Sunday, March 15, 2015

கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்






நிறைய பெண்கள் கோலமிடுகிறார்கள் .சிலர் கோலமிடுவதற்கே
பிறக்கிறார்கள்.உம்மிணி சேச்சி அப்படி பிறந்தவள்தான் .உம்மிணி  என்றால்
என்ன அர்த்தம் என்று யாருக்கும் தெரியவில்லை .உம்மிணி என்றால் ஒரு பிடி
தங்கம் .இன்றைய பரதேசித் தங்கமல்ல .நல்ல கனமுள்ள தம்புராக்கமார் காலத்து
பழந்தங்கம் என்றார் சந்திர சேகரன் பிள்ளை .அவர் சொன்னதை  யாரும்
நம்பவில்லை .அவர் நிறைய கதை சொல்வார் .குழித்துறையில் ஒருமுறை வெள்ளம்
வந்தபோது அவர் வீட்டுக்குள் ஒரு முதலை ஏறி வந்து விட்டது என்று சொன்னவர்

அந்தக் கதை இப்படிப் போகிறது

அந்த வருடம் மழை அப்படிப் பெய்துகொண்டிருந்ததது.இரவெது  பகலெது என்று
தெரியாதபடிக்கு குழித்துறையை மழை இருட்டு சூழ்ந்திருந்தது.ஆற்றில்
வெள்ளம் வரும் என்று எல்லோரும் பேசிக் கொண்டார்கள். குழித்துறையில்
பெய்து வராது.இங்கே எவ்வளவு பெய்தாலும் ஆற்றில் நுரைத்துக் கொண்டு
போய்விடும்.ஆனால் திடீரென்று பேச்சிப்பாறையில் அணையைத்
திறந்துவிட்டுவிடுவார்கள்.அப்போது திடீரென்று வெள்ளம்
பெருகிவிடும்.நியாயப்படி கரையோர சனங்களுக்கு அறிவிப்பு கொடுக்க
வேண்டும்.கொடுப்பார்கள் ரேடியோவில் உழவர் உலகத்துக்கு நடுவில் ஒரு முறை
ஆகாசவாணி டெல்லி செய்திகளுக்கு அப்புறம் ஒரு முறை.ஆனால் யார் வீட்டில்
ரேடியோ இருந்தது !தவிர அவர்கள் சொல்லியிருந்தாலும் அவருக்குக்
கேட்டிருக்காது.அவர் புதிதாய் அரிஷ்டம் குடிக்கப் பழகி
இருந்தார்.தேங்காப்பட்டினத்துக்கு அருகே அவருக்கென்று கணக்கு வைத்து
மாம்பட்டை கொடுத்தார்கள்.அந்த அடாத மழையிலும் அவர் எப்படியோ அங்கு போய்
ஒரு பாட்டிலை அங்கேயே வைத்துக் குடித்து விட்டு வீட்டுக்கும் கொண்டு
வந்துவிட்டார்

 உண்மையில் அவர் குடிகாரர் இல்லை.அவருக்குப் பிரியமானமகள் வயிற்றுப்
பேரன் ஒருவன் செத்துப் போனதிலிருந்துதான் அவரிப்படி ஆகிவிட்டார்.அவரது
பெயரன் உண்மையிலேயே ஒரு உன்னி கிருஷ்ணன்.அப்படியொரு சத்துவமும் ஒளியும்
துலங்கும் முகம்.தினமும் ஆற்றில் குளித்து விட்டு அவன் அவரின் கைகளைப்
பிடித்துக் கொண்டு மகாதேவரைத் தொழும்போது விரியாத கண்களே இல்லை..அவனுக்கு
அம்மை வேண்டாம்.அப்பா வேண்டாம்.தாத்தா போதும்.அவன் பள்ளி சென்ற பொழுது
தவிர மீதி  நேரங்களில் அவருடன்தான் இருந்தான்.அவர் சொன்ன கதைகளைக்
கேட்டான்.அவருக்கு கதைகள் சொன்னான்.அவருடனேயே உறங்கினான் .ஒருநாள்
இருவரும் அம்பலத்திலிருந்து வரும்போது அவன் எதன்  மீதோ இடித்துக்
கொண்டான்.சிறு  கீறல்தான்.பிள்ளை அவன் காயத்தை முத்தமிட்டு தேங்காய்
எண்ணெய் தடவினார் .அப்போது அது சரியாகப் போனது.அவன் பள்ளிக்குப்
போய்விட்டான்.மாலை வரும்போது அவனை வண்டி வைத்துக்
கொண்டுவந்தார்கள்.கடுமையான காய்ச்சல்.அவனை வெட்டுமணி ஆஸ்பத்திரியில்
சேர்த்தார்கள்.காய்ச்சல் குறையவே இல்லை.அதிகாலையில் அவனுக்கு வில்வாதம்
வந்துவிட்டது.படுக்கையிலிருந்து தலையாலும் கால்களாலும் குத்தி எழும்பி
நின்றான்.பிள்ளை அவனை அணைத்துக் கொண்டு கிடத்த
முயன்றார்.முடியவில்லை.அவன் பற்கள் கிட்டி கண்கள் தெறித்து விடுவதைப் போல
தள்ளி நின்றன.அவர் அவனைக் கட்டிக் கொண்டு அழுதார்.விடியும் போது அவன்
உடம்பு தளர்ந்தது.தளர்ந்த போது அவன் இறந்து
போயிருந்தான்,.அன்றிலிருந்துதான் அவர் குடிக்க ஆரம்பித்தார்

அப்படி குடித்து விட்டு வந்து தூங்கி எழுந்த நாள் ஒன்றின் காலையில்தான்
அவர் தனது அறையில் ஒரு முதலையைக் கண்டார்.அது வெள்ளத்தில் எப்படியோ தப்பி
ஊருக்குள்ளும் அவர் வீட்டுக்குள்ளும் வந்திருக்கிறது .சிறிய முதலை.அவர்
பார்க்கையில் அது  உறங்கிக் கொண்டிருந்தது.சட்டென்று பார்க்க அவருக்கு
அது தனது உன்னி கிருஷ்ணனைப் போலவே இருந்தது.அவருக்கு கண்ணிலிருந்து நீர்
வழிந்தது.,அவனும் இதே போலதான் இதே இடத்தில்தான் தூங்குவான்.

அவர் தோளின்  மீது ஒரு துவர்த்து போல அதைப் போட்டுக் கொண்டு
திரும்பவும் தாமிரபரணி யிலேயே விட்டுவிட்டதாகச் சொன்னார்.

ஊரில் யாரும் இந்தக் கதையை நம்பவில்லை.ஆனாலும் அவர் அதைச் சொல்லிக்
கொண்டுதான் இருந்தார்

உண்மையில் உம்மிணி என்றால் சிறிய என்றுதான் அர்த்தம் .மார்த்தாண்ட வர்மா
செயித்ததும் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு இறந்துவிட்ட உம்மிணித்
தங்கச்சியை உங்களுக்கு நினைவில்லையா ?என்று புட்பராசு
கேட்டார்.உண்மைதான். என்று பிள்ளை ஒத்துக் கொண்டார்.தான் ஒரு காவியச்
சுவைக்காகவே அப்படிச் சொன்னதாக அவர் சொன்னார்.உம்மிணி  என்றால் சிறிய
என்பதுதான் சரி. ஆனால் உம்மினி சேச்சியிடம் சிறிதாக என்ன இருக்கிறது
?கோலம் போட அவள் குனியும்போது .அவளது பின்னம்பாகம் பரலோகராஜ்யம்
முழுவதையும் மறைக்கிறதே என்பார் போதகர் பால்ராஜ். நடுக்கத்துடன் அவளைக்
கடக்கும் போது  மட்டும் அவர் தனது பைபிளை இன்னும் இறுக்கமாய் அணைத்துக்
கொள்வார் .அவளது ஸ்தனங்கள் அப்படியே பொங்கி அவள் வரையும் கிருஷ்ணனை
நோக்கிப் பாய்கிறது என்பார் பத்மநாப பணிக்கர் .

அவள் எப்போதும் வரைவது கிருஷ்ணனைத்தான் .முற்றத்தின் மீது பட்டுப்பூச்சி
போல பாவிப் பாவி அவள் வரையும் கிருஷ்ணன்களை நீங்கள் மறக்கவே முடியாது
.தினமொரு கிருஷ்ணன் .நேற்றைய கிருஷ்ணன் மறந்தும் கூட  மறுபடி வர மாட்டான்
.கிருஷ்ணனைத் தவிர அவள் வேறு வரைந்ததில்லை .உதிரப் பெருக்கு தினங்களில்
அவள் எளிதாக வரையும் கோடுகளில் கூட ஒரு கிருஷ்ணனே இருப்பான் .ஆயிரமாயிரம்
வருஷம் எழுதியும் வரைந்தும் கூட இன்னுமொரு கிருஷ்ணனை புதிதாய் எழுதுவது
சாத்தியமாகவே இருக்கிறது .''கிருஷ்ணன் இந்தியப் பெண்களின் ஒட்டு மொத்த
ஆழ்மன ஆசைகளின் ஒட்டு மொத்தவடிவம் ''என்றார் அவர்.
போதகர் ''இந்துப் பெண்கள்''என்று முனகினார்
பணிக்கர் ''இந்தியப் பெண்கள் ''என்று உறுமினார்
போதகர் விட்டுவிட்டார் .அவர் சமீபத்தில்தான் போதகர் பால் ராஜாக மன
மாற்றம் பெற்றார்.அதன் கதை இது..இதற்கு  முன்பு அவர் ஜோதிடர் பால
கிருஷ்ணனாக இருந்தார்.ஒரு  நாள் நள்ளிரவில் வீட்டுக்கு வெளியே
ஒன்றுக்குப் போக   வந்தவர் புதருக்கு மறுபுறம் நின்றுகொண்டிருந்த
உருவத்தைப்பார்த்து  பயந்து ''யாருவே அது?''என்றார்

உருவம் ''பயப்படாதே .நான்தான் மெய்யான தேவன்
வந்திருக்கிறேன்''என்றது.அன்றிலிருந்து ஜோதிடர் பாலகிருஷ்ணன் சாது
பால்ராஜ் ஆகிவிட்டார்.
அதெல்லாம் கதை.உண்மையான காரணம் அவருக்கும் அவர் மனைவிக்கும் இருந்த
பிரச்சினைகள்தான் என்று பணிக்கர் ஒருநாள்  என்னிடம் விளக்கினார். ''அவரு
சம்சாரம் கேரக்டர் சரியில்லை.ஒருநா அவ பக்கத்து வீட்டுக் காரனோட
இருக்கறதை அவரு பார்த்துட்டாரு''பணிக்கர் ஒரு தீவிர
இந்துத்துவர்.''கொடுங்களூர்ல இந்தியாவின் முதல் மசூதியைக் கட்டின சேரமான்
எப்படி மதம் மாறினான்னு சொல்றே ?அதுவும் ஒரு ஸ்திரீயால்
நிகழ்ந்ததுதான்.அவன் பெரிய சிவ பக்தன்.அதே சமயம் ராணி மேலயும் ரொம்பப்
பிரியம் .ஆனா  ஒருநாள் அவன் ராணி குதிரைக் காரனோட உல்லாசமாக இருக்கிறதைப்
பார்த்துட்டான்.அந்த வெறுப்புல பண்ணது அது ''

பிள்ளை  சந்தேகமாய் ''இது உள்ளதா?''என்று கேட்டார் .பணிக்கர்
''பின்னே?''என்றார் .''பொண்ணுங்களை திருப்திப் படுத்தறது
கஷ்டம்.ஓட்டையுள்ள குடம் என்னிக்கு நிறையும் ?''

பிள்ளை அந்த சரித்திரத்தை சந்தேகப்படுவது தெரிந்தது.ஆனால் இப்போது அவர்
அதைச் சொல்ல முடியாது.

புட்பராசு ''உண்மை ''என்று ஒத்துக் கொண்டார்.அவர் ஒரு சித்த மருத்துவரும்
கூட.''கேரளத்தில் ஆண்களுக்கு அதிக அளவில் மாரடைப்பு வருகிறது ஏன் என்று
நினைக்கிறீர்கள்?''

நான் ''ஏன் ?''என்று கேட்டேன்..புட்பராசு சிரித்து ''நீர் பாண்டி .உமது
பொண்டாட்டியும் பாண்டி.உமக்குப் புரியாது ''என்றார்

எனக்கு உண்மையிலேயே புரியவில்லை.குறுப்புதான் சந்தேகத்தை தீர்த்து
வைத்தார்.''இன்றும் யானைக் கால் போல தடி வந்த பின்பும் என் பார்யாள் என்
நெஞ்சின் மீது கால் போட்டு ஏறுகிறாள் .நான் சொல்லிவிட்டேன்.அம்பிலியே
நான் இன்னும் கொஞ்ச நாள் ஜீவிச்சிருக்கட்டும் என்று ''

அவர்கள் எல்லோரும் உரக்கச் சிரித்தார்கள் ''இதற்கு ஏதாவது மருந்து
இருக்கிறதா ?நேற்று என் மனைவி என்னை ஒரு பல்லி  போல தூக்கி எறிந்து
விட்டாள் .''

புட்பராசு ஏதோ வாயைத் திறக்க ''உம்மோட அஸ்வகந்தாதி லேகியங்களைச்
சொல்லாதீரும் .அது ஒரு மயிரைக் கூட எழுப்பவில்லை ''

புட்பராசு ''யுனானி மருந்து ஒன்றிருக்கிறது .தஸ்  கபீர் என்று.அதைச்
சாப்பிட்டால் ஒரே இரவில் ஆயிரம் பெண்களைக் கூடலாம். ''
பணிக்கர் அவசரமாக உள்புகுந்து ''அது மாப்பிள்ளமார் மருந்தல்லவா
மாட்டிறைச்சி கலந்திருப்பான் ''

நான்  ''நீங்கள் இறைச்சி சாப்பிட மாட்டீர்களா ?''என்று கேட்டேன்
''நான் சாப்பிடுவது ஆட்டிறைச்சி .மாட்டிறைச்சி தாயைத் தின்னுவதற்குச் சமம் ''

குருப்பு போதகர் நெளிவதைப் பார்த்துவிட்டு ''அது போகட்டும்.இந்த
பெண்டுங்கள் ஏனிப்படி ரத்தம் உறிஞ்சும் பைசாசங்கள்  போலாகிவிட்டார்கள்
?நமது அம்மாமார்கள் இப்படியில்லையே ?''

புட்பராசு ''முன்பைவிட பெண்டுங்கள் இப்போது நன்றாக சாப்பிடுகிறார்கள்
.''என்றார் ''ஒருநாள் உம்மிணியின் புருசனுக்கு பனி என்று மருந்து கொடுக்க
அவன் வீட்டுக்குப் போயிருந்தேன்.அவன் கட்டிலில் படுத்திருந்தான்.நான்
கொஞ்சம் சூரணம் குழைக்க தேன்  வேண்டும் என்று கேட்க சமையல் உள்ளுக்குப்
போனால் உம்மிணி ஒரு பாத்திரத்தில் வைத்து நெய்யையும் சர்க்கரையையும்
சேர்த்து வழித்துச்  சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாள் .அப்போது அவள் பூதகி
மாதிரி இருந்தாள் ''


போதகர் ''அவள் பூதகியா கோபிகையா ?""என்றார்

பணிக்கர் ''இரண்டும்தான் .இருவருக்கும் கிருஷ்ணன்தான் தேவைப்படுகிறான் ''


ஆனால் உம்மிணி  சேச்சியின் புருஷன் ஒரு பொட்டன்.அவனுக்கு கோலமும்
தெரியாது கிருஷ்ணனும் தெரியாது .கேரளத்துக்  கல்யாணங்களுக்கு
சமையலுக்குப் போவான் .அவன் உடம்பில் எப்போதும் ஒரு ஊசக்  குழம்பு வாசனை
அடிக்கிறது என்றார் நாயர் .அவன் கொல்லங்கள் உருண்டு போனபின்பும் .உம்மினி
சேச்சியை பொட்டித் திறக்காத  சேச்சியாகவே வைத்திருந்தான் .அவள் உம்மிணி
அம்மாவாக நாமெல்லாம் தான் உதவி செய்யவேண்டும் என்று கவலூர் குறுப்பு ஒரு
குடியிரவில் சொல்லியபோது எல்லோரும் உரத்த குரலில் ஆமோதித்தார்கள் ''ஆனால்
அதற்கு நீங்கள் கிருஷ்ணனாக இருக்க வேண்டுமே 'என்றேன் நான்
''இங்கிருக்கும் கிருஷ்ணன்கள்!தொப்பையும் சாளேச்வரமும் விழுந்துவிட்ட
அரிஷ்டம் இல்லாமலே தடுமாறும் கிருஷ்ணன்கள் !''

நாங்கள் அதை ஒத்துக் கொண்டோம்.எங்களில் யாருமே கிருஷ்ணன் இல்லை.

ஆனால் எங்களை மட்டுமல்ல வயது குறைந்த வாலிபரகளைக் கூட அவள் கிருஷ்ணனாக
ஏற்றுக் கொள்ளவில்லை.அவர்கள் அவளைப் பார்க்கவே பயந்தார்கள்.


இப்படியே போயிற்று ஒரு சில  வருசங்கள் .ஒருநாள் உம்மினி சேச்சி கோலமிட
வரவில்லை .இரண்டாம் நாளும் வரவில்லை .மூன்றாம் நாளும் வராதபோது எல்லோரும்
அவள் படியேறிப் போனார்கள் .அவளது சம்பந்தக் காரனிடம் கேட்டபோது .அவன்
அவள் தனது கிருஷ்ணனோடு போய்விட்டாள்  என்றான்
அதன் மேல் அவன் எதையும் சொல்லவில்லை .அவனுக்கு வேறு எதுவும் தெரியவில்லை
.நாங்கள் வீடெல்லாம் தேடிப்  பார்த்தோம்
உம்மினி சேச்சியின்  ஒரு துண்டு அடையாளம் கூட அங்கில்லை .புடவைகள் நகைகள்
மை தீட்டும் குச்சி  எதுவுமே அங்கில்லை .அவள் தனது காமுகனோடு
போய்விட்டாள் என்று நாயர் முடிவு செய்தார் எல்லோரும் பெருமூச்சு
விட்டார்கள்
''அவள் தனது கோலப் பெட்டிகளையும் எடுத்துப் போய்விட்டாள் !''என்றார் குறுப்பு
எங்களுக்கெல்லாம் வியப்பாக இருந்தது.''அவன் யாராக இருந்தாலும் உண்மையில்
ஒரு கிருஷ்ணனைப் போலல்லவா அவளைக் களவாடிக் கொண்டு போய்விட்டான்
?''என்றார் பிள்ளை.

நாங்கள் மெல்ல கோலமில்லாத உம்மினி சேச்சியின் முற்றத்துக்குப் பழகிக்
கொண்டோம்.அவள் புருஷன் எதுவுமே நடக்காதது போலத் திரிந்தான்.முன்பை விட
அவன் சந்தோசமாக இருப்பது  போல கூட பட்டது.
ஒரு மாதம் கழிந்தது  கழித்து நன்றாக மழை பெய்தது குழித்துறை ஆற்றில்
மறுபடி வெள்ளம் வந்தது இந்த முறை முதலை வருமா என்று கேட்டோம் பிள்ளையிடம்
முதலை வரவில்லை .உம்மினி சேச்சிதான் மிதந்தபடி மறுபடி வந்தாள்
அவள் எடுத்துப் போன  துணி எதுவுமே அவள் உடம்பில் இல்லை .அவளது இரண்டு
கண்களையும் மீன்கள் அரித்திருந்தன . அவளது .யோனி முழுவதையும் அவை
குடைந்து குடைந்து தின்றிருந்தன.அவளைத் தூக்கும் போது  அங்கிருந்து
அவற்றின்  குஞ்சுகள் வந்துகொண்டே இருந்தன என்று கூட பயர் சர்வீஸ் தாமஸ்
சொன்னான்

அடுத்தவாரம் அவளை அப்படிச் செய்தவனை  போலிசார் கண்டுபிடித்தார்கள்
அவன் அப்படியொரு கருப்பு.தலை சொட்டை வேறு.உம்மினிசேச்சி அவன் பின்னால்
எப்படிப் போனாள் என்றெல்லோரும் வியந்தார்கள் அவளும் சரசாரிப் பெண்தான்
நாம்தான் அவளை காவியப்படுத்திவிட்டோம் என்றார் பணிக்கர்..மறுநாள் அவன்
முதுகின் பின்னால் கைகளை துண்டால் கட்டி கச்சேரிக்கு  அழைத்து
வந்தார்கள். போதகர் பின்னாலேயே போய் அறிந்துவந்தார்
''பாற  சாலைக் காரன் .அவன் வீடு முத்தம் முழுக்க உம்மிணி  கோலங்களால்
நிறைத்திருக்கிறாளாம்.அதை வைத்து கண்டு பிடித்தார்களாம் ''என்றார்

''அவர்கள் கண்டுபிடித்த போது அவன் வீட்டிலேயே கட்டிலுக்கு கீழே
ஒளிந்திருந்தானாம் .மூன்று நாட்களாய் சாப்பிடாமால் கொள்ளாமல் அங்கேயே
இருந்திருக்கிறான்.அழுதுகொண்டே இருந்தானாம்.ஏன் உம்மிணியைக் கொன்றாய்
என்றதற்கு இல்லாவிட்டால் அவள்  என்னைக் கொன்றிருப்பாள்  என்று
'சொல்லியிருக்கிறான் .அவனுக்கு மனநிலை சரியில்லை என்கிறார்கள் ''

பணிக்கர் ''பொய்.அவன் சிட்சையிலிருந்து தப்பித்துக் கொள்ள அவ்வாறு
சொல்கிறான் ''என்றார்

போதகர் பேசாது இருந்தார்.பிறகு  ''தெரியவில்லை.ஆனால்  ஒன்றுமட்டும்
உரப்பு.ஆசாமியின் பெயர் மட்டும் கிருஷ்ணன்தான் ''

Friday, October 17, 2014

காதல் நிற ஓவியங்கள்

காதல் நிற ஓவியங்கள் - சிறுகதை
போகன் சங்கர், ஓவியங்கள்: ஸ்யாம்
''I feel lousy'' என்றான் அவன்.
மஞ்சுளா, ஆபீஸ் முடிந்து மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்கிக்கொண்டு பஸ் ஏறக் காத்திருக்கையில், ஒரு கடை வாசலில் தலையைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கும் நபர் யார் எனப் பார்த்தாள்... அட, ஹரி.
''ஹரி, ஏன் இங்க உட்கார்ந்திருக்கீங்க? உடம்பு சரியில்லையா?''
அவன் நிமிர்ந்து பார்த்து, ''மஞ்சு மேடம்'' என்றான் பலவீனமாக.
ஆட்டோக்காரரைக் கூப்பிடுவதற்குள் ஹரி ஏறத்தாழ மயங்கியிருக்க, ''கொஞ்சம் ஹெல்ப் பண்ணுப்பா'' என்றாள் ஆட்டோக்காரரைப் பார்த்து மஞ்சுளா.
''என்னம்மா குடிச்சிருக்காரா?'' என்றார்.
''சேச்சே...''
யாரோ ஹரியின் சூட்கேஸ் மற்றும் சாமான்களை எடுத்துத் தந்தார்கள். நீளமாகச் சுருட்டிவைத்திருந்த கான்வாஸ்களை ஏற்ற ஆட்டோக்காரர் சிரமப்பட்டார்.
''எங்கம்மா போணும்?''
தெரிந்த டாக்டரிடம் போனாள்.
''வைரல் ஃபீவர். உங்க பக்கத்து வீட்டுல வாடகைக்கு இருக்கிற பையன்தானே? சாப்பாட்டில கவனமா இருக்கணும். இது மூணு நாளைக்கு!'' என்றார் மாத்திரைகள் தந்து.

100 ரூபாய் வாங்கிக்கொண்டு ஊசியும் போட்டார். வீடு வரும்போது இரவு 9 மணி. அதற்குள் ஹரி லேசாகத் தெளிந்திருக்க, ''நானே இறங்கிக்கிறேன்'' என்றவனை, ''சும்மா இரு சார்...'' என்று ஆட்டோக்காரர் ஏறக்குறைய தூக்கிச்சென்று வீட்டுக்குள் போட்டார்.
அதற்குள் ராஜகோபால் வீட்டுக்குள் இருந்து ஓடிவந்து, ''என்னடி... என்ன ஆச்சு?'' என்றார்.
''ஒண்ணும் இல்லை... ஹரிக்கு உடம்பு சரியில்லாம ரோட்டில மயங்கிக்கிடந்தார். டாக்டர்கிட்டே காமிச்சுட்டு வர்றேன். ஆட்டோ... எவ்வளவுப்பா?''
''கொடேன் ஒரு நூறு.''
ராஜகோபால், ''நூறு ரூபாயா?'' என்று பார்த்தார்.
மஞ்சுளா... ''ப்ச்... குடுங்க'' என்றாள்.
சுரேஷ், மொபைலில் கேம் விளையாடிக் கொண்டிருந்தவன் அவளைக் கண்டதும் அதை சரேல் என மறைத்து, ''ஹாய் மம்மி'' என்றான். அதைக்கூடக் கவனிக்காமல் நேராக அடுக்களைக்குப் போனாள்.
ராஜகோபால் பின்னாலேயே வந்து ''என்னன்னு சொல்லேன்டி.''
''காய்ச்சல், 105 டிகிரி இருக்கு. எங்கேயோ திருநெல்வேலி பக்கம் பழங்கோயில்ல படம் எழுதப் போயிருக்கார். சாப்பாடும் தண்ணியும் செட் ஆகலை போல!''
''சரி இப்ப என்ன சமையல் பண்ணப் போறே... ரொம்பப் பசிக்குது. இது என்ன?''
''கஞ்சி, அவருக்கு!''
''குடு... நான் எடுத்துட்டுப் போறேன்.''
''வேணாம். மாத்திரை குடுக்கணும்.எனக்குத்தான் தெரியும்'' என்று அவரைக் கடந்துபோனாள்.
றுநாள் காலை. ராஜகோபால் அவன் வீட்டுக்குப் போய் பேருக்கு ஒரு தடவை பார்த்தார். அறை முழுவதும் புத்தகங்களும் கான்வாஸ்களும் நிரம்பி இருக்க, கட்டிலுக்கு அடியில் இரண்டு ஷீவாஸ் ரீகல்  புட்டிகள் இருந்தன. கான்வாஸ்களில் மிக அழகான பெண்கள், மிருக நிர்வாணமாக நின்றிருந்தார்கள். அறையில் லேசான சிகரெட் மணம். 'இந்தக் காய்ச்சல்லகூட சிகரெட் குடிக்கிறானே... முட்டாள்’ என நினைத்தார். அவர் போகையில், வாய் பிளந்து விட்டத்தை வெறித்துக்கொண்டிருந்தான்.
''மிஸ்டர் ஹரி, உடம்பு எப்படி இருக்கு?'' என்றதற்கு விரோதமாகப் பார்த்தான்.
மறுநாளும் அவனுக்கு வீட்டில் இருந்து கஞ்சி, பால் எல்லாம் போயின.
''இன்னைக்குமா?'' என்றான் ராஜகோபால்.
''அசட்டுத்தனமாப் பேசாதீங்க. போறப்போ அவர் அப்பா உங்ககிட்டேயும்தானே சொன்னார்...''
''அதுக்காக நீ பார்க்கிற மாதிரி அவன் சம்சாரம்கூடப் பார்த்துக்க மாட்டா. தவிரவும், அவன் சரியில்லை.''
மஞ்சுளா அவரை விழித்துப் பார்த்து, ''என்ன சரியில்ல?'' என்றாள்.
''வந்து... குடிக்கிறான்போல இருக்கு. இந்தக் காய்ச்சல்லகூட சிகரெட் பிடிக்கிறான். ரூம் முழுக்க பொம்பளைங்க படத்தை அசிங்கமா வரைஞ்சுவெச்சிருக்கான்.''
''ச்சும்மா உளறாதீங்க... அது ஆர்ட்.''
''என்ன பெரிய ஆர்ட். சினிமாவா எடுத்தா அது போர்னோ; வரைஞ்சா ஆர்ட்டா? எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையாவே இரு. திடீர்னு கையைப் பிடிச்சு இழுத்துருவான்.''
''போதும். வாயை மூடுங்க'' என்றாள் மஞ்சுளா.

ரண்டாம் நாள் ஹரி கொஞ்சம் எழுந்து அமர்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருக்க, ''இப்பவும் புத்தகம் படிக்கணுமா?'' என்றாள் மஞ்சுளா.
அவன் மூடிவைத்துவிட்டு, ''வாங்க மேடம்'' என்றான். கையில் இருந்த பாத்திரத்தைப் பார்த்துவிட்டு, ''ஐயோ... ரொம்பச் சிரமம் உங்களுக்கு.''
''என்ன சிரமம்... வெறும் ரசம் சாதம்.'' என்றவள், ''எங்க போயிருந்தீங்க பத்து நாளா? அப்ப உங்களுக்கு ரெண்டு லெட்டர் வந்தது.''
''தேங்க்ஸ். நெல்லை பக்கம் பிரம்மதேசம்னு ஒரு ஊர்ல, சோழர்கள் கட்டின பழைய கோயில் இருக்கு. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய சிற்பங்கள். வரையப் போயிருந்தேன்.''
''எப்பவும் கோயிலைத்தான் வரைவீங்களா?'' என்றாள். லேசாக வியர்த்தது. கான்வாஸ்களில் இருந்த பெண்கள் படங்கள் நினைவுக்கு வந்தன.
''இல்லீங்க. சில சமயம் இயற்கைக் காட்சி, அழகான முகங்கள்... வரையிறது உண்டு.''
''சாப்பிடுங்க... உங்களுக்குப் பிடிச்ச ஓவியர் யார்?''
''ருகேண்டாஸ். கேள்விப்பட்டிருக்கீங்களா?''
''இல்லை. எனக்கு ரெம்ப்ராண்ட்தான் பிடிக்கும்'' என்றாள்.
அவன் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, ''மை காட்!'' என்றான்.
''ஓவியர் மதி, எனக்குப் பெரியப்பா'' என்று மஞ்சுளா புன்னகைத்தாள்.
அவன் மறுபடியும், ''மை காட்!'' என்றான். ''எனக்குத் தெரியவே தெரியாது மேடம். என்ன ஒரு மேதை அவர்!'' என்றான். இப்போது அவன் பார்வையே மாறிவிட்டது.
''நான் சந்திக்க விரும்பிய ஆளுமைகளில் அவரும் ஒருவர்'' என்றவன் தயங்கி, ''நீங்க வரைவீங்களா?'' என்றான்.
''இல்லை... எங்கே அதுக்கெல்லாம்விட மாட்டாங்க. பெரியப்பாவையே கொஞ்சம் தள்ளித்தான் வெச்சிருந்தாங்க... ரசிக்கிறதோடு சரி.''
''அதுக்கே ஞானம் வேணுங்க. உங்க பெரியப்பான்னா... சொந்தப் பெரியப்பாவா?' என்று நம்ப முடியாததுபோல கேட்டவன், ''உங்க பெரியப்பா உங்களை வரைஞ்சிருக்காரா?' என்று கேட்டான்.
''இல்லை. ஏன்?'
''உங்க முகத்தை அவர் படங்களில் பார்த்த நினைவு'' என்றான்.
அவள் பேசவில்லை. பெரியப்பா, மஞ்சுளாவின் அம்மாவை வரைந்திருக்கிறார். 'உன் அம்மாவோடது அபூர்வமான முகம்’ எனச் சொல்லியிருக்கிறார். அவர் பெரும்பாலும் தமிழ்ப் பெண்களை வரைந்தது இல்லை. அவருக்கு இங்கேவிட வங்காளத்தில்தான் பெரிய வரவேற்பு. குறிப்பாக, சக்தியின் பத்து வடிவங்களான தசமகா வித்யாக்களை மையமாக வைத்து, அவர் வரைந்த வரிசை பெரிய புகழையும் எதிர்ப்பையும் பெற்றது. எதிர்ப்பின் காரணம், அவை ஆபாசமாக இருக்கின்றன என ஒரு குழுவுக்குத் தோன்றிவிட்டதுதான். 'பத்து வித்யாக்களில் கமலா என்ற தாமரைக் கடவுளுக்கு மட்டும், உன் அம்மாவை மாடலாக நினைத்துக்கொண்டேன்’ என அவளிடம் பெரியப்பா சொல்லியிருக்கிறார்.
''நீங்க எப்பவும் நிலக் காட்சிகள், உடல்கள்தான் வரைவீங்களா? நவீன வடிவங்களில் உங்களுக்கு ஆர்வம் இல்லையா?'' என்று ஹரியிடம் கேட்டாள் மஞ்சுளா.
அவன் சற்று கோபமுற்று, ''அவையெல்லாம் நீர்க்குமிழிகள்; காலாவஸ்தை அல்லது பாசிங் ஷோ'' என்றான்.
''பாசிங் ஷோ என்ற ஒரு சிகரெட் இருந்தது. பெரியப்பா அதைத்தான் பிடிப்பார். அவரது இடது கையில் இன்னொரு தூரிகைபோல அது எப்போதும் புகையும். அந்தப் புகை வாசம், எப்போதும் அவரது அறையில், உடைகளில், ஓவியங்களில் இருந்தது. அவருடைய ஓவியங்களில் தெரிந்த புகைமூட்டம் அவரது சிகரெட்டில் இருந்து வந்ததுதான்'' என்றவள், '' 'குழந்தை இது ஒரு பாணி; அபநீந்திரநாத் தாகூர் பாணி’ என வங்காளத்தில் சிலர் சொல்வார்கள்’ எனக் கேலியாகச் சொல்லியது உண்டு. ஆனால், எவ்வளவு புகை மூடி எழுதினாலும், அப்பா கண்டுபிடித்துவிடுவார். அம்மாவை அடிக்கவே செய்தார். 'உன்னை யாருடி மாடிக்குப் போகச் சொன்னா? அங்கே போகக் கூடாதுனு சொன்னேன் இல்லையா?’ என்பார் பல்லைக் கடித்துக்கொண்டே. அவள் 'நான் போகவே இல்லை’ எனச் சாதித்தாள். 'பிறகு எப்படி உன் முகம் அவர் படங்களில் வருது? நான் என்ன முட்டாள்னு நினைச்சுட்டீங்களா ரெண்டு பேரும்?’ எனக் கத்தினார். 'இன்னைக்கே நான் அவரை வேற எங்கயாவது போகச் சொல்றேன். இது குடும்பம் நடத்துற இடம்’ எனக் குதித்தார். ஆனால், அது அவ்வளவு எளிதான காரியமாக இருக்கவில்லை. வீடு முழுக்க பெரியப்பாவின் பெயரில் இருந்தது. அவர் மீதான அப்பாவின் வெறுப்புக்கு அதுவும் ஒரு காரணம். அந்தக் கோபத்தை எல்லாம் அவர் அம்மா மீது காட்டினார். அவள் வீட்டில் இருந்து பணம் வாங்கி வரச் சொன்னார். அதைவைத்து வேறு எங்கேயாவது போய்விடலாம் என்பது அவர் எண்ணம்.
இதைக் கேள்விப்பட்டபோது பெரியப்பா ஒருகணம் முகம் சுருங்கி, 'ஓர் ஓவியன் கண்களால் அல்ல... மனதால் பார்க்கிறான். உண்மையில் உன் அப்பன் அஞ்சுவது என்னிடம் அல்ல; உன் அம்மாவிடம். வங்காளத்தில், கீழே கிடக்கும் சிவனை, சக்தி மிதித்துக்கொண்டு நிற்பதுபோல ஒரு படம் உண்டு. பார்த்திருக்கிறாயா?’ என்றார். இதுமாதிரியான சந்தர்ப்பங்களில் அம்மா ஒரு நாள், 'உன் அப்பா மிகச் சிறிய மனிதர். உன் பெரியப்பா எவ்வளவு பெரிய மனிதரோ, அவ்வளவு சிறிய மனிதர் இவர். அவர் பெரிதாக பெரிதாக, உன் அப்பா சிறிதாகிக்கொண்டே இருக்கிறார்’ என்றாள்'' 
கணத்துக்குக் கணம் மாறிக்கொண்டேயிருந்த மஞ்சுளா முகத்தை உற்றுப் பார்த்துவிட்டு, ''நான் ஒருநாள் உங்களை வரையலாமா? உங்களுடையது அபூர்வமான முகம்'' என்று அவள் கண்களைப் பார்த்தான் ஹரி.
மஞ்சுளா அந்தக் கேள்வியால் தாக்கப்பட்டு மிகவும் நாணி, ''நான் வர்றேன்'' என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டாள்.
அன்றைக்கு ராத்திரி மஞ்சுளாவுக்கு அபத்தமாக ஒரு கனவு வந்தது. ரெம்ப்ராண்டின் போர்வீரன் மாதிரி சிவப்பு ஆடையில் யாரோ குதிரையில் அவளைத் தூக்கிப்போவதுபோல். பிறகு  அவன், குதிரை, அவள்... என யாருமே ஆடை அணிந்திருக்கவில்லை. நெஞ்சு படபடக்க எழுந்து அமர்ந்துகொண்டாள். உடல் முழுக்க சுரந்து ஒரு வியர்வைக் குளமாக மாறிவிட்டது. பாத்ரூம் போய்வந்த பிறகும், இரவு வெகுநேரம் தூங்காமல் அப்படியே அமர்ந்திருந்தாள். என்ன ஒரு கனவு!
பக்கத்தில் ராஜகோபால், அவர் கன்னத்தில் கோழை எச்சில் வடிய குறட்டைவிட்டுத் தூங்கிக்கொண்டிருந்தார்.
''மஞ்சுளா மேடம், சினிமாவுக்கு வர்றீங்களா. துல்கர் சல்மான் படம்'' என்றாள் சுசீலா. மஞ்சுளாவோடு அலுவலகத்தில் ஆபீஸில் வேலைபார்ப்பவள்.
மஞ்சுளாவுக்கு, துல்கர் சல்மான் யார் எனத் தெரியவில்லை. இருந்தாலும், ''எனக்கு அவனைப் பிடிக்காது'' என்றாள் பொதுவாக.
''சல்மான் பிடிக்காதா?'' என்று கேட்டுவிட்டுச் சிரித்த லலிதா, ''மாமிக்கு வயசு ஆச்சு இல்லியோ...'' என்றாள் கிண்டலாக.
''என்னடி வயசாச்சு..? 35 ஒரு வயசா? (கொஞ்சம் வயதை மறந்துவிட்டாள்.. 39) ''இன்னொண்ணு தெரியுமா... எனக்கு இந்தியே பிடிக்காது'' என்றாள் மஞ்சுளா.
''ஐயோ மாமி, இது இந்தி இல்லை... மலையாளம்'' என்று கேலியாக வாய்விட்டுச் சிரித்தாள் சுசீலா.
மஞ்சுளாவுக்குத் திக்கென்றது. அவமானமாக உணர்ந்தாள். அவளிடம் மஞ்சுளா ஏதோ சொல்ல முயன்றபோது, ''சுசீலா மேடம்... உங்களை ஏ.ஓ கூப்பிடுறார்'' என்றார் அலுவலக உதவியாளர். சுசீலா உள்ளே போய் அரை மணி நேரம் கழித்து, முகம் எல்லாம் மந்தகாசமாக வெளிவந்தாள்.
''என்னடி சிரிச்சுட்டே வர்ற. அந்தாள் என்ன சொன்னார்?''
''ஒண்ணும் இல்லே. இயர் எண்டு ஸ்டேட்மென்ட் பத்தி கேட்டுட்டு இருந்தார்'' என்றாள் சுசீலா.
'வருடம் முடிவதற்கு இன்னும் ஆறு மாதங்கள் இருக்கிறதே. தவிரவும் இதற்கு இவ்வளவு நேரமா? புதிதாக வந்திருக்கிற அதிகாரி நாகர்கோவில்காரர் என்பது நினைவுக்கு வந்தது. ஆனால், மலையாளிபோல. நடந்துகொள்கிறார்.அதனால்தான் இந்தப் பெண்களும், திடீரென மலையாளப் படங்கள் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால், நாகர்கோவில் தமிழ்நாட்டில்தானே இருக்கிறது?’ என நினைத்துக்கொண்டாள் மஞ்சுளா.
பிறகு, இரு சிநேகிதிகளும் ரகசியமாக ஏதோ பேசிச் சிரித்துக்கொள்ள மகா எரிச்சலாக வந்தது. 'வேலையைப் பாருங்கடி மேனா மினுக்கிங்களா’ எனக் கத்த விரும்பினாள். பிற்பகல் இருவரும் கொஞ்ச நஞ்ச வேலைசெய்யும் பாசாங்குகளையும் விட்டுவிட்டு, வாராந்தரிகளைப் படித்துக் கொண்டிருந்தார்கள். ஆபீஸில் ஏறக்குறைய எல்லோருமே இப்படித்தான் என்றாலும், இவர்கள் கொஞ்சம் ஓவர்.
''மேடம், இதைப் பாருங்க. என்னம்மா படம் போட்டிருக்கான்'' என்றாள் லலிதா.
மஞ்சுளா அதைப் பார்க்காமலே ''இதெல்லாம் என்ன படம்?!'' என்றாள் கேலியாக.
ஆபீஸ் விட்டுக் கிளம்பி வெளியே வந்ததும், வழிநெடுக சுசீலா அவளது பாய் ஃப்ரெண்டு பற்றி, அளந்துகொண்டே வந்தாள். ''He is totally mad மேடம். சரியான அசடு'' என்றாள். 'அசடைக் காதலிக்கிறவள் முட்டாள்’ எனச் சொல்ல விரும்பினாள் மஞ்சுளா. ஆனால், ''நான் கிளாசிக்குகளை மட்டும்தான் பார்ப்பது சுசீலா. எல்லாவற்றையும் பார்ப்பது இல்லை; சாப்பிடுவது இல்லை; படிப்பது இல்லை'' என்றாள்.
''அதான் சொன்னேனே... உங்களுக்கு வயதாகிவிட்டது'' -சொல்லிவிட்டு சத்தமாகச் சிரித்தாள் சுசீலா.
மஞ்சுளா மிகக் கோபமுற்று ''கிளாசிக்குகளைப் பார்ப்பது ரசனையோட ஆழத்தின் அடையாளம். வயதாகிவிட்டதின் அடையாளம் இல்லை.''
ஆனால், சுசீலா சொன்னதுபோல மஞ்சுளா நிர்மலிடம் சொல்லியிருக்கிறாள். பெரியப்பாவைத் தேடிவந்த எத்தனையோ மனிதர்களில் ஒருவன் நிர்மல்; வங்காளி. அவன் ஒருநாள் படி இறங்கும்போது கல்லூரியில் இருந்து வந்த மஞ்சுளாவிடம் ஒரு புத்தகத்தைக் கொடுத்து, ''இதைப் படித்துப் பார்'' என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்.
அது வங்காளத்தில் மைத்ரேயி தேவி என்பவர் எழுதிய நாவலின் மொழிபெயர்ப்பு. எதிர்பார்த்ததுபோல அது ஒரு காதல் கதை. 'கொல்லப்படுவது இல்லை’ என்பது அதன் தலைப்பு. உலகப் புகழ்பெற்ற ஓர் இந்தியத் தத்துவவாதியைப் பார்க்க வருகிற வெளிநாட்டு சீடன் ஒருவன், அவரது பதின்வயது மகளிடம் காதல்கொள்கிறான்; பூஜிக்க ஆரம்பிக்கிறான்.
'அது ஓர் உண்மைக் கதை. இந்தக் கதையில் வருகிற நபர்கள் உயிரோடு இருக்கிறார்கள்’ என நிர்மல் பின்னாளில் சொன்னான். மஞ்சுளாவுக்கு அந்தக் கதை அபாரமான மனக் கிளர்ச்சியைத் தந்தது.
''இதை ஏன் என்னிடம் கொடுத்தீர்கள்? இந்தக் காதல் துக்ககரமாக முடிந்துவிடுகிறதே. இதில் பெண்ணின் தந்தையார் காதலுக்கு ஒப்புக்கொள்வது இல்லையே...'' என்று அவனிடம் கேட்டாள்.
அவன் தளர்ந்துபோய் ''ஆமாம்'' என்றான்.
''உன் தந்தையும் இதற்கு ஒப்புக்கொள்ளப்போவது இல்லை. எந்தப் பெண்ணின் தந்தைதான் என்னைப் போன்ற பரதேசிகளை ஏற்றுக்கொள்வார்?''
''இவையெல்லாம் தெரிந்தும் என்ன காரணத்தால், பரதேசிகள் பெண்களுடன் காதலில் விழுகிறார்கள்?'
''பரதேசிகளுடன் பெண்கள் ஏன் காதலில் விழுகிறார்களோ, அதே காரணத்தால்தான்.''
மஞ்சுளா, அவனை ஆழமாகப் பார்த்து, ''நீங்கள் காதலைச் சொல்லும் முறை இதுதானா?'' என்றாள்.
அவன் சிரித்துக்கொண்டே, ''வேறு எப்படிச் சொல்லவேண்டும்?'' என்று கேட்டான்.
''ஆங்கிலப் படங்களில் சொல்வதுபோல நேரிடையாக அல்லது இந்திப் படங்களைப்போல சற்றே நாடகத்தனமாக, சஞ்சய் தத்தின் புதிய படத்தைப் பார்த்தீர்களா?''
''நான் வங்காளி. வங்காளப் படங்களில் சொல்வது போலத்தான் சொல்வேன்.''
''அதுவும் பழைய வங்காளப் படங்கள்.''
''ஆம்... ஆனால் அவை கிளாசிக்குகள்.''
''அவற்றை வயதானவர்கள்தான் பார்ப்பார்கள்.''
அவன் மறுத்து, ''இல்லை... ஆழமானவர்கள், ரசனை உடையவர்கள் கிளாசிக்குகளைத்தான் பார்ப்பார்கள். அவைதாம் படங்கள். மற்றவை எல்லாம், காலாவஸ்தை அல்லது பாசிங் ஷோ.''
மஞ்சுளா சட்டென உறைந்து நின்றாள். நிர்மலை ஹரிக்குத் தெரியுமா? பிறகு எப்படி அதே வார்த்தைகளைப் பயன்படுத்தினான். நிர்மல், பின்னாளில் பெரிய எழுத்தாளர் ஆனான். ஒருவேளை ஹரி அவனது எழுத்துக்களைப் படித்திருப்பானா? அல்லது இவர்களைப் போன்றவர்கள் ஒரே மாதிரிதான் பேசுவார்களா?
''மாமி ஏன் நின்னுட்டீங்க? நடக்க முடியலியா?' என்றாள் சுசீலா.
''டோன்ட் கால் மீ மாமி.''
சுசீலா சிரித்துக்கொண்டே ''மாமி ராக்ஸ்'' என்றவள், ''மாமி நீங்க கொஞ்சம் தொப்பையைக் குறைக்கணும். மூச்சு வாங்குது உங்களுக்கு. ஜிம்முக்குப் போங்க.''
''ஜிம்... எவ்வளவு காசு ஆகும் சுசீலா?''
''அதிகம் ஆகாது மாமி. மாசம் சுமார் 2,000 ரூபாய் வரும்.''
2,000 ரூபாயா? ராஜகோபாலுக்கு மார்பு அடைத்துவிடும். மஞ்சுளா பக்கவாட்டுக் கடைக் கண்ணாடிகளில் ஒருமுறை, தன் வயிற்றை கடைக்கண்ணால் பார்த்தாள். 'ஐயோ... இறங்கிய இந்த வயிறையா ஹரி வரைகிறேன்’ எனச் சொன்னான்? ச்சே... முகத்தைத்தானே வரைகிறேன் எனச் சொன்னான். அதற்கு எதற்கு ஜிம்முக்குப் போக வேண்டும்? எனக்கு என் அம்மாவைப்போல தாமரைக் கடவுள் முகம் என்றல்லவா சொன்னான்? ச்சே... அவன் எங்கே அப்படிச் சொன்னான். பெரியப்பா, அம்மாவின் முகத்தை அல்லவா அப்படிச் சொன்னார்? இல்லை நிர்மலா? அவளுக்குக் குழம்பியது.
நிர்மல் சொன்னதுபோலவேதான் அப்பா நடந்துகொண்டார். தன்னைப்போல ஒரு நபரைத் தேடிப்பிடித்துக் கொண்டுவந்தார்.ராஜகோபாலைப் பார்த்ததுமே அம்மா சொல்லிவிட்டாள்... 'இந்தாள் உங்கப்பாவின் நகல்.’
'சும்மா இரு. நீ என்ன நினைத்துக்கொண்டு, இப்படியெல்லாம் பேசுகிறாய் என எனக்குத் தெரியும்’ - அப்பா கத்தினார். ஆனால், இவற்றையெல்லாம் தடுக்கக்கூடிய பெரியப்பாவும் அப்போது இல்லை. சுந்தரவனக் காடுகளுக்குப் படம் எழுதுகிறேன் எனப் போனவர், பாம்பு தீண்டி இறந்துவிட்டார். அப்பா போகவே இல்லை. அம்மாதான் ரொம்ப அழுதாள். 'தேவி, இறுதியில் தண்டித்துவிட்டாள்’ என ஒருநாள் அம்மாவிடம் சொன்னார். 'கலை என்கிற பெயரில் இவர் பண்ணின சேட்டைகளை, அசிங்கங்களை எத்தனை நாள்தான் அவளும் பொறுத்துக்கொண்டிருப்பாள்?’ இறுதியில் அப்பாவே வென்றார். படம் வரையத் தெரியாத, ரசிக்கத் தெரியாத, அவற்றைப் பார்க்கவே விரும்பாத அப்பா!
இந்தச் சம்பவம் மஞ்சுளாவிடம் மிகப் பெரிய அச்சத்தை உருவாக்கிவிட்டது. நிர்மல் திரும்ப வந்து அவனுடன் அழைத்தபோது, அவள் போகவில்லை.
''நான் எதை நம்பி உன்னுடன் வருவது?
நீ எங்கேயாவது போய் பாம்பு கடித்து அநாதையாக இறந்துகிடந்தால், பிறகு என் கதி என்ன?'' என்று அவனிடம் கேட்டாள்.
''வங்காளத்தின் அந்தப் பகுதிகளில் பாம்பு தீண்டி இறப்பது சகஜம்தான். இன்றும் அங்கே பாம்புக் கடியால் இறப்பவர்கள் அதிகம்.பெரியப்பா சற்று அஜாக்கிரதையாக இருந்துவிட்டார்'' என்றான் நிர்மல்.
''அந்த அஜாக்கிரதை என் வாழ்வில் நிகழ வேண்டாம். நீ படம் எழுதுவது, ஊர் ஊராகச் சுற்றுவது எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்தால், நாம் கல்யாணம் பண்ணிக் கொள்ளலாம்.''
அவன் ஆச்சர்யம் அடைந்து அவளையே பார்த்தவண்ணம் சற்றுநேரம் நின்றிருந்தான்.பிறகு ஒரு பெருமூச்சுடன், ''சட்டென ஏன் உன்னைச் சக்தியற்றவளாக மாற்றிக்கொண் டாய்? நான் உன்னை உன் அம்மாவின் மகள் என நினைத்திருந்தேன். ஆனால் இப்போது... நிச்சயமாக நீ உன் அப்பாவின் மகள்தான்'' என்றான்.
அவள் ஒன்றும் சொல்லவில்லை. உதடுகள் துடிக்கப் பேசாது நின்றிருந்தாள். பிறகு, அவன் அவளைச் சந்திக்க வரவேயில்லை.
ஒரு கார் சர்ரென்று அவர்கள் அருகில் வந்து நின்றது. அந்த அரை மலையாளி அதிகாரிதான். அவர் உள்ளிருந்து தலையை நீட்டி, ''மிஸ் சுசீலா, உங்க ஏரியா பக்கம்தான் போறேன்... வர்றீங்களா?'' என்றார்.
அவள் காத்திருந்தவள்போல் ஏறிக்கொண்டு ''மேடம் நீங்க...''
அவர் அப்போதுதான் அவளைக் கவனிப்பதுபோல, ''ஓ மஞ்சுளாவா? நீங்களும் வாங்களேன்...'' என்றார்.
''நோ சார். எனக்குக் கொஞ்சம் பர்ச்சேஸ் இருக்கு'' என்றாள் கடுப்புடன்.
கார் விலகிப் போனபோது ஏனோ கண்கள் துளிர்த்தன. தன்னை உலுக்கிக்கொண்டாள்... ச்சே. நிர்மல் சொன்னது நினைவுக்கு வந்தது 'ஏன் சட்டென உன்னை சக்தியற்றவளாக மாற்றிக்கொண்டுவிட்டாய்?’
நடைபாதைக் கடைகளில் தேவை இல்லாத பொருட்களாகத் தேடிப் பிடித்து வாங்கினாள்.காய்கறிகள், பழங்கள், ஹரிக்கு ஜூஸ் போட்டுக்கொடுக்கலாம். புத்தகக் கடை ஜன்னலில் 'Outline of art’ என்ற ஒரு புத்தகத்தைப் பார்த்தாள். 1,300 ரூபாய். யோசித்து நீளமாக முழுகோதுமை ரஸ்க் பாக்கெட் வாங்கினாள். ஹரிக்கு இன்னமும் உடல் சரியாகவில்லைதானே? இன்னொரு முறை கடைக் கண்ணாடியில் வயிற்றை இழுத்துப் பார்த்துக்கொண்டாள். ராஜகோபால் சத்தம் போட்டாலும் பரவாயில்லை என, ஒரு மாதம் ஜிம் போய்ப் பார்த்துவிட வேண்டும். அவள் வீட்டுக்குப் போவதற்குள் ராஜகோபால் வந்திருந்தார்.
''மஞ்சு, சப்பாத்திக்கு மாவு போட்டு வெச்சிருக்கேன். கல்லுலே இட்டு எடுத்துடு.''
''இருங்க... முதல்ல ஹரிக்கு ஏதாவது குடுத்திட்டு வர்றேன்'' என்றவளை ராஜகோபால் விநோதமாகப் பார்த்து, ''அவனைப் பார்த்துக்க ஆள் வந்தாச்சு'' என்றார்.
''யார்... அவர் அப்பாவா?''
''இல்ல... அவன் ஃப்ரெண்டாம். இங்கே எங்கேயோ பக்கத்திலே இருக்கா. அவளுக்கு இவனே பரவாயில்லை. மத்தியானமே வந்துட்டா. ரெண்டு பேரும் அரைகுறையா டிரெஸ் பண்ணிட்டு, ஏதோ களிமண் சிலை பண்றேன்னு கொட்டம் அடிச்சிட்டு இருக்குதுங்க. 'இனி மாமியைச் சிரமப்பட வேண்டாம்னு சொல்லுங்க’னு ஹரி சொன்னான்'' என்றார் ராஜகோபால்.
மஞ்சுளா உறைந்துபோய் கொஞ்ச நேரம் அறை நடுவிலேயே சிலைபோல நின்றிருந்தாள். பிறகு கைப்பையை வீசிவிட்டு சோபாவில் தொப்பென அமர்ந்தாள்.
பிறகு, ''எனக்கு ஒரே தலைவலி. சப்பாத்தி எல்லாம் போட முடியாது'' என்று அலறினாள்!


(ஆனந்தவிகடன் தீபாவளி ஸ்பெஷல் 1 இதழில் வெளிவந்த சிறுகதை )

Friday, April 18, 2014

பாரன்ஹீட் 451-இரண்டு

அவர்களிடம் இந்த இயந்திரம் இருந்தது.உண்மையில் இரண்டு இயந்திரங்கள்.ஒன்று உள்ளுக்குள்  தூர்ந்துபோன பழைய கிணற்றுக்குள் தேங்கிக் கிடக்கும் பாசி படிந்த நீரையும் காலத்தையும் தேடி இறங்கும் நாகம் போல உடலுக்குள் இறங்கியது.அது அங்கே  மிதக்கும் அத்தனை பாசியையும்   அங்கிருக்கும் இருட்டையும்  காலகாலமாக அங்கே சேர்ந்து கிடக்கும்  நச்சையும் விழுங்கியதா? இயந்திரம்  சத்தமே போடாமல்  மௌனமாய் எல்லாவற்றையும்  விழுங்கியது.அதற்கொரு கண் இருந்தது .அதை இயக்கிக் கொண்டிருந்தவன், விசேடமாகத் தயாரிக்கப் பட்ட லென்சுடன்  கூடிய தலைக் கவசத்தை  அணிந்துகொள்வதன் மூலமாகத்  தான் யாரைத் தோண்டிக் கொண்டிருக்கிறானோ அவர்களது ஆன்மாவின் ஆழம் வரைப் பார்க்கமுடிந்தது.அந்தக் கண் என்ன பார்த்தது?அவன் சொல்லவில்லை.அந்தக் லென்ஸ் மூலமாக அவன் பார்த்தான்.ஆனால் பார்க்கவில்லை.மொத்த விவகாரமும் ஒருவர் தன்வீட்டின் பின்புறம் ஒரு அகழி  தோண்டுவதைப் போலத்தான் இருந்தது. படுக்கையில் கிடக்கும் பெண்மணி அந்த முயற்சியில் எதிர்ப்பட்ட மார்பிள் படுகை  போலத்தான் இருந்தாள் .நாகமே  இன்னும் போ.இன்னும் இன்னும் துளைத்து அங்கிருக்கும் வெறுமையையும் முடிந்தால் உறிஞ்சி வெளியேற்று.

இயக்குகிறவன் ஒரு சிகரட்டைப் பிடித்தவாறே அங்கேயே நின்றிருந்தான்.

மற்ற இயந்திரமும் இப்போது வேலை செய்துகொண்டிருந்தன்தது.அதை இயக்குகிறவனும்  முந்தியவனைப் போலவே கறைபடியாத ஒரு பழுப்பு அங்கியில் முற்றிலும் மனிதச் சாயல் இல்லாமல்தான் இருந்தான். அந்த இயந்திரம் உடலிலிருந்து கெட்ட  ரத்தம் முழுவதையும் வெளியேற்றி புதிய தூய ரத்தத்தால் நிரப்பிக் கொண்டிருந்தது.

''இரண்டையுமே செய்யவேண்டும் வயிற்றை  மட்டும் சுத்தப் படுத்தினால் போதாது.இல்லை எனில் உடம்பில் தேங்கியிருக்கும் நச்சு ரத்தம் மூளையை சுத்தியலால் அடிப்பது போல அடித்து அடித்து ஒரு மாமிசக் கூழ் போல ஆக்கிவிடும்''

மண்டேக்''போதும்!''என்றான்.

அவன் ''சும்மா சொன்னேன்''

''உங்கள் வேலை முடிந்துவிட்டதா?''

அவர்கள் இயந்திரங்களை நிறுத்தி மூடி வைத்தார்கள்.அவனுடைய கோபம் அவர்களைத் தொடக் கூட இல்லை.தங்களது சிகரெட் புகை சூழ கண்கள் மீது சுழல அசையாது நின்றிருந்தார்கள்.

''ஐம்பது டாலர்கள் ''என்றார்கள் 

''முதலில் அவள் நன்றாக இருக்கிறாளா என்பதைச் சொல்லுங்கள்''

''நன்றாகிவிடுவார்.நாங்கள் அவர் உடலிலிருந்து கெட்ட விஷயங்களை எல்லாம் எடுத்துவிட்டு புதிய விசயங்களை வைத்திருக்கிறோம்.எல்லாம் சரியாகிவிடும்''


''நீங்கள் இரண்டு பேருமே எம் டி படித்தவர் இல்லை.அவசரசிகிச்சைப் பிரிவிலிருந்து ஒரு எம் டி மருத்துவரை  அழைத்து வந்திருக்கக் கூடாதா?""

''தேவை இல்லை.நாங்கள் இதுபோல நிறைய கேஸ்களை கடந்த இரண்டு வருடங்களாக பார்க்கிறோம்.இவை இதற்காகவே  தயாரிக்கப் பட்ட இயந்திரங்கள்.,அதன் சிறப்பு லென்ஸ் மூலமாக மிக எளிதாக இதைக் கையாள முடியும்..இதற்கு இந்த இயந்திரத்தைக் கையாளும் இரண்டு மனிதர்கள் போதும்.அரைமணி நேரத்தில் எல்லாவற்றையும் சுத்தம் செய்துவிட முடியும் ''என்றான் அவன்.பிறகு ''நாங்கள் போக வேண்டியிருக்கிறது .புதிதாய் ஒரு அழைப்பு ஹெட்போன்கள் மூலம் வந்திருக்கிறது.இன்னொரு நபர் எங்கோ தனது தூக்க மாத்திரைப் புட்டியின் மூடியைத் தொலைத்திருக்கிறார்.தேவை எனில் கூப்பிடுங்கள் .தூக்கத்திலிருந்து எழுப்பும் மருந்து அவருக்குக் கொடுத்திருக்கிறது.பசியோடு எழுந்திருப்பார்.பார்க்கலாம்''

பிறகு அவர்கள் தங்களது சிகரெட் புகையோடு விஷப் பாம்புக் கண்களோடு தங்களது இயந்திரங்களோடு குழாய்களோடு பாட்டில்களில் தளும்பும் துக்க திரவங்களோடு  வெளியே போனார்கள் 


மாண்டேக் அவள் அருகில் அமர்ந்தான்.புறங்கையால் அவளது மூச்சை உணர முயற்சித்தான்.

''மில்டரெட் !''என்றழைத்தான் 
பிறகு நாம் நிறைய பேர் இருக்கிறோம் என்று  நினைத்தான்.மிக நிறைய பேர்.ஒருவரை ஒருவர் அறியாமல்.கோடிக் கணக்கில்.அந்நியர்களாய்.நாம் முற்றிலும் அறியாத அன்னியர்கள் திடீரென்று உங்கள்  வாழ்வுக்குள் வருகிறார்கள்.உங்கள் இதயத்தை வெட்டி எடுக்கிறார்கள் .உங்கள் ரத்தத்தை உறிஞ்சுகிறார்கள் கடவுளே!யார் இந்த மனிதர்கள் ?நான் இதுவரை இவர்களைப் பார்த்ததே இல்லை 

அரைமணிநேரம் போனது.

இந்தப் பெண்மணியின் உடலில் இப்போது புது ரத்தம் ஓடுகிறது.அது அவளுக்குப் புதிய விசயங்களைச் செய்திருக்கிறது.அவள் கன்னங்கள் மிகச் சிகப்பாகவும் உதடுகள் மிருதுவாகவும் புதிதாகவும் இப்போது மாறிவிட்டன.வேறொருவரின் ரத்தம்.இதேபோல வேறு ஒருவரின் தசைகளையும் மூளையையும் இவ்வாறு பொருத்த முடிந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும் !அவளுடைய மனத்தையும் கூடக் கழற்றிச் சுத்தம் செய்து தூசு தட்டி துளைகளை அடைத்து  புத்தம் புதிதாய் மறுநாள் காலை  கொண்டுவர முடிந்தால்.....

முடிந்தால்...

அவன் எழுந்து திரைகளை இழுத்துவிட்டு ஜன்னலைத் திறந்து இரவுக் காற்றை அறைக்குள் அனுமதித்தான்.நேரம் அதிகாலை இரண்டு மணி.இதோ அவனும் க்ளாரிசும்  வெள்ளி நிலவின் கீழ் நடந்து வந்து ஒருமணிநேரம் ஆகியிருக்குமா என்ன?அதற்குள் அவனது அந்த வண்ண உலகம் உருகி விழுந்து மீண்டும் தனது சாம்பல் நிறத்துக்குத் திரும்பிவிட்டது.

க்ளாரிசின் வீட்டிலிருந்து சிரிப்புச் சத்தம்  மிதந்து வந்தது.மிகத் தளர்வான இயல்பான சிரிப்புச் சத்தங்கள்.உற்சாகமான பேச்சொலிகள்..கொஞ்சம் கூட அவற்றில் செயற்கை இல்லை .சுற்றிலும் இருளால் பொதியப்  பட்ட வீடுகள் நடுவே தான்மட்டும் தனியாக அந்த நள்ளிரவிலும் ஒளிரும் அந்த வீட்டிலிருந்து  அவர்களது  பேச்சுக் குரல்கள் சிரிப்புகள்   காற்றில் ஒரு வசியவலையை நெய்து பிரித்து மீண்டும்  நெய்து கொண்டிருந்தன 

மாண்டேக் சட்டென்று வெளியே வந்து புல் தரையைக் கடந்து அவர்கள் வீட்டின் முன்னால் போய்  நின்றான்.கொஞ்சம் கூட யோசிக்கவில்லை.கொஞ்சநேரம் அப்படியே நிழலில் நின்றுகொண்டிருந்தான்.கதவைத் தட்டி உள்ளே போகலாமா என்று கூட யோசித்தான்.''நான் உள்ளே வருகிறேன்.வந்து எதுவும் செய்யாமல் பேசாமல் நீங்கள் பேசுவதை மட்டும் சும்மா கேட்டுக் கொண்டிருக்கிறேன்.நீங்கள் என்ன சொல்லிக் கொண்டிருந்தீர்கள்?''என்று சொல்லலாமா என்று...

ஆனால் மாண்டேக் உள்ளே செல்லவில்லை.அவன் முகத்தின் மீது  ஒரு பனிப்பாளம்  போன்று படர்ந்த  பாவனையுடன் உள்ளே அந்த மனிதர்(அவளது மாமா?) பேசுவதை மட்டும் உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்தான்.


அந்த மனிதர் சொல்லிக்  கொண்டிருந்தார் 

''இது உண்மையில் பயன்படுத்து -தூர எறி  உலகம்.யார் மேலாவது நம் நமது மூக்கைச் சிந்துகிறோம்.பிறகு துடைத்துத் தூர எறிந்துவிடுகிறோம்.ஒவ்வொருவரும் இவ்விதமே அடுத்தவரைச் செய்கிறோம்.இதில் எனது விளையாட்டு அணி என்று எதைச் சொல்வது ?அவர்களுக்குப் பெயர்களே இல்லாதபோது ?இருக்கட்டும் .இப்போது அரங்கத்துக்குள் இறங்கிக் கொண்டிருக்கிறவர்கள்  என்ன நிறச சட்டை அணிந்துகொண்டிருக்கிறார்கள் ?""


மாண்டேக் வீட்டுக்குத் திரும்பினான்.ஜன்னலை அடைக்கவில்லை,மில்ட்ரெட் நன்றாக இருக்கிறாளா என்று பார்த்தான்.அவளைச் சுற்றி கவனமாகப் போர்த்திவிட்டு பிறகு நிலவொளி தனது கன்னங்களில் படியக்  கண்மூடிக் கிடந்தான்.


ஒரே ஒரு மழைத் துளி .க்ளாரிஸ்.
இன்னொன்று மழைத்துளி -மில்டெரெட் .இன்னொன்று இன்று இட்ட தீ.தூக்க மாத்திரைகள்.தூர எறியும் திசுக் காகிதங்கள் .மாமா.கிளாரிஸ்  மில்ட்ரெட் மாமா சிரிப்பு 
மழை.புயல்.இடிமுழக்கம் .கொடும் மழை.வெடித்துச் சிதறும் எரிமலை.எல்லாம் சேர்ந்து பெரிய இரைச்சலுடன் காலையை  நோக்கிச் செல்லும் ஒரு பிரவாகம்.

''இனி முடியாது''என்று சொல்லிக் கொண்டே  அவன் ஒரு தூக்க மாத்திரையை  நாக்கில் கரைத்துக் கொண்டான் 




காலை.மணி ஒன்பது.மில்ட்ரெடின்  படுக்கை காலியாக இருந்தது.

அவன் சட்டென்று இதயம் துடிக்க எழுந்து கீழே ஓடி அடுக்களைக் கதவருகே நின்றான்.
டோஸ்டரின்  வாயிலிருந்து வெளியே வந்ததை இயந்திரச் சிலந்திக் கைகள் வாங்கி வெண்ணை தடவிக் கொண்டிருக்க அவள்  அதையே பார்த்துக் கொண்டிருந்தாள்.அவள் காதுகளில் வழக்கமான ஹெட்போன்கள் காலத்தைக் கரைத்துக் கொண்டிருந்தன 

''நீ நலமாக இருக்கிறாயா''என்று அவன் கேட்டான்.


அவள் நிமிர்ந்துபார்த்து அவன் உதடுகளை வாசித்து ஆம் என்று தலை அசைத்தாள்.பிறகு டோஸ்டரை இன்னொரு டோஸ்டுக்காக  அமைத்து வைத்தாள்.

அவன் உட்கார்ந்தான்.அவள் ''ஏனென்றே தெரியவில்லை.ரொம்ப பசிக்கிறது ''


அவன் ''நேற்று இரவு ...''என்று ஆரம்பித்தான் 


''நேற்றிரவு தூக்கமே இல்லை.கடவுளே ரொம்ப பசிக்கிறது இன்று ''என்றாள்  

அவன் மறுபடியும் ''நேற்றிரவு...''என்று ஆரம்பித்தான் 

''நேற்றிரவு என்ன??''

''உனக்கு ஒன்றும் நினைவில்லையா?""

''என்ன?எனக்கு ஒன்றும் நினைவில்லை,நேற்று இங்கு பார்ட்டி எதுவும் நடத்தினோமா? கடுமையான ஹாங் ஓவர்   போல உணர்கிறேன்.கொடும் பசி வேறு.நேற்று இரவு இங்கு யார் எல்லாம் வந்தார்கள்''

அவன் ''சிலர்''என்றான் 

''அப்போ அதுதான். பார்ட்டி!வயிறு வலிக்கிறது .பார்ட்டியில் நான் ரொம்ப ஒன்றும் முட்டாள்த் தனமாக நடந்துகொள்ளவில்லையே ?"


அவன் அமைதியாக ''இல்லை''என்றான் 

டோஸ்டர் இன்னொரு டோஸ ட்டை அவனிடம் வெண்ணெய்   தடவி தள்ளியது.அவன் அதை நன்றியுடன் பெற்றுக் கொண்டான்.

''உனது முகம் கூட சரியில்லை ''என்றாள்  அவள்.




மாலையில் மழை பெய்தது.மொத்த உலகமும் சாம்பலாக மாறியது.அவன் கூடத்தின் நடுவில் நின்றுகொண்டு தனது உடலின் மீது  அந்த ஆரஞ்சு நிற நெருப்புப் பல்லியின் சின்னத்தை அணிந்துகொண்டான் .பிறகு குளிர்சாதனக் கருவியின்  காற்றுத் துளையைப் பார்த்தவண்ணமே கொஞ்சநேரம் நின்றுகொண்டிருந்தான்.மில்ட்ரெட் தனது டிவி சுவர்  அறையில் வாசித்துக்  கொண்டிருந்த ஸ்க்ரிப்டில் இருந்து ஒருகணம் விடுபட்டு ''ஒரு மனிதன் சிந்திக்கிறான்!''என்றாள்  


அவன் ''ஆம்.உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்.மில்ட்ரெட் ,நீ நேற்றிரவு எல்லா தூக்க மாத்திரைகளையும் சாப்பிட்டுவிட்டாய் ''என்றான் 

அவள்ஒருகணம் தயங்கி  ''ச்ச்சே.இருக்காது''என்றாள்  பிறகு ''நான் ஏ னப்படி செய்யவேண்டும்?''


''ஒருவேளை நீ முதல் இரண்டு தூக்க மாத்திரைகளை எடுத்ததும் அதை மறந்து இன்னும் இரண்டு தூக்க மாத்திரைகளை எடுத்திருக்கலாம்.அப்புறம் அதையும் மறந்து இன்னும் இரண்டு.அப்புறம் இன்னும் இரண்டு.இப்படியே முப்பது மாத்திரைகளையும்..'

அவள் மறுபடியும் ''நான் ஏனப்படி  செய்யவேண்டும்??"'என்றாள் பிறகு ''நான் அப்படி செய்யவில்லை.செய்யவே மாட்டேன் ஒருபோதும்  ''என்றாள்.

அவன் ''நீ  சொன்னால் சரிதான்''என்றான்.பிறகு ''இன்று என்ன புதிதாக ?""

''இது இன்னும் பத்து நிமிடத்தில் நமது டிவி சுவரில்  வரபோகிற ஒரு நாடகம்.என் பக்க  ஸ்க்ரிப்ட் காலையில்தான் வந்தது .இது ஒரு புதுமையான இன்டராக்டிவ் நாடகம் ,இதில் ஒரு காரக்டர் நான்.இல்லத்தரசி ஹெலன்.எனது வசனங்கள் மட்டும் இதில் முன்கூட்டியே தயாரிக்கப் படாமல் இருக்கும்.நாடகம்  நிகழும்போது அதல் வரும் மற்ற காரக்டர்   நீ என்ன நினைக்கிறாய்  ஹெலன்?என்று என்னைப் பார்த்துக் கேட்பார்.நான் சூழலுக்குத் தகுந்தாற்போல யோசித்து எதையாவது சொல்லவேண்டும்.ஜாலியாக இல்லை?""



அவன் ''நிச்சயமாக''என்றான் ''எது பற்றிய நாடகம் இது??''
''அதான் சொன்னேனே.இது மூன்று மனிதர்கள் பற்றியது பாப்.ரூத்.ஹெலன்.நான்தான் ஹெலன்''

'ரொம்ப ஜாலியான நாடகம் மாண்டேக்.நாம் நமது நான்காவது சுவரையும் ஒரு டிவி சுவராக மாற்றிவிட்டால் இன்னும் ஜாலியாக இருக்கும்.வெறும் இரண்டாயிரம் டாலர்கள் தானே ?எப்போது நம்மால்முடியும் மாண்டேக்??""

''அது எனது வருடச் சம்பளத்தில் மூன்றில் ஒருபங்கு''

''வெறும் இரண்டாயிரம் டாலர்கள்''என்றால் அவள்.''நீ என்னைப் பற்றியும் கொஞ்சம் யோசிக்கவேண்டும் மாண்டேக்.நான்காவது டிவி சுவர் மட்டும் கிடைத்துவிட்டால் நமது அறையும்  பெரிய பணக்கார்கள் அறை  போல ஆகிவவிடும் இல்லையா?வேண்டுமெனில் நாம் சில விசயங்களை தியாகம் செய்துவிடலாம் ''


''சில விசயங்களை தியாகம் செய்துதான் நாம் இந்த மூன்றாவது டிவி சுவரையே வாங்கினோம் நினைவில்லையா மில்ட்ரெட் ?இரண்டு மாதங்கள்தான் ஆயிற்று ''

அவள் அவனையே உற்றப் பார்த்துவிட்டு 'அப்படியா?நல்லது மாண்டேக்.குட்பை''

''குட்பை''என்றவன் திரும்பி ''உனது நாடகம் சந்தோசமாக முடிகிறதா ?"என்று கேட்டான் 

''நான் அதுவரை இன்னும்  படிக்கவில்லை''


அவன் குனிந்து அவளது ஸ்க்ரிப்டின் கடைசிப் பகுதியைப் படித்துவிட்டுத் திரும்ப  அவள் கையிலேயே  கொடுத்துவிட்டு வெளியே மழைக்குள் நடந்தான்.


மழை  குறைந்து கொண்டிருக்க க்ளாரிஸ்  பாதையின்  நடுவில் நின்றுகொண்டு வானோக்கி தன்  முகத்தை உயர்த்திக் கொண்டிருந்தாள் அவள் முகத்திலிருந்து சில மழைத்துளிகள் சிதறின அவள் அவனைக் கண்டுகொண்டு புன்னகைத்தாள். 

''ஹல்லோ??

''அவன் ஹலோ''என்றான்''இப்போது புதிதாய் என்ன பண்ணிக் கொண்டிருக்கிறாய் க்ளரிஸ்?""

இன்னும் பைத்தியமாய்த்தான்  இருக்கிறேன்.மாண்டேக்.மழை நன்றாக இருக்கிறது எனக்கு மழையில் நடக்கப் பிடிக்கும்''


''எனக்குப் பிடிக்காது''

''ஒருதடவை செய்துபார்த்தால் உங்களுக்கும்  பிடிக்கலாம்''

''செய்ததே இல்லை''என்றான் அவன். 
அவள் தனது உதடுகளை சப்பிக் கொண்டு ''மழை ருசியாகக் கூட இருக்கிறது''

''நீ என்ன செய்கிறாய்?இப்படி எல்லாவற்றையும் ஒருமுறை செய்துபார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர?'

''சிலவற்றை  இரண்டாவது முறையும் செய்து  பார்ப்பதுண்டு ''என்றாள்  அவள்.தனது கைகளைப் பார்த்துக் கொண்டே.

''உன் கைகளில் என்ன வைத்திருக்கிறாய் க்லாரிஸ்?""

''டான்டலியன் மலர்கள்!.இந்தப் பருவத்தின் கடைசி மலர்கள்.கிடைக்கும் என்று நான் நினைக்கவே இல்லை.டான்டலியன் மலர்களை நாடியின் கீழ் தேய்க்கும் வழக்கத்தைப் பற்றி நீங்கள் கேள்விப் பட்டிருக்கிறீர்களா மாண்டேக்?""அவள் சிரித்தவண்ணம் அந்த மலர்களை தனது நாடிக்குக் கீழ்த்  தேய்த்தாள். ''இதன் நிறம் நம் மேல் பற்றிக் கொண்டால் நாம் காதலில் இருக்கிறோம்  என்று அர்த்தம் .நான் காதலில் இருக்கிறேனா மாண்டேக்?"'

அவனால் அவளை விட்டுக் கண்களை எடுக்கவே முடியவில்லை.

''அங்கே மஞ்சளாக இருக்கிறது ''

'ரொம்ப நல்லது,இப்போது நீங்கள் முயற்சி  செய்யுங்கள்''


அவன் தயங்கி ''எனக்கு அது வேலை செய்யாது''

ஆனா ல் அவன் வேண்டாம் என்று சொல்லும்முன்பு அவள் அந்த மலர்களை அவன் நாடிக்குக் கீழ்த் தேய்த்தாள்  ''அசையதிருங்கள் மாண்டேக் ''

பிறகு குனிந்து பார்த்தாள் அவள் புருவங்கள் இடுங்கின.

அவன் ''என்ன?"" என்றான் 

''ப்ச்.நீங்கள் யாருடனும் காதலில் இல்லை''

''இல்லை!நான்  காதலில் இருக்கிறேன்!""

'ஆனால்  இது காட்ட மாட்டேன் என்கிறதே ''

''இல்லை.நான்  ரொம்பக் காதலில் இருக்கிறேன்''என்றான் அவன்.பிறகு  ரொம்பக் காதலில் இருப்பதுபோன்ற ஒரு முகத்தைக்  கொண்டுவர முயன்றான் .ஆனால் அப்படியொரு முகமே அவனிடம் இல்லை.


அவள் ''தயவு செய்து அப்படிப் பார்க்காதீர்கள் ''

அவன் ''அது இந்த மலர்களின் தவறுதான்.நீ  முதலில் அவற்றை உன்மீது பயன்படுத்தினாய்.அதனால்தான் அவை என்னிடம் பற்ற மாட்டேன் என்கின்றன''

அவள் அவனது கையைத் தொட்டு ''அப்படியாகத்தான் இருக்கவேண்டும்.விடுங்கள் நான் உங்களை கவலைப் படுத்திவிட்டேன் போலிருக்கிறது மன்னியுங்கள்''


''அதெல்லாம் ஒன்றுமில்லை ''என்றான் அவன் ''நான் நன்றாகத்தான் இருக்கிறேன்''

''நல்லது நான் போகவேண்டும் .உங்களைக் கோபப் படுத்தவில்லை என்று நம்புகிறேன் ''

''கோபமில்லை.கொஞ்சம் தடுமாறிவிட்டேன் உண்மைதான்''

''நான் சென்று எனது மனநல மருத்துவரைப் பார்க்கவேண்டும் அவர்கள் என்னைப் பார்க்கவேண்டும் என்று  வற்புறுத்துகிறார்கள்..நான் எப்போதும் அவரிடம் என்ன சொல்வதென்று தீர்மானித்து விட்டே செல்வேன்.எப்போதும்  அவர் நான் ஒரு வழக்கமான வெங்காயம்தான் என்று சொல்வார்.பிறகு அவர் அந்த வெங்காயத்தின் அடுக்குகளை உரிக்க விட்டுவிட்டு வந்துவிடுவேன்''


''உனக்கு ஒரு மனநல மருத்துவர் தேவைப்படுகிறார் எ ன்றே நானும்  நினைக்கிறேன்''

''உண்மையாகவா?"'

அவன் தயங்கி  ''இல்லை''என்றான் 

''அவருக்கு நான்ஏ ன் காடுகளில் தனியாக அலைகிறேன் பறவைகளைத்  துரத்திக் கொண்டு பட்டாம்பூச்சிகளைத் சேர்த்துக் கொண்டு அலைகிறேன் என்று தெரியவேண்டும்.எனது பட்டாம்பூச்சிகள் சேகரிப்பை ஒருநாள் உங்களிடம் காட்டுகிறேன்''

''நல்லது''
''அவர்களுக்கு நான் நாள் முழுவதும் என்ன செய்கிறேன் என்று தெரியவேண்டும்.நான் சொல்வேன்.சிலநேரம் நான்  சும்மா அமர்ந்து எதையாவது யோசனை பண்ணிக் கொண்டிருப்பேன் என்று.ஆனால் என்ன சிந்திக்கிறேன் என்று சொல்லமாட்டேன்.சிலநேரங்களில் இதுபோல மழையில் முகத்தைக் காட்டிக் கொண்டு நிற்பேன் என்றும்  சொல்வேன்.மழைக்கு வைனின் ருசி உண்டு.தெரியுமா?"'

அவன் ''தெரியாது''என்றான் 

''நீங்கள் என்னை மன்னித்துவிட்டீர்கள் தானே??''

அவன் ''ஆமாம் ''என்றான் ''ஏனென்று தெரியவில்லை. நீ ஒரு வினோதமான பெண்.பலநேரங்களில் எரிச்சலும் படுத்துகிறாய் எனினும் உன்னை மன்னிப்பது எளிதாக இருக்கிறது.உன் வயதென்ன சொன்னாய்?பதினேழு?""

''அடுத்த மாதம்''

''வினோதம் எனது மனைவியின்  வயது முப்பது.ஆனால் நீதான் மிக முதிர்ந்த பெண் போல எனக்கு சிலநேரங்களில்  தோன்றுகிறாய்  ''

''நீங்களும் ஒரு வினோதமான மனிதர்தான்.மாண்டேக்.சமயங்களில் நீங்கள் ஒரு தீத்துறை  வீரர் என்பதையே மறந்துவிடுகிறேன்.ஓ  ..மறுபடி உங்களை எரிச்சல் படுத்திவிட்டேனா ?""

''பரவாயில்லை''

.''இதில் நீங்கள் எப்படி வந்து சேர்ந்தீர்கள்?உங்களது இந்த  வேலை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?நீங்கள் நிச்சயமாக   மற்றவர்களைப் போல அல்ல.எனக்கு அவர்களில் சிலரைத் தெரியும்.அவர்கள் உங்கள் முகத்தைப் பார்த்தே பேச மாட்டார்கள்.ஆனால் நீங்கள் நான் பேசுவதைக் கேட்டீர்கள்.நிலவைப்  பற்றி ஏ தோ சொன்னபோது நீங்கள் நிலவைப் பார்த்தீர்கள்.மற்றவர்கள் அப்படிச் செய்ய மாட்டார்கள்.நீங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது பாதியிலேயே விட்டுவிட்டுப் போய்விடுவார்கள்.அல்லது உங்களை மிரட்ட ஆரம்பிப்பார்கள் .ஆம்  வினோதம்.நீங்கள் இந்த  தீத்துறை வேலையில்  இருப்பது  .இது உங்களுக்குப் பொருந்தாதது போல எனக்குத்  தோன்றுகிறது''


மாண்டேக் தனது உடல் இரண்டாகப் பிளப்பது போல உணர்ந்தான்.ஒருபக்கம் வெப்பமாக  மறுபக்கம் குளிராக .ஒருபக்கம் மிருதுவாக மறுபக்கம் கடினமாக ஒருபக்கம் நடுங்கிக் கொண்டு ஒருபக்கம் நடுங்காமல் ...இரண்டு உடல்கள்.இரண்டு உடல்களும்  ஒன்றை ஒன்று உரசிக் கொண்டு...  


''உன்னுடைய அப்பாய்ண்ட்மெண்டுக்கு  நேரமாகிவிட்டது க்ள
ரிஸ்''

அவள்  எதுவும் பேசாமல் அவனை அந்த மழையில் விட்டுவிட்டு ஓடி மறைந்தாள் .

அவள் போய்  நெடுநேரம் ஆனபின்பே மாண்டேக்  அந்த இடத்தைவிட்டு அசைந்தான் 


பிறகு மெதுவாக மிக மெதுவாக தலையை உயர்த்தி  சில கணங்களுக்கு மட்டும்  ........வாய் திறந்து மழையை ருசித்தான் 

LinkWithin

Related Posts with Thumbnails