச் சாலையில் நடந்தார்கள்.காற்றில் புதிய ஸ்ட்ரா பெர்ரிக்கள்  மற்றும் எப்ரிகாட்டுகளின் மணம்  வீசிற்று.இந்தப் பருவத்தில் அது ஒரு அபூர்வமான நிகழ்வு என்று  அவன் உணர்ந்தான். 

சாலையில் அவர்களைத் தவிர வேறு யாருமே இல்லை.அவள் முகம் நிலவொளியில் உறைபனி போலப் பொலிந்தது 

''ம்ம்.என்னுடைய வயது பதினேழு.பித்துப் பிடித்த பதினேழு.பித்தும் இந்த வயதும் எப்போதும் சேர்ந்தே வருகிறது என்று என் மாமா சொல்வார். நடப்பதற்கு நல்லதொரு நேரம்  இல்லையா?.எனக்கு உலகைக் காண நுகர பிடிக்கும்.பல நேரங்களில் இரவு முழுவதும் விழித்திருந்து நடப்பதுண்டு.சூர்ய உதயத்தைக் காண''

அவர்கள் மௌனமாக  நடந்தார்கள்.பிறகு அவள் திடீரென்று ''பாருங்கள்.எனக்கு உங்கள் மீது பயமே இல்லை''

அவன் வியப்படைந்து ''என்னைப் பார்த்து ஏன்  பயப்படவேண்டும்?''

''நிறைய பேர் பயப்படுகிறார்கள் .பயர்மேன்களைக் கண்டு.ஆனால் நீங்களும் ஒரு மனிதர்தான்''

அவன் அவளுடைய  வயலட் ஆம்பர் போன்ற கண்களில் தன்  உருவை அதன் அத்தனை விவரங்களுடனும் மிகச் சிறியதாகக் கண்டான்.அவள் முகம் ஒரு பால் ஸ்படிகம் போல வெண்மையாக  ஒளிர்ந்தது.அலறும் மின்சார வெளிச்சம்  அல்ல.ஒரு மெழுகுவர்த்தியின் மென்மையான வெளிச்சம்.அவனுடைய  சிறிய வயதில் மிக அரிதாக மின்சாரம் போன ஒரு பொழுதில் அவனது அம்மா ஒரு மெ ழுகுவர்த்தியைத் தேடிப்  பிடித்து ஏற்றியதும் அதுவரை அவர்களைச் சுற்றிக் கடுமையாக இறுகிக் கிடந்த வெளி தனது  கூர்முனைகளை  இழந்து சட்டென்று ஆதூரமாய்  அவர்களைப் பொதிந்துகொண்டது .மின்சாரம் வராமலே போய்விட்டால்தான் என்ன என்று அவர்கள் அன்று நினைத்தார்கள் 

''நீங்கள் தப்பாக நினைத்துக் கொள்ளவில்லை என்றால் நீங்கள் எவ்வளவு காலமாக இந்த பயர்மேன் வேலையைச் செய்கிறீர்கள் ?''

''இருபது வயதிலிருந்து .பத்து வருடங்களாக''

''இந்த வேளையில் நீங்கள் எரிக்கிற புத்தகம் எதையாவது நீங்கள் படித்ததுண்டா ?""
அவன் சிரித்தான்''அது குற்றம் அல்லவா?"'
''ஆமாம் ''என்றாள் அவள்
''உண்மையில் இது நல்லதொரு வேலை..திங்கட்கிழமைகளில் ஷேக்ஸ்பியர். புதன்கிழமைகளில் விட்மேன். வெள்ளிக் கிழமைகளில் பால்க்னர் .எல்லோரையும் எரித்துச் சாம்பலாக்கு.பிறகு அந்தச் சாம்பலையும்  எரித்துச்  சாம்பலாக்கு.இதுதான் எங்கள் முழக்கம்''


''இது உண்மையா ?பயர்மேன்கள் முன்பொரு காலத்தில் நெருப்பை அணைக்க முயன்றார்கள், இப்போது போல அதை உருவாக்க முயல்வதில்லை என்பது ?"'

''இல்லை.வீடுகள் எப்போதுமே தீ எதிர்ப்புச் சக்தியுடன்தான் இருந்தன ''

''அப்படியா ?நான் வேறு மாதிரிக் கேள்விப்பட்டேன்.வீடுகள் கவனக் குறைவினாலோ விபத்தாகவோ வேறு  எதனாலோ தீப்பற்றிக் கொள்ளும்போது பயர்மேன்கள் அதை அணைக்க முயல்வார்கள் என்று... ''

அவன் சிரித்தான் 

'ஏன்  சிரிக்கிறீர்கள்??
''தெரியவில்லை ''என்று சொல்லிவிட்டு அவன் மீண்டும் சிரித்தான் 
அவள் ''பாருங்கள்.நகைச்சுவையாக நான் எதுவும் சொல்லாதபோது நீங்கள் சிரிக்கிறீர்கள்.ஒருகணம்கூடநீங்கள்  நான் சொன்னதைப் பற்றி யோசிக்கவே இல்லை ''

அவன் நடப்பதை  நிறுத்திவிட்டு ''நீ ஒரு வினோதமான பெண்.மேலும் உனக்கு மரியாதையே கிடையாது ''

''நான் உங்களை அவமானப்படுத்தவேண்டும் என்று  அதைச் சொல்லவில்லை.எனக்கு மனிதர்களைக அவதானிப்பது  பிடிக்கும் என்று நினைக்கிறேன்.அவ்வளவுதான்''

அவன் தனது ஹெல்மெட்டில் இருந்த 451 என்ற எண்ணைக்  காட்டி ''இது உனக்கு எதையும் சொல்லவில்லையா''

அவள் ''ஆம்''என்று கிசுகிசுப்பாய்ச் சொன்னாள் .பிறகு சற்று வேகமாக நடக்கத் துவங்கினாள். 
''நீங்கள் நெடுஞ்சாலைகளில் வேகமாகப் பறக்கும்  ஜெட் கார்களைக் கவனித்திருக்கிறீர்களா ?"
''நீ பேச்சை மாற்றுகிறாய்!''

''எனக்குத் தோன்றுகிறது அவற்றை ஒட்டுகிறவர்களுக்கு  புல்  எது பூ எது என்று நிஜமாகவே எதுவும் தெரியாது .அந்த வேகத்தில் புல்  ஒரு பச்சை அசைவு .ரோஜாப்பூ தோட்டம் ஒரு பிங்க் அசைவு .வீடுகள் ஒரு வெள்ளை அசைவு .அவ்வளவுதான்.உண்மையில் அவர்கள் எதையுமே பார்க்கவில்லை.தெரியுமா ?எனது மாமா ஒருதடவை நெடுஞ்சாலையில் மெதுவாக காரில்  போனதிற்காக இரண்டுநாட்கள் சிறையில் இருந்தார்.வேடிக்கையாக இல்லை ?வருத்தமாயும்?"'

''நீ நிறைய யோசிக்கிறாய் ''என்றான் மாண்டேக் சற்றே அசவுகர்யமாக 

''நான் இந்த சுவர்த் தொலைக்  காட்சிகளைப் பார்ப்பதே இல்லை.ரேஸ்களுக்கோ கேளிக்கைப் பூங்காக்களுக்கோ போவதில்லை.ஆகவே இந்த மாதிரி கிறுக்குத் தனமாக யோசிப்பதற்கு நிறைய நேரம் கிடைக்கிறது.இன்னொன்று  தெரியுமா ?இப்போது நகருக்கு வெளியே இருக்கும் இருநூறடி விளம்பரப் பலகைகள் முன்பு இருபதடிதான் இருந்தன.கார்கள் வேகம் கூட கூட அவர்கள் அதைப் பெரிதாக்கினார்கள்'

''இது எனக்குத் தெரியாது!''என்றான் அவன். 


''உங்களுக்குத் தெரியாத இன்னொன்றும் எனக்கும் தெரியும்.காலைகளில் புற்களின் மீது  பனித் துளிகள் இருக்கின்றன! ''


இதை அவன் அறிந்திருந்தானா  இல்லையா என்பதை அவனால் சட்டென்று நினைவுகூர முடியவில்லை.அது  அவனை எரிச்சல் மூட்டியது.


''மேலும் நீங்கள் சற்று உற்றுக் கவனித்தால் ... ''என்று மேலே காண்பித்தாள்.''நிலாவில் ஒரு பாட்டி இருக்கிறாள்''

அவன் அவ்வாறு நிலாவைப் பார்த்து வெகுகாலம் ஆயிற்று 

மீதி தூரத்தை அவர்கள் மௌனமாகவே கடந்தார்கள் அவள் தனது சிந்தனைகளில் ஆழ்ந்திருக்க அவன் அவள் மீது  குற்றச்சாட்டும் பார்வைகளை வீசியபடியே வந்தான். .அவர்கள் அவளது வீட்டை அடைந்தபோது அவள் வீட்டில் இருந்த எல்லா விளக்குகளும்  மிகப் பிரகாசமாய் எரிந்துகொண்டிருந்தன  


''என்ன நடக்குது இங்கே?''என்றான் அவன்.நள்ளிரவில் இவ்வளவு விளக்குகள் ஜொலிக்கும் வீடுகளை அவன் பார்த்ததே இல்லை. 


''ஒன்றுமில்லை அம்மாவும் மாமாவும் விழித்திருந்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.ஒரு அரிதான விசயம்தான்.ஒரு பாதசாரி போல.உங்களுக்குத் தெரியுமா?மாமா  ஒரு தடவை ரோட்டில்  நடந்து போனதற்காக வெறுமனே ஒரு பாதசாரியாய் இருந்ததற்காய்  கைது செய்யப்பட்டிருக்கிறார்!''என்றாள்.பிறகு ''நாங்கள் விநோதமானவர்கள் மாண்டேக்''


அவன் சற்று விழிப்படைந்து ''என்ன சொல்லுகிறாய் க்ளாரிஸ் ?''

அவள் அதைக் கண்டு சிரித்து ''நல்  இரவு மாண்டேக்''என்றவாறு நடக்கத் தொடங்கினாள். பிறகு எதையோ நினைத்துக் கொண்டவள் போலத் திரும்பிவந்து அவன் கண்களை உற்றுப் பார்த்து ''நீங்கள் சந்தோசமாக  இருக்கிறீர்களா மாண்டேக்?"'

அவன் ''என்ன?....''என்று கத்தினான் 
ஆனால் அதற்குள் அவள்நிலவொளிக்குள் புகுந்து  ஓடிவிட்டாள். வீட்டின் முன் கதவு மெதுவாக சாத்தப் பட்டது 



2


''சந்தோஷமாக இருப்பது!''என்று அவன் உரக்கச் சொல்லிக் கொண்டான்''என்ன முட்டாள்த்தனம்''

பிறகு சிரிப்பதை நிறுத்திவிட்டு அவன் வீட்டுக்  கதவுத் துளையில் தனது கைகளை வைத்தான்.அது அவனை உணர்ந்துகொண்டு திறந்தது. 

''ஆமாம் நான் சந்தோசமாகத்தான் இருக்கிறேன்.அவள் என்ன நினைக்கிறாள் ?நான் அவ்விதம் இல்லை என்றா??என்று அவன் அந்த மௌனமான  அறைகளைக் கேட்டான்.கொஞ்சநேரம் வெண்டிலேட்டரைப்  பார்த்தவண்ணமே அப்படியே நின்றிருந்தான்.பிறகு அதன் இரும்புக் கிராதிக்குப்பின்னால் இருக்கும் ஒன்றை சட்டென்று நினைவு கூர்ந்து  கண்களை விலக்கிக்  கொண்டான். அது அவனை அங்கிருந்து குனிந்து கூர்ந்து பார்ப்பது போலத் தோன்றியது. 

என்ன ஒரு வினோதமான இரவு! .வினோதமான சந்திப்பு !இப்படியொருவரை அவன் சந்தித்தே இல்லை.ஒரு வருடம் முன்னால்  ஒரு பூங்காவில் மாலையில் சந்தித்த ஒரு கிழவரைத் தவிர.


மாண்டேக்  தலையை உலுக்கிக் கொண்டான்.அவளது முகம் அவனது நினைவில் மிகத் தெளிவாய் இருந்தது.அவளுக்கு மிகச் சிறிய  முகம்.நள்ளிரவில் திடீரென்று நீங்கள் விழித்துக்கொள்ளும்போது அறையில் விழித்திருக்கும்  சிறிய கடிகாரத்தின் ஒளிரும் முகம் போல.அப்போது மிகச் சரியாக என்ன மணித்துளி அடுத்த மணித்துளி என்ன என்று உறுதியாக அறிந்த காலை நோக்கி விடாது ஓடும் ஒரு கடிகார  முகம். 

மாண்டேக் ''என்ன?''என்று தன்னையே கேட்டுக் கொண்டான்.தனது இன்னொரு தான்.தனக்குள் அவ்வப்போது கட்டுப்பாடு இல்லாமல் பிதற்றத் தொடங்கிவிடும் இன்னொரு தான். 

அவன் மீண்டும் அவள் முகத்தை நினைத்துக் கொண்டான்.ஒரு கண்ணாடியை போலவும்தான் அவள் முகம்.நம்பமுடியாதபடி.நம்மை நமக்கே காட்டும் எத்தனை பேரை எனக்குத் தெரியும்?அவன் அறிந்த பெரும்பாலான மனிதர்கள் .......ஒரு தீப்பந்தம் போலதான்.அவிந்து போகிறவரை  எரிவார்கள்.அவ்வளவுதான்.இவள்போல நம் ஆழத்தை நம்  ஒளியை நமது சலனங்களை நமக்கேத் திருப்பி காணத் தருகிற முகங்கள் மிக அரிதானவை.



எவ்வவளவு உயிர்த்துடிப்பான பெண் அவள்!அவள் ஒரு பொம்மலாட்டத்தை மிக ஆர்வமாக ரசிப்பவர் போன்றவள்.பொம்மையை இயக்குகிறவரின் ஒவ்வொரு அசைவையும் கண் துடிப்பையும் துடிப்புடன் எதிர்பார்த்துக் காத்திருப்பவள்.அது போலவே  வாழ்வையும்  எதிர் நோக்குகிறாள்..உண்மையில் அவர்கள் இருவரும் சேர்ந்து எவ்வளவு நேரம் நடந்திருப்பார்கள்?மூன்று நிமிடங்கள்?ஐந்து?ஆனால் இப்போது அது எவ்வளவு நீண்ட காலமாகத் தோன்றுகிறது இப்போது !இந்த நேரத்துக்குள் அவள் அவனது மன மேடையில் எவ்வளவு பெரிய ஆளுமையாக மாறிவிட்டாள்  !அவளது மெலிய உடல் எவ்வளவு நீளமான நிழலை விட்டுச் சென்றுவிட்டது ! 


இப்போது நினைக்கையில் அவள் அந்த இரவில் தனியாக எனக்காகவே காத்துக் கொண்டிருந்தாள் என்று தோன்றுகிறது .அவ்வளவு தாமதமாகி விட்டபின்பும்.... 


அவன் தனது படுக்கையறைக் கதவைத் திறந்தான். 

சட்டென்று அவனுக்கு அது  ஒரு கல்லறைக்குள் வந்துவிட்டதுபோலத் தோன்றியது .மிகக்குளிர்ச்சியான பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட ஒரு கல்லறை.வெளியே  கிடக்கும்  ஒரு வெள்ளி உலகைப் பற்றிய ஒரு குறிப்பு கூட அங்கே இல்லை.எல்லா ஜன்னல்களும் மிக அழுத்தமாக அடைக்கப் பட்டு  வெளியே இருக்கும் பெரிய நகரத்தின் ஒரு சிறிய சத்தம் கூட வராத முற்றிலும் இருட்டான ஒரு கல்லறை உலகம். 

ஆனாலும் அது காலியாக இல்லை 

கொசுக்களை உண்ணும் ஒரு எலெக்ட்ரானிக் குளவி  அதன் மெல்லிய இயந்திர இரைச்சலுடன் அதன் பிங்க் நிறக் கூட்டில் உறங்கிக் கொண்டிருந்தது.அதன் தேய்ந்த இசையை இப்போது அவனால் கேட்கமுடிந்தது. 

அவன் தனது  புன்னகை ஒரு பெரிய மெழுகுவர்த்தி உருகி தன்மீதே கவிழ்ந்து விழுந்து மடிவதைப் போல   மறைவதை உணர்ந்தான்.இருட்டு.இருட்டு.....அவன் சந்தோசமாக இல்லை.அவன் சந்தோசமாக இல்லை.அவன் இதைத் தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.இதுதான் உண்மை.அவன் தனது சந்தோசத்தை மகிழ்ச்சியை ஒரு முகமூடி போல அணிந்திருந்தான்.அந்தப் பெண் அந்த முகமூடியுடன் ஓடிவிட்டாள். இனி கதவைத் தட்டி அதைத் திருப்பித் தா  என்று அவளிடம் கேட்கமுடியாது 


மாண்டேக் விளக்கைப் போடாமலே அந்த அறை   எப்படி இருக்கும் என்று யோசித்தான் .அவன் மனைவி படுக்கையில் மூடிக் கொள்ளாமல் ஒரு கல்லறையில் படுக்கவைக்கப் பட்ட குளிர்ந்த உடல் போல கூரையை வெறித்தபடி படுத்திருப்பாள்.அவளது கண்களை எப்போதும் கூரையிலிருந்துவரும் இரண்டு இரும்புச் சலாகைகள் பிணைத்திருப்பது போல.அவள் காதுகளில் இரண்டு இயர்போன்கள் கடல்சிப்பிகள் போல இறுக்க  அடைத்தபடி .அந்த சிப்பிகள் மூலமாக ஒவ்வொரு இரவும் பேச்சும் பாட்டும் இசையும் கடல் அலைகள் போல அவளது ஒருபோதும் தூங்காத மனதின் கரையின்  மீது வந்து வந்து போயின.இரண்டு வருடங்கள்.ஒவ்வொரு இரவும் அந்த  அலைகள்தான் அவளைத் தனக்குள் இழுத்துக் கொண்டு காலையை நோக்கிக் கொண்டுபோய்ச் சேர்த்தன...இந்த இரண்டு வருடங்களில்  ஒரு இரவை கூட அவள் அந்த அலைகள் இல்லாமல்  கடந்ததில்லை. .

அவனால் மூச்சு விட முடியவில்லை.மிக இருட்டாக இருந்தது அது.இருந்தாலும் அவன் ஜன்னல்களைத் திறந்து நிலவொளியை உள்ளே அனுமதிக்கத் துணியவில்லை. இருட்டிலேயே நடந்து கட்டிலை நோக்கிப்  போனான். தரையில் கிடக்கும் அந்தப் பொருளின் மீது தடுக்கிக் கொண்டான்.ஆனால் முன்பே தான் தடுக்கப போகிறோம் என்பதை அதன்  முந்திய கணத்தில் உணர்ந்து விட்டான்..அது ஏறக்குறைய அன்றிரவு நடைபாதையில் அவனுக்காக ஒருவர் காத்திருக்கிறார் என்பது போல அவனுக்குத்  தோன்றிய ஒரு உணர்வு.கால் அந்தப் பொருளின் மீது ஒரு சிறிய உலோகச் சத்தத்துடன் மோதியது. அந்தப் பொருள் இருட்டுக்குள்  உருண்டு போனது. 

அவன் விறைப்பாக நின்றுகொண்டு படுக்கையில் இருப்பவரது அசைவுகளை உன்னிப்பாகக்  கவனித்தான்.அவரிடமிருந்து வெளிவந்த மூச்சுக்காற்று மிக மெலிதாக இருந்தது. ஒரு சிறிய இலையை இலையை ரோமத்தை மட்டுமே அசைக்கக் கூடியதாக.... 


இருப்பினும் அவன் வெளி உலகின் ஒளியை உள்ளே கொண்டுவர விரும்பவில்லை,கையிலிருந்த லைட்டரை உயிர்ப்பித்தான்.அந்த ஒளியில் இரண்டு நீலக் கற்கள் அவனை நோக்கி ஏறிட்டுப் பார்த்தன.இரண்டு சிறிய நீலக் கற்கள் .ஒரு சிறிய  குட்டையில் தேங்கி நிற்கும்  நீரின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் இரண்டு நீல நிலவுக் கற்கள்.அவற்றின் மீது வாழ்க்கை மிக  மெலிதாக  ஒரு அலைபோல அவற்றைத் தொடாமல் ஓடிக் கொண்டிருந்தது.  


''மில்ட்ரெட்!""




அவளது  முகம் பனியால் மூடப்பட்ட ஒரு தீவு போல இருந்தது.அந்தத் தீவின் மீது மழை  பெய்யலாம்.முகில்கள் வேகமாக ஓடும் நிழல்களுடன் கடக்கலாம்.ஆனால் தீவு மழையையோ, மேகங்களின் நிழல்களையோ உணராதிருந்தது  அங்கு அவளது இயர்  போன்களின் இசை  மட்டுமே இருந்தது .முழுக்கக் கண்ணாடியாக  உறைந்துவிட்ட  கண்கள்.


மூச்சு உள்ளேயும் வெளியேயும் மிக பலவீனமாக போய்  வந்து கொண்டிருந்தது.அது போவது பற்றியும் வருவது பற்றியும் அறியாது கவலைகொள்ளாது  அவள் இருந்தாள்  

அவன் காலால் உதைத்துத் தள்ளிய பொருள் இப்போது அவனது கட்டிலுக்குக் கீழ் கிடந்தது .இன்று காலையில் முப்பது தூக்க மாத்திரைகள் இருந்த ஒரு ஸ்படிகக் குடுவை....இப்போது காலியாக. 


அங்கே அவன் நின்றுகொண்டிருந்தபோது அவன் தலைக்கு மேலே வானம் கிறீச்சிட்டது. ஒரு பெரிய சத்தம் -இரண்டு ராட்சதக் கரங்கள் மிகப் பெரிய கறுப்புத் துணியை அதன் பொருத்தல்களில் இருந்து கிழிப்பது போல மாண்டேக் இரண்டு துண்டாக வெட்டப்பட்டான்.அவனது நெஞ்சை இரண்டு துண்டாக அந்த சத்தம் வெட்டிப் பிளந்தது.போர் விமானங்கள் -ஒன்று...இரண்டு....மூன்று.....ஆறு....பனிரெண்டு ....எல்லாம் சேர்ந்து அவனுக்காக அலறின.அவன் தனது வாயைத் திறந்து அந்தச் சத்தம் அவனது பற்களின் ஊடே  வர அனுமதித்தான்.அதில் வீடு நடுங்கியது.கையிலிருந்த லைட்டர் அணைந்தது.நீலக் கற்கள் மறைந்தன.அவனது கை தொலைபேசியை நோக்கிப் பாய்ந்தது. 


ஜெட்விமானங்கள் போய்விட்டன.அவனது உதடுகள் ரிசீவரில் ஒரு பயங்கரமான ரகசியத்தைச் சொல்லவது போலப் பேசின. ''அவசர சிகிச்சைப் பிரிவு.மிக அவசரம்''


 வானத்தின் நட்சத்திரங்களை அந்த ஜெட்விமானங்கள் தூள் தூளாக்கிவிட்டன  என்று அவன் நினைத்தான்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails